ஈகோவும் வெற்றியும்

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

சூரியா


ஒரு மனிதன் வெற்றிகரமாக இருப்பது எப்படி என்பதை மட்டுமல்லாமல் வெற்றியுடன் நீடித்திருப்பது எப்படி என்பதைப்பற்றியும் சினிமா நிறைய பாடங்களினை அளிக்கிறது. புரிந்துகொள்வது சற்று கஷ்டம் என்றாலும் அதை புரிந்துகொண்டே ஆகவேணும்.

ஒருவர் மலைகளை இணைத்து கட்டப்பட்ட கம்பிவழியாக நடப்பதைப்போலத்தான் இது . கம்பியிலே காலிடறாமல் அவர் நடக்கவேண்டுமென்றால் நான் விழவெ மாட்டேன் என்ற உறுதியான நம்பிக்கைவேண்டும். ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருக்கவேண்டும். கீழே ஒரு முறை பார்த்த்து விழப்போதாக எண்ணிக் கொண்டால் போச்சு, அவ்வளவுதான். பிறகு ஒரு அடிகூட நடக்கமுடியாது.

டைரக்டர் சங்கரைப்பற்றி நிறைய சொல்லப்படுகிறது. அவருக்கு எஸ் ஏ சந்திரசேகரனின் அசிஸ்டெண்டாக இருக்கும்போதே பயங்கரமான ஈகோ இருந்தது என்றார்கள். நான் பெரிய திறமைசாலி என்ற எண்ணம் . எல்லா படமும் அதை அவருக்கு நிரூபித்துக் காட்டியது. ஒன்றுமே இல்லாத உதவாக்கரைப் படமான ஜீன்ஸ் கூட அவருக்கு கைகொடுத்தது. ஆனால் முதல்வனின் ரீமேக் ஆன நாயக் அடைந்த படுதோல்வி அவரை பயமுறுத்திவிட்டது . அதனால் தான் பாய்ஸ் எடுத்தார்

அதாவது தோல்வி பயம் வந்ததும் தன்னம்பிக்கை போய்விடுகிறது.அதுவ்ரை சும்மா ஒரு வேகத்தில் செயல்பட்டு தந்னுடைய சிறந்தவிசயங்களை வெளிக்கொண்டுவருவார்கள்.பயந்ததும் அந்த வேகம் இயல்பானதன்மை இதெல்லாம் போய்விடும். கணக்குபோட்டு எடுக்க ஆரம்பிப்பார்கள். பழைய படங்களில் எது ரசிக்கப்பட்டதோ அதை எடுப்பார்கள். புதுமை என்று அபத்தமாக எதையாவது செய்வார்கள். இரண்டுமே ‘ ஊத்திக் கொள்ளும் ‘

இதற்கு சிறந்த பழைய உதாரணம் பாரதிராஜா தான். அவரது தன்னம்பிக்கை இருந்தவரை கிழக்கேபோகும் ரயிலும் ஜெயித்தது . சிகப்புரோஜாக்களும் ஜெயித்தது. அதன் பிறகு வாலிபமே வா வா கல்லுக்குள் ஈரம் முதல் ஈரநிலம் வரை பெரும்பாலும் எல்லாமே சொதப்பல்கள்தான். இன்னொரு உதாரணம் பாக்யராஜ்.

உள்ளே இருக்கக் கூடிய ஒரு வேகம் இல்லாமலானதுமே படம் எடுப்பவர்கள் கலகலத்துப்போய் ஜோடனை செய்ய ஆரம்பிப்பதையும் அலைமோதுவதையும் ஜெயமோகன் கன்யாகுமரி நாவலிலே நுட்பமாக சொல்லியிருந்தார். அதனால் அந்த நாவலுக்கு சினிமாக்கார்களிடம் ஒரு இடம் உண்டு [ உடனே என்ன ஜெயமோகன் புகழா என்று ஆரம்பித்துவிடாதீர்கள் மேலே சொல்லமாட்டேன் ] இன்றைக்கு விக்ரமனிடம் அந்த தெனாவட்டூ இருக்கிறது, நான் எது எடுத்தாலும் அதுபடம் என்று நம்புகிறார். அந்த நம்பிக்கை இருக்கும்வரை அவர் ஜெயிப்பார். ஈகோ இல்லாமலானதுமே சரிவுதான்

சினிமாக்கார்களுக்குத்தெரிந்த ஒரு விஷயம். கிசுகிசுவாகத்தான் சொல்லமுடியும். ஒரு இசையமைப்பாளர். மேதை. அவருக்கும் தான் ஒரு மேதை என்றும் கடவுள் அருள்பெற்ற புனித ஆத்மா என்றும் உறுதியான் நம்பிக்கை இருந்தது. இதை ஒப்புக்கொண்டால்மட்டுமே அவரிடம் நாம் பேசவே முடியும். அதற்கேற்ப அவர் தன்னை இருபது வருடம் உச்சியிலேயே வைத்திருந்தார். ஒரு தீபாவளி நேரம் ஒரேநாளில் மூன்றுபடங்களுக்கு பாட்டுபோட்டு ஒரு படத்துக்கு ரீ ரிக்கர்டிங்கும் முடித்தார் என்ற விசயம் இப்போதுமே பேசப்படுகிறது.

அவருக்கு ஒரு அடி கிடைத்தது , நிஜமாகவே அடிதான். ஒரு கட்டத்தில் அவர் சினிமாவிலே எல்லா விசயங்களிலும் ஈடுபட ஆரம்பித்தார். டைரக்டரை நடிகர்களை மாற்ற சொல்வார். பாட்டு பிடிக்கவில்லை என்று சொன்ன டைரக்டரை மாற்றிவிட்டிருக்கிறார். அதுக்கு ஏற்றதுபோல அவர் ஒரு விசயம் செய்வார். மட்டமான படங்களுக்கு நல்ல இசை போட்டு ஓட வைத்து தன் இசைஇருந்தாலே போதும் என்று எண்ணவைத்திருந்தார். ‘உன் படத்துக்கு இது பொரும்யா ப்ப்போ ‘ என்று அவர் அடிக்க்டி சொல்வார். தன் பாடல்களை அவரே எழுதி பாடலாசிரிற்ற் தலையில் கட்டுவார்.

ஒரு உதவி டைரக்டர் பதினாறுவருடம் உதவி டைரக்டராக பட்டினி கிடந்தவர். கடைசியாக ஒரு புரடியூசர் மாட்டினார். நடிகர் கால்ஷீட் கிடைத்தது. இந்த இசையமைப்பாளரை காலில் விழுந்து கூட்டிவந்தார். முதல் நாள் பாட்டு பதிவு. மெட்டு டைரக்டருக்கு பிடிக்கவில்லை, மென்மையாக சொல்லிப்பார்த்தார். இசையமைப்பாளர் சீறித்தள்ளிவிட்டார். நேராக புரடியூசரை கூப்பிட்டு டைரக்டரை மாற்ராமல் அவர் இசையமைக்கமுடியாது என்று சொல்லிவிட்டார். புரடியூசர் ஆளையும் மாற்றிவிட்டார் .

அந்த டைரக்டருக்கும் பேதலித்துவிட்டது. மறுநாள் இசையமைப்பாளர் காரிலிருந்து இறங்கும்போது நேராக போய் பலர் முன்னிலையில் செருப்பால் விளாசிவிட்டர். அவரை பிடித்து நையப்புடைத்து அனுப்பி செய்தி வராமல் செய்தார்கள். ஆனால் அதன் பிறகு அந்த இசையமைப்பாளருக்கு அவரது தெய்வீகத் தோரணை போய்விட்டது . அவர் வரும்போது பலர் காலில் விழுந்து ஆசி வாங்குவார்கள். அதெல்லாம் அவருக்கு பிடிக்கும். அதையெல்லாம் பிறகு தவிர்க்க ஆரம்பித்தார். சுருக்கமாக சொன்னால் பிறகு அவர் எழுதிருக்கவெ இல்லை .பிறகு அவர் செய்தது எல்லாமே தன்னைத்தானே போலி செய்துகொள்வதுதான். அவர் முன்பு செய்தியாளர்களைமதிக்கவே மாட்டார். அதன் பிறகு நிறைய பேட்டிகள் கொடுத்தார். இமேஜ் வளர்க்க என்னன்னெமோ செய்தார். ஒன்றுமே நடக்கவில்லை.

இதை ஒரு நல்ல கதையாக் எழுதவேண்டும் என்று பலமுறை நினைத்தேன், முடியவில்லை. கதை செண்டிமென்டலாக ஆகிவிடுகிறது.ஆனால் நல்ல தீம்தான் இது

***

suurayaa@rediffmail.com

Series Navigation

சூரியா

சூரியா