சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு நீண்டகால அரசியல் திட்டம் – மதச் சிறுபான்மையினர் தம் பிரசினைகளை, தோல்விகளை, வளர்ச்சிக்கான முயற்சிகளை வ

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

சையது சஹாபுதீன்


Decommunalise Grievances, Problems and Aspirations of Religious Minorities – A Long Term Political Strategy for Social Reconciliation – Syed Shahabuddin

முஸ்லீம் இந்தியர்கள்,அவர்கள் 12.5 சதவீதமே இருந்தாலும், இந்தியாவின் இரண்டாவது பெரிய மதப்பிரிவைச் சார்ந்தவர்கள். உலகத்தின் மிகப்பெரிய இஸ்லாமிய சமுதாயங்களில் இரண்டாவது இடத்தை. இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக, வகிக்கிறார்கள். உலகத்து முஸ்லீம் மக்கள்தொகையில் 13 சதவீத முஸ்லீம் மக்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, முஸ்லீம் இந்தியர்கள் சமமான குடியுரிமையும், மதச்சார்பற்ற சட்டத்தின் கீழும், மதச்சுதந்திரம் உள்பட அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெற்று வாழ்கிறார்கள். இருப்பினும், நடைமுறையில், ஒரு சிறுபான்மை என்ற முறையில், வரலாற்று எதிரி என்ற பிம்பத்தினாலும், தேசத்துக்கு வெளியே பாசம் கொண்ட மக்கள் என்ற பிம்பத்தினாலும், பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள்.

ஆனால், நாட்டில் அடக்குமுறைக்கு ஆளான ஒரே குழு என்று முஸ்லீம்களைக் கூற இயலாது. அதே போல, சமூக வன்முறை, மட்டும் அரசு வன்முறை, சமூக அநீதி, பொருளாதார பாரபட்சம், அரசாங்க தொல்லை, கலாசார அழுத்தம், கல்வி இன்மை ஆகியவற்றால் வருந்தும் ஒரே குழு என்றும் அதனைக் கூற இயலாது.

அடக்குமுறைக்கு ஆளான ஒரே குழு என்று முஸ்லீம்களைச் சொல்லமுடியாது, அதே போல எல்லா இந்துக்களும் அடக்குமுறையாளர்களும் அல்லர். ஆகவே, முஸ்லீம் இந்தியர்கள் இந்து இந்தியர்களுக்கு எதிராகவோ இந்து மதத்துக்கு எதிராகவோ எந்தவிதமான எதிர்ப்புணர்வைக் காட்டவேண்டிய அவசியமும் இல்லை. அடிப்படைவாதிகளையும் பாஸிஸ்டுகளையும் விட்டுவிட்டால், பொதுவான இந்து மக்கள், பெரும் அழுத்ததின் காரணமாகவோ அல்லது தூண்டப்படாமலோ இருக்கும் நேரங்களில், முஸ்லீம்களிடம் நட்புணர்வுடனேயே நடந்து கொள்கிறார்கள். இருவரும் அடிப்படையான சகோதரத்துவத்துடன் நாடு முழுவதும் வாழ்கிறார்கள். இந்துக்கள் பொதுவாகவே, மற்ற மத வழிபாடுகளையும், மற்ற மத சடங்குகளையும் ஒப்புக்கொண்டே வாழ்கிறார்கள். ஆகவே, இது போன்ற அடக்குமுறைக்கு ஆளான பல்வேறு மதங்களைச் சார்ந்த சிறுபான்மை குழுக்களுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு ஜனநாயக உரிமைகளுக்காகவும், சமூக மற்றும் பொருளாதார நீதிகளுக்காகப் போராடுவது இயலக்கூடியதே. முஸ்லீம் இந்தியர்களால் இந்த அமைப்பின் சட்டதிட்டங்களை மாற்ற முடியாது. அதே போல இந்த நிலத்தின் சட்டத்தையும் இந்த அரசியலமைப்புச் சட்டத்தையும் மாற்ற முடியாது. இந்த ஜனநாயக யுகத்தில், ஒரு சில மேதைகளான தனிப்பட்ட மனிதர்களைத் தவிர, அரசியல் மேலதிகாரத்தைச் சிறுபான்மை குழு கைப்பற்றி அனுபவிக்க முடியாது. கடந்த காலத்தின் தவறுகளுக்கு குற்றம் சாட்டப்படும் ஒரு சிறுபான்மைக் குழு, அதுவும் நாடு பிரிவினைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்படும் ஒரு சிறுபான்மைக்குழு அப்படி ஒரு அரசியல் மேலதிகாரத்தை நிச்சயம் கைப்பற்ற முடியாது. சொல்லப்போனால், எந்த ஒரு சிறுபான்மைக்குழுவும், ஒரு ஜனநாயக நாட்டில் மேலதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று கற்பனைச் செய்யக்கூடாது. இஸ்லாமிய அரசு இங்கு திரும்பவும் அமைக்கப்படும் என்று முஸ்லீம் இந்தியர்கள் கற்பனை செய்யக்கூடாது. அப்படி ஒரு எண்ணம் முஸ்லீம் எதிர்ப்பு குழுக்களால் பிரச்சாரம் செய்யப்படுமாயின் அது உண்மையல்ல என்று முஸ்லீம் இந்தியர்கள் வலியுறுத்திச் சொல்லவேண்டும்.

இன்றைய உலகத்தில், சிறுபான்மைக் குழுக்களுக்கு உரிமைகள் இருக்கின்றன. இவை உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டு, பல அரசியலமைப்புச் சட்டங்களால் தேசிய அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கின்றன. ஆகவே, முஸ்லீம் இந்தியர்கள் அடக்கப்படுவோம் என்ற அச்சம் இல்லாமல், தங்களது உரிமைகளை அறிந்து கொண்டு, தாம் அழிக்கப்பட்டுவிடுவோம் அல்லது நமது தாய்நாட்டிலிருந்து துரத்தப்பட்டுவிடுவோம் போன்ற எந்த அச்சத்தையும் உதறிவிடவேண்டும். அவர்களது மதத்தை யாராலும் மாற்றமுடியாது. அவர்களது அடையாளத்தை அழிக்கவும் முடியாது.

ஜனநாயக அமைப்பின் கீழ், அமைதியான ஒன்றுசேர்ந்து வாழும் வாழ்க்கை, மதச்சார்பற்ற அரசு அமைப்பு, மனித உரிமைகள், எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் அரசு ஆகியவையே நேரான அணுகுமுறைகள். பல மதங்கள் சேர்ந்து வாழும் ஒரு உலகம், ‘அடில் ‘ எனப்படும் நீதியை அடிப்படையாகக் கொண்டு சமத்துவமும், பாரபட்சமும் அற்ற அரசாங்கம், அல்லாவின் வளத்தை மதம் இனம் மொழி போன்றவை தாண்டி மனித குலம் அனைத்தும் பகிர்ந்து அனுபவிக்க கோரிக்கை ஆகியவையே இஸ்லாம் குறிக்கும் சமூகம் என்பதை முஸ்லீம் இந்தியர்கள் உணரவேண்டும். சட்டத்தின் முன் சமம், சமூகத்தின் பொருட்களை சமமாக பாவிப்பதும், வினியோகம் செய்வதும், சட்டப்பூர்வமான உரிமைகளையும் ஆர்வங்களையும் பாதுகாப்பது, மதச் சுதந்திரம், உடல் ரீதியான வன்முறைக்கு எதிரான பாதுகாப்பு, மத பாரபட்சத்துக்கு எதிரான பாதுகாப்பு என்பவையாக வரையறுக்கப்படும் செக்குலரிஸம் என்னும் மதச்சார்பற்ற அமைப்பு மதத்துக்கு எதிரானது அல்ல என்பதையும், இஸ்லாமுக்கு எதிரானது அல்ல என்பதையும் உணரவேண்டும். ஜனநாயகமும் இஸ்லாமுக்கு எதிரானது அல்ல. ஆகவே, பல மதங்கள் இருக்கும் ஒரு சமூகத்தில் இருக்கும் ஒரு சிறுபான்மையினரின் நிஜமான அரசியல் குறிக்கோள் ஜனநாயகம், செக்குலரிஸம், சமூக நீதி ஆகியவற்றைக் காப்பாற்றுவதே.

உரிமைகளும், கடமைகளும் பின்னிப்பிணைந்தவை என்பதால், இந்திய சமூகத்துக்கும், இந்திய மக்களுக்கும், இந்திய பொருளாதாரத்துக்கும் இந்தியாவுக்கும் அவர்களது கடமைகைளை நிறைவேற்றாமல், பொதுவாக இருக்கும் அரசியல் கட்சிகளில் பங்கேற்காமல், சமூக நிறுவனங்களில் ஆர்வம் கொள்ளாமல், மத, கலாச்சார, சமூக நிறுவனங்களில் பங்கேற்காமல், வெறுமே தங்களது உரிமைகளுக்காக குடிமக்களாக போராடுவது என்பது இயலாது.

சமூக வன்முறையை அதன் எல்லா வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும், ஏன் இனப்படுகொலை அனைத்தையும் எடுத்துக்கொள்வோம். இது யார் கொல்லப்பட்டார்கள் எனப் பார்க்காமல், தனியாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவாக மட்டுமே, தன்னுடைய கடமையை செய்யத்தவறிய அரசாங்கத்தின் தோல்வியாக மட்டுமே பார்க்கப்படவேண்டும். சமூக வன்முறை அரசாங்க அதிகாரம் விழிப்புணர்வுடன் இருந்தால் தடுக்கப்படக்கூடியது. போலீஸ் அமைப்பு பாரபட்சமாக இருக்கக்கூடாது. குற்றவாளிகள் தண்டனைக்காக அஞ்ச வேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு சேரவேண்டிய ஈட்டுத்தொகையைப் பெறவேண்டும்.

முஸ்லீம்கள் கல்வியில் பின் தங்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று குறை கூறுகிறார்கள். இது அரசாங்கத்தால் பொதுவாக எல்லோருக்குமான பள்ளிகளாகவும் கல்லூரிகளாகவும் எல்லா இடங்களிலும் தேச முழுமைக்கும் ஒரே நிலைப்பாடாகவும் இருக்கவேண்டும். இது அனைவருக்குமான கல்வியாக அரசாங்கத்தின் கடமைகளில் ஒன்றாக மதச்சார்பற்ற அமைப்பின் கீழ் வழங்கப்படவேண்டும்.

உருது என்ற சிறுபான்மையினரின் மொழிக்கு உரிய இடம் நாடெங்கிலும் வழங்கப்படவில்லை என்று முஸ்லிம்கள் குறை சொல்கின்றனர். நவீன இந்தியாவில் ஒரு மானிலத்தில் வழங்கும் மொழி மற்ற மானிலங்களில் சிறுபான்மை மொழியே. மற்ற மொழிகளின் பிரசினை போன்றதே உருதுவின் பிரசினையும். ஒரு சீரான, ஒரே விதமான தீர்வு உருது மட்டுமல்லாமல் எல்லா மொழிகளையும் பொறுத்து உருவாக்கினால் என்ன ? உருது மட்டுமல்லாமல் சிறுபான்மை மொழிகள் எல்லாவற்றிற்குமே ஒரு அந்தஸ்து அளிக்கும் வழி காண வேண்டும். உதாரணமாக கல்வியில் , மும்மொழித் திட்டத்தின் கீழ் ஒரு குழந்தையின் தாய்மொஇழி கட்டாயமாய்க் கற்பிக்கப் படவேண்டும் என்று திட்டம் வகுக்கலாம். ஐந்து சதவீதம் சிறுபான்மையினர் இஇருந்தால் அவர்களின் தாய்மொழி நிர்வாகத்தில் பங்கு பெற வேண்டும் என்று திட்டம் வகுக்கலாம்.

சட்டசபைகளிலும், பொதுநிறுவனங்கள் மட்டும் அரசு வேலைகளிலும் முஸ்லீம்கள் சரியான விகிதத்தில் இல்லை எனப்தும் ஒரு புகார். வளர்ச்சியின் பலன்கள் அவர்களை உரிய முறையில் சென்றடையவில்லை. இது முஸ்லிம்களின் பிரசினை மட்டுமல்ல. வேறு பல சமூகக் குழுக்களின் பிரசினையும்கூட. எல்லா சமூகக் குழுக்களுக்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் ஒரு தேர்தல் முறை காணப்பட்டால் தான் இந்தப் பிர்சைனைக்குத் தீர்வு கிடைக்கும். இதே போல் அரசு வேலையிலும் முன்னுரிமைகள் குழுக்களின் விகிதாசாரம் மற்றும் பிற்பட்டிருத்தல் இவற்றைப் பொறுத்து அளிக்கப் படவேண்டும். வளர்ச்சித்திட்டங்களும் சமூகக் குழுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அவர்களை விகிதாசார முறையில் சென்றடைய வழி வகுக்க வேண்டும். முஸ்லீம்கள் சிறப்புச் சலுகைகளைக் கோருவதோ, ல்லது தனிப்பட்ட சலுகைகளைக் கோருவதோ தவறு. ஆனால் தமக்கு உரிய பங்கைக் கேட்டுப் பெற வேண்டும்.

இந்திய முஸ்லீம்கள் இன்று தம்முடைய தனித்துவ அடையாளம் பற்றித் தான் கவலை கொண்டுள்ளார்கள். இந்த டையாளம் மதம் தொஇடர்பானது, ஓரளவு கலாசாரம் தொடர்பானது. இஸ்லாம் மீது அவதூறு வரும்போது, குரான் பற்றித் தவறான கருத்துகள் பரப்பப் படும்போது, அவர்களின் வரலாறு களங்கப்படுத்தம்படும்போது, அவர்களுடைய இறைத்தூதுவர் தூற்றப் படும்போது, அவர்களுடைய மசூதிகள் இடிக்கப்பட்டு, பூட்டப்பட்டு, தாகக்ப்படும்போது, அவர்களுடைய கல்லறைகள் தாக்கப் படும்போது , அவர்களின் குழந்தைகள் அரசுக் கல்வித்திட்டத்தில் இந்துக்களாய் ஆக்கபடும்போது, தாம் முஸ்லீமாய் இருக்கும் காரணத்தாலேயே பகிஷ்கரிக்கப்படும்போது முஸ்லீம்கள் கொள்ளும் சோக உணர்வு , முஸ்லீம்களை அனுதாபத்துடன் அணுகுபவர்கள் கூடப் புரிந்துஇ கொள்ளச் சிரமமானது. இதற்கு தீர்வு சட்டபூர்வமான அரசாட்சி ஒன்றுதான். ஆனால் பெரும்பான்மை வாதம் பீடித்த ஜனநாயகத்தின் கீழ், சட்டமும் கூட கும்பல் கலாசாரத்தின் பொய்களுக்குத் துணைபோகும் வகையில் உருவாகிறது. மதச்சார்பற்ற கல்வித் திட்டம் ஓரளவு இதைத் தவிர்க்க முடியும். இங்கும் கூட, மதம் காரணமாக நடக்கும் தாக்குதல்கள், தவறான கருத்துகள் மற்றும் சகிப்பின்மையால் உருவாகும் குற்றங்களுக்கு உண்மையான தீர்வு, எல்லா மதத்தினரையும் உள்ளடக்கிய , மனசாட்சியை முன்னிறுத்திய ஒரு குழு உருவாவதே ஆகும். இந்தக் குழுவில் இந்துக்களில் அநீதி இழைக்கப் பட்டவர்களும் இருக்கலாம். தன்னுடைய அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டி , எல்லா மதக்குழுக்களும் முனைய வேண்டும். மதங்களிடையேயான உரையாடல் இந்த சகிப்புத்தன்மையைக் கொண்டுவரலாம்.

நம் நாடு ஒரு கண்டம் அள்விற்குப் பெரிது என்பதால், தேசிய சிறுபான்மையினர் நடைமுறைத் திட்டம் ஒன்றை உருவாக்குவது இயலும். எல்லா நிர்வாக நிலையிலும் , மத,மொழி,கலாசார, சாதி, புவியியல் இருப்பு இவற்றை உள்ளடக்கிய ‘சிறுபான்மையினர் நடைமுறைத் திட்டம் ‘ சாத்தியமே. இந்தத்திட்டம் சட்டஅமைப்பின் கீழ் , குழுக்களிடையே நிகழும் முரண்பாடுகளைத் தீர்க்க ஒரு நடைமுறையை ஏற்படுத்தலாம். ஒரு இடத்தில் பெரும்பான்மையாய் இருப்பவர்கள், வேறு இடத்தில் சிறுபான்மையாய் இருக்கிறார்கள். சிறுபான்மையினருக்கான தேசிய அள்விலான நடைமுறைத் திட்டம் இதனால் எல்லாருக்குமே பயன் தரும்.

எந்த சமூகக் குழுவும் தன்னுள் இணைந்து நிற்காமல், தேசிய அளவில் தனக்கான வளர்ச்சிப் பங்கையோ, நியாயமான மலர்ச்சியையோ அடைய முடியாது. ஒற்றுமை என்பது ‘மற்றவர்கள் ‘ என்று இனங்கண்டு சில குழுவினருக்கு எதிரானதாக இருக்கலாகாது. ஒற்றுமை என்பது பொதுப் பிரசினைகளை விவாதிக்கும் ஒரு திறந்த அரங்கேயாகும். இப்படி விவாதிக்காமல் எந்த அமைப்பும் அணுகுமுறையில் ஒற்றுமை, நோக்கங்களில் ஒற்றுமை, ஒன்று பட்ட செய்லபாடு இவற்றை அடையமுடியாது. ஒற்றுமை மற்ற குழுவினரின் வளர்ச்சி ஆர்வங்களைத் தடை செய்வதாகவோ, நியாயமான மற்ற குழுக்களின் கோரிக்கைகளைத் தடை செய்வதாகவோ, மற்ற குழுக்களுக்கு இல்லாத சலுகைகளைக் கோருவதாகவோ இருக்கலாகாது.

உரசல்களும் கருத்துமாறுபாடும் இல்லாமல் எந்த சமூகமும் செய்லபடுவதில்லை. பல மதங்களைக் கொண்ட ஒரு சமூகம், சிறிதும் , பெரிதுமான சில சிக்கல்களைக் கொண்டு தான் இருக்கும். எல்லா வகுப்புகளும் வகுப்புவாதம் இல்லாமல் பிரசினைகளை அணுகக் கற்றுக் கொள்ளவேண்டும். எல்லாப் பிரசினைகளையும் இந்து-முஸ்லிம் பிரசினையாகக் குறுக்காமல் காணவேண்டும். ஏனெனில் இதே பிரசினைகள் மற்ற குழுக்களையும் வேறு வேறு தளங்களில் பாதிப்பவையே.

***

from Mainstream.

Series Navigation

சையது சஹாபுதீன்

சையது சஹாபுதீன்