தென்னாப்பிரிக்காவின் தமிழ்ப்பாடகி மஹேந்திரி பிள்ளை

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

நரேஷ்னி கவுண்டர்


தென்னாப்பிரிக்காவிலிருந்து வெளிவரும் சன்டே டைம்ஸ் இதழிலிருந்து

தனக்கு ஐந்து வயதாகும்போது, பிரபல தமிழ்ப் பாடகியான எம் எஸ் சுப்புலட்சுமியின் குரல் கேட்டு அவர்மீதும், இசை மீதும் மிகுந்த ஆசைகொண்டார் மஹேந்திரிப்பிள்ளை. பல வருடங்களுக்குப்பிறகு சென்னையில் ஒரு திருமண நிகழ்ச்சியொன்றில் அவரது விருப்பமான இசை மேதை பாடுவதைக் கேட்டார்.

‘அந்த பார்வையாளர்கள் மத்தியில் உட்கார்ந்து எம் எஸ் பாடுவதைக் கேட்பதே மறக்கமுடியாத அனுபவம். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவரை என் மனக்கோபுரத்தில் ஏற்றி வைத்திருந்தேன். பிறகு சில மாதங்கள் கழித்து மெட்ராஸ் ம்யூசிக் அகாடமியில் வருடாந்தர விழாவன்று சந்தித்தேன். அவரது கையைப் பிடித்து அவரோடு பேசும்போது, மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டேன். ‘ என்று சொன்னார் பிள்ளை.

எம் எஸ் அவர்களால் தூண்டப்பட்டு இசைக்கு வந்த பிள்ளை, இன்று தென்னாப்பிரிக்காவின் முன்னணி கர்நாடக இசை வல்லுனர். டர்பனிலிருக்கும் க்ரேவில்லைச் சேர்ந்தவர் இவர்.

பீனிக்ஸில் இருக்கும் ட்ரேனான்ஸ் மேனர் செகண்டரி பள்ளியில் உயிரியல் பாட ஆசிரியராக இருக்கும் இவர் டர்பன் வெஸ்ட்வில் பல்கலைக்கழகத்தில் இசை பயின்றவர். 1990ஆம் வருடம் இசையில் பட்டமும் பெற்றவர்.

அப்போதிலிருந்து இவர் பள்ளியில் ஆசிரியராகவும், தன் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகவும், ஸ்டூடியோவில் தன்னுடைய இசையை பதிவு செய்துகொண்டும் பல வேலைகளைச் செய்து வருகிறார். அடுத்த மாதம் ‘இசை கானம் ‘ என்று தலைப்பிடப்பட்ட தன்னுடைய நான்காவது குறுந்தகடு ஒன்றை வெளியிட இருக்கிறார். இது தியாகராஜ பாகவதரின் பக்திப் பாடல்களை இவர் பாடி வெளியிட இருக்கும் குறுந்தகடு.

‘உண்மையிலேயே பூமியில் என் பணி, பலரது வாழ்க்கையை இசையால் தொடவேண்டுவதே என்றே நான் கருதுகிறேன். பக்தி இசை என்பது கற்றுத்தந்து வராது என்பதும் என் கருத்து. தன்னுடைய வாழ்க்கையை இந்த இசைக்காக அர்ப்பணிக்கும் உள்ளார்ந்த ஆசை இருந்தால் மட்டுமே அது முடியும் என்று கருதுகிறேன் ‘ என்று கூறுகிறார் பிள்ளை.

அவருடைய முந்திய குறுந்தகடு, அவருடைய எட்டுவயது பையனுக்கு அர்ப்பணிக்கப் பட்டிருக்கிறது. ‘தரிசனம் ‘ என்று தலைப்பிடப் பட்டிருக்கிறது. ஜன ரஞ்சகமான பக்திப் பாடல்களும், பஜனைப் பாடல்களும் இதில் உள்ளன. தமிழ், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடல்கள் உள்ளன. ஹனுமான் சாலிஸா என்ற பக்திப் பாடலும் மிகச் சிறப்பாய்ப் பாடப்பட்டுள்ளது.

1998-ல் அவருடைய ‘பாமாலை ‘ என்ற குறுந்தகடு மூலம் பிள்ளை புகழ் பெற்றார். இந்து விழாக்களில் பாடப்படும் பாடல்களின் இந்தத் தொகுப்பு பிள்ளைக்குப் புகழ் தேடிக் கொடுத்தது.

இளைஞர்களுக்கு இந்து சடங்குகள் பற்றியும் மரபுகள் பற்றியும் சொல்லித்தர இது பயன்பட்டது. சடங்குகள் விளக்கப்பட்டன.

பிள்ளையின் பெற்றோர்கள் பெருமாளும் யோகநந்தி கவுண்டரும் சிறு குழந்தையாய் இருக்கும் போதே பிள்ளையின் திறமைக்கு ஊக்கமளித்தார்கள் நாட்டால் நகரத்தின் தமிழ் வேதச் சங்கத்தின் இசைப் போட்டிகளில் பிள்ளையைக் கலந்து கொள்ளச் செய்தனர்.

பல பரிசுகளையும், விருதுகளையும் பிள்ளை பெற்றார். பனிரெண்டு வயதில் தேவாரம் போட்டியில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றார். விரைவிலேயே பிள்ளையின் பஜனைகள் எங்கும் ஒலித்தன. இன்று தென் ஆப்பிரிக்காவில் பிள்ளை சிறந்த கர்நாடக பாடகர் என்று அங்கீகரிக்கப் பட்டிருக்கிறார்.

1996-ல் இந்திய சென்று முறையாக கர்நாடக சங்கீதம் பயின்றார்.

‘நான் திருமதி சுலோசனா பட்டாபிராமன் , திருமதி பிரேமா ஹரிஹரன் இருவரிடமும் சென்னையில் இசை பயின்றேன். கடின உழைப்பும், இடைவிடாத பயிற்சியுமே என்னை பாடகியாக்கின. மேல் நாட்டு இசையைப் போலல்லாமல், கர்னாடக இசை மிகக் கணிதத் தன்மை வாய்ந்தது. விஞ்ஞான பூர்வமானது ‘ என்கிறார் பிள்ளை.

டர்பனில் இவ்வருடம் மார்ச்சில் தியாகராஜ ஆராதனையில் பல உலக இசைக் கலைஞர்களுடன் பிள்ளையும் பாடினார்.

‘தென் ஆப்பிரிக்கா திரும்பியதிலிருந்து , என் இசை காட்டுத் தீ போல் பரவியுள்ளது. எல்லா இடங்களிலும், ஆசிரமங்களில், கலை விழாக்களி, இசைக் கச்சேரிகளில், கோயில்களில் – என்று பாடியுள்ளேன் ‘

தன் இசை அறிவை மற்றவர்க்கும் கற்பிக்கும் விதமாக , சமீபத்தில் உங்கேணி சாலை கோயிலில் இசைப் பள்ளியையும் இவர் தொடங்கியுள்ளார்.

ஒரு நாள் குழந்தைகளுடன் இந்தியா திரும்பும் விருப்பமும் இருப்பதாய்ச் சொல்கிறார்.

‘இசை வெள்ளத்தின் மேற்பரப்பை மட்டுமே நான் தொட்டிருக்கிறேன் என்பதை நான் உணர்கிறேன். நான் இந்தியாவில் இசைக் கச்சேரி செய்து அது எப்படி மக்கள் வரவேற்கிறார்கள் என்று பார்க்க விரும்புகிறேன். ‘

திறமை மட்டுமல்லாமல், அறிவுடனும் ,பேச்சுத் திறமையுடனும், தன்னம்பிக்கையுடனும் விளங்குகிறார் பிள்ளை. ‘ நான் விரும்பியதெல்லாம் எனக்குக் கிடைத்திருக்கிறது. நாளை நான் இறக்க நேர்ந்தாலும், நான் முழுமையாய்த் தான் உணர்வேன். என் சமூகத்திற்கு நான் செய்ய வேண்டியதையும் செய்திருக்கிறேன். ‘

http://www.sundaytimes.co.za/2001/11/18/news/durban/ndbn14.asp

Series Navigation

நரேஷ்னி கவுண்டர்

நரேஷ்னி கவுண்டர்