சேன் நதி – 1

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா


சேன் நதி
பத்ரிக் மொதியானோ

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

இடம் பூலோஞ், புவான்-துய்-ழூர் என்ற ஆற்றோர வீதி. சூரியனின் ஒற்றைக் கதிரொளியில் பிரகாசித்த கட்டடமொன்றின் சுவரில் பிளாஷ்’ (Blache) என்று நீல வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தது, எழுத்துக்கள் மங்கியும் உரிந்துமிருந்தன. ‘அருகிலிருந்த காப்பிக் கடைக்காரனிடம் விசாரித்தேன். அவன், .’பிளாஷ்’ என்ற பேரில் வெகுகாலத்திற்குமுன் சந்தின் தொங்கலில் சைக்கிள் கடையொன்றை நடத்தியவன் இறந்துவிட்டதாகவும், அவனது ஒரேமகள் தனக்கென ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொண்டு இளம்வயதில் புறப்பட்டுப் போனவவள், பிறகு திரும்பவேயில்லை”, என்றான்.

‘பிழு'(1) வின் தாயார்க்காரியான ‘கோந்த்தெஸை'(2) நினைத்துக்கொண்டேன். முதலாம் அல்பெர் வீதியிலிருந்த தொகுப்பு வீட்டிலிருந்த மேசையைக் குடைந்தபோது ‘பிளாஷ் ஒதெத்’ என்ற பெயரில் அடையாள அட்டையொன்று கையிற் கிடைத்தது. அடையாள அட்டையின் நிழற்படத்தினை பார்த்த மாத்திரத்தில் அவள் ‘பிளாஷ் ஒதெத்’ என்று புரிந்துவிட்டது. பாதையைத் தொலைத்துவிட்டு அலைகிறபோது, அதிர்ஷ்டவசமாக ஏதாவது நேரும், அப்படித்தான் எனக்கும் நடந்தது. ஒருநாள் மாவட்ட நிருவாக அலுவலகத்தில், “‘பிளாஷ்’ என்ற பெயரில் தகவல் ஏதேனும் கிடைக்குமா”, என்று அங்கிருந்த பெண் உதவியாளரை விசாரிக்கப்போக, அவள் கொஞ்சம் நல்லமாதிரியென நினைக்கிறேன், நான்கைந்து பக்கங்கள் தேறும் கையிற் திணித்தாள்.

அப்பெயர் பட்டியல்கள் தட்டச்சிலிருந்தன: சேன் நதியும் மார்ன் நதியும் சந்திக்கிற ஷராந்தோன் பக்கமிருந்த இரவுவிடுதிகளையெல்லாம் வலம் வந்தாயிற்று.

பட்டியலில் இருந்த பெயர்களில் பிளாஷ் ஒதெத், வயது பதினெட்டு, 23-bis, கே துய் புவான் துய் ழூர், பூலோஞ்- என்பதுமொன்று.

முதலாம் அல்பெர் வீதி, பூலோஞ் -ஆற்றோர சாலை பக்கமிருந்த ‘பிளாஷ்’ பெயர்கொண்ட சைக்கிள்கடை, தடிச்சி மதெலின் லூயி தனது சொகுசுப்படகை நிறுத்திவைக்கிற புத்தோ தீவு, நதியின் மற்றபக்கம், ஷரந்த்தோன் பாலம்.. அத்தனையும் சேன் நதியோடு சம்பந்தப்பட்டவைதான். ஏன், பிழுவின் கண்களை நினைத்துக்கொள்ளும்போதுகூட சேன் நதியின் நிறம்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.
*******

அப்போது எனக்குப் பதினெட்டு வயது. நாடகப் பட்டறையில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த நேரம் – பள்ளிக்கு, ‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கம்’ என்று பெயர். அந் நாடகப்பட்டறை மாணவர்களில் ‘பூபூல்’ என்றழைக்கபட்டத் தடியனைத் தவிர வேறெவரும் தொழில்முறை நாடக நடிகர்கள் இல்லை. பள்ளியில் வாரத்திற்கு மூன்றுமுறை மொத்த மாணவர்களுக்குமாகச் சேர்த்து, எங்கள் பயிற்சி ஆசிரியையால், ‘பொது வகுப்பு’ எனப் பெயர் சூட்டப்பட்ட சிறப்பு வகுப்புகள் நடந்து வந்தன, நான் தவறாமல் அவ்வகுப்புகளுக்குச் செல்வேன். நாடகப் பட்டறையை நிர்வாகியும் எங்களுக்குப் பயிற்சி ஆசிரியையுமாக இருந்த பெண்மணி ஒரு காலத்தில் ‘பிரெஞ்சு நாடகத்துறையில்’ தீவிரமாக உழைத்தவள். தனது பணிக்காலம் முடிவுக்கு வந்த நேரத்தில் நாடகத்துறையிலிருந்த ஈர்ப்பும், வெகுசனத் தொடர்பில் கொண்டிருந்த பற்றுமே ‘எத்துவால்’ அருகே, ‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கத்தை’ அவள்’ தொடங்குவதற்குக் காரணங்களாகச் சொல்லப்பட்டன. ‘வழக்கமான மேடை நாடக அரங்குகள், திரை அரங்குகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றிற்குத் தான் எதிரியென்று ‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கம்’ வெளியிட்டத் துண்டு பிரசுரங்கள் தெரிவித்தன.

‘பொது வகுப்பு’ என்கிறபோதெல்லாம் இரவுடன் கூடிய கடும்பனிக்காலம் நினைவுக்கு வருகிறது. இரவு எட்டு மணியிலிருந்து பத்தரைமணி வரை எங்களுக்கு வகுப்பு. வகுப்பு முடிந்ததும் இருட்டில் கலப்பதற்கு முன்பாக பூபூலும் நானும் உரையாடியபடி வெளியேறுவோம். எங்கள் உரையாடலில் வேறு சிலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ‘புபூல்’, ‘சோனியா ஓ தொய்யே’ என்ற இரண்டு பெயர்களைத்தான் என்னால் இப்போது ஞாபகப்படுத்த முடிகிறது..

‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கத்தின்’ நட்சத்திரமென்று அவளைச் சொல்லலாம். நாங்கள் அனைவரும் கலந்துகொள்கிற ‘பொது வகுப்பிற்கு’ மொத்தத்தில் இரண்டு அல்லது மூன்று முறைதான் அவள் வந்திருப்பாள். எங்கள் நாடகப் பட்டறை ஆசிரியரிடம், தனக்கென பிரத்தியேகமாகப் பாடஞ்சொல்லித் தர ஏற்பாடு செய்துகொண்டது அதற்குக் காரணமாக இருக்கலாம். தனி வகுப்பு என்பது எல்லோராலும் முடிகிற காரியமல்ல- அதற்கெல்லாம் பணம் வேண்டும். அவளைத் தவிர அங்கிருந்த வேறு மாணவர்களுக்கு, என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் – அதற்குச் சாத்தியமில்லை. அவள் நல்ல அழகு, முகமாத்திரம் சற்று ஒடுங்கலானது, நிர்மலமான கண்கள். பார்த்த மாத்திரத்தில் எவரையும் கவரக்கூடியவள், எங்கள் கவனத்தை ஈர்த்ததில் வியப்பேதுமில்லை. எங்களைக் காட்டிலும் கண்டிப்பாக ஒரு சில ஆண்டுகளாகிலும் வயதில் மூத்தவளாக இருக்கவேண்டும். போலந்து நாட்டு பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்தவளெனச் சொல்லிக்கொண்டாள். அவளைப்பற்றி இரண்டு மூன்று சஞ்சிகைகள் அந்த நேரத்தில் எழுதப்போக, கிட்டதட்ட ஒருமாத காலம் வகுப்பிற்கு அவள் வரவில்லை, எங்களுக்கு ஆச்சரியம். வெகுசீக்கிரம் பொது மேடைகளில் அவள் தோன்றவிருப்பதாகவும் அப்போது பேச்சிருந்தது.

‘கோந்த்தெஸ்’ என்ற பெயரை நாங்கள்தான் அவளுக்கு வைத்திருந்தோம். அப்பெண்ணுடைய முதல் மேடையேற்றத்தைப் பற்றிய எந்தக் கேள்வியையும் நாங்கள் கேட்டுவிடக்கூடாதென்பதில், நாடகப்பட்டறையின் நிர்வாகி கறாராக இருந்தாள். ஆனல் எங்கள் குழுவில் புபூல் மிகவும் கெட்டிக்காரன்; அவனுக்கு நாடக அரங்குகள், திரை உலகம், கேளிக்கை விடுதிகள் சம்பந்தப்பட்ட இடங்களின் அறிமுகம் இருந்ததால் அவளைப்பற்றிய எல்லாத் தகவல்களும் அவ்வப்போது வந்து சேர்ந்தன. முதலாம் அல்பெர் வீதியில் ஆடம்பரமான மாடி வீடொன்றில் ‘கோந்த்தெஸ்’ வசிப்பதாகவும், பின்புலத்தில் என்னவோ நடக்கிறதென்றும் பொடிவைத்துப் பேசினான்: “அவளை சௌகரியமாக யாரோ பராமரிக்கவேண்டும். நகைக்கடைகளிலும், துணிக்கடைகளிலும் இப்படி ஏராளமாக செலவு செய்ய எல்லோருக்கும் ஆகிற காரியமா என்ன?”, என்றான். “La Tour d’Argent (‘லா தூர் த்’அர்ழான்) உணவு விடுதியில் சுமார் பத்துபேருக்கான இருக்கைகளை முன்கூட்டியே சொல்லிவைத்து, இன்னார்தானென்றில்லை எவரையும் அவளுடன் உணவருந்த அழைக்கிறாளென்றும், வந்தவர்களுக்கு அன்பளிப்புகளை தாராளமாக வாரி வழங்குகிறாளென்றும், அன்பளிப்புப் பெற்றவர்கள் பதிலுக்கு அவளுக்கு வேண்டியதைச் செய்துகொடுக்கிறார்களென்றும் கூறி அவள் நினைத்ததை சாதிக்க முடிகிற தந்திரத்தை ஒரு முறை விளக்கினான். இப்படியெல்லாம் அவளை விமரிசித்தபோதிலும் புபூலுக்கு, தன்னையும் ஒருநாள் அவளுடன் உணவருந்த அழைக்கமாட்டாளா? என்ற ஏக்கம் நிறையவே இருந்தது..

சிறுமி ‘பிழு’ மாத்திரம் இல்லையெனில், எல்லாச் சம்பவங்களுக்கும் குப்பைக்குப் போகிற மலர்ச்செண்டின் கதிதான்.

எங்கள் நாடகப் பட்டறை மாணவர்களிடையே பரிசுபோட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த நாளொன்றில்தான் அவளை முதன் முதலில் சந்தித்தேன். நிகழ்ச்சியை பள்ளியிலேயே விசாலமாக இருந்த ஓர் இடத்தில் சில மாற்றங்கள் செய்து, நாடகப் பட்டறையின் முதல்வர் பெண்மணி ஏற்பாடு செய்திருந்தாள். சுமார் ஐம்பது பார்வையாளர்களும், கலையுலக பிரமுகர்களும் கலந்துகொண்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்களில் பரிசிக்குரியவர்களை தேர்வு செய்யவென்று நடுவர் ஒருவரையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

போட்டி ஏற்பாடு செய்திருந்தபோது, வகுப்புக்கு நான் புதிய மாணவன், மேடைக்கூச்சமும் இருந்தது, போட்டியில் கலந்துகொள்ளாமல் வெளியில் சென்றிருந்தேன். நான் திரும்ப வந்தபோது போட்டி நடந்து, பரிசுக்குறியவர்களை அறிவித்தும் முடித்திருந்தார்கள். நிகழ்ச்சி நடந்த மண்டபத்திலிருந்து பார்வையாளர்கள்கூட புறப்பட்டுபோய்விட்டார்கள். ஒரு சில நண்பர்களுடன் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்த புபூல் என்னைக் கண்டதும், பேச்சைத் துண்டித்துக்கொண்டு சட்டென்று என்னிடம்:

– முதல் பரிசைப் பெற்றது யாரென்று நினைக்கிற? கோந்த்தெஸ்- எனக்கு ‘ம்யூசிக்-ஹாலுக்கான'(3) வாய்ப்பு கிடைத்திருக்கிறது, என்றான். எனது பாராட்டுதலை அவனுக்குத் தெரிவித்தேன்.

– ‘La Dame aux Camelias’ நாடகத்திலிருந்து மரணக்காட்சியைப் தேர்வு செய்து அவள் நடித்தாள். ஆனால் வசனத்தைச் சுத்தமாக மறந்துவிட்டாள், என்று என் காதில் முணுமுணுத்தான், தொடர்ந்து, திட்டமிட்டபடிதான் எல்லாம் நடந்தது தம்பி.. பேசிவைத்துக்கொண்டு அதன்படிதான் காய் நகர்த்தியிருக்கிறார்கள். நடுவருக்கும், நம்முடைய மதாம் சான்-ழேனுக்கும் உறையில் பணம் போயிருக்கிறது, என்றான்.

மதாம் சான்-ழேன் எங்கள் பயிற்சி ஆசிரியை, பிரெஞ்சு நாடக உலகம் அவளைத் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறது.

– “கோந்தெஸ்’க்காகவே நிழற்படக் கலைஞர்கள் வரவழைக்கபட்டார்கள் தெரியுமா? பேட்டிக்குக் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நட்சத்திரமென்றால் சும்மாவா? ம்.. பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்திருப்பாளென நினைக்கிறேன்” தொடர்ந்து புலம்பி கொண்டிருந்ததான்..

அப்போதுதான் கவனித்தேன், மண்டபத்தில் கடைசியாக சிவப்பு நிற வெல்வெட் இருக்கையொன்றில் சிறுமியொருத்தி உறங்கியபடியிருந்தாள்.

– யார் அது?- புபூலிடம் கேட்டேன்.

– ‘கோந்த்தெஸ்’ மகள். அவளுக்கு நேரமில்லையாம். மதியத்திற்கு, அந்தபெண்ணைப் பார்த்துக்கொள்ளும்படி என்னைக் கேட்டுக்கொண்டாள். ஒத்திகையொன்றிற்குப் போகவேண்டியிருக்கிறது, என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். உனக்கு சரிவருமா?

– உனக்காக வேண்டுமென்றால் செய்யறேன்.

– கொஞ்சநேரம் அவளைக் கூட்டிக்கொண்டு உலாத்து, பிறகு முதலாம் அல்பெர் வீதியிலிருக்கும் 21ம் எண் வீட்டில் அவளை கொண்டுபோய் சேர்த்திடு, வேறு பெரிதாக செய்ய ஒன்றுமில்லை.

– சரி.

– அப்போ நான் புறப்படறேன். கேளிக்கை விடுதிகளில் இனி நானும் மேடையேற வேண்டியிருக்கும்…

போகும்போதுதான் கவனித்தேன் பதட்டத்துடனிருந்தான். உடலில் முத்துமுத்தாக வியர்வைத் துளிகள்.

– புபூல், கவலையை விடு நான் பார்த்துக்குறேன். கேளிக்கை விடுதிகளில் நீயும் மேடை ஏற வாய்ப்பு அமையுமென்று சொல்ற.. வாழ்த்துக்கள்.

புபூலும் போன பிறகு மண்டபத்தில் எங்களைத் தவிர வேறு நபர்களில்லை. சிறுமி இன்னமும் உறக்கத்திலிருக்கிறாள். அவளை நெருங்கினேன். கன்னம் நாற்காலில் படிந்திருக்க, இடது கை தோளிலும், முன் கை மார்பிலுமாக இருந்தன. தலைமயிர் நெளியாய் நெளியாய் தேன் நிறத்திலிருந்தது. வெளிர் நீலத்தில் மேலங்கியொன்றை அணிந்திருந்தாள். கால்களில் பழுப்புவண்ண ஷ¥க்கள். ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம்.

தோளில் மெல்லத் தட்டி எழுப்ப, கண் விழித்தாள்.

கோந்த்தெஸ் கண்களைப்போலவே சிறுமியின் விழிகளிரண்டும் சாம்பல்நிறத்தில் ஒளிர்ந்தன.

– வெளியிற் சென்று உலாத்திவிட்டு வரலாம். என்ன?

அவள் வியப்புக்குள்ளாகி இருக்கவேண்டும், முகத்தில் தெரிந்தது. எழுந்து கொண்டாள். அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டேன், இருவருமாக ‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கத்தை’ விட்டு வெளியில் வந்தோம்.

அவென்யூ ஹோஷ் வழியா இருவரும் நடந்து, மோன்சோ பூங்காவுடைய நுழைவாயிலுக்கு வந்து சேர்ந்தோம்.

– என்ன உள்ளேபோய் உலாத்திவிட்டு வரலாமா?

– ம்.- சம்மதம் என்பதுபோல தலையாட்டினாள்.

இடது திசையில் புல்வார் பக்கமாக, வண்ணம் உரிந்த ஊஞ்சல்களும், பழைய சறுக்குமரமொன்றும், மணற்திட்டொன்றும் இருந்தன..

– என்ன விளையாட ஆசையா?

– ஆமாம்.

அங்கே குழந்தைகள் பெரியவர்கள் ஒருவருமில்லை. சீக்கிரம் பனிகொட்டினாலும் கொட்டலாம், பஞ்சுபோல வெண்மையான மேகமூட்டத்துடன் வானம். இரண்டு அல்லது மூன்றுமுறை சறுக்கு மரத்தில் விளையாடியவள், தயக்கத்துடன் தன்னை ஊஞ்சலில் ஏற்றிவிடச் சொல்லி கேட்கிறாள். அப்படியொன்றும் எடை போட்டவளாக இல்லை. தூக்கி உட்காரவைத்ததும் ஊஞ்சலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.

– உனக்கு என்ன பேரு?

– மர்த்தீன். ஆனா என்னை அம்மா பிழுவென்றுதான் கூப்பிடுவாள்.

மணல்திட்டில் ஒரு சிறிய முறத்தைப்பார்த்ததும், மண்ணைக் கிளறி விளையாட ஆரம்பித்தாள். அருகிலேயே சிமெண்ட்டால் செய்த இருக்கையொன்று இருந்தது. அதிலமர்ந்தபடி அவள் விளையாடப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் கவனித்தேன்: அவளணிந்திருந்த காலுறைகள் வித்தியாசமாகவிருந்தன: ஒன்று கரும்பச்சை வண்ணத்தில் முழங்கால் வரையும், மற்றொன்று நீலவண்ணத்தில் பழுப்பு வண்ண ஷ¥வை இறுக்கியிருந்த கயிற்றுக்கு மேலாக ஒரு சில செ.மீட்டர்கள் கூடுதலான அளவிலும் இருக்கக் கண்டேன். அன்றையதினம், உண்மையில் ‘கோந்த்தெஸ்’தான் தனது மகளுக்கு உடுத்தி அனுப்பியிருப்பாளா? என்றெனக்குச் சந்தேகம்.

அதிக நேரம் ஈரமணலில் இருந்தால், சிறுமியின் உடம்புக்கு ஆகாமற் போனாலும் போகலாம் என்ற பயத்தில், அவளுடைய ஷ¥க் கயிறுகளை ஒருமுறை சரிபார்த்தபிறகு பூங்காவின் மறுபக்கம் அழைத்துச் சென்றேன். அங்கு ஒரு சில குழந்தைகள் குடைராட்டின குதிரைகளில் சுற்றிவந்தனர். அவள் மரத்தலான அன்னமொன்றில் உட்கார விரும்பினாள். குடைராட்டினம் கிரீச்சிட்டுக்கொண்டு சுற்றியது. எனக்கெதிரே வரும்போதெல்லாம் வலது கையை உயர்த்தி ஆட்டினாள், இடது கரம் அன்னத்தின் கழுத்தை வளைத்துப் பிடித்திருக்க உதடுகளுக்கிடையே சிறிய புன்னகை.

ஐந்து சுற்று வந்திருப்பாள், அம்மா உன்னை எதிர்பார்த்துக்கொண்டிருப்பாள், சுரங்கப்பாதை ரயில் பிடித்து நாம் உடனே திரும்புவது அவசியம், என்று அவளிடம் கூறினேன்.

– அங்க்கிள் எனக்கு நடந்துபோகணும்

– சரி. உனக்கு அப்படியொரு ஆசைன்னா, நடந்தே திரும்புவோம்.

கூடாதென்று சொல்ல எனக்குத் தைரியம் காணாது. அவளுடைய தந்தையைப் போல் நடந்துகொள்வதற்கான வயதும் எனக்கில்லை.

மோன்சோ வீதி, அவென்யூ ஜார்ஜ்-5 எனக் கடந்து மீண்டும் சேன் நதி பக்கம் வந்தோம். கட்டடச்சுவர்கள் சூரிய ஒளியிலிருந்து விடுபட்டுக்கொண்டிருந்த நேரம், வெகு சீக்கிரம் அத்தனையும் இருட்டில் கலந்துவிடும். நேரமில்லை, கொஞ்சம் வேகமாக நடக்கவேண்டும். அன்றைய தினமும் அந்தி சாயும் நேரத்தில் எனக்கேற்படும் வழக்கமான மனக் குமுறல்கள். சிறுமியும் என்னுடைய மனநிலையில்தான் இருந்திருக்கவேண்டும் இல்லையென்றால் அத்தனை இறுக்கத்துடன் எனது கையை பற்றியபடி நடப்பாளா?

மாடியை அடைந்தபோது, சலசலவென்று பேச்சும் சிரிப்பும் கலந்தொலித்தது. ஐம்பது வயது மதிக்கக்கூடிய பெண்மணி, தலைமுடியைக் குட்டையாகக் வெட்டிக்கொண்டிருந்தாள் சதுரமுகம், பார்க்க ‘புல்-தெரியெர்’ வகை நாய்க்குண்டான சுறுசுறுப்பும், துடிப்பும் தெரிந்தது. கதவைத் திறந்தாள். ஒருவிதமான அவநம்பிக்கையுடன் மேலுங்கீழுமாக எங்களைப் பார்த்தாள்.

– வணக்கம் மதாம் மதெலென்-லூயி, – சிறுமி

– வணக்கம், பிழூ.

– நான்தான் இவளை வெளியே அழைத்துக்கொண்டு போனேன்.

– உள்ளே வாங்க

நுழைவுக் கூடத்து தரைமுழுக்க பூங்கொத்துகள். வரவேற்பறையில் கடைசியாகத் தெரிந்த இரட்டைக் கதவினூடாகக் கும்பல் கும்பலாய் மனிதர்கள்.

– கொஞ்சம் பொறுங்க, சோனியாவைக் கூப்பிடறேன், – சொன்னவள் ‘புல்-தெரியர்’ நாய்போலிருந்த பெண்மணி.

சிறுமியும் நானும்- இருவருமாக நுழைவுக் கூடத்தில் காத்துக் கிடந்தோம், எங்களைச் சுற்றிலும் கேட்பாரற்று கிடக்கும் பூங்கொத்துகள்..

– பூங்கொத்துகள் நிறையதான் வந்திருக்கின்றன…,- நான்.

– எல்லாம் அம்மாவுக்கு.

‘கோந்தெஸ்’ வெளிப்பட்டாள்; தோளில் கற்கள் பதித்த கறுப்பு நிற வெல்வெட்டாலான ஆடை, தேவதைபோல ஜொலித்தாள்.

– மறுப்பேதும் சொல்லாமல் ‘பிழு’ வைத் வெளியில் அழைத்துபோன உங்க நல்ல மனசைப் பாராட்டணும்.

– என்ன இதையெல்லாம் நீங்க பெரிசு பண்ணிகிட்டு… இன்றைக்கு நடந்த போட்டியில் உங்களுக்கு முதற் பரிசு கிடைத்ததாமே, பாராட்டுகள்.

– நன்றி.. மிகவும் நன்றி

எனக்கு உடம்பை என்னவோ செய்தது. அந்த இடத்தைவிட்டு சீக்கிரம் புறப்பட்டால் நல்லது என்பதுபோல தோன்றியது. அவள் தனது மகள் பக்கம் திரும்பினாள்.

– பிழு, அம்மாவுக்கு இன்றைக்கு மிகவும் முக்கியமான தினமென்று தெரியுமில்லை…

சிறுமியின் கண்கள் சட்டென்று அகலவிரிந்து அவள் மீது பதிந்தன. அக்கண்களில் வெளிப்பட்டது அச்சமா? வியப்பா?

– பிழு, அம்மாவுக்கு பெரியதொரு வெகுமதி கிடைச்சிருக்குத் தெரியுமா? அதற்காகக் அம்மாவுக்கு நீ முத்தம் கொடுத்தாகணும்…

சொன்னாளே தவிர சிறுமியின் திசைக்காய்க் குனிந்தவளில்லை. சிறுமி கால்விரல்களை ஊன்றி, எம்பி முத்தமிட மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. ‘கோந்த்தெஸ்’ சிறுமி தன்னை முத்தமிட எடுத்துக்கொண்ட முயற்சிகளை கவனித்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை, அவள் கவனம் இறைந்து கிடந்த பூங்கொத்துகளிற் சென்றது.

– பிழு, பார்த்தியா? எவ்வளவு பூக்கள்! இவற்றையெல்லாம் எடுத்து ஜாடியில் வைக்கக்கூட இப்போது எனக்கு நேரமில்லை. வந்திருக்கும் நண்பர்களை கவனிச்சாகணும், பிறகு அவர்களை இரவு விருந்துக்கு அழைத்துப் போகணும். இராத்திரிக்கு எத்தனை மணிக்குத் திரும்புவேனோ தெரியாது… நீங்க இன்றிறவு பிழுவை பார்த்துக்க முடியுமா?

நான் மறுக்கமாட்டேன் என்பதைத் தெளிவாகப் புரிந்துவைத்திருந்ததைப் போல, அவள் கேட்ட தோரணை இருந்தது.

– உங்க விருப்பம் அப்படீண்ணா, செய்தால் போச்சு.

– உங்களுக்கும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்றேன். இரவு இங்கேயே நீங்கள் தூங்கிக்கொள்ளலாம்.

எனக்குப் பதில்சொல்லக் கூட நேரம் கொடுக்கவில்லை, சட்டென்று. சிறுமி பிழுவின் பக்கம் திரும்பினாள்.

– பிழு செல்லம்.. அப்போ நான் கிளம்பட்டுமா? நண்பர்கள் எனக்காக காத்திருக்காங்க பாரு.. அம்மாவை மறந்திடாதே..என்ன? – குனிந்து சிறுமியின் நெற்றியில் செயற்கையாய் முத்தமிட்டாள்.

– மிஸியே, உங்களுக்கு மறுபடியும் நன்றி.

அதிகம் அலட்டிக்கொள்ளாமல், வர§ற்பறையில் காத்திருந்த நண்பர்களைத் தேடி சென்றாள். அத்தனை இரைச்சல்களுக்கிடையிலும், வெடித்து பிறகு மெலிந்து அடங்கிய சிரிப்பிலிருந்து அவளைத் தனியே என்னால் அடையாளப்படுத்த முடிந்தது.

அவர்கள் படிகளில் இறங்கிச் செல்ல செல்ல, ஒன்றன் பின்னொன்றாக குரல்களும் தேய்ந்து அடங்கின. பிழுவும் நானுமாக தனித்து இருந்தோம். சிறுமி சாப்பிடும் அறைக்கு என்னைக் கூட்டிச்சென்றாள். இருவரும் எதிரெதிராக மார்பிள் மூடிய நீள்சதுர மேசையொன்றில் அமர்ந்தோம். நான் உட்கார்ந்திருந்த நாற்காலியோ வீட்டின் பின்புறத்தில் தோட்டவெளியில் பொழுதைக்கழிக்க உபயோகிக்கப்படும் வகையைச் சார்ந்தது. அதுவும் ஆங்காங்கே துரு பிடித்து மிகப் பழையதாக இருந்தது. அவள் உட்கார்ந்திருந்ததோ வெல்வெட்மெத்தை தைத்த முக்காலி. தலைக்கு நேராகத் தொங்கவிடப்பட்டிருந்த பல்பிலிருந்து விழுந்த வெளிச்சம் மொத்தமும் எங்கள் மீதுதான் படிந்திருந்தது.

– சீன சமையற்காரனொருவன் உணவைப் பரிமாறினான்.

– இவரெப்படி, நல்ல மனிதர்தானே? – பிழுவைக் கேட்டேன்.

– ஆமாம்.

– என்ன பேர்?

– தியூங்.

சிலை போல விறைத்து உட்கார்ந்தபடி சூப்பை முடிப்பதில் கவனமாக இருந்தாள். உண்டு முடிக்குவரை வாய் திறக்கவில்லை.

– என்ன நான் எழுந்திருக்கலாமா?

– ம்.

அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள். சுவரும் அலங்காரங்களும் நீல வண்ணத்திலிருந்தன. மரச்சாமான்களென்று சொன்னால் இரண்டே இரண்டுதான்: ஒன்று சிறுபிள்ளைகளுக்கான கட்டில். மற்றொன்று இரண்டு சன்னல்களுக்கும் இடையிலிருந்த வட்டமேசை. மேசையில் போட்டிருந்த விரிப்பின் மீது மேசை விளக்கொன்று இருந்தது.

அறையோடு சேர்ந்தாற்போல இருந்த குளியல் அறைக்குள் நழுவினாள். பல்துலக்கும் சத்தம் கேட்டது. வெளியில் வந்தபோது வெண்ணிற இரவு ஆடையிலிருந்தாள்

– தயவு செய்து ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டு வரமுடியுமா? அவள் கேட்டவிதம், நான் அவள் வேண்டுகோளை தப்பாக எடுத்துக்கொள்ளப்போகிறேன் என்ற கவலையில் தொனிப்பது போலிருந்தது.

– அதற்கென்ன கொண்டுவருகிறேன்

– பிழு கொடுத்த டார்ச் விளக்கின் துணையுடன் சமையலறையை தேடிக்கொண்டு போனேன். பயமுறுத்தும் இருட்டில், அவள் ஒருத்திமாத்திரம் தனியாக உலாத்துகிறபோது இந்த டார்ச்சே கூட ஒருவகையில் சுமைதான், நினைத்துக்கொண்டேன். பெரும்பாலான அறைகள் காலியாக இருந்தன. வழியெல்லாம் டார்ச் விளக்கை ஒளிர வைக்க முயற்சித்தபோதிலும், நிறுத்தவும் அணைக்கவுமான பொத்தான் சரியாக நடக்கவில்லை. பார்ப்பதற்கு கைவிடப்பட்டக் குடியிருப்புபோல, மாடியிருந்தது. சுவரில் செவ்வக வடிவிலிருந்த கறைகள் அவை ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்களாக இருக்கவேண்டும். மற்றொரு அறை அநேகமாக ‘கோந்த்தெஸ்’ உடையதாக இருக்கவேண்டும், பெரியதொரு கட்டில் போட்டிருக்க, சற்றேரக்குறைய அதே அளவிலான வெண்ணிற சாட்டின் துணியால் அக்கட்டில் மூடப்பட்டிருந்தது. தரையில் ஒரு தொலைபேசி, கட்டிலைச் சுற்றிலும் சிவப்பு ரோஜாக்கள், பவுடர் டப்பியொன்று, ஒரு மப்ளர்…

சமையலறை மேசையில், சீனன் இரண்டு வேற்று மனிதர்களோடு சீட்டைக்கலைத்துப்போட்டு விளையாடிக்கொண்டிருந்தான். அவர்களில் ஒருவன் அவனைப்போலவே சீனன், மற்றவன் ஐரோப்பியன்.

– சிறுமிக்காக ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டுபோக வந்தேன்.

குழாயிருக்கும் திசையைக் காட்டினான். கண்ணாடித் தம்ளர் நிரம்பியதும் அவர்கள் பக்கம் மீண்டும் என்பார்வை சென்றது. விரித்திருந்த துணியில், வகை வகையாய் உணவுகள் தயாரிக்கும் முறைபற்றிய அட்டைகள். அவற்றைத்தான் பந்தயம் வைத்திருந்தார்கள். அங்கிருந்து வெளியேறினேன். கதவு பின்புறம் மூடப்பட்டதற்கான கிறீச்சென்று சத்தம்.

மீண்டும் வெறிச்சோடிக்கிடந்த அறைகளை ஒவ்வொன்றாக கடந்துவந்தேன். அண்மையில்தான், அவசர அவசரமாக அங்குள்ள தளவாடங்களைகாலி செய்திருக்கவேண்டும்.. அவற்றைப் பாதுகாப்பதற்கென நிறுவனங்கள் இருக்கின்றனவே அங்கே ஒப்படைத்து பத்திரபடுத்தியிருப்பார்களோ? ஆனால் வெள்ளை சாட்டின் துணியினால் மூடப்படிருந்த பெரிய கட்டில்; சுவரை ஒட்டியிருந்த சோபா; இரண்டு பெட்டிகளும், பயணப் பையொன்றுமாக அடுக்கப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகள் ஆகியவற்றைத் தற்காலிகமாக அங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கவேண்டும். .

அவளுடைய கட்டிலில் எனக்காகக் காத்திருந்தாள்.

– எனக்காக சில பக்கங்களை வாசிக்க முடியுமா?

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா