போலீஸ்காரன் மகன்

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

தமிழில்:மு.குருமூர்த்தி


நள்ளிரவு கழிந்துபோயிருந்தது. லாக்கப்பில் இருந்த கைதிகள் எல்லோரும் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். அப்போதுதான் “அய்யோ” என்ற அந்த அலறல் கேட்டது. மனித இதயங்களை நடுநடுங்கச்செய்யும் அந்த அலறல் போலீஸ் ஸ்டேஷனின் சுவர்களில் எதிரொலித்தது. பயந்துபோன கைதிகள் பொந்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் பிராணிகளைப்போல லாக்கப்புகளின் கம்பிகள் வழியாக எட்டிப்பார்த்தார்கள்.

மின்சார விளக்கின் பிரகாசமான ஒளியில் மேசைக்கு முன்பாக உட்கார்ந்திருந்த ஹெட்கான்ஸ்டபிளும், நின்று கொண்டிருந்த போலீஸ்காரர்களும் தரையில் கிடந்த ஒரு இளைஞனை அதட்டிக்கொண்டிருந்தனர்.
“எழுந்திருடா…”
வேட்டி மட்டும் கட்டியிருந்த அந்த இளைஞன் நடுக்கத்துடன் எழுந்து நின்றான். அவனுடைய வாயில் இருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. ஏட்டு கத்திக்கொண்டிருந்தார்.
“சொல்லுடா, எங்கே விற்றாய்?”
அந்த இளைஞன் மவுனமாக இருந்தான். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு முரட்டு போலீஸ்காரன் அந்த இளைஞனின் முதுகில் ஓங்கி ஓர் அடி கொடுத்தான். அடிவாங்கிய இளைஞன் “அய்யோ” என்று அலறிக்கொண்டே தரையில் மல்லாந்து வீழ்ந்தான். மற்றொரு போலீஸ்காரன் அவனுடைய மார்பில் ஓங்கி உதைத்தான். இன்னொரு போலீஸ்காரன் ரூல்தடியால் இளைஞனின் கால்முட்டியில் பலமாக அடித்தான்.

ஆதரவில்லாத ஒரு மனித உயிரை போலீஸ்காரர்கள் அடித்துத் துன்புறுத்துவதை லாக்கப்பில் இருந்த கைதிகள் அச்சத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். லாக்கப்பில் இருந்த ஒரு அரசியல் கைதிக்கு பொறுக்கவில்லை.
“நிறுத்துங்கய்யா…என்னய்யா அக்கிரமம் இது?”
குரலைக்கேட்ட போலீஸ்காரர்கள் லாக்கப்பை நோக்கித் திரும்பிப் பார்த்தார்கள். ஹெட்கான்ஸ்டபிள் மட்டும் கேலியாக சிரித்துக்கொண்டே சொன்னார்:
“நீங்கள் யாரும் ஒன்றும் சொல்லித்தரவேண்டாம். எங்களுக்கு எல்லாம் தெரியும். பேசாமல் போய்த்தூங்குங்கள்.”

உண்மையை வரவழைப்பதற்கான முயற்சி அதற்கப்புறமும் தொடர்ந்தது. லாக்கப்பிற்கு பழக்கப்பட்ட அரசியல் கைதி ஒருவன், அடிப்பதை நிறுத்தச்சொல்லி குரல்கொடுத்த புதிய அரசியல் கைதியிடம் தணிவான குரலில் பேசிக்கொண்டிருந்தான்.

“நாம் இதில் தலையிட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. இதில் நாம் என்ன செய்யமுடியும்?…”
“இந்த பயங்கரத்தை பார்த்துக்கொண்டிருக்கச்சொல்கிறீர்களா?”
“தோழரே, உங்களுக்கு வயது போதாது. இப்போதுதான் போலீஸ் லாக்கப்பிற்கு முதன்முறையாக வந்திருக்கிறீர்கள் இல்லையா? போலீஸ்காரர்களின் குணம் என்னவென்று உங்களுக்குத்தெரியாது. என்னுடைய அனுபவத்தில் இருபத்தி இரண்டு லாக்கப்புகளைப்பார்த்திருக்கிறேன். இது இருபத்து மூன்றாவது லாக்கப். இதுபோன்ற லாக்கப்புகள் நம்முடைய நாட்டில் எத்தனையோ இருக்கின்றன. உலகம் முழுவதும் இன்னும் அதிகமாக இருக்கும். எல்லா இடத்திலும் நிலைமை இதுதான்.”

“அய்யோ…அய்யோ” என்று தரையில் கிடந்து இளைஞன் அலறிக்கொண்டிருந்தான். கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் போலீஸ்காரர்கள் அவனை சித்திரவதை செய்துகொண்டிருந்தார்கள்.

“…போலீஸ்காரர்கள் மனிதர்கள் இல்லை. மனித உருவம் கொண்ட குரூர மிருகங்கள். அரசாங்கத்தின் குண்டர்கள். இவர்களுக்கெல்லாம் பெரிய படிப்பு எதுவும் தேவையில்லை. நாகரிகத்தைப்பற்றியும் தெரிந்திருக்கவேண்டியதில்லை. வாயைத்திறந்தால் அசிங்கமான வார்த்தைகள்தான் வரும். செய்வதெல்லாம் அநீதியும் அக்கிரமும். இப்படியெல்லாம் இருந்தால்தான் போலீஸ்காரனாக இருக்கலாம். கொஞ்ச வருஷங்களுக்கு முன்னால் நான் ஒரு லாக்கப்பில் இருந்தபோது ஒரு போலீஸ்காரன் தான் இதெல்லாம் சொன்னான். ஒவ்வொரு போலீஸ்காரனுக்கும் சத்தியப்பிரமாணம் எது தெரியுமா? குற்றம் செய்யாதவனை குற்றவாளியாக்குவது; சத்தியத்தை பொய்யாக்குவது; மானமுள்ளவனை அவமானப்படுத்துவது…இதையெல்லாம் செய்கின்ற குண்டர்கள்தான் போலீஸ்காரர்கள். அயோக்கியத்தனம், அநாகரிகம், அசிங்கத்தனம், அடுத்தவன் காசுக்கு ஆசைப்படுவது, காரியம் ஆகவேண்டுமென்றால் நாயின் அடிப்புறத்தையும் நக்கிக்கொடுக்கத் தயாராக இருப்பது, அகம்பாவம், அதிகார துஷ்பிரயோகம்…இப்படியெல்லாம் எனக்கு சொல்லிவைத்தான் அந்தப்போலீஸ்காரன்.

“டேய்…” மீசையை முறுக்கினார் அந்த ஏட்டு.
“உண்மையைச்சொல்லுடா…”
“சொல்றேன்…”
“சரி…சொல்லு…”
அந்த இளைஞன் சொன்னான்.
“நான் விற்கவில்லை. வீட்டில் வாழைமரத்தடியில் புதைத்து வைத்திருக்கிறேன்.”
“கேட்டாயா…” அனுபவப்பட்ட அரசியல் கைதி சொன்னான். “இனிமேல் அவர்கள் சொல்கிறபடியெல்லாம் இவன் கேட்பான். வலுவான கேஸாகப்போய்விடும் இனிமேல். அப்பாவிகள் எல்லாம் குற்றவாளிகளாக மாறுவது இப்படித்தான். சரி பழம் பழுத்துவிட்டது. நாம் தூங்கப்போகலாம்.”

கைதிகள் அவர்களுக்குரிய இடங்களுக்கு வந்து படுத்துக்கொண்டார்கள். ” அடிப்பதை நிறுத்தச்சொன்ன அந்த இளைஞனுக்கு மட்டும் உறக்கம் வரவில்லை. அவன் பாயில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கொண்டான். சக கைதிகள் ஏதேதோ பேசியபடி உறங்கிப்போனார்கள். அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது. மெதுவாக எழுந்து அறைவாசலுக்கு வந்தான். கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நின்றான்.

கூப்பிய கைகளுடன் உண்மையை சொல்லிக்கொண்டிருந்த இளைஞனோ, அதையெல்லாம் எழுதிக்கொண்டிருந்த ஏட்டோ, சுற்றி நின்றுகொண்டிருந்த போலீஸ்காரர்களோ அவனுடைய கண்களுக்குத்தெரியவில்லை. அவனுடைய கண்களில் கண்ணீர் குளம்கட்டி நின்றுகொண்டிருந்தது.

வெகுநேரம் அப்படியே கழிந்தது.
அப்புறம் அந்த ஏட்டு சொன்னார்.
“நீ அங்கே போய் உட்கார்.”
அடிவாங்கிய இளைஞன் ஒரு மூலையில் போய் உட்கார்ந்துகொண்டான். ஏட்டு லாக்கப்பின் வாசலைக்கவனித்தார்.
“என்ன, தூங்கவில்லையா?”
அங்கே நின்றுகொண்டிருந்த புதிய அரசியல்கைதி பதில் பேசாமல் இருந்தான். ஏட்டு எழுந்து வந்தார்.
“ஏன் அழுகிறாய்?”
“சும்மாதான்.”
“தம்பீ…” ஏட்டுவின் குரலில் மென்மை தெரிந்தது. “உங்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியாது. உலகம் எப்படிப்பட்டது என்பதை இனிமேல்தான் தெரிந்து கொள்வீர்கள். அந்த மூலையில் உட்கார்ந்திருக்கிறானே…அவன் உங்களைப்போன்றவன் இல்லை. ஒரு கொடூரமான மிருகம் அவன். வெட்டு குத்துப்பேர்வழி. முடிச்சவிழ்க்கிற கெட்டிக்காரன். எங்களுடைய இடத்தில் நீங்கள் இருந்தால் அவனுடைய மயிர்க்கால்கள் எல்லாவற்றிலும் ஊசியை பழுக்கவைத்து ஏற்றிவிடுவீர்கள். ஆசையாய் வளர்த்த பசு, எப்போது கன்று போடும் என்று நீங்கள் காத்திருக்கிறீர்கள். காலையில் எழுந்து பார்க்கும்போது தோல் இல்லாத பசுமாமிசம் மட்டும் அங்கே கிடந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். மாட்டைக்கொன்று தோலை உரித்தெடுத்தவனை நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள்? உங்களின் தாயாரின் நெஞ்சில் குத்தி, கழுத்தைப்பிடித்து, காதை அறுத்துக்கொண்டு போனவனை நீங்கள் என்ன செய்வீர்கள்?

“இதெல்லாம் அவர் செய்தாரா?”
“அவர்… அந்தப்பொறுக்கி தோல் உரிக்கிறவன். அந்தக்கேஸில் மூன்றுதடவை சிறைக்குப்போனவன். இப்போது நடந்தது ஒரு பெண்ணின் காதை அறுத்தது. நேற்று நாங்கள் அந்தப்பெண்ணைப் போய்ப் பார்த்தோம். அவளுடைய துயரத்தை நாங்கள் எப்படி ஈடு செய்ய முடியும்? மோசடியும், விபச்சாரமும், கொலை பாதகமும், வறுமைப்பட்டவர்கள் செய்கிற காரியம் என்று கொட்டிமுழக்கிறவர்கள் ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும். இவன் செய்த காரியம் வறுமையால் செய்தது இல்லை. இவனுடைய தகப்பன் நல்ல வேலையில் இருக்கிறான். ஒரு போலீஸ்காரன். எங்ககூட வேலைசெய்கிற போலீஸ்காரனின் மகன் இவன்.”

அடிபட்ட இளைஞன் மூலையில் கூனிக்குறுகி உட்கார்ந்திருந்தான். அவனுக்கு எதிரில் ரத்தம் சிந்திக்கிடந்தது.
“இவனை நாங்கள் என்னசெய்யவேண்டும் என்பதை நீயே சொல்.”
அந்த இளம் அரசியல் கைதி பதிலொன்றும் பேசாமல் பாயில் வந்து உட்கார்ந்து கொண்டான். தாவாய்க்கு முட்டுகொடுத்தபடி கம்பிகள் வழியாக அந்த மூலையை பார்த்தான். மூலையில் உட்கார்ந்திருந்த இளைஞனின் வாயிலிருந்து இரத்தம் கம்பிபோல இன்னும் ஒழுகிக்கொண்டிருந்தது.

“அடக்கடவுளே…போலீஸ்காரன் மகனா இவன்?”

cauverynagarwest@gmail.com

Series Navigation

தமிழில்: மு.குருமூர்த்தி

தமிழில்: மு.குருமூர்த்தி