நீர்வலை – (13)

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


>>>
சட்டென்று வானம் முகம்மாறி மழை பிய்த்து எடுத்து விடுகிறாப் போல சில சந்தர்ப்பங்கள் அமைந்து போகின்றன. நிகழ்ச்சிகள் நமது அபார, அதி சூட்சுமக் கற்பனைகளையும் மீறியே கூட அமைந்து விடுகின்றன.
இயற்கை மனிதனை எள்ளிநகையாடுகிற கணங்கள் அவை.
நிகழ்ச்சிகள் அவை நிகழும் அதி விரைவுகளில் மனித சக்திக்கு – மனித சக்திக்கு என்ன, மனிதக் கற்பனைக்கே அப்பாற்பட்ட பெரும் சக்தி சொரூபங்களை, அதன் விஸ்வரூப தரிசனத்தை, சட்டென பாம்பு தலைதூக்கிப் படமெடுத்தாற் போன்ற ஆவேசத்துடன், பெரும் அலட்சியத்துடன், இரக்கமற்ற, எதிராளிக்கு வாய்ப்பு தராத இறுக்கத்துடன், அரங்கேற்றுகின்றன.
தப்பித்தல், மீறி வெளிவருதல் முயற்சியளவிலேயே, கற்பனை அளவிலேயே இல்லை.
மனிதனை மண்டியிடச் செய்யும் இயற்கையின் கணங்கள் அவை.
அகழ்வாரைத் தாங்கும் நிலம் என்பார் வள்ளுவர். எப்போதும் தாங்கும், என்று சொல்ல முடியாது!… என இயற்கை சீற்றங்கண்ட கணங்களும் உண்டு. பூமி வாய்பிளந்து மனிதனை முதலைபோல் விழுங்கிய கணங்களும் இருக்கின்றன.
காலை சுமார் பத்துமணியளவில் நிகழ்ந்தது அது.
பூ க ம் ப ம்!
அச்சகத்தில் அவசர வேலை. எப்போதுமே எதாவது அவசர வேலை என்று தேள்கடிக்கு மருந்துதேடி ஓடிவந்தாப் போல யாராவது அச்சகத்துக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். நேற்றே முடித்துத்தர வேண்டிய வேலை அது. சர்ச் பாதிரியார் அல்போன்ஸ் ஐயா தந்த வேலை.
இயேசு சீக்கிரம் வருகிறார்.
ஆகவே நோட்டிசும் அதைவிட சீக்கிரம் தருக.
சர்ச் வளாகத்தில் முன்திடலில் எப்போதும் நற்செய்திக் கூட்டங்கள் நடக்கின்றன. மீனவர்களின் ஓய்வுநேரங்களை அனுசரித்து கடல்கரைக் கூட்டங்கள். நீள ராஜபாட்டையான மணல்வெளி. உட்கார்ந்து கேட்கிற அளவில் நெடுகிலும் குழல் விளக்குகள். மேடைப்பக்கம் மின்மினி பல்ப்கள் வண்ணவண்ணங்களாய் மின்னுதல் தனி அழகு. மீனவர்களை மேலும் கவனஈர்ப்பு செய்வதற்காக வெளியில் இருந்தெல்லாம் போதகர்கள் வந்து அருமையாய்ப் பேசுவார்கள்.
சில சமயம் வெளிநாட்டுக்காரர்களின் பிரச்சாரங்கள் கூட ஏற்பாடு செய்வதுண்டு. தமிழ் தெரியாத வெளிநாட்டு பிரமுகர்கள் அவர்கள். அவர்கள் ஆங்கிலத்தில் பேச, உள்ளூர் ஆசாமி யாராவது அதைத் தமிழில் பின்பற்றிச் சொல்வார். கல்யாண நலுங்கில் ஊஞ்சலில் நாதசுரப் பின்பாட்டு போல. பேசப்போவதை அவர் முன்கூட்டியே சொல்லி மொழிபெயர்ப்பாளரும் தயாராகவே வந்திருப்பார். அவர் ஆங்கிலத்தில் சொன்ன ஜோரில் இவர் தமிழில் பேசுவது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். ஊஞ்சல் மேலுயர்ந்த ஜோரில் திரும்பக் கீழிறங்கினாப்போலத் தோணும்.
மொழிபெயர்ப்பாளர் வேலையும் தவிர, பாதிரியார் அல்போன்ஸ் ஐயா அவரே தனிச் சொற்பொழிவுகளும் செய்வதுண்டு. நல்ல தமிழ் ஆர்வலர். வெள்ளிகளில், ஞாயிறுகளில் அவர் குருஸ் கோவிலில் உரையாற்றுவதைத் தொலைவில் இருந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம். நம்ம கதாகாலட்சேப சாஸ்திரிகள், சங்கீதத்தில் ஒரு காலும், வசனத்தில் ஒரு காலுமாக, ரெட்டைக்குதிரை சவாரி போவதில்லையா… அதே போல சிறு சிறு கீதங்களை அவர் இசைப்பதும் உண்டு.
சந்தோஷம் கொண்டேன், நான்
சந்தோஷம் கொண்டேன்…
ஆற்றொழுக்கான சொற்பொழிவு. கணீரென்ற குரல் எடுப்பு. நம்பிக்கையான உணர்வுத் தெறிப்புகள். தமிழில், பட்ட மேற்படிப்பு கண்டவர் அவர். ஆராய்ச்சி வல்லுநர் பட்டமும் – பி. எச்டி. – பின்னிணைப்பு எனப் பெயரோடு கொண்டவர்.
கொஞ்சம் பாடவும் கத்துக் கிடலாம்ல?
ஆமாம், பத்துமணியளவில்தான் நிகழ்ந்தது. பூகம்பம். காலையில்.
விநியோக நோட்டிசுகள் எழுதுவதில் அவர் பிரியங் கொண்டிருந்தார். மோட்சம் உண்டா? – விதி என்பது என்ன? – ஆண்டவரின் சாம்ராஜ்யம் – சாத்தானின் விழிப்பு – பாவ மன்னிப்பு – எப்படி வாழ வேண்டும்? – என்றெல்லாம் அவர் அவ்வப்போது தட்டச்சு செய்து தருகிறார். வெளிநாட்டு பாதிரிமார்கள் எழுதியதை மொழிபெயர்த்துத் தருகிறதும் உண்டு. (மிருகங்களுக்குப் பகுத்தறிவு உண்டா?) – எனக்கு எப்படித் தெரியும்? நான் மனுசன்! – கிறித்தவ மகாசபையில் அல்போன்ஸ் ஐயாவுக்கு தனிமரியாதையும் அந்தஸ்தும் கௌரவமும் உண்டு.
அன்று மாலை பொதுக்கூட்டம் இருந்தது. பொதுக்கூட்டத்தில் விநியோகிக்க நோட்டிசுகள் அடிக்க வேண்டியிருந்தன. முந்தைய இரவே அடித்து முடித்துக் கொடுப்பதாக ரத்னசபாபதி உறுதி தந்திருந்தான். உறுதிமொழி தராட்டி, பார்ட்டி ஜுட் விட்ருமே. ஆனால் எதிர்பாராமல் முந்தைய இரவு அச்சகத்தில் கரண்ட் நின்றுபோனது. மின்வாரியக்காரனைக் கூப்பிட்டு, வரேன் வரேன் என்று வரவேயில்லை. போனமுறை அவன் வந்தபோது ரத்னசபாபதி துட்டு சரியாக கவனிக்கவில்லை. வேலையை முடித்தபிறகு வயர்மேன் வந்து பார்த்தால், ரத்னசபாபதி ஆளையே காணவில்லை… எஸ்கேப்!
அது அவன் நேரம். இப்போது வயர்மேனின் காலம்!
அச்சகத்திலேயே ஃபியூஸ் போயிருந்தால் நம்ம ஃபோர்மேனே வேலையைப் பார்த்திருப்பார். மெய்ன் லைனில், விளக்குக்கம்பம் ஏறிப் பார்க்கவேண்டிய வேலை. நாம் ஏறக்கூடாது.
இரவு காத்திருந்து பார்த்துவிட்டு, பத்துமணி வாக்கில்தான் அச்சகத்தை ஏமாற்றத்துடன் பூட் டிவிட்டுக் கிளம்பினார்கள்.
காலை முதல்வேலையாக அவனைத் தேடிப் பிடித்துவர, சிவாஜி பணிக்கப்பட்டான். வயர்மேன் வீட்டில் இல்லை. தேடிவருவார்கள், என்று தெரியும். காற்று சுழிமாறி தன்பக்கம் வீசுகிறது என்று தெரிந்துவிட்டால், மனிதர்கள் எத்தனை உற்சாகமாய்ப் படுத்துகிறார்கள்… வயர்மேன் வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கிறான்!
அண்ணாச்சி வணக்கம்…
என்னப்பா? – என்கிறான் எதுவும் தெரியாத மாதிரி.
மச்சினி ஊர்லேர்ந்து வந்திருக்கு… நான் இன்னிக்கு லீவு விடலாம்னு பார்த்தேன்!… என்கிறான்.
மச்சினிச்சி வூட்டுக்கார் வர்லியாக்கும்? வந்திருந்தா ஏன் லீவு போடப்போறான்!
டீக்கடையருகே எப்படியோ ஆளைப் பிடித்து, டீக்கடைக்காரனுக்கு சிவாஜியே ‘அழ’ வேண்டியிருந்தது… டீக்டைக்காரன் ‘வேற எதாச்சும் வேணுமா சார்?’ என்கிறான் வயர்மேனைப் பார்த்து! – கூட்டிவர மணி ஒன்பது ஆகியிருக்கிறது.
பூகம்பம் பத்து மணிக்கு. யார் எதிர்பார்த்தார்கள்?
மூச்சா அடிக்க வந்த நாயை விரட்டிவிட்டு, வயர்மேன் கம்பத்தில் ஏறினான்.
ரத்னசபாபதியைப் பார்த்துக்கொண்டே வேலை செய்கிறான் வயர்மேன். எலேய் விழுந்துறாதே… என மனசில் பயப்பட்டான் சிவாஜி. காசு தொலையுதுறா. உயிர் – அது முக்கியம்லியா?
வேறு பியூஸ் காரியர் – பிரம்மோபதேசம் போல – வயர்ப் பூணல் போட்டு – கையோடு கொண்டு வந்திருந்தான். பழைய கேரியரை நீக்கிவிட்டு இதைச் சொருக சட்டென்று அச்சகத்துக்கு பிரசவம் ஆனாப்போல உயிரின் சலனம்!… நேற்றுப் போட்டிருந்த மின்விசிறி கடகட என இரைய ஆரம்பித்தது. குழல்விளக்குகள் கண்விழித்தன.
அசட்டுச் சிரிப்புடன் ரத்னசபாபதி பணங்கொடுக்கிறான். சிரிக்காமல் கொடுத்திருக்கலாம்… பாவம், வயர்மேன் போய்விடுவானோ என்ற பயத்தில் காலையில் இருந்து அவன் கல்லாப்பெட்டியை விட்டு நகரவில்லை.
வேடிக்கை வேணாம், வேலையாவட்டும்… நோட்டிஸ் அர்ஜன்ட். காலைலியே ஐயா போன் போட்டுட்டாங்க… என விரட்டுகிறான். எனக்கும் அர்ஜென்ட், என்று எழுந்து பாத்ரூம் போகிறான்.
மின்சாரம் வந்ததை எல்லாருமே உற்சாகமாய்த்தான் உணர்ந்தார்கள்.
பஜாரில் வழக்கமான வேலைகள் துவங்கிய உற்சாகமான காலை. யாருக்கும் பூகம்பம் வரப் போவது தெரியாது அல்லவா?
கச்சக் கச்சக் என்ற விநோத சப்தத்தை திரும்பத் திரும்ப உச்சரிக்கிறது அச்சு யந்திரம். யானை ஒரேமாதிரி ஆடிக்கொண்டே நிற்பதைப் போல. எருமை உட்கார்ந்து அசைபோடும்போது இப்பிடித்தான் பல்லை ஒரே மாதிரி ஆட்டும்..
கோவில் யானை வாசலில் இருக்கும். அச்சகத்தில் யந்திரம் உள்ளே, கர்ப்ப கிரகத்தில் போல தனி அந்தஸ்துடன்!
குருட்டுப் பிச்சைக்காரனுடன் அவன் பெண், அவனை அழைத்து வருகிறாள். சற்றே விலகிய ரோஸ் தாவணி. ரோஸ் ரிப்பன். ரத்னசபாபதி அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை சிவாஜி கவனித்து தனக்குள் சிரித்துக் கொள்கிறான். நடிகன் மகேஷ் கௌதம் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போவதாக அரசல் புரசல். எதோ ஒரு நடிகையுடன் கிசு கிசு… நம்மாளுக்கும் மூடு வந்திருக்கலாம். ரெண்டு பேருக்கும் ஒரே ஜாதகம்னாப்ல இப்டி உருகறான்… வான்கோழிப் பயல்!
பிச்சை கிடைக்காட்டி மோசமில்லை என அவசரமாய் நகர்கிறான் பிச்சைக்காரன். இவன் பார்ப்பதை அவன் எப்படித் தெரிந்து கொண்டானோ?
ஒரு வேளை அவன் குருடனே இல்லையோ!
இந்தக் காலையில் அவரவர் அவசரகதியில் இயக்கங் கொண்டிருக்கிறார்கள். பஜார் சுறுசுறுத்துக் கிடந்தது. பெரிய அகலமான ரஸ்தா அது. ஆட்கள் நடமாடி சிறுத்து விட்டது. மேலிருந்து பார்க்க மனுஷநடமாட்டம் புள்ளிக்கோடாய்த் தெரியலாம். அச்சகவாசலில் பழங்களைப் பரப்பி கடை போட்டிருக்கிறாள் குண்டுப் பொம்பளை ஒருத்தி. சீக்குக்கோழிக் கழுத்து நிற கொய்யாப் பழங்கள். அவளை, கடை போடாதே, என்று ஆனமட்டும் சொல்லிப் பார்த்தாயிற்று. அவள் பேச ஆரம்பித்தால் வாயில் இன்ன வார்த்தை என்றில்லை. நல்ல வார்த்தைகளையே அவள் மறந்துவிட்டாப் போல இருக்கிறது. பழத்தின் ரூசி தட்டினாப் போல கெட்ட வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக அனுபவித்துப் பேசினாள். அல்லது ஏசினாள்!
வெயில் ஏற ஆரம்பித்திருந்தது. பழங்களில் ஈ வந்து வந்து உட்கார்ந்ததை விரட் டுமுகமாக இலைச்சருகினால் பழங்களுக்கு விசிறிக்கொண்டே, ஆனால் தான் வியர்க்க விறுவிறுக்க உட்கார்ந்திருந்தாள்!
அவள் விசிறியதும் ஈக்கள் பழத்தில் இருந்து பறந்து அவள் மேல் உட்கார்ந்தன.
சும்மா உட்கார்ந்தமா, வியாபாரத்தைப் பார்த்தமா, என்பதுகூட இல்லை. வெத்திலையைக் குதப்பிக் குதப்பி, அரசியல்வாதி வெற்றி எனக் காட்டுவதைப்போல, உதட்டில் வைத்து தனக்கு இருமருங்கிலும் துப்பிக்கொண்டாள். இதில் இருந்து இது வரை என் இடம், என அடையாளம் போட்டாப் போல. ரிக்ஷாவில் அச்சகத்துக்குக் காகிதம் வந்து இறங்கினால் கூட, அவள் லேசாய் அசைந்து கொடுத்தாளே தவிர, இடம் மறித்தது மறித்ததுதான். ஆளும் செம குண்டு. சங்க நோட்டிசில் குறிப்பிடுவதுபோல, மாபெரும் தார்ணாவாக அது இருந்தது.
அல்போன்ஸ் ஐயா வேலைதான் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. அன்றைக்கு மாலை விநியோகம் செய்ய வேண்டும். ஒண்ணுக்குப் பதினாறு அச்சளவு நோட்டிசுகள்.
தலைப்பு – அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்?
எல்லாரும் வீட்டைத் திறந்து போட்ட்டுத் தூங்குங்கப்பா.
யாமிருக்க பயமேன் முருகர் கோவில் பட்டர்கூட, கோவிலைப் பூட்டிவிட்டு, பூட்டை இழுத்துப் பார்த்துக்கொள்கிறார் எச்சரிக்கையாக…
கடல்கரை வளாகம். நல்ல காற்றுப் போக்கான இடம். டூரிஸ்டுகள் வந்துபோகும் இடம். வெளியூர் ஆட்களும் நிறையப்பேர் சர்ச் வந்து போகிறார்கள். உள்ளூர்க்காரர்களையும் ஆகவே அந்த வளாகம் கவர்வதாய் இருந்தது. தினசரி திருவிழா என்கிற அளவில் கவனஈர்ப்பு செய்வதான கோவில் அது.
அருமையான சிற்பம் அது. பெரிய பீடம் நடுவில். அதற்குப் பின்னால் உயர உயரமான சிலுவையில் மிகக் கருணை கொண்ட கண்களுடன் சாந்தமான அமைதியான மூர்த்தி. யேசுபிரானின் அந்த எளிமை எல்லாரையும் கவர்வதாய் இருந்தது. அவரது எளிமையான தோற்றத்துக்கே ஜனங்கள் மனம் பறி கொடுத்து அவரிடம் பிரார்த்திக்க வந்தார்கள் என்றால், அந்த சந்நிதியை வைத்து பெரும் துட்டு கொழித்தவர்கள் எத்தனையோ பேர்!
(தொ ட ர் கி ற து)

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்