மழை மழையாய்…

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

புதியமாதவி, மும்பை


மழை நேரம்..

எப்படியும் மழைப்பற்றி ஒரு கவிதை

எழுதிவிட வேண்டும்.

இது மழை நேரம்..

மண்மகளைத் தழுவவரும் மழை மேகம் ..

மும்பையில் தவறாமல் வருகின்றதே..

வாக்குத்தவறாமல் வருகின்றதே..

இருக்கின்றது இன்னும் இதயங்களில் ஈரம்..

இது மழைநேரம்..

என் முற்றத்தில் தவறாமல் ஓடிவரும் மழைநேரம்..

உடல் குளிர்ந்து உணர்வுகள் எரியும் சூட்டில்

கதகதப்பில் காய்கின்றன உயிர்கள்

உயிர்களின் அணைப்பில் ஒரு கவிதை

மகோன்னதமான ஒரு காதல் கவிதை

எப்படியும் எழுதிவிட வேண்டும்

வேண்டும் மழையில் நனைந்து உடலில் குளிர்ந்து உயிரில் இணையும் காதல் பற்றி

இதுவரை எழுதாத எழுத்துக்களில்

இமைகளால் இப்போதே எழுதிவிட வேண்டும்

இது மழை நேரம்..

சன்னல் கண்ணாடிகளில் தெறிக்கும் முத்துக்கள்-

தொட்டிச் செடிகளின் இலைகளில் மின்னும் வைரங்கள்-

‘டபக் லபக் ‘ என்று ஓடும் தண்ணீரில் விளையாடும் சிறுவர்கள்-

மழைக்கோட்டுக்குள் சின்னதாக எட்டிப்பார்க்கும் நர்சரி தோட்டத்தின் இளம் பிஞ்சுகள்-

நனைய நனைய குடைப்பிடிக்காமல் தண்டவாளத்தில் ஓடிவிளையாடும் மின்சார வண்டிகள்-

‘சர் சர்ர்ர் ‘ என்று அடைத்தக் கண்ணாடிக் கதவுகளுடன் மழைரோட்டில் சறுக்கி ஆடும் சக்கரங்கள்-

முக்காடு போட்ட பெண்ணைப் போல இரண்டு பக்கமும் பர்தா தொங்க பள்ளங்களைக் கடந்துவந்து

பாதைகளை அடைத்து நிற்கும் ரிக்ஷாக்கள்-

எதையும் விட்டுவிடாமல்..

அப்படியே என் மழைநேர நாவலில் அள்ளி எடுத்து வந்து

என் எழுத்துக்களஞ்சியத்தை நிரப்பிவிட வேண்டும்.

மழை .. பார்வையிலேயே என்னைத் தழுவி அணைத்து

ஈரத்துக்குள் சூடேற்றி தீக்குள் நனைந்த சுகத்தில்

காலம் காலமாய் கண்மூடி , நினைவுகளின் தவத்தில் ஒன்றாகக் கலந்து

நான் மழையாக

மழை நானாக

மீண்டும் மீண்டும் கருமேகக் கருவறையின் பிரசவமாய்ப்

பிறந்து கொண்டே இருக்க வேண்டும்.

இதோ இந்த நிமிடம்..

நான் மழையாக மாறப்போகும் பரிணாமநேரம்..

என் கண்திரையில் விழுவது யார்.. ? யார் இவர்கள் ?

எங்கிருந்து எழுந்து வந்தது இந்த முகங்கள் ?

கருப்பும் வெள்ளையுமாய்..

எங்கிருந்து.. ?

கட்டி முடிக்காதக் கட்டிடங்கள்

வாய்ப்பிளந்து கோரமாய்ச் சிரிக்கும் கூரைகள்

ப்ளாஸ்டிக் தாட்டுகளால் ஆன தடுப்புச்சுவர்கள்

குட்டிப்போட்ட நாயுடன் சேர்ந்து கண்மூடிக் கனவுகாணும் பொடிசுகள்

இன்றொ நாளையோ.. எப்போதும் இன்னொரு உயிர் வந்துவிடலாம் என்று சுருக்குகள் விரியக்

காத்திருக்கும் சுருக்குப்பையின் உதடுகள்

கொட்டும் மழையில் அவன் சூடானச் சுவாசக்காற்றில்

அவள் நனைந்த மேனி

காய்ந்து கொண்டிருக்கிறது.

காதல் காட்சி.. இதுவும் காதல் காட்சிதான்..

ஏனோ எழுத முடிவதில்லை.

கண்ணில் கண்ட நிஜக்காதலை

வெள்ளையும் கருப்புமாய்ப் படம் பிடிக்கமுடியாமல்

மனத்திரையில் புதைந்துவிட்ட நிஜக்காட்சிகளை வெட்டி எடுத்து எறிந்துவிடவும் முடியாமல்

நடக்கின்றேன் குடைவிரித்து.

வெள்ளை உடையில் தேவதைகள்

மழையில் நனையும் பாடல் காட்சியை மழையில் நனையாமல் பார்த்துக் கொண்டே

கழிகிறது என் மழைக்காலம்….

****

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை