யூசுஃபும் கண்ணாடியும் -கதை — 04

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

தமிழில் : நாகூர் ரூமி


====

யூசுஃப் நபி வரலாறு — ஒரு அறிமுகம்

நபி யூசுப் (அலை) அவர்கள் நபிமார்களிலேயே மிகவும் அழகானவர்கள். அதேசமயம் மிகவும் ஒழுக்கமானவர்கள்.

யூசுஃப் நபியவர்கள் யஃகூப் நபியின் பன்னிரண்டு மகன்களில் ஒருவர். புன்யாமின் (பெஞ்சமின்) என்ற தம்பி மட்டும் கூடப்பிறந்தவர். மற்றவர்கள் அனைவரும் மாற்றாந்தாய்மார்களின் மக்கள். ஒரு நாள் யூசுஃப் தன் தந்தையாரிடம் வந்து, சூரியனும் சந்திரனும், பதினோறு நட்சத்திரங்களும் தன்னை வணங்குவதாகக் கனவு கண்டதாகச் சொல்கிறார். அதைப்பற்றி மற்ற சகோதர்களிடம் சொல்லவேண்டாம் என்று தந்தை அறிவுறுத்துகிறார்.

யூசுஃப் மீது தந்தையார் வைத்த பிரியத்தைப் பார்த்து யூசுஃபை வெறுத்த அவரது சகோதரர்கள், சிறுவரை ஒருநாள் தண்ணீரற்ற ஒரு பாழுங்கிணற்றில் போட்டு, பின் அந்தவழியாக வந்த யாத்ரீகர்களிடம் சொற்பக்காசுக்கு அடிமை என்று சொல்லி விற்றுவிடுகின்றனர். ஒரு ஆட்டுக்குட்டியை அறுத்த ரத்தம் தடவப்பட்ட யூசுஃபுடைய சட்டையை தந்தையிடம் காட்டி, யூசுஃபை ஓநாய் விழுங்கிவிட்டது என்று சொல்லிவிடுகின்றனர். உண்மையைப் புரிந்துகொண்ட தந்தை, இறைவனின்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு பொறுமை காக்கிறார்.

யூசுஃபை வாங்கியவர்கள் அவரை எகிப்துக்குக் கொண்டு சென்று அங்கு ஒரு அதிகாரியிடம் விற்றுவிடுகின்றனர். அந்த அதிகாரியின் வீட்டிலேயே ஊழியம் செய்து வளர்ந்து இளைஞராகிரார் யூசுஃப்.

அந்த அதிகாரியின் மனைவி யூசுஃபின் அழகில் மயங்கி அவரைப்பார்த்து ஆசைப்பட்டு ஒரு நாள் அழைக்கிறாள். ஒழுக்கம் மிகுந்த யூசுஃப் அதற்கு மறுக்கிறார். இந்த விஷயத்தின் தொடர்ச்சியாக அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். ஆனால் அதற்குமுன் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது.

யூசுஃப் உடனே சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால் மெல்ல இந்த விஷயம் ஊரில் பரவ, பெண்கள் அந்த அதிகாரியின் மனைவியைப் பழித்துரைக்கின்றனர். அவளோ, அவர்களுக்கெல்லாம் ஒரு விருந்து கொடுத்து அதில் யூசுஃபுக்கு நல்ல ஆடைகளை அணிவித்துக் காட்டுகிறாள். அவர் அழகைப் பார்த்து, அவர் ஒரு மானிடனே அல்ல, ‘இவர் ஒரு மலக்கேயன்றி வேறில்லை ‘, என்று வியந்த அப்பெண்கள், பழத்தை அறுப்பதற்கு பதிலாக தங்களை மறந்தவர்களாய் தம் விரல்களை அறுத்துக்கொள்கின்றனர்.

அதைப்பார்த்த அந்த எஜமானி, ‘முதல்முறை யூசுஃப் தப்பித்துக்கொண்டார். மறுபடியும் தான் சொல்வதை அவர் செய்யாவிட்டால் அவரை சிறையிலடைத்து சிறுமைப்படுத்துவேன் ‘ என்று கூறவும் யூசுஃப்,

‘என் இறைவனே! அவர்கள் என்னை அழைக்கும் இத்தீய காரியத்தைவிடச் சிறைக்கூடமே எனக்கு விருப்பமானது ‘ ( திருமறை 12 : 33) என்று கூறுகிறார்.

அதற்குப்பிறகுதான், இனிமேலும் யூசுஃபை அங்கு விட்டுவைப்பது நல்லதல்ல என்று, செய்யாத குற்றத்துக்காக அவர் சிறையிலடைக்கப்படுகிறார். யூசுஃபின் அழகுக்கும் இறையச்சத்திற்கும் ஒழுக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றி திருமறையின் வசனங்கள் 30லிருந்து 35வரை இதுபற்றிப் பேசுகின்றன.

சிறையில் அவரோடு எகிப்திய மன்னனிடம் ஊழியம் செய்த இரண்டு பேர் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் கண்ட கனவை யூசுஃப் விளக்குகிறார். அவர் விளக்கியபடியே, ஒருவனுக்கு மன்னனிடம் திரும்பவும் ஊழியம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. இன்னொருவன் சிலுவையில் அறையப்படுகிறான்.

சில ஆண்டுகள் கழித்து, ஏழு கொழுத்த பசுக்களை ஏழு நலிந்த பசுக்கள் சாப்பிடுவதாக மன்னனுக்கு ஒரு கனவு வருகிறது. அதற்கு யாராலும் விளக்கம் சொல்ல முடியவில்லை.

ஏழு ஆண்டுகள் நல்ல விளைச்சலிருக்கும் ; அதன் பிறகு ஏழு ஆண்டுகள் கடுமையான பஞ்சம் வரும். ஆகவே, முதல் ஏழாண்டுகளில் விளைவதிலிருந்து சேமித்துவைத்து, பஞ்சகாலத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று யூசுஃப் அதற்கு விளக்கம் சொல்ல, மன்னன் யூசுஃபையே தானியக்களஞ்சிய அதிகாரியாக நியமிக்கிறான்.

அதிகாரமும் செல்வமும் பெற்ற யூசுஃப், எகிப்தின் அதிகாரியாக இருக்கிறார். பஞ்சகாலத்தில் கனானிலிருந்து அவருடைய சகோதரர்கள் தானியம் வாங்க எகிப்துக்கு வருகின்றனர். புன்யாமீன் மட்டும் பார்வையிழந்த தந்தையோடு இருக்கிறார். சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்ட யூசுஃப், அவர்களுக்கு உண்மையை எடுத்துரைத்து அவர்களோடும் தன் பெற்றோரோடும் சேர்வதுதான் வரலாறு.

யூசுஃப் நபியைப் பொறுத்தவரை நான்கு விஷயங்களை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது : 1. அவருடைய அழகு, 2. அவருடை ஒழுக்கம், 3. அவருடைய இறை நம்பிக்கையும் பக்தியும், 4. இறைவனால் அருளப்பட்ட, கனவுக்கு விளக்கம் சொல்லும் சக்தி.

புனித பைபிளிலும் இந்த வரலாறு சொல்லப்பட்டுள்ளது. திருமறையைப் படிக்கும்போது அந்த வரலாற்றின் காட்சிகள் நம் கண்முன் விரிகின்றன. அவர்கள் பேசிய ஒழுக்கமும் பக்தி சிந்தும் வார்த்தைகளும் நம் காதுகளில் ஒலித்துகொண்டே இருக்கின்றன.

— மொழிபெயர்ப்பாளன்

யூசுஃப் (அலை) அவர்களைக்காண பால்யகால நண்பர் ஒருவர் வந்தார். யூசுஃபின் சகோதரர்கள் இழைத்த துரோகம் பற்றியும் அவர்களின் பொறுமையைப் பற்றியும் அவர் பேசினார்.

‘அது ஒரு சங்கிலி போலவும் நானொரு சிங்கம் போலவும் இருந்தேன். சிங்கத்தின் கழுத்தில் கட்டப்பட்ட சங்கிலி எதுவும் சிங்கத்தை அவமதிக்க முடியாது. அல்லாஹ்வின் விதியை எதிர்த்து எதுவும் நான் கூறமாட்டேன். கழுத்தில் சங்கிலி மாட்டப்பட்டிருந்தாலும் சங்கிலி செய்பவர்களையெல்லாம்விட சிங்கமே உயர்ந்தது (கம்பீரமானது) இல்லையா ? ‘ என்றார்கள் யூசுஃப்.

‘கிணற்றுக்குள்ளும் சிறைக்குள்ளும் உங்கள் அனுபவம் எப்படி ? ‘ கேட்டார் நண்பர்.

‘தேய்பிறையைப்போல இருந்தேன் ‘ — யூசுஃப்

பிறையாகவும் பாதியாகவும் உள்ள நிலா பெளர்ணமியின்போது முழுமையடைவதில்லையா ? பூமிக்குள்ளே விதைக்கப்படும் மணி பூமியின் மேலே பயிராக வளர்கிறது. அந்த கோதுமையை ஆலையில் வைத்து அரைத்தாலும் அது கோதுமையைவிட மதிப்புள்ள, சத்துள்ள ரொட்டியாகிறது. அந்த ரொட்டியையும் பற்களிடையில் வைத்து அரைத்து மனிதர்கள் கஷ்டப்படுத்துகிறார்கள். அப்போதும் அந்த ரொட்டி மனிதனின் மனதாகவும் அறிவாகவும் உடலாகவும் மாறுகிறது.

‘சரி நண்பரே, பயணம் வந்துள்ள நீர் எனக்கு என்ன பரிசு கொண்டுவந்துள்ளீர்கள் ? ‘ என்றார்கள் யூசுஃப்

வெறுங்கையோடு நண்பரின் வீட்டுக்குப் போவது கோதுமையின்றி ஆலைக்குப் போவது மாதிரி. இறுதித் தீர்ப்புநாளில் கூடியிருக்கும் மக்களிடம் இறைவன் கேட்பான், ‘உயிர்த்து எழும் இந்த நாளுக்கான பரிசு எங்கே மக்களே ? நாம் உங்களை எப்படி அனுப்பினோமோ அப்படியே சும்மா திரும்பி வந்துள்ளீர்களா ? வீட்டுக்குத் திரும்பி வரும்போது வெறுங்கையோடு வரலாமா ? ஒருவேளை திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையே இல்லையா ? இன்று என்னை வந்து சந்திப்பேன் என்று நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்னாயிற்று ? அதெல்லாம் மறந்துவிட்டதா ? ஒன்றுமிருக்காது என்று தோன்றியதா ? ‘ என்று.

வாசகர்களே! இறைவனின் விருந்தாளியாகத் திரும்பி வருவீர்கள் என்ற வாக்குறுதியில் உங்களுக்கும் நம்பிக்கையில்லையா ? உள்ளதெனில், நண்பனாகிய இறைவனின் சன்னிதானத்துக்கு வெறுங்கையுடன் புறப்படுவீர்களா ?

உறக்கத்தையும் உணவையும் சற்று குறைத்துக்கொள்ளுங்கள். இறைவனை சந்திக்கும்போது பரிசு கொண்டுபோக அது வழிவகுக்கும்.

கொஞ்சமாக அசையுங்கள். கருப்பையினுள் உள்ள சிசுவைப்போல. அப்போதுதான் பேரொளியைப் பார்ப்பதற்கான புலன்களைப் பெறுவீர்கள்.

இறைநேசர்கள் உயர்த்தப்படும் நிலையை அறிய உதவும் சுவையென்று உறக்கத்தை உணருங்கள். இறைநேசர்கள் ‘அஸ்ஹாபுல் கஹ்ஃப் ‘ எனப்படும் குகைத்தோழர்களைப் போன்றவர்கள். அசைவிலும் விழிப்பிலும் அவர்கள் உறக்கத்தில்தான் உள்ளார்கள். அதாவது இறைவனே அவர்களை அசைக்கிறான். அவர்களே அறியாமல் அவர்கள் மூலமாக அவனே செயல்பட்டுக்கொண்டு இருக்கிறான். அவர்களை இடமும் வலமுமாக திருப்புகிறான்.

வலது என்பது என்ன ? நல்ல செயல்கள். இடது என்பது என்ன ? உடம்பின் ஆசைகளும் அதை நிறைவேற்றுவதற்காகச் செய்யப்படும் செயல்பாடுகளும்தான்.

இந்த வலது இடது செயல்பாடுகள் இறைநேசர்களிடமிருந்து புறப்பட்டாலும் அவர்கள் இரண்டையுமே அறியாதவர்களாக உறக்கத்தில் உள்ளார்கள். எதிரொலிக்கும் மலையைப் போல. தான் எதிரொலிக்கும் வார்த்தை நல்லதா கெட்டதா என்பதை மலை அறியுமா என்ன ?

‘சரி, உம் பரிசைக் காட்டும் ‘ என்றார்கள் யூசுஃப்.

‘எத்தனையோ பரிசுப்பொருள்களைப் பார்த்துவிட்டேன். எதுவுமே தங்களுக்கு உகந்ததாக இல்லை. தங்கச்சுரங்கத்துக்கு தங்கமணியை எப்படிப் பரிசாகக் கொண்டுவருவேன் ? கடலுக்கு பரிசாக ஒரு துளி நீரா ? உங்கள் பண்டக சாலையில் இல்லாத பயிர்களும் விதைகளும் ஏது ? உங்கள் அழகோ ஈடு இணையற்றது. ‘:

‘எனவே, உள்ளொளியைப் போன்ற கண்ணாடியைப் பரிசளிப்பதே சிறந்தது என முடிவு செய்தேன். ஓ சொர்க்கத்தின் விளக்கே! அதில் உங்கள் அழகுத் திருமுகத்தைக் காணும்போதெல்லாம் உங்களுக்கு என் நினைவு வரும் ‘ என்று வெட்கத்தோடு கூறிய நண்பர், தான் கொண்டுவந்திருந்த கண்ணாடியைக் காண்பித்தார்.

அழகானவர்களின் வேலையெல்லாம் கண்ணாடியோடுதானே! இருப்பின் கண்ணாடி எது ? இல்லாமைதானே!

நீங்கள் முட்டாளாக இல்லாத பட்சம், இல்லாமை எனும் கண்ணாடியைப் பரிசாகக் கொண்டுவருவீர்கள். ஏனெனில் இல்லாமையில்தான் இருப்பு தெரியும். ஏழைகளுக்குத்தான் பணக்காரர்கள் கொடுப்பார்கள். உணவின் தெளிவான கண்ணாடி பசிகொண்ட மனிதனே. ஆரோக்கியமான மனிதர்களுக்கு மத்தியில் மருந்துக்கு என்ன வேலை ?

நிறையின் கண்ணாடி குறையே! தன் குறையை எவன் அறிந்து கொண்டானோ அவனே முழுமையை நோக்கி விரையும் மனிதனாவான். நாயனை நோக்கி மனிதன் பறந்து செல்லாததன் காரணம் தன்னை அவன் குறைகளற்றவனாக நினைத்துக்கொள்வதுதான்.

உங்களை நிறைகுடம் என்று நினைத்துக்கொள்வதைத் தவிர மோசமான நோய் ஒன்றுமில்லை. பெருமை பிடித்தவர்களே! இப்லீஸ் செய்த தப்பெல்லாம் ஆதாமை விட தான் உயர்ந்தவன் என்று நினைத்ததுதானே! அந்த நோய் ஒவ்வொரு இதயத்தையும் பீடித்துள்ளது.

நீங்கள் பார்ப்பதற்குதான் தெளிந்த நீர். அடியில் சேறும் சாணமும் உள்ளது. ஷைத்தான் உங்களை கலக்கியவுடனேயே சேறும் சாணமுமாக நீர் நிறம் மாறும். உங்கள் சேற்றையும் சாணத்தையும் வடிகட்டி சுத்தமான நீராக உங்களை வெளியேற்றத் தேவை ஞானகுருவாகிய ஷெய்கு.

உங்கள் காயத்தை குணப்படுத்த அந்த அறுவைசிகிச்சை நிபுணரிடம் செல்லுங்கள். காயத்தை ஈக்கள் மொய்க்கும்போது அந்த அசிங்கங்கள் வெளியில் தெரியாது. உங்கள் தீய எண்ணங்களும் தீய ஆசைகளும்தான் அந்த ஈக்கள். உங்கள் குறையை பிரதிபலிக்கும் கண்ணாடியாகிய வலியுல்லாஹ்விடம், குருவிடம் உங்களை ஒப்படைத்துவிடுங்கள். அவரின் ஒளிக்கதிரின் பொருட்டுதான் உங்கள் காயங்கள் குணமடைந்து மறையும்.

— தொடரும்

ruminagore@yahoo.com

ruminagore@hotmail.com

http://nagorerumi.blogspot.com/ — எனது ப்ளாக் முகவரி

http://abedheen.tripod.com/nagorerumi.html — எனது வலைப்பக்க முகவரி

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி