ஒரு பூட்டுக்குப் பின்னால்….

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

வேதா


அந்த வீட்டுக் கதவில் இன்னும் பூட்டு தொங்கிக்கொண்டு இருந்தது. அது நான் அலுவலகம் செல்லும் வழியில் இருந்ததால், அடிக்கடி கவனிப்பேன். நகரத்தின் நட்ட நடுவே இப்படியொரு வீட்டை வைத்துக்கொண்டு ஒரேயடியாக பூட்டிப்போட எப்படித்தான் மனசு வந்ததோ ? சுற்றிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், நகரத்தின் நாடியில் இருக்கும் பிரதான சாலை, அருகில் மின்சார ரயில் வசதி, முன்பக்கமாய் தோட்டம், தென்னைமரம் என்று அந்த வீட்டில் சகல செளகரியங்களும் இருக்கத்தான் செய்தன. முகப்பு மட்டும் பாராளுமன்றம் போன்ற அழகான வடிவம். ஏறக்குறைய 70 வருடத்திய பாரம்பரியம் இருந்தது அதன் சுவர்களில்…..என்னை மிகவும் கவர்ந்த வீடு அது! பூச்சிகளும், தவளைகளும் கத்திக்கொண்டிருந்ததையும் தாண்டி, அதன் பக்கங்களில் எல்லாம் சொல்லமுடியாத ஏக்கம் பூசி இருப்பதை என்னால் உணர முடிந்தது. இப்படித்தான், எங்கள் திருமணத்துக்கும் முன்பிருந்தே , தினமும் காலை சிக்னலில் காத்திருக்கும் நேரம் அந்த வீடு என்னை சலனப்படுத்தத் தொடங்கியது.

என் மனைவிக்கு ‘இன்டாரியர் டெக்கரேஷன் ‘ என்றால் கொள்ளை ஆசை! வீட்டை பார்த்துப் பார்த்து அலங்கரிப்பாள். அப்போதெல்லாம் அவளிடம் அடிக்கடி சொல்வேன், ‘நாம் சென்னையில் தான் செட்டிலாக வேண்டும் ‘ என்று! உடனே அவள் அழகு முகம் சுருங்கிப்போகும்! அவளுக்குத் தெரியாமல் எனக்கு சென்னையில் ஏதோ ஈர்ப்பு இருந்ததில் , என் காதல் கண்மணிக்கு வருத்தம்தான்! பிரிவில் தானே காதல் உயிர் வாழுகிறது ? இந்தியாவை விட்டு வெளியில் செல்லத் தொடங்கிய அந்த நிமிடம் முதல், அந்த வீட்டின் மேல் எனக்கிருந்த காதல் இன்னும் அதிகரித்திருந்தது.

இதோ, இப்போது மீண்டும் சென்னைக்கே வந்தாகிவிட்டது. வெகு நாட்களாக மனதை உறுத்திக்கொண்டிருந்த கேள்வியை இரவு அவள் கேட்டே விட்டாள்: ‘என்னப்பா..ஏதோ திட்டம் போடறமாதிரி தெரியுது, என்கிட்ட சொல்லக்கூடாதா ? ‘ நான் பதிலே பேசவில்லை. என் மவுனத்தைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் உதட்டுச்சுழிப்பில் இருந்து அது பொய்க்கோபம்தான் என்று புரிந்துகொண்டேன்.

அடுத்த நாள் சற்று முன்னதாகவே அலுவலகம் கிளம்பினேன். ‘எங்க போறீங்க ? ‘ என்று கேட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள், என் மனைவி! என் கவனமெல்லாம் அந்த வீட்டைப்பற்றியே இருந்தது. அந்த இடம் வந்தவுடன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு மெல்ல பூக்காரியிடன் பேச்சுக்கொடுத்தேன். ‘அதுவா!…. ‘ரொம்ப நேர யோசனைக்குப் பிறகு அவள் சொன்னாள்: ‘ நான் பூவிக்க வந்தப்ப சின்னப்பொண்ணுங்க. அதனால சரியா ஞாபகமில்ல….ஆனா, இந்த வீட்டுல ஒரு அம்மா இருந்துச்சு. சாமி பூ மட்டும் தினம் வாங்கும். வேற எதும் தெரியாதுங்க! ‘ என்றாள். ஆஹா…ஏதோவொரு வால் கிடைத்துவிட்டது. இனி, இதில் சுவாரஸ்யம் என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும்…என் ஆர்வம், அலுவலகத்துக்கு விடுப்புத் தெரிவித்ததும் இரட்டிப்பாகியது. நேராகச் சென்று அருகில் உள்ள அடுக்குமாடிக்குடியிருப்பின் செயலாளரிடம் விசாரித்தேன். அவர் யோசனையின்படி, அவர் சொன்ன கட்டிட நிறுவனம் செல்வது என்று முடிவு செய்தேன். அவர் சொல்வதைப் பார்த்தால் , அந்த வீட்டு உரிமையாளர்கள் நிச்சயம் பெரிய பணக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும்! இல்லாவிட்டால், இவ்வளவு பெரிய வீட்டை வருமானமே இல்லாமல் சும்மா போட்டு வைப்பார்களா என்ன ? ரொம்ப தூரம் அலைய வைக்காமல், இருபது நிமிடங்களுக்குள் அந்த நிறுவனம் வந்து சேர்ந்தது.

உள்ளே சென்று விஷயம் சொன்னதும், காத்திருக்கச் சொன்னார்கள். கொஞ்ச நேரத்திற்குள் ஒரு நாற்பது வயது மதிக்கத் தக்க ஒரு பெண் வந்தாள். தானே வரவேற்று உள்ளே தனியறைக்குக் கூட்டிப்போனாள். அவள் தான் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் என்பதை அந்த அறை சொல்லியது. ‘ம்….சொல்லுங்க! ‘ என்பதுபோல் அவள் என்னைப் பார்க்க, நான் என்னை அறிமுகம் செய்துகொண்டு எல்லாவற்றையும் ஒப்பித்தேன். பொறுமையாகக் கேட்டுக்கொண்டாள். அந்த வீட்டின் மேல் எனக்கிருந்த காதலைப் புரிந்து கொண்டது போல் சற்று நேரம் மவுனமாக இருந்தாள். ‘இல்ல மாதவன்…நீங்க பத்திரத்துலர்ந்துதான் விஷயத்தை தெரிஞ்சுக்கணும்னு இல்ல…… ‘ மேற்கொண்டு நிறையப் பேசப்போவதைப் போல் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். ‘இதுக்கு முன்ன நிறைய பேர் இது பத்தி என்கிட்ட கேட்டிருக்காங்க….ஆனா அவங்க கிட்ட சொல்லணும்னு தோணலை. இப்போ உங்ககிட்ட சொல்லிடணும்போல இருக்கு…. ‘ ‘ நான், என் தங்கைன்னு எங்க குடும்பத்துல ரெண்டு பேர் தான்! ‘இதென்ன சம்பந்தமே இல்லாம… ‘ என்று நான் அவசரப்பட்டு யோசிக்காமல் , பொறுமையாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படியெல்லாம் கதை கேட்க எனக்குப் பிடிக்கும் தெரியுமோ ?

‘தங்கை ரொம்ப அழகு! புத்திசாலியும் கூட….அப்பா அவளை உயர்படிப்பெல்லாம் படிக்க வெச்சார். கடைசில, அவ லவ் மேரேஜ் பண்ணிட்டு கனடாவுலயே செட்டில் ஆகிட்டா….அந்த அதிர்ச்சியில் அப்பா சீக்கிரமே செத்துப்போனார். எங்க குடும்பம் சிதறிப்போச்சு. அம்மாவுக்கு அப்பாதான் எல்லாமே! அவங்க அதிகம் படிக்கலை. பெரிய சாமர்த்தியமும் இல்லை. என்னைக் கரை சேர்க்க அம்மா திண்டாடிட்டிருந்தப்போ தான் இவங்க பக்கத்துல குடி வந்தாங்க…. ‘ ‘இவங்க ‘ என்பது அவள் கணவரை என்று புரிந்தது.

‘ஒரே சாதி, ஒத்துப் போயிடுச்சு. அம்மா சம்மதத்தோட என் கல்யாணம் நடந்தது. பெருந்தன்மையா என்னை அழைச்சுகிட்ட என் மாமியார் எங்க அம்மாவை மட்டும் ஏனோ அண்ட விடலை. இதனால எங்க குடிம்பத்துல பிரச்சனை வர ஆரம்பிச்சது. அப்புறமா நாங்க வெளிநாடு போனோம். தங்கையோட நகையெல்லாம் எனக்குத் தராததுனால எனக்கும் அம்மா மேல கோபம் தான்…..திரும்ப வந்து நாங்க குடியிருந்த வீட்டை இடிச்சு ஃப்ளாட் ஆக்கினோம். அப்போகூட, அம்மாகிட்ட நான் பேசவே இல்லை. இடைல வந்து போயிட்டிருந்த என் தங்கை, அவளோட பாகம் கிடைச்சதும் போயே போயிட்டா……மாமியார் இறந்தப்புறமாக் கூட என் பிடிவாதம் மட்டும் குறையவே இல்லை. ‘

இப்போது அவள் கண்களில் நீர்ப்படலம். ‘அந்த வீட்டில் எங்க அம்மா தனியா ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க சார்…..பால்காரன், காய்கறிக்காரன் இப்படி ஆளுங்ககிட்ட எல்லாம் அவங்களைப் பத்தி விசாரிச்சுப்பேன். என்னை மாதிரியே அவங்களும் நினைச்சாங்களோ என்னவோ….அவங்களும் என்கிட்ட எதுக்குமே வந்து நிக்கலை…..இப்போ அந்த வீட்டு உரிமைகூட அம்மா கிட்ட தான் இருக்கு! ‘

‘ஓ! அப்படின்னா……இப்போ அவங்க எங்கே ? ‘ என் கேள்வியால் அவள் இன்னும் கலங்கிப்போனாள். ‘எதுவுமே தெரியலை….உயிரோட தான் இருக்காங்களான்னே தெரியலை….ஒரு பொண்ணா இருந்தும் கடைசில அவங்கள நிம்மதியா இருக்க விடாம பண்ணிட்டேன்…மனசுல என்ன தோணித்தோ ? என்கிட்ட என்னவெல்லாம் பேசணும்னு ஆசைப்பட்டாங்களோ… ? ‘ அவள் அழுதே விட்டாள்.

‘ஓகே…பரவால்ல மேடம், நான் உங்கள ரொம்பத் தொந்தரவு பண்ணிட்டேன் ‘ என்று மட்டும்தான் என்னால் சொல்ல முடிந்தது. ‘அவங்க எங்க போனாங்கன்னு கூடவா தெரியலை ? ‘

‘ம்…அப்போ நாங்க அந்தமான் ட்ரிப் போயிருந்தோம். வந்து பாத்தா பூட்டு தொங்கிட்டு இருந்துச்சு. விசாரிச்சதுக்கு, கடைசியா ஏதோ ஆசிரம அட்ரஸ் காட்டி அதுக்கு வழிகேட்டுட்டு இருந்தாங்கன்னு சொன்னாங்க… ‘

‘அவங்க போட்டோ வெச்சு விளம்பரம் செய்திருக்கலாமே.. ‘

‘ம்…செய்திருக்கலாம்தான்! ஆனா எந்த மூஞ்சிய வெச்சுட்டு அப்படி செய்றதுன்னு சொல்லுங்க ? ‘

அதுவும் சரிதான்! நான் விடைபெற்றேன். இவளைப் பெற்றவளுக்கும் இவளைப்போல நிறைய ஆதங்கம் இருக்குமோ என்று தோன்றியது. என் மனசுக்குள் அந்த வீடு ஏதோ அதிர்ச்சியில் தரைமட்டமாவதுபோல் ஒரு பிரமை! வீடு திரும்பும்போது நிறைய மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டேன். வண்டி சத்தம் கேட்டு கதவைத் திறந்த என் மனைவி கண்களை விரித்து ஆச்சரியப்படவில்லை(! ?) ‘ம்..இன்னிக்கி லீவு சொல்லிட்டு வந்துட்டேன். கிளம்பு, எங்கயாவது போய்ட்டு வரலாம்! ‘

‘என்னப்பா ஆச்சு ? ‘ நான் கொஞ்ச நேர மவுனத்திற்குப் பின் சொன்னேன்: ‘நம்ம சென்னையைவிட்டு வேற எங்கயாவது போய் செட்டில் ஆகிடலாமா ? ‘

‘என் செல்லம்! ‘ எனக்குள் உண்டான ஏமாற்றத்துக்கு மருந்து தடவுவதுபோல, பின்புறமாக ஓடி வந்து இறுகத் தழுவிக்கொண்டாள். அவளின் அழுத்தத்தில் வெகு நாளாக என்னை அழுத்திய ஏதோ ஒன்று விடுபட்டு , மனசெல்லாம் லேசான மாதிரி இருந்தது எனக்கு……

***

piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா