பறவைப்பாதம் – அத்தியாயம் 1

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


1

பெரியவனின் மீசை சார்ந்த கவனங்கள் ஆச்சரியம் அளிக்கின்றன. வாழ்க்கையில் இது ஒரு பருவம். எதையும் மகிழ்ச்சியின் ஊற்றாய் உள்க்கதகதப்போடு அனுபவிக்கும் வயது. டான்-ஏஜ். நடையில் சற்று கனவின் ஒயில் தன்னைப்போல வந்திருக்கிறது. தன்னைத் தானே மாப்ளையாய் உணர்கிற நடை. தேவாதி தேவருடன் வீதிகளில் சஞ்சரித்து பெண்பார்க்கும் படலம் அது. அடேய், பார்க்கும் படலமா, பார்த்த படலமா ?

அது காதல் அல்ல… என்கிறார்கள். இது காதல், இது காதலல்ல என்பதெல்லாம் நம்புவதற்கில்லை. தொடர்ந்த நல்வாய்ப்புகள் அதைக் காதலாக முகிழ்க்கவும் சாத்தியம் உண்டு. சில, தொட்ட அலை விட்ட அலை என மனத்துள் மூழ்கி விடவும் கூடும்… அவ்வலைகள் குபீரென சந்தர்ப்பங்களில் மேல்மட்டத்துக்கு பொக்கிஷங்களை எடுத்து வந்து கரைகளில் சேர்த்து விடவும் செய்யும்… ராஜகோபால் புன்னகை செய்து கொண்டார்.

இன்றைய காலை-மனசின் தாளக் கட்டு என்ன இப்படி அமைகிறது… தெரியவில்லை. தலைவாரிக் கொள்ள வீட்டுப் பொதுக் கண்ணாடி- பெரிய கண்ணாடி முன்னால் போனால் நந்தகுமார் இடப்புறம் வலப்புறம் திரும்பி உத்து உத்துப் பார்க்கிறான்… தொலைத்த பொருளைத் தேடுகிறாப் போல. ஆச்சரியம். தொலைத்த பொருளைக் கண்ணாடியில் தேடினால் எப்படிக் கிடைக்கும் ? அட, மீசையைத் தேடுகிறான். இது இந்த-வயசுக் கவலை. அட, பிளஸ் டூ வந்தாச்சே – இன்னும் மீசை வரவில்லையே ? தாமதமாகிறதோ ? மீசையே வராதோ ? வந்து விட்டாலும் கூட இந்தக் கவலை விடாது… அதன் அடர்த்தி சார்ந்து அடுத்த பிரச்னையை மனசு எழுப்பும். பளீரென்ற… பால்தெறிக்கும் சிறு முகத்துக்கு அரும்பிய மீசை அழகோ அழகு. ஒரு பார்வைக்கு பெற்றவர்களுக்கே புன்னகையும் கிறுக்குப் பாசமான உள்க்கிளர்ச்சியும் கிடைக்கச் செய்கிற இள வயசு அது.

ஆ, நான் அதை இழந்தேன்… இருபது வயதுக்கொரு முறை… மனம் மீண்டும் அடுத்தகட்ட, அடுத்த வளைய வாழ்க்கையை உணர வைக்கிறது. சிக்னலில் வாகனத்தில் காத்திருக்கையில் உள்ளங் கையில் திணிக்கப்பட்ட நோட்டிஸ் போல. கூடவே இழந்த அந்தக்காலப் பொற்கணங்களுக்கு பொற்கிரணங்களுக்கு ஏங்கவும் வைக்கத்தானே செய்கிறது ?

மனசின் குதியாட்டங்களை அடக்கினார். கனவுகள் காத்திருக்கட்டும். ஓய்வுநேர அசைபோடல்களுக்கு அவை உதவும். நல்ல விஷயம் அது. நந்தகோபால், உனக்கு மீசை முளைக்கவும், அதன் அடர்த்திக்கும் என் ஆசிகள். ஆ, உன் வருங்காலக் காதலிக்கும் வாழ்த்துக்கள் அப்பா!

– நேரமாகி விட்டது. இப்படி வேட்டிதடுக்கத் தடுக்க நடக்கிறாப் போல… இந்தக் காலையில் கனவு தடுக்கினால் கட்டுப்படியாகாது. இது நகரம். சென்னை மாநகரம். வெளியே உலகம் வேறு மாதிரியானது. கனவின் மேகம் கொண்டதல்ல அது. நிஜத்தின் புழுதியும் புகையும், புன்னகையைப் பிடுங்கியெறியும் குரூரமும் கொண்ட வாழ்க்கை. காலப்பேய் முன்னே நின்று வா வாவென அழைக்கிறது. போயாக வேண்டும். நானும் குட்டிப் பேயாக வேண்டும். சுயநலமான, பிறரை மதிக்காத பேய். தன் காரியம் மாத்திரமே பிரதானமான பேய். நாய் குதறிய மாமிசமாய் மனசை மாற்றி விடுகிறது நகர வாழ்க்கை. தவிர்க்க முடியவில்லை. தப்ப வழி கிடையாது. முன்னெட்டு எடுத்து வைத்த கணங்களில் பின்வாங்கும் வழிகள் இங்கே அடைபட்டுப் போகின்றன. கல்யாண வீடுகளில் சாப்பிட்ட ஜோரில் இலையெடுத்துப் போகிறாப் போல.

தலை வாரி முடித்து பெளடர் பூசிக் கொண்டார். நகரத்துக்கேற்ற ஒப்பனை முகம். வெள்ளைப் புழுதிதானே பெளடர். வீட்டிலே ஒத்திகை பார்த்துக் கொண்டாற் போல ஒரு சிறு மயக்கம்… மனசு எப்படியாயினும் ஒரு கவிதைத் தெறிப்பை வெளிமூச்சாய் விட்டுக் கொண்டேதானே இருக்கிறது… ஆச்சரியம். இன்னும், இங்கே… இந்த நெருக்கடியில் மனிதன் மிச்சமிருக்கிறான். காரடியில் சிக்கியும் டயரில் அடிபடாமல் தப்பித்தாற் போல. நல்ல விஷயம்.

‘ ‘கொஞ்சம் பணம் வேணும்ப்பா ‘ ‘ என்கிறான் நந்தகுமார். ம்- என அவனைப் பார்க்கிறார். காரணம் கேட்டு ஊடுருவும் சிறு பார்வை. ‘ ‘ஃப்ரெண்ட் ஒருத்தனுக்குப் பிறந்தநாள். நாங்கல்லாம் சேர்ந்து அவனுக்கு ஒரு பிரசன்ட் பண்ணணும்… ‘ ‘

‘ ‘ரைட். அம்பது வேண்டியிருக்குமா ? ‘ ‘

‘ ‘போதும் ‘ ‘ என்கிறான்.

சிநேகிதனா சிநேகிதியா தெரியவில்லை… என்ற மனசை மீண்டும் அடக்குகிறார். வளர்ந்த இரு பிள்ளைகளும் அழகான மனைவியும் என வாழ்க்கையில் உற்சாகத்துக்குக் குறைவொன்றும் இல்லை. பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறார்கள். இவள்தான் சற்று அலட்டலான கவலைக்காரி. சந்தோஷமான ஆள்த்தான்- என்றாலும் கவலைப்பட்டு அலட்டிக் கொள்கிற பாவனைகள் பெண்களைப் பொறுப்புள்ளவர்களாக உணர வைக்கின்றன. பொறுப்புகள் சிறு மனநிறைவும் பெருமிதமும் தருகின்றன. பர்ஸ் நிறையப் பணத்துடன் ஷாப்பிங் கிளம்பினாப் போல. மனுஷாளுக்கு அதும் வேண்டித்தானே இருக்கிறது ?

‘ ‘கரெண்ட் பில் கட்டணும். போனதடவை போல கடைசி நாள்வரை விட்டுவிட்டு அமக்களமாயிடப் போறது ‘ ‘ என்று பேசிக்கொண்டே வந்தவளை பார்க்க மனம் பொங்கியது. அருகே இழுத்து உதட்டோடு ஒரு உரசல் உரசியாகிறது. ‘ ‘நந்தா வந்திறப் போறான் ‘ ‘ என ஒரு அலங்கார அலட்டலுடன் அதை அவள் ஏற்றுக் கொள்கிறாள்.

‘ ‘நேரமாறது உங்களுக்கு… ‘ ‘

‘ ‘ஆமாம். ‘ ‘

‘ ‘பின்னே ? இப்டி ஆடிண்டிருந்தா ?… ‘ ‘ என்று உதட்டைத் துடைத்துக் கொள்கிறாள்.

‘ ‘வா நானே துடைச்சிவிடறேன்… என் உதட்டால்… ‘ ‘ என்கிறார். வயது எப்பவோ பின்னோக்கிப் போயாச்சி… இனி உறங்காது. உட்பரபரப்பு… உற்சாகம் காலைக்கு நல்லது. இந்த ‘அலுவலகம் கிளம்புமுன்னான ‘ முத்தம் நாள்ப்பூராவும் உற்சாக டானிக்கென அமையும். அவளுக்கும் அது தெரியும். அவளுக்கும் அது வேண்டும். அவளாகவே அவருக்குத் தந்த நாட்களும் உண்டு…

ஈஸ்வரியும் வேலைக்குப் போகிறாள். அண்ணாசாலையின் அடுக்கு மாடிக் கட்டடங்கள் ஆண்-பெண் இயந்திரங்களால் நிரம்பி வழிகின்றன. அந்த வளாகங்களில் லிஃப்ட்கள் கிறீச் கிறீச்சென ஓயாது இயங்குகின்றன. மேலும் மனிதர்கள் அதை வேலைவாங்க அந்தந்த மாடிகளின் வெளியே காத்திருந்து பொத்தான்களை அழுத்துகிறார்கள். காலத்தின் தொப்புள்கள் அவை- அந்தப் பொத்தான்கள்!

நந்தகோபாலின் பின்னால் அவர் வந்து நின்றாற்போல, அவர் பின்னே இப்போது மனைவி வந்து கண்ணாடியில் எட்டிப் பார்க்கிறாள். நாடகத்தில் பாத்திரங்கள் வரிசையாய் அறிமுகம் செய்துகொள்கிறாப் போல… கண்ணாடி என்கிற வருகைப்பதிவு நாளேட்டில் அவர்கள் ஒவ்வொருவராய்க் கையெழுத்திடுகிறார்கள்.

சட்டென்று கவனக் குவிப்புடன் ஈஸ்வரி கண்ணாடியை உற்றுப் பார்க்கிறாள். அடாடா இவளும் தேடலாச்சே… எதைப் பார்க்கிறாள்… என்றறிய ஆசை கொண்டார்.

நந்தகோபால் மீசையைத் தேடினான். எனக்கு இழந்த வாலிபப் பருவம். அவளுக்கு ?…

சற்று அதிக நீளமாய் வளர்ந்திருந்த வெள்ளை நரைமுடி. கண்டுபிடித்துக் கையால் பிடுங்கி யெறிகிறாள் ஈஸ்வரி. அதைப் பற்றி அவள் அலட்டிக் கொண்டது ஆச்சரியமாய் இருக்கிறது. ‘ ‘இருக்கட்டுமே அது பாட்டுக்கு ‘ ‘ என்கிறார் புன்னகையுடன்.

‘ ‘உங்களுக்கு நரைக்கவில்லை ‘ ‘ என்கிறாள் சிறு ஆதங்கத்துடன்.

‘ ‘அடிப் பெண்மணி… உனக்கு நரைச்ச கவலையா, எனக்கு நரைக்காத கவலையா ? எது உன் பிரச்னை ? ‘ ‘ என்று கிண்டல் செய்தபடி பின்பக்கமாக அவளை அணைத்துக் கொண்டார்.

‘ ‘ரெண்டுந்தான்… ‘ ‘

சிரிக்கிறார்கள்.

—-

வீட்டை விட்டு வெளியே வந்து ஸ்கூட்டரை உதைத்த கணம் வேறொரு உலகத்துக்கு அவர்கள் வந்தார்கள். காலம் அவரை ஸ்கூட்டராய் உதைத்து முடுக்கிய கணம் அது!

வெயில் இந்தப் போதிலேயே இந்தப் போடு போடுகிறது. வியர்வை துளிர்க்கிறது முகத்தில். ஒப்பனைகள் கற்பனைகள் கனவுகள் அழிகின்றன. வேகம். மேலும் வேகம். முந்துதல். அவயத்து முந்துதல். முந்தாவிட்டால் காலம் பின்னிருந்து உதைபந்து போல உங்களை ஒரு உதையில் முந்த வைத்து விடுகிறது. பின்னால் மனைவி என்கிற பொறுப்பைச் சுமந்த கணங்கள். இது ஆண்கர்ப்பம்… என்கிறாப்போல.

அவள் செளகர்யமாய் உட்கார்ந்து கொண்டாயிற்று. சும்மா இருந்தால் நல்லது. ஓயாமல் என்னவோ பேசிக் கொண்டே வருகிறாள். பேச பெண்களுக்கு இத்தனை விஷயங்களா என்று திகைப்பாய் ஆண்கள் உணர்கிறார்கள்…. தலைக்கவசம் அணிந்தாலும் இந்தப் பெண்கள் விடுகிறார்கள் இல்லை.

தலைக்குக் கவசம் கண்டுபிடித்தது ஒரு நொந்த ஆணாய் இருக்க வேண்டும்.

பேசினால்கூடப் பரவாயில்லை. பாதிதான் காதில் விழும். அட்சதை போட்டால் எல்லாமேயா மணமக்கள் வரை போகிறது… அதைப் போலப் பாதி காற்று பிடுங்கிக் கொள்ளும். ஆனால் ‘ ‘நேராச்சி, சீக்கிரம் சீக்கிரம்… ‘ ‘ என்று அவள் விரட்டுவதை சகிக்க முடியவில்லை.

தன் அலுவலகம் வந்தபின் இறங்கிக் கொண்டாள் ஈஸ்வரி. அத்தோடு விட்டாப் போலவும் இல்லை. ‘ ‘மிச்சம் வைக்காம மதியம் சாப்பிடுங்க. சாம்பார் சுடச்சுட வெச்சிருக்கேன். ஆபீஸ்போயி கொஞ்சநேரம் தெறந்து வைங்க… ‘ ‘

‘ ‘வண்டில வரும்போதே நேராச்சின்னியே ? ‘ ‘ என்று சிரித்தபடி ஞாபகப் படுத்தினார்.

‘ ‘அடாடா ஃப்ரிஜ் ஆன் பண்ணிட்டு வந்தேனா ஞாபகம் இல்லை… ‘ ‘

‘ ‘ரொம்ப ஞாபகமா ‘ஞாபகமில்லை ‘ங்கறே இப்ப… ‘ ‘

‘ ‘சாயந்தரம் வந்தவொடனே காபியக் கொண்டாம்பீங்க…. உக்காந்த இடத்துல எல்லாம் வேணும். கிண்டல் வேற எங்களைப் பார்த்து ‘ ‘ என்றபடி போய் அவள் காலத்தின் தொப்புளை அழுத்துகிறாள்.

ராஜகோபாலின் அலுவலகம் மேலும் ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது. பாம்புக்கழுத்துடன் சிவபெருமான் போல டையுடன் நடமாடும் ஆண்கள். கைகுலுக்கல்கள். புன்னகைகள். நுனிநாக்கு ஆங்கிலம். டா கிளாசுகள் உரசுகின்றன. பீரோக்களைத் திறந்து காகிதங்களைப் பசியுடன் கண்கள் சாப்பிடும் உலகம். அறிவின் வேறு எல்லை அது. இந்தப் பகுதியில் வெறும் எண்கள், அர்த்தமற்ற எழுத்துக்களின் அடுக்குகள். போதாக்குறைக்கு மேஜைமேல் அவரவர்க்குத் தொலைபேசி. சதா குரைக்கிற நாய்கள் போல. ஒரு வித்தியாசம் – நாய்கள் புதிய மனிதர் வந்தால் குரைக்கும் அவர்களைப் பார்த்து. தொலைபேசிகள் புதியவர் வர, நம்மைப் பார்த்துக் குரைக்கின்றன…

காதில் பெண்கள் நகைகளை மாட்டித் திரிகிற பேஷன் ஒன்று வந்தது. காதின் மேற்புறம் முதல் கீழ்க்காது வரை… கோட்ஸ்டாண்டில் மாட்டிய குடைபோல. அந்த நகைக்குப் பேரே ‘மாட்டல் ‘தான். அந்த மோஸ்தர் மாறி விட்டது… இப்போது ஆண்களாயினும் பெண்களாயினும் ஒற்றைக் காதில் செல்லுலர் ஃபோன் மாட்டித் திரிந்தாகிறது. இனி அடுத்த ஃபேஷன் என்ன ? ரெண்டு காதிலும் இப்படி மாட்டித் திரியணுமோ என்னமோ…

இந்த வளையச் சுழற்சியில் இருந்து ஆசுவாசம் கிடைக்காதா என ஏங்கினார்.

நாய் இனிமையாய்க் குரைக்கிறது. எடுத்தால் சேஷாத்ரி. பால்ய நண்பன். நல்ல சேதி சொல் நண்பனே…

‘ ‘அடேய் எப்ப வந்தே மெட்ராசுக்கு… ‘ ‘ என்கிறார் உற்சாகமாய். ‘ ‘வாயேன் இந்தப் பக்கம்… ‘ ‘

‘ ‘வரேன் ‘ ‘ என்கிறார் அவர் சம்பிரதாயமாய். வரக்கூடாது என்பதில்லை. ரங்க ராட்டின வாழ்க்கை. மரக்குதிரை கிட்ட வந்தாப் போலிருக்கும். சட்டென விலகித் துாரப் போய்விடுகிறது… அவரவர் பொழுதுகள், நியதிகள் என மனதை காயலான் கடையாய்க் காலம் பிரித்துப் போடுகிறது. எந்திரயுகம்.

‘ ‘நல்ல சேதி சொல்லவா ராஜகோபால் ? ‘ ‘

‘ ‘சொல்லு… ‘ ‘

‘ ‘உன் பிருந்தாவைப் பார்த்தேன்… ‘ ‘

ஹா!… என்று சலுானில் தண்ணீர் தெளித்தாற் போல உள்ளே ஒரு சிலீர். பிருந்தா!

‘ ‘எங்க எப்ப எப்படி ?… அதெல்லாம் இருக்கட்டும். எப்டி யிருக்கா ? ‘ ‘

‘ ‘செளக்யம். உன்னைப்பத்தி விசாரிச்சா… உன் லவ்லெட்டரை ஹெட்மாஸ்டர் கிட்டக் கொடுத்ததைப் பத்தி ‘இப்ப ‘ வருத்தப்படறதாச் சொன்னா… ‘ ‘

சிரித்தார் ராஜகோபால். ‘ ‘அதை பத்திரமா வெச்சிருக்காளே இன்னும் மனசுல. அது போதும் ‘ ‘ என்றார்.

‘ ‘டாய் நீயும் வெச்சிருக்கியா இல்லியா ? ‘ ‘ என்று கிண்டலடிக்கிறார் சேஷாத்ரி.

‘ ‘அது ஒரு வயசு. ஒர் அலட்டலான கோபம் அவளுக்கு… நீ அவளுக்கு நேர்ல குடுத்திட்டே… நான் பயந்துகிட்டு மொட்டைக் கடுதாசியா அனுப்பிட்டேன்… அன்னிக்கு! ‘ ‘

‘ ‘அவ ஹெட்மாஸ்டர் கிட்டக் கொடுத்தது மொட்டைக் கடுதாசியா என் கடுதாசியா தெரியல… ‘ ‘

இருவரும் சிரித்தார்கள்.

‘ ‘நேர்ல உன்னைப் பாக்கணுண்டா… வாயேன் ‘ ‘

‘ ‘என்னையா பிருந்தாவையா ? ‘ ‘

‘ ‘இப்போதைக்கு நீதான் பிருந்தா… எங்க பாத்தே அவளை ? ‘ ‘

‘ ‘மதுரைல… ஃபோன் நம்பர் குடுத்திருக்கா… உன்னைப் பேசச் சொன்னா… ‘ ‘

‘ ‘உன்னைப் பேசச் சொல்லலியா ? ‘ ‘

‘ ‘நான் வெறும் மொட்டைக் கடுதாசி கொடுத்தவன்தானே ‘ ‘ என்று சிரித்தார் சேஷாத்ரி.

‘ ‘நான் மாட்டிக்கிட்டதும் நீ படவா கப்புனு அடக்கி வாசிச்சிட்டே… இல்லே ? ‘ ‘ என்றார் உற்சாகமாய்.

‘ ‘இல்லை ‘ ‘ என்றார் சேஷாத்ரி. ராஜகோபால் விடவில்லை. ‘ ‘பின்னே ? ‘ ‘ என அவரை வம்புக்கு இழுத்தார்.

‘ ‘நீ விரும்பறேன்னதும் நான் அடக்கி வாசிச்சிட்டேண்டா ‘ ‘ என்றார் சற்று மென்மையாய். அந்த அன்பு மனசைத் தொட்டது. ‘ ‘ரொம்ப சென்ட்டிமென்ட்டலா இறங்கீறாதே மாப்ளை… நான் வேலை செய்யணும்… ஒண்ணு செய்… மதியம் லன்ச் சேந்து சாப்பிடலாம். வந்துரு… ‘ ‘

‘ ‘சரி ‘ ‘ என்றார் சேஷாத்ரி.

‘ ‘ஃபோன் நம்பர் கொண்டா… ‘ ‘

‘ ‘போன் நம்பரா ? ‘ ‘

‘ ‘மதுரை நம்பர்! ‘ ‘ என்று சொல்ல வெட்கமாய் இருந்தது. தன் வெட்கத்தைத் தானே ரசித்தார்.

ஃபோனை வைத்ததும், மனைவியின் குரல் ஞாபகம் வந்தது…. சாப்பாட்டை மிச்சம் கொண்டு வந்துறாதீங்க…

ஸாரி ஈஸ்வரி… என்றார் இப்பவே மனசுக்குள்.

பிருந்தா… எப்பிடி இருக்கே ? அட, உன்னைப் பார்க்கிற வாய்ப்புக் கிடைக்குமா ?

மனசின் ஆசுவாசத்துக்கு சிறு நடை நடந்து பாத்ரூம் பக்கம் போய்வந்தார். கண்ணாடி பார்க்கையில் நந்தகுமார் ஞாபகம் வந்தது. அவன் 16 வயது ராஜகோபால்… இதோ கண்ணாடியில் ?… இது 45 வயது நந்தகுமார்.

‘ ‘நந்தகுமார் பணம் வேணும்… ‘ ‘

‘ ‘எதுக்கு ? ‘ ‘

‘ ‘என் சிநேகிதிக்குப் பிரசென்ட் வாங்கணும்… ‘ ‘ சிரிப்பு வந்தது.

மனசில் நந்தகுமார் பேசினான்- ‘ ‘அப்பா இந்த லவ் லெட்டரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கரெக்ட் பண்ணித் தாங்க… ‘ ‘

(தொடர்கிறது)

storysankar@rediffmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்