TRIBUTE TO SALINI IZANTHIRAIYAN
தோழி விடை தந்தோம்.
தேம்பும் உளம்.
சாலினி நீ
வாழி தமிழ் மனதாம்
வானோர் உலகத்தே.
கேட்பாருமின்றி
கொல்ல வந்தார் கொடிறு உடைக்க
கூன்கையும் வலுக்காத காலத்தே
எமக்காக முந்தி
“ஈழத் தமிழர் எங்கள் உடன்பிறப்பு
தொட்டால் தொலைந்தாய்”
என்னக் குரல் கொடுத்த
நாலைந்து பேரில்
நீயுமொரு கட்டியங்காரி.
பின்னர் எமக்காதரவாய்
வைகை புரண்டு
காவிரியியில் நீர்பெருகி
பாலாறுடைத்து
கங்கையிலும் பொங்கி வழிந்த
பெரு வெள்ளத்தின்
முத்தான முதற் துளியுள் ஒன்றே
வாழி எம் கொற்கை அம்மா.
குமரி நாவிலும்
இமயம் நடப்பிலும்
வாழ நடக்கும்
மகத்தான ஈழவரெம்
வரலாறே உன் சொர்க்கம்.
இன்றுமென்ன
கங்கையுடன் காவிரியை
சரியாசனத் திருத்தும்
செருவில்
டெல்கித் தெருவில்
தேர் விபத்தில் பலியானாய்.
நிகழ்ந்ததென்ன ?
முன்னர் நசுங்கி மிதிபட்ட ஈழத்தார்
வென்று எழுந்து சிறகை விரிக்கின்ற
களிப்பில் உன்னுடைய
கண்கள் மறைத்ததுவோ
கொற்கையம்மா
சாவு உனக்கேது ?
எம் மாவீர் மத்தியிலே
இன்றே எழுக
ஒரு புதிய பளிங்குக் கல்.
Thinnai 2000 May 18
திண்ணை
|