வேத வனம் விருட்சம்-21
எஸ்ஸார்சி

கவிதை
யான் பிரம்மன்
யானே சுத்தன்
யானே சித்தன்
யானே புத்தன்
சத் சித் ஆனந்தம் யான்
பேரின்பன்
ஒளிவடிவோன்
பேரமைதிக்காரன் யான்
ஆசைகள் தாண்டிய
அறிவுக்காரன்
விடுதலை வசமான
நிறைவுடையோன்
தனி அறிவுடைமையனால்
தன்னையும் நின்னையும் உணர்ந்தோன்.
எல்லாம் யானாக
ஆத்மாக்கள் எனது
யான் துனை
யான் முதல்
யான் வழி
யானே மூலம்
நிற இன சாதிச்சரக்கு
என்னில் ஏது
என்று முளன்
பிரிவினை தவழா
பிரம்மம் யான்.
மாற்றங்கள் இல்லை
விசேஷங்கள் இல்லை
தனிப்பொருள் யான்
உடல் உயிர் மனம்
புலனொடு காரண உடல்
கடந்தோன் யான்
அறிவு மலையேறி
ஞானக்கடல் கண்டு
மன வெளி உலாவும்
பேரின்பன் யான்
நிறையின்பன்
நிறைஞன்
ஒளிக்கு ஒளி தரும்
கதிரவன் பூரணன் யான்.
அவினாசி அமிருதன்
அடி முடி பிடி படா
அனந்தம் யான்
மாயைத்தொடா
எதிர்நிலை அணுகா
சத்துவ ராஜச தாமசம் தாண்டியோன் யான்
ஒலியின் மூலம்
விதையின் விதை
பரிபூரணன் யான்.