This entry is in the series 20040715_Issue

பனசை நடராஜன், சிங்கப்பூர்


‘தொழாதே யாரையும்
தொலைக்காதே தன்மானம்! ‘
தொண்டை கிழிய பேசிடுவார்.
‘தொப் ‘பென்று காலில் விழும்
தொண்டனை ‘விழாதே ‘ என
வெகுண்டு விலக மாட்டார்!

தெய்வம் இல்லையென்று
தெருவெங்கும் முழங்கிடுவார்
குடும்பம் மொத்தமும்
கோவில் சென்று கும்பிடும்!
கைத்தட்டலுக்காக பகுத்தறிவுப்
பேசும் காரியவாதிகள் இவர்கள்..!

கடவுள்மறுப்புப் பேசிக்
காலங்கழிக்க வேண்டாம்!
வழிபாட்டிலேயே மூழ்கி
வாழ்நாள் இழக்க வேண்டாம்!
பண்டிகைகள் கொண்டாடிப்
பலகாரம், சுண்டல் தின்று
சண்டை சச்சரவு இன்றி
சமாதானமாய் வாழ்வோம்!
—-
காசுக்காக வசனம்
பேசி நடித்துப் பின்
வயதாகி, வாய்ப்பும்
வருமானமும் குறைந்ததும்
திடுமென நாட்டுப்பற்று வந்து
நிஜ வாழ்வில் வேடம் போட்டு
அரியணைக் கனவு காணும்
அரிதாரக் கோமாளிகள்!

ஒப்பனை பூசியதாலேயே
மக்களை ஆளலாம் என்றுக்
கற்பனையில் மிதக்கும்
காரியக் கூத்தாடிகள்!

(தொடரும்)

– பனசை நடராஜன், சிங்கப்பூர் –
(panasainatarajan@yahoo.com)

Series Navigation