This entry is in the series 20080918_Issue

தாஜ்



தெளிவுற வழிகாட்டி நின்ற
கை காட்டிகள் எல்லாம்
திசையற்று கவிழ்ந்து கிடக்க
பாதசாரிகளுக்கு
பாதைகள் என்றும்
விடிவதே இல்லை.

ஓரப் பாதைகள்
தடைகளாகிப் போக
புகுந்து புறப்படும்
அவசரத்திலும்
குண்டும் குழியும்
மனிதக் கழிவுகளும்
அடியெடுக்கும்
முயற்சியையும்
கூச வைக்கும்.

மறித்து கண் சிமிட்டும்
மின்னொளிகள்
முன்னேற விடும் நாழியும்
எதிர்பட
முட்டிக் கொண்டு நிற்பர்
எம் மக்கள்.

பொது சாலையில்
இறங்கி நடக்க முனைந்தால்
சகல ஓட்டங்களும்
புகை கக்கி அலறி
கலகலக்க வைக்கும் விதியை.

உந்தலின் நினைவுடன்
தூரத்தைக் கடக்க
பேருந்திற்காக
காத்திருக்குமோர் காலகெடுவில்
பேருந்துகளாலும்
முற்றுப் பெறலாம்
கவிதையான நம்
ஜீவ வாக்கியம்.
————————
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation