பத்தினிப் பாதுகை..
கவிமாமணி மதிவண்ணன்

பாதுகையே! உனக்குப் பைந்தமிழில் சொல்தொடுத்துப்
பாட்டாபி டேகம்நடத்திப் பாராட்ட வந்துள்ளேன்;
..
பட்டாபி டேகம்உன் பரம்பரைப் பெருமை;எனவே
பாட்டால் அபிடேகம் பாவலன் செய்கின்றேன்;
..
படிதாண்டாப் பத்தினி நீயேதான்;என்வீட்டுப்
படிதாண்டி உள்வாராப் பத்தினியே! என்னோடு
..
வெய்யில்,மழை,பள்ளம்,மேடு இவற்றிலெல்லாம்
அய்யோ!உன்னைப்போல் அவள் இணைந்து வருவாளா ?
..
ஆரம்ப நாட்களிலே அன்பாய் நீகடிப்பாய்!
ஓரம்போய்ப் பிய்ந்தபின்னும் உடன்நிழலாய் நீவருவாய்!
..
என்னோடு ஒன்றாய்நீ இணைந்திருப்பதால் அன்றோ
உன்மேனி பிறர்மேனி மேல்பட்டால் எனக்கே
..
அபராதம் விதிக்கின்றார்! அன்றே அரசாண்ட
பீடுமிகுந்த உன்பெருமை இன்றும் குறையவில்லை!
..
வெட்டிப் பேசுகின்ற சட்ட மன்றத்தில்
வேண்டும் சிலபொழுது வி ?யம் செய்கின்றாய்!
..
பாதத்தின் கீழ்ப்படிந்த பாதமே! நான்நடக்கும்
பாதையை எல்லாம்நீ பட்டாக்கிக் கொடுக்கின்றாய்!
.
உனைக்கொஞ்சம் பிரிந்து,அந்த உன்னத ஆலயத்தில்
சேவிக்கும்பொழுதும் சிந்தைஎல்லாம் உன்னிடத்தே!
..
யார் பரதன் ‘ ஆவாரோ என்றபயம் எனைத்தாக்கும்!
அப்படிஓர் அமோக ஆசை உன்னிடத்தில்!
..
பத்தினியின் பெருமை பாரறியப் புகல்வதுவும்
சற்(று)இனியும் சரியல்ல;என்பதனால் முடிக்கின்றேன்!
******************