என் வெளி…..
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர் )

என் வீடு
என் வீட்டறைகள்
எனக்கே உரித்தான
அறைகளெல்லாம்
எனக்கான சுதந்தரத்துடன்
இல்லை.
ஜன்னல்களை
விருப்பம்போல் திறந்துவைக்க முடியவில்லை
காற்று
விழுந்தென்னைப்புணர்வது
தடுக்கப்பட்டுவிட்டது
ஆகாயவைரங்களைக் காணாமல்
கரையும்பொழுதுகளால்
கனக்கிறது மனம்
என் சுதந்தரவெளி
யாருடைய எல்லைக்குள்ளோ
இருப்பது அறிந்து
அமைதியிழக்கிறது அந்தரங்கம்
நான்குபுறமும்
முளைத்துக்கொண்டே உயரும்
கழுகுகள்
என் சூரியனையும்
சந்திரனையும்
பறித்துக்கொண்டன
நான்
என் சுதந்தரம்
எப்படி சுதந்தரமாக?
pichinikkaduelango@yahoo.com