அவஸ்த்தை
கவிதா நோர்வே
இமைகள்
மூடியே கிடக்கின்றன
நீ என்ற நினைவுகளோடு
இரத்த நாளங்களில்
அவஸ்த்தைகளின்
அணிவகுப்பு
கால் நகங்களிலும்
நடக்கிறது
உணர்ச்சிகளின் ஊர்வலம்
சோர்ந்து கிடக்கும்
உடல் கிழித்து
வேகமெடுக்கிறது
இதயம் மட்டும்
இந்த அவஸ்த்தையின்
உச்சத்தை
அடைந்திருந்தால்…
போதிமரத்தை புறகணித்திருப்பானோ
புத்தனும்?
நீ என்ற மந்திரத்தில்
என்னை மறந்த நிலையிது!
ஒன்றையே
நினைப்பதுதானே தியானம்
அப்படியானால்
சரியான இடம்தான்
காதல்!
அவஸ்த்தையின்
ஆக்கிரமிப்பில்
ஆழ்ந்து விடுகிறது
என்
உருப்புகள்…
காதல் போதிமரத்தலிருந்து
உதிர்ந்து கொண்டிருக்கிறது
என்றும் புதியாய்
உன் நினைவுப் பூக்கள்…
மனதில்
ஏந்திய வண்ணம்
தியானித்திருக்கிறேன்..
இன்னுமா புரியவில்லை
உனக்கு!
–
kavithai1@hotmail.com