கடிதம் டிசம்பர் 23, 2004 – ஞாநிக்கு சில கேள்விகள்

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

பா. ரெங்கதுரை


ஞாநி எழுதிய ‘ஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள் ‘ கட்டுரையைக் கண்ணுற்றேன்.

அந்தக் கட்டுரையின் முடிவில் காலச்சுவடு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சுந்தர ராமசாமி வெளியிட்டுள்ல அறிக்கை பற்றி ஞாநி தன் கருத்துகளை சுருக்கமாகச் சொல்லியுள்ளார். அதில் வேறு சில விடயங்கள் பற்றி சுந்தர ராமசாமி பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் அவர். இதைப் படிக்கும் போது எல்லா நடப்புப் பிரச்சினைகளைப் பற்றியும் தான் கருத்துச் சொல்லி வருவது போன்ற ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கிறார் ஞாநி என்றே கருத வேண்டி இருக்கிறது.

அப்படியானால், தற்போது தமிழ் இலக்கிய உலகிலும் சிற்றிதழ்களிலும் பரபரப்பை உண்டாக்கியுள்ள – பெரியார் பற்றி ரவிக்குமார் போன்ற தலித் சிந்தனையாளர்களின் விமர்சனத்தையும், அதற்கு எதிராக பார்ப்பனர் அல்லாத ஆதிக்க சாதியினர் சிலர் தலித்துகளை சுயமாகச் சிந்திக்கும் தகுதி அற்றவர்களாகவும், தாங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதே தலித் விடுதலைக்கு ஒரே வழி என்பது போலவும் பேசியும் விமர்சித்தும் வருவது பற்றி ஞாநி என்ன நினைக்கிறார் ?

மேலும், ‘பெரியாரை இழிவு படுத்தும் வகையில் செய்திகள், கட்டுரைகள் வெளியிடும் இதழ்களில் எழுதாமல் அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்று படைப்பாளர்களை, எழுத்தாளர்களை இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது ‘ என்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஞாநிக்கு ஒப்புதலுடையதா என்பது பற்றியும் அவர் விளக்க வேண்டும். திராவிடர் கழகம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகள் இத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதால் இது தலித்துகள் மற்றும் பத்திரிகைகளின் கருத்துச் சுதந்திரத்தின் மேல் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாக இருக்க முடியாது என்று ஞாநி கருதுவாரா ?

பா. ரெங்கதுரை

சியாட்டல், அமெரிக்கா

rangaduraib@rediffmail.com

Series Navigation

பா. ரெங்கதுரை

பா. ரெங்கதுரை