கடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்


ஹரூன் யாஹ்யா பெரிய இஸ்லாமிய அறிஞர். திருமறை என அவரால் நம்பப்படும் குரான் எனும் நூலின் வழிகாட்டலினால் தூண்டப்பட்டு அன்னார் இறை மறுப்புக் கோட்பாடான பரிணாமத்தை ஒவ்வோர் அடிப்படையும் பொய் என நிரூபிக்கிறார். அவருடைய எழுத்தினை வாசித்தவர்கள் இறை மறுப்புக் கோட்பாடுகளையும் இன்னபிற வக்கிரங்களையும் துறந்து விடுகிறார்களாம். அவருடைய எழுத்துக்கு இந்த குணாம்சங்கள் குரானின் ஞானம் மற்றும் தெளிவு பொருந்திய தன்மையிலிருந்து கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லையாம். [[1]]

மேற்கூறப்பட்ட பெருந்தகை திண்ணையில் ஏற்கனவே இருமுறை அஞ்ஞானிகளான காஃபீர்கள் வாசித்து உய்யுமாறு சிபாரிசு செய்யப்பட்டவர்தாம்[[2]]. அத்தகைய காஃபீர்களில் ஒருவனும் பரிணாம அறிவியலின் மீது சிறிதே காதல் உடையவனுமான நான் அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்ட அன்னாரது இணையதளத்திற்கு சென்று அங்கிருந்த அவர்தம் நூலையும் இறக்கினேன்[[3]]. இப்பெருமகனார் எழுதி அவரது இணையதளத்தில் இலவச இறக்கலுக்காக வைத்திருக்கும் இந்நூலின் பெயர் ‘Tell me about the Creation ‘. 40 பக்கங்களில், 70 சான்றாதாரங்களுடன் அவர் பரிணாம அறிவியலை நிராகரிக்கிறார். படித்தவன் அரண்டுவிட்டேன். ஒவ்வொரு பக்கத்திலும் நிரம்பியிருக்கும் மடத்தனம் மன்னிக்கவும்-ஞானம் சாதாரண மனித மூளையால் உருவாக்கப்பட முடிந்ததல்ல.

இடையே திடாரென ஃபுத்துய்மா(Futuyma) எனும் பெயரைக் கண்டதும் செவிட்டில் பளாரென அறைந்தது போல இருந்தது. ஃபுத்துய்மா, டக்ளஸ் ஃபுத்தூய்மா – முக்கியமான பரிணாம அறிவியலாளர்.அவர் எப்போது பரிணாம வாதத்திற்கு எதிராக படைப்புவாத முட்டாள்வாதங்களுக்கு-மன்னிக்கவும்- படைப்புவாத ஞானத்துக்கு சான்று பகர ஆரம்பித்தார் ?

பரிணாமம் குறித்த அவரது வரையறை பிரசித்தி பெற்றது. அந்த மனிதர் ஹரூன் யாஹ்யாவின் திருநூலில் ஏன் வருகிறார் என்று பார்த்தபோது மற்றொரு செவிட்டிலும் அறை விழுந்தது போல இருந்தது. மேற்கோள். ஆகா மற்றொரு மேற்கோளா. என்ன சொல்கிறார் ஃபுத்துய்மா என்று பார்த்தால், விஷயம் படுபயங்கரமாக போனது. ஃபுத்துய்மா கூறுகிறார் இல்லை ஒத்துக்கொள்கிறார், (பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகள்: The sudden origination of living beings on the Earth is proof that they were created by God. Evolutionist biologist Douglas Futuyma admits this fact: Organisms either appeared on the earth fully developed or they did not. If they did not, they must have developed from preexisting species by some process of modification. If they did appear in a fully developed state, they must indeed have been created by some omnipotent intelligence.[21] [[4]]இந்த 21 ஆவது சான்றாதாரம் Douglas J. Futuyma, Science on Trial, New York: Pantheon Books, 1983. p. 197 என்பதாகும். பொதுவாக சான்றாதாரங்களில் ஹரூன் யாஹ்யா நூல் பெயர்களை நீட்டி முழக்கி கொடுப்பது வழக்கம். உதாரணமாக, 1) Charles Darwin, The Origin of Species: A Facsimile of the First Edition, Harvard University Press, 1964, p. 184 என்று மனிதர் கொடுக்கிறாரே அல்லாமல் 1) Charles Darwin, The Origin of Species என்று மட்டும் கொடுக்கமாட்டார். ஆனால் ஃபுத்துய்மா விஷயத்தில் ஏனோ நூலின் முழுப்பெயரான ‘Science on Trial: The Case for Evolution ‘ கொடுக்கப்படவேயில்லை. மாறாக, Science on Trial மட்டுமே நூலின் பெயராகக் கொடுக்கப்பட்டுள்ளது.

சரி அது போகட்டும். மேலே குறிப்பிட்டுள்ள மேற்கோள் டக்ளஸ் ஃபுத்தூய்மாவுடையதுதானா என்றால் ஆமாம். ஆனால் ஒரு சின்னவிஷயம். அது முழுமையானதல்ல. மேலும் கீழும் வெட்டிவிட்டு நடுவே கூறப்பட்டதை மட்டும் கொடுத்து ஏதோ ஃபுத்துய்மா பரிணாம அறிவியலை மறுதலித்து ஏதோ சிருஷ்டி கர்த்தரை ஏற்பது போன்றதோர் பிரமையை உருவாக்குகிறார் ஹரூன் யாஹ்யா. இந்த மகா புண்ணியவான் மேற்கோளை மட்டும் வெட்டவில்லை, வாக்கியத்திலேயே பாதியை வெட்டி அந்தரத்தில் நிற்கவைத்து அது முற்றுப் பெறுவது போல ஒரு புள்ளியையும் வைத்துள்ளார். இந்நூலின் முக்கியமான 11-ஆவது அத்தியாயத்தின் அறிமுகப் பகுதியிலிருந்துதான் மேற்கண்ட சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட மேற்கோள் இருந்தது. இதோ முழுமையான மேற்கோளையும் படிக்கலாம்:

‘Creation and evolution, between them, exhaust the possible explanations for the origin of living things. Organisms either appeared on the earth fully developed or they did not. If they did not, they must have developed from pre-existing species by some process of modification. If they did appear in a fully developed state, they must have been created by some omnipotent intelligence, for no natural process could possibly form inanimate molecules into an elephant or a redwood tree in one step. If species were created out of nothing in their present form, they would bear within them no evidence of a former history; if they are the result of historical development, any evidence of history is evidence of evolution. ‘[[5]] என்று கூறும் அவர் ஒவ்வொரு உயிரினத்தினுள்ளும் உறையும் அவ்வுயிரின் பரிணாம வரலாற்றின் சான்றுகளை அடுக்குகிறார்.

இந்நூல் டெல்லியில் உள்ள Goodword Books என்கிற பதிப்பகத்தாரால் முதலில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சாதாரண மனசாட்சியுள்ள எழுத்தாளனுக்கு இயலாத இந்த நேர்மையின்மை எப்படி ஹரூன் யாஹ்யாவிற்கு சாத்தியமாயிற்று என்று யோசித்தபோது நூலின் அறிமுகப்பகுதியிலிருந்து ஒரு வரி கண்ணில் பட்டுத்தொலைத்தது, ‘There is no doubt that these features result from the wisdom and lucidity of the Qur ‘an. ‘ ஃபுத்தூய்மா தமது நூலின் தொடக்கத்தில் அழகாகக் கூறுகிறார்: ‘ [இந்நூல் மூலம்] அடிப்படைவாத படைப்புவாதிகள் பரிணாமத்தை நம்பிவிடுவார்களென நான் கருதவில்லை. கேள்விக்குள்ளாக்கப்பட முடியாத கொள்கையால் தர்க்கத்திற்கும், ஆதாரங்களும் எதிராக கோட்டைச்சுவர் எழுப்பியுள்ள அவர்கள் எளிதில் மாறிவிட மாட்டார்கள். ‘[[6]]

இனி அவர் டக்ளஸ் ஃபுத்தூய்மாவின் மேற்கோளை காட்டும் பகுதியையும் சிறிது ஆராய்வோம்.இப்பகுதியில் ஹரூன் யாஹ்யா பரிணாம அறிவியலின் அடிப்படைகளில் ஒன்றான அனைத்துயிர்களுக்கும் பொதுவான தோற்றமூலம் என்பதனை அறிவியல் ஆதாரமற்றது என்கிறார்.[[7]]. ஆனால் இது மிகச்சிறந்த அறிவியல் ஆதாரத்தை உடையது என்பது மட்டுமல்ல ஒரு அறிவியல் கோட்பாட்டின் அடிப்படைத் தன்மையான முன்கணிக்கும் தன்மையும் கொண்டது.

உதாரணமாக சிம்பன்ஸியும் அரவிந்தன் நீலகண்டனும் ஒரு பொது மூதாதையைக் கொண்டவர்கள் ஆனால் அரவிந்தன் நீலகண்டனுக்கும் பன்றிக்குமான பொது மூதாதை நிலவியல் காலவோட்டத்தில் மிகவும் பின்னால் பலகிளைகளுக்கு அப்பால் இருக்கவேண்டும். எனவே எனக்கும் சிம்பன்ஸிக்கும் இடையே அதிக அளவில் டிஎன்ஏ ஒற்றுமையும் எனக்கும் பன்றிக்கும் அதைவிட குறைந்த அளவில் டிஎன்ஏ ஒற்றுமையும் இருக்க வேண்டும். இது பொய் என நிரூபிக்கப்பட்டால் பரிணாமம் பொய்ப்பிக்கப்படும். இது ஆய்வக பரிசோதனை வாயிலாகவும் நிரூபிக்கப் பட்டுள்ளது.

நியூஸிலாந்தைச் சார்ந்த பென்னே, ஃபவுல்ட்ஸ் மற்றும் கெண்டே ஆகியோர் பரிணாமத்தை ஐந்து புரத மூலக்கூறு வரிசைகள் மூலமாக தனித்தனியே அமைக்கப்பட்ட உயிரின வகை மரங்கள் (Phylogenetic tree) – அவற்றினிடையேயான ஒற்றுமை மூலம் ஆராய்ந்தனர். 11 உயிரினங்கள் கொண்டு அமைக்கப்பட்ட இம்மரங்கள் அமைக்கப்பட்டன. அவ்வுயிரினங்கள் குதிரை, பன்றி, மனிதன், நாய், பசு, சிம்பன்ஸி, ஆடு, ரீசஸ் குரங்கு, கங்காரு, எலி, முயல் ஆகியவை. ஒரு இயற்கை நிகழ்விற்கே உரிய தற்செயல் வினைகள் மற்றும் ஓருங்கிணைவு பரிணாமம் (Convergent evolution) ஆகியவற்றிற்கான தள்ளுபடிகள் செய்துவிட்டு இயற்கை தேர்வு மூலம் பொது மூதாதையிடமிருந்து இவ்விலங்கினங்கள் வந்திருக்குமேயானால் இந்த புரத மூலக்கூறு வரிசைத்தொடர்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட உயிரின வகை மரங்கள் அப்படியே பொருந்தாவிட்டாலும் அவற்றின் பொதுப்பண்புகளில் ஒற்றுமை காட்ட வேண்டும். 654,729,075 சாத்தியக் கூறுகள் கணினியால் ஆராயப்பட்டு உயிரின வகை மரங்கள் உருவாக்கப்பட்ட போது அவை காட்டியதென்ன ? ஹீமோக்ளோபின் B யும் சரி, ஹீமோக்ளோபின் A யும் சரி, பைப்ரினோபெப்டைட் A யும் சரி, பைப்ரினோபெப்டைட் B யும் சரி, மனிதன், சிம்பன்ஸி மற்றும் ரீசஸ் குரங்கு ஆகியவற்றை வெகு அண்மையிலும் மற்ற உயிரினங்களை அவற்றினின்றும் தூரமாகவும் வைத்தன. பரிணாமம் ஒரு உண்மை என்பதற்கான மற்றொரு சான்று இது.[[8]]

இவ்விதமாக வார்த்தைக்கு வார்த்தை ஹரூன் யாஹ்யாவின் அபத்தங்களை தவறெனக் காட்டலாம். ஹரூன் யாஹ்யாவுக்கு மட்டுமல்ல பரிணாம அறிவியலை தமது இறை நம்பிக்கையின் அடிப்படையில் நிராகரிக்கும் எந்த அபத்தக்களஞ்சியத்துக்கும் அது பொருந்தும். அது ஸ்ரீலஸ்ரீ பிரபுத்த பாதாவானாலும் கூட. அறிவியலின் ஒளியில் அழிகிற ஒரு மத நம்பிக்கை எத்தனை விரைவாக அழிந்து போகிறதோ அத்தனைக்கு மானுடத்திற்கு நல்லது எனும் விவேக வார்த்தைகள் நம்மை ஒளியின் பாதையில் செலுத்தட்டும். படைப்புவாத இருளில் மூழ்கிக் கிடக்கும் சகோதரர்களை நிர் ஈஸ்வரவாதத்திற்கான சுதந்திரத்தை ஏற்கும் சனாதன தர்மம் மற்றும் பரிணாம அறிவியலின் ஒளியில் சிறகடிக்க அழைக்கிறேன் வாருங்கள்.

[[1]] ஹரூண் யாஹ்யா, Tell me about Evolution, பக்.3, Goodword Books 2001[New Delhi] [MS WORD மென்பொருள் மூலம் கண்டபடி]

[[2>.இப்னு பஷீர், முனை மழுங்கிய ஈட்டிகள்!, கடிதம் நவம்பர் 4, 2004.

[[3]]http://www.islam-australia.com.au/harunyahya/tellmeaboutthecreation01.html

[[4]]ஹரூண் யாஹ்யா, Tell me about Evolution, பக்.16.

[[5]]டக்ளஸ் ஃபுத்தூய்மா, Science on Trial:The Case for Evolution, New York: Pantheon Books, 1983. பக். 197

[[6]]டக்ளஸ் ஃபுத்தூய்மா, Science on Trial:The Case for Evolution, New York: Pantheon Books, 1983. பக்.. xii

[[7]]ஹரூண் யாஹ்யா, Tell me about Evolution,பக்.16.

[[8]]Penney, D., Foulds.L.R., & Hendey, M.D (1982) Testing the theory of evolution by comparing phylogenetic trees constructed from five different protein sequences. Nature 297:[197-200] மேற்படி ஆய்வுத்தாளின் முடிவுகள் ரிச்சர்ட் டாவ்கின்ஸால் The Blind Watchmaker நூலில் விளக்கப்பட்டுள்ளன. The Blind Watchmater (NY, 1996) பக். 274-275.

—-

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்