கேள்வி-பதில்

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


கேள்வி : ஆனந்த விகடன் குழு பத்திரிகைகள் புதிய இடத்திற்க்கு மாறியுள்ளனவே ?

பதில்: நானும் கவனித்தேன். இப்போது வெளிவருகிற பத்திரிகைகளில் ஆசிரியர் குழு என்ற

ஒன்றிற்கு தேவை இருக்கிறதா. ஆனந்த விகடனைப் பொறுத்த வரை பேட்டி எடுக்க ஒருவர்

அதுவும் பகுதி நேரமாகப் போதும். நடிகர், நடிகைகளைப் பற்றி அவர்களது மக்கள் தொடர்பாளர்கள்

தருவதை போட்டுவிடலாம், பத்தி எழுதுபவர்கள் அனுப்பியதை அப்படியே போடுவதால் அதற்கென்று

தனி ஆள் தேவையில்லை. ஒரு உருப்படாத வழவழ கொளகொள தலையங்கம் எழுத பகுதி நேர

நிருபரே அதிக பட்சம், ஆசிரியர் தேவையில்லை. ஆக இப்போதிருக்கும் ஆனந்த விகடனை வெளியிட

பத்தி எழுதுபவர்கள், பிறர் தருவதை சேகரிக்க, சேர்ப்பிக்க ஏற்பாடு செய்ய ஒருவரும், ஒரு பகுதி

நேர நிருபரும் போதும். இதற்கு தனி அலுவலகம் தேவையில்லை, அச்சகத்தில் ஒரு மூலையில்

ஒரு மேஜை இரண்டு நாற்காலிகள் போதும். குமுதமும் இது போல்தான். பேசாமல் பத்திரிகை

நடத்துவதை அவுட் சோர்ஸ் செய்து விடலாம்.தரம் ஒரளவாவது உயரக்கூடும்.

கேள்வி : 2010 குறித்து சுஜாதா ஆருடம் கூறியிருக்கிறாரே, பத்திரிகைகள் குறித்தும் கூறியிருக்கிறாரே

பதில்: மறைமுகமாவேனும் கற்றதும், பெற்றதும் 2010 வரை தொடராது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

2010ல் பெண்கள் புகைப்படங்களுக்குக் கீழ் வெறும் குறிப்பெழுதுகிற வேலையை அவர் செய்ய வேண்டிய நிலை

ஏற்படாது என்று நம்புவோம். இப்போதிருக்கும் ஆனந்த விகடனுக்கு அசினும், ஷ்ரேயாவும்,விஜயும், சூர்யாவும்,

நமீதாவும் போதும், சுஜாதா ரொம்பவே அதிகம். அதைத் தெரிந்து கொண்டுதான் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். மேலும் தொடர்கதை யுகம் முடிந்தது, பத்திகளின் யுகமும் விரைவில் முடிவடைந்து விடும், பத்திரிகைகளில் நம் எழுத்திற்கு தேவை இருக்காது என்ற அச்சம் அவருக்கு எழுந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

கணேஷ்-வசந்த் வேண்டாம், விஜய்-சூர்யா வைத்து தொடர்கதை எழுதுங்கள் என்று அவரிடம் எந்தப் பத்திரிகையும் சொல்லாத வரை நல்லதுதான். இப்போதுள்ள நிலையில் சொன்னாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

கேள்வி : சாரு நிவேதிதாவின் பேட்டி படித்தீர்களா ?

பதில் : சிறிய அளவில் குற்றம் செய்பவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை

வாங்கித் தருவதும், சிறையில் அவர்களை பராமரிப்பதும் செலவு பிடிக்கும் விஷயங்களாக இருப்பதால்

அத்தகைய குற்றங்களைச் செய்வோர் குற்றங்களில் ஈடுபடாமல் இருந்தால் அவர்களுக்கு மாதாமாதம்

ஒரு தொகை கொடுத்துவிடலாம் என்று ஒரு யோசனை கூறப்பட்டுள்ளது. இதைக் கூறியதது

எட்வர்ட் டி போனோ என்று நினைக்கிறேன். சாரு தமிழில் எழுத மாட்டேன், பேட்டிக் கொடுக்க

மாட்டேன் என்று உத்தரவாதம் கொடுத்து, அதன்படி நடந்தால் அவருக்கு மாதாமாதம் ஒரு உதவித்

தொகை கொடுத்துவிடலாம். என்னைக் கேட்டால் அவர் பிரெஞ்ச் கற்றுக் கொண்டு பிரெஞ்சில்

இலக்கியம் படைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்க முயலலாம். தாய்லாந்து அல்லது பிரான்சில்

குடியேறப் போகிறேன், தமிழில் எழுத மாட்டேன் அல்லது பேட்டி தரமாட்டேன் என்று உறுதி

அளித்தால் சாகித்ய அகாதமி விருது ஒன்று கொடுத்து போய்விடுங்கள், திரும்பி வர வேண்டாம்

என்று வழியனுப்பி விழா ஏற்பாடு செய்து அனுப்பிவிடலாம். இப்ப்டியெல்லாம் செய்வது அவருக்கும்

நல்லது, நமக்கும் நல்லது, தமிழுக்கும் நல்லது

ravisrinivas.blogspot.com

Series Navigation