மக்கள் தெய்வங்களின் கதை – 10

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

அ கா பெருமாள்


10. சேர்வைக்காரன் கதை

தூத்துக்குடி மாவட்டத்தில் தென்மேற்கு பகுதியில் சாத்தான்குளம் என்ற ஊர் உண்டு. அந்தப் பெரிய ஊரின் அருகே அரசூர் என்னும் சிறிய ஊர் இருக்கிறது. அவ்வூரில் வாழ்ந்த இருளப்ப தேவர் மரபு வழியாகவே ஊர்க்காவல் பொறுப்பை ஏற்றிருந்தார். பின்னர் அங்கே சிலரின் சதியால் பழி ஏற்பட்டு அந்த உரிமையை இழந்து அரசூரைவிட்டு குடிபெயர்ந்து சென்று ஆம்பூர் என்னும் சிற்றூரில் வாழ்ந்து வந்தார்.

இருளப்ப தேவரின் மனைவி முத்தாயி நல்ல குணம் வாய்ந்தவள். அவர்களுக்குத் திருமணம் ஆகி பல நாட்கள் ஆன பின்பும் குழந்தை பிறக்கவில்லை. முத்தாயி எல்லா தெய்வங்களிடமும் வேண்டினாள். நோன்புகள் இருந்தாள். கடைசியில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று தவம் இருந்தாள். அவன் அருளால் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குப் பலவேசம் எனப் பெயர் சூட்டினாள். மீண்டும் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு சின்னப் பலவேசம் எனப் பெயர் வைத்துச் சீரும் சிறப்புமாய் வளர்த்தனர்.

இரு பலவேசங்களும் பலவகையான போர்க்கலைகளைப் பயின்றனர். வீரரான பெரிய பலவேசம் உரிய வயதை அடைந்ததும் முறைப்பெண்ணான சந்தன முத்தம்மை என்பவளை மணந்தான். ஒருநாள் இருளுப்ப தேவர் பேசிக்கொண்டிருக்கையில் தற்செயலாக தன் பிள்ளைகளிடம் அரசூரில் தனக்குக் காவல் உரிமை இருந்ததையும் அவ்வூரைச்சேர்ந்த பூலால உடைய தேவர் என்பவரின் சூழ்ச்சியால் கெட்டபெயர் ஏற்பட்டு அவ்வுரிமை இழந்ததையும் சொன்னார்.

தந்தையின் சோகக் கதையைக் கேட்ட பிள்ளைகள் உங்களை மேல்நிலையில் வைக்கிறோம். இது உறுதி என்றனர். தந்தை ‘ ‘வேண்டாம். அந்த உடையதேவர் பெரும் பணமும் சூழ்ச்சியும் கொண்டவர். அவருக்குப் ப்டைகள் உள்ளன. அவரை எதிர்க்க உங்களால் முடியாது ‘ ‘ என்றார். பிள்ளைகள் கேட்க்வில்லை. தந்தையும் பெரிய பலவேசத்தின் மாமானார் முத்துசாமியும் எவ்வளவோ அவர்களைத் தடுத்தும் கேளாமல் அரசூருக்குப் பயணமாயினர்.

இரண்டு பலவேசங்களும் அரசூர் சென்றதும் தம் தூரத்து உறவினரான பூக்கண்ணு தேவரைச் சந்தித்தனர். அவரிடம் பெரிய உடையதேவரைப் பழிவாங்க வந்திருப்பதாகத் தெரிவித்தனர். இச்செய்தி அரசூரில் பரவியது. அந்த ஊரில் பெரும் அதிகாரத்துடன் இருந்த நாலாந்திலா பூலாலவுடையார் தேவர் பலவேசங்களின் வரவை அறிந்தார். இருவரும் பெரும் வம்புகள் செய்வார்கள் என அவர் எதிர்பார்த்தார். அண்ணன் தம்பிகேளா அந்த ஊரில் வீடு கட்டிக்கொள்ள விரும்பினர். பூலாலவுடையாரோ அதற்குத் தடையான காரியங்களைச் செய்ய ஆரம்பித்தார்.

பூலாலவுடையார் பெருமாள் தேவன் என்பவனைச் சந்தித்தார். பலவிதமான ஆலோசனைகள் நடத்தினார். தனக்குக் கீழே காவல் செய்பவர்களைப் பலவேசத்துக்கு எதிராகத் தூண்டிவிட்டார். பலரையும் இதற்குக் கூட்டு சேர்த்தார். பின் ஒரு ஆணை பிறப்பித்தார். அரசூரினும் இதை அடுத்த ஊர்களிலும் வாழ்கின்ற மக்கள் இரண்டு பலவேசங்களுக்கும் எந்த விதத்திலும் உதவக்கூடாது. அவர்கள் வீடு கட்ட ஓலை மட்டை, நார் போன்றவற்றைக் கொடுக்கக்கூடாது என்பதுதான் இந்த ஆணை. ஊர் மக்களும் இந்த ஆணைக்குக் கட்டுப்பட்டனர்.

பலவேசங்கள் அரசூரின் ஆட்சி செல்லாத கிராமங்களிலிருந்து பொருட்களைப் பெற்று ஒரு வீட்டைக் கட்டினர். தங்களுக்கு உதவி செய்ய மறுத்த இடைச்சிவிளை என்ற ஊரில் கொள்ளையடித்தாகள். இதை அறிந்த பூலால் உடையார் பெரிய பலவேசத்தைக் கொல்ல ஆயுதங்களுடன் வந்தார். ஆயுதப்பயிற்சிபெற்ற இரு பலவேசங்களும் உடையாரை ஒரு நொடியில் துரத்திவிட்டார். அடிபட்ட உடையார் அரசூரைச் சுற்றிய நாடார்களைத் திரட்டினார்.

நாடார்கள் பலவேசத்தை அழிக்கும் வழியைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர். தந்திரமாய் அவனைக் கொன்றுவிட திட்டம் தீட்டினர். பலவேசங்களோ எப்போதும் ஆயுதங்களுடன் திரிகிறார்கள். என்ன செய்வது என யோசித்தனர். ஒன்பது குறிச்சி நாட்டாருக்கும் ஓலை அனுப்பினர். . எல்லோரும் உடையாரைச் சந்தித்துப் பேசினர்.அவர்கள், பலவேசங்களை ஒரு திருமண வீட்டிற்கு அழைத்துச் சச்சரவு மூட்டிக் கொன்றுவிடவேண்டும் என்று முடிவு செய்தனர்.

அணஞ்சமாடத்தேவன் என்பவன் வீட்டிற்குத் திருமணத்தில் கலந்துகொள்ள பலவேசங்களுக்கு அழைப்பு வந்தது. இந்த அழைப்பில் ஏதோ சதி இருக்கலாம் என்று ஐயப்பட்ட இருவரும் அதற்குச் செல்ல யோசித்தார்கள். பின்பு போகாமலிருந்தால் கோழைத்தனமாக ஆகுமே என்று எண்ணி துணிந்து சென்றனர். இருவரும் திருமண வீட்டில் ஒரு கம்பிளியில் அமர்ந்தனர். இதைப்பார்த்த ஊர்த்தலைவர்கள் கொதித்து எழுந்தார்கள். எங்களுக்குச் சமமாக வந்தேறிகளான இவர்கள் இருப்பதா எனக் கூறிப் போருக்குத் தயாராயினர். சண்டைநடந்தது . இரு சகோதரர்களும் அவர்கள் எல்லோரையும் விரட்டி அடித்தனர்.

பலவேசங்கள் இருவரும் நம்மை எப்படியும் ஒழித்துக் கட்ட ஒன்பது குறிச்சிக்காரர்களும் படை திரட்டுவார்கள் என்பதை உணர்ந்தனர். பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனிடம் உதவி கேட்டார்கள். அவனும் சிறுபடை ஒன்றை அவர்களுக்குத் துணையாக அனுப்பி வைத்தான். அப்படையின் உதவியுடன் உடையாரையும் அவரது ஆட்களையும் விரட்டிவிட்டார்கள். பலவேசம் அதன் பின் உடையாரின் ஆட்சிக்கு உட்பட்ட ஊர்களில் கொள்ளையண்ட்டான். கிடைத்த பணத்தைச் சேவகர்களுக்குப் பங்கு வைத்துக் கொடுத்தான்.

ஒன்பது குறிச்சி நாட்டார்கள் பலவேசங்களைக் கொல்லாமல் தாங்கள் வாழமுடியாது என்பதை உணர்ந்தனர். அனைவரும் சேர்ந்து போய் கயத்தாற்றில் இருந்த வெள்ளைக்காரர்களிடம் உதவி கேட்டனர். வெள்ளைச் சின்னத்துரை அவர்களுக்கு உதவியாக ஒரு படையை அனுப்பி வைத்தான். அந்தப்படையைக் கண்டு அஞ்சிய பலவேசங்கள் சற்று பின்வாங்கி இருந்தனர்.

இந்தநிலையில் பலவேசம் சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு சாமிகும்பிட வந்தான். அவர்கள் அங்கு இருக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட நாடார்களும் அங்கு திரண்டு வந்தனர். அவர்களுக்குப் பலவேசத்தை நெருங்க பயம். அதனால் வேறு வழியில் சிந்தித்தனர். பலவேசங்களுடன் நெருங்கிய உறவு வைத்திருந்த பைக்குரு என்பவனுக்கு 50 பொன் கொடுத்து சகோதரர்கள் சாமிகும்பிடும்போது கழற்றிவைத்த சகோதரர்களின் ஆயுதங்களை அகற்றிவிட்டனர்.

ஆயுதம் இழந்து நின்ற வீரர்களை நாடார்கள் எதிர்த்தனர். சுயம்புலிங்க சுவாமி கோவிலினுள் ஒளித்த அவர்களைப் பிடித்துக் கட்டினர். பட்டினி போட்டு வதைத்து அலைக்கழித்தனர். பின்பு இருவர் தலைகளையும் வெட்டி எடுத்தனர்.

சதியால் இறந்தவர்கள் அகம் அடங்காமல் கைலாயம் சென்று சிவனிடம் தங்கள் துயரத்தைச்சொல்லி பேயாக வரம் பெற்று மீண்டனர். தங்களைக் கொன்றவர்களைப் பழி வாங்கினர். அவர்களை அடக்க பலிகொடுத்து பூசையிட்டார்கள் ஊரார். அவர்கள் பிறகு தெய்வமாகக் கோவிலில் வழிபாடு பெற்றனர்.

—-

Series Navigation

முனைவர் அ.கா.பெருமாள்

முனைவர் அ.கா.பெருமாள்