ஓராண்டு கடந்து ஸ்ரீலங்காவில் சுனாமி மீட்சி வசதிகள் -2

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


காலக் குயவனின் மேளமிது! சுனாமிக்

கையலை சீறிடும் கோளமிது!

கடலில் மிதக்கும் முட்டையிது! மையக்

கருவில் வெடிக்கும் கொட்டையிது!

‘பசிபிக் அரங்கு சுனாமி எச்சரிக்கை ஏற்பாடுடன் சேர்க்கப்பட்ட இந்தியக் கண்காணிப்பு மையம் ஒன்றை நாம் அமைக்கலாம். அல்லது நில அதிர்ச்சி உளவிகள், அலை மானிகள், அலை உயர்ச்சி எச்சரிக்கை ஏற்பாடுகள் பின்னிக் கொண்ட ஓர் பொறியியல் துறைத் தொடர்பை நாம் நிறுவிக் கொள்ளலாம். கடற்தட்டில் பூகம்பம் ஏற்பட்டு 3 மணிநேரம் கழித்துத்தான், பூத அடிப்புச் சுனாமி அலைகள் வடிவெடுத்துக் கிளம்புகின்றன! அறிவிப்பு உடனே கிடைத்தால் நில அதிர்வு மையத்திலிருந்து பயணம் செய்யும் அந்த 3 மணி இடைவேளைக்குள், கரையோர மாந்தர் இடம் பெயர்ந்து பாதுகாப்புப் பகுதிகளுக்கு வெளியேறி விடலாம். ‘

பாரத ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் [ஹைதராபாத் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசியது (2005)]

‘சுனாமி எச்சரிக்கை அனுப்பச் சீரான, விரைவான ஒலிபரப்புச் சாதனத் துணை ஏற்பாடுகள், பயிற்சி முறைபாடுகள் நாடெங்கும் நிலவப்படாமல், ஏராளமான நிதியைச் செலவழித்து நவ நாகரீகக் கருவிகளும், புதுவித அதிர்வு உளவு அறிவிப்புகளும் நிறுவகம் செய்வதில் ஏது பயனுமில்லை! அவ்வித ஏற்பாடுகளை நாட்டில் அமைத்துக் கண்காணிப்பது மாபெரும் நெறிமுறைப் பணியாகும். சுனாமி வருகையை அறிவிக்கும் சமயத்தில், கடற்கரைப் பகுதியில் திரியும் ஒவ்வொரு தனி மனிதன் காதிலும் பலமாகத் தெளிவாக ஒலிக்க வேண்டும். அதுதான் மெய்யாக மிகவும் கடினமானது. ‘

பிரதம விஞ்ஞானி பிலிப்ஸ் மெக்ஃபாடன் [இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பாளர், பூதளவியல் கூடம், ஆஸ்திரேலியா]

முன்னுரை: 2004 டிசம்பர் 26 ஆம் தேதி இந்து மாக்கடலில் அசுர சுனாமி தாக்கிய நாடுகளில் இந்தோனேசியாவுக்கு அடுத்ததாக மிகவும் பாதிக்கப் பட்டது ஈழத்தீவு! ஈழத்தில் மாண்டவர் மட்டும்: 38,195! கணக்கில் காண முடியாமல் போனவர்: 23,000 மேற்பட்டவர். சுனாமி அடிப்பால் காயமடைந்தவர்: 21,441. கொந்தளிப்பில், குழப்பத்தில் புலம்விட்டுப் போனவர்: 516,150. செய்யும் தொழிலின்றி ஊதிய வருவாய் இழந்து போனவர்: 150,000. நாசமாய்ப் போன வீடுகள்: 98,000. 75% மீன்பிடிப்புத் தொழில் சேதப்பட்டது. உப்பு நீர்ப்பட்டு நாசப்பட்ட நிலங்கள்: 23,450 ஏக்கர். கணவனை இழந்தோர், அனாதை ஆனவர், முடமானவர்: 40,000. சீர்கேடான மருத்துவ மனை வசதிகள்: 97. சேதப்பட்ட பள்ளிகள்: 182. கல்லூரிகள்: 4. தற்காலிய தங்குமிடமாகப் பயன்பட்டவை: 446 பள்ளிகள். பாதிக்கப் பட்ட பள்ளி மாணவர்: 200,000. பயிற்சிச் சாலைகள்: 15. வீடு, படகு, வலை, உணவு, உடை, குடிநீர், காடு, வயல், நீர் வசதி, ஊர் வசதிப் பொருட்சேத மதிப்பு: 900 மில்லியன் டாலர்! 2005 அக்டோபரில் பல்வேறு மீட்சி நிறுவகங்கள் [20 அரசாங்க நிறுவகங்கள், 20 பல்கிளைப் பணியகங்கள், 18 தேசீய, அகிலத் தனியார் துறையகங்கள் மற்றும் 100 நிபுணர்கள்] ஸ்ரீலங்காவில் கூடித் தயாரித்த ஒரு கூட்டறிக்கையின் கருத்துக்களையே நான் எனது கட்டுரையில் எடுத்துக் கூறியிருக்கிறேன்.

ஸ்ரீலங்காவில் சுனாமியால் பாதிக்கப் பட்ட சுமார் 500,000 பேர்களில் பெரும்பாலோர் இன்னும் குடியிருக்க வீடுகளின்றித் தற்காலிய அகதிகளின் கூடாரங்களில் வசித்து வருகிறார்! அவர்கள் அனைவருக்கும் நிரந்தர இல்லங்கள் கிடைக்க மூன்று வருடங்கள் ஆகலாம் என்று அறியப் படுகிறது! தற்போது 100,000 வீடுகள் இன்னும் கட்டப்பட வேண்டிய திருக்கும் என்று மதிப்பிடப் படுகிறது! சுனாமி நாசத்தை விளைவித்து ஓராண்டு கடந்து அரசாங்கமும், மற்ற அறநெறி நிறுவகங்கள் மீட்சிப் பணியில் ஈடுபட்டுச் சாதித்தவை என்ன என்பதைத்தான் இக்கட்டுரை ஓரளவு காட்டுகிறது. மறுவாழ்வு முன்னேற்றச் சதவீதம் ஈழத்தின் கிழக்குப் பகுதியில்: 45%, தென்பகுதியில்: 26%, வட பகுதியில்: 19% மேற்குப் பகுதியில்: 10%. இது ஒரு பூரணக் கட்டுரை யில்லை! அகிலவலைகளில் சிந்திக் கிடந்த செய்திகள் சிலவற்றின் நிழல்தான் இவை! அவ்வழியில் மீட்சி, மறுவாழ்வு வசதிகளின் முன்னேற்றப் பரிமாணம் மிகக் குறைவுதான்! இந்த வீத முன்னேற்றத்தில் பெரும்பான்மையான வசதிகளைச் செய்து முடிக்க 3-5 ஆண்டுகள் ஆகலாம் என்று ஊகிக்கப் படுகிறது!

உலகின் கொந்தளிப்பு கடற்தட்டுகளில் மிக்க உபத்திரவம் அளிப்பது!

20 ஆம் நூற்றாண்டில் பசிபிக் கடலரங்கில் மட்டும் மொத்தம் 796 சுனாமிகள் நேர்ந்துள்ளதாக, ஸைபீரியாவின் சுனாமி ஆய்வகக் கூடம் [Tsunami Laboratory at Novosibirsk] ஒன்று அறிவிக்கிறது! அவற்றில் 17% ஜப்பானில், 15% தென்னமெரிக்காவில், 13% நியூ கினியா, சாலமன் தீவுகளில், 11% இந்தோனேசியாவில், 10% மெக்ஸிகோ, மத்திய அமெரிக்காவில், 9% பிலிப்பைன் தீவுகள், 7% நியூ ஸிலாந்து, 7% அலாஸ்கா, கனடாவின் மேற்குப் பகுதிகளில், 7% அமெரிக்காவில் மற்றும் 3% ஹவாயித் தீவுகளில் சுனாமிகள் நிகழ்ந்துள்ளன. அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தல் இந்தோனேசியா பகுதி நான்காம் [11%] தரத்தில், 88 சுனாமிகளால் பாதிப்புப் பட்டுள்ளது! சுமாத்ரா-அந்தமான் அரங்கில் இந்து மாக்கடலில் உள்ள சுந்தா கடற்தட்டு ஊனம் [Sunda Plate Fault] ஓர் பரபரப்பான கொத்தளிப்புத் தட்டுப்பிழை கொண்டது! அடிக்கடி நில அதிர்ச்சியும், எப்போதாவது சுனாமி எழுச்சியும் உண்டாகும் ஓர் அபாயக் கடற்தட்டு அது!

கடந்த 200 ஆண்டுகளாக இந்து மாக்கடல் அரங்கில் எட்டுக்கு நெருங்கிய அல்லது எட்டுக்கு மேற்பட்ட ரிக்டர் அளவுப் பூகம்பங்கள் ஆறு நேர்ந்துள்ளன! 1797 இல் ரிக்கடர் அளவு 8.4; 1883 இல் ரிக்டர் 8.7; 1861 இல் ரிக்டர் 8.5; 2000 இல் ரிக்டர் 7.9; 2004 இல் ரிக்டர் 9.0; 2005 இல் ரிக்கட்ர் 8.7. 2004 டிசம்பர் 26 ஆம் தேதி இந்து மாக்கடலில் உள்ள சுந்தா கடற்தட்டு ஊனத்தில் [Sunda Plate Fault] 9.0 ரிக்டர் அளவு பூகம்பம் பூத வடிவில் தோன்றி அசுர நாசம் செய்த தெற்காசிய இந்து மாக்கடல் சுனாமிக்கு ஈடு இணை யில்லை என்பதை அழுத்தமாக முழக்கலாம்! அந்த கோர விளைவில் 2005 ஜனவரி 27 நாள்வரை அறிந்தது: 238,000 பேர் மாண்டதுடன் 40,000 நபர் காணப் படாமல் கடலில் மறைந்தார்கள். ஆனால் மரண மடைந்தோர் எண்ணிக்கை: 288,600 என்று மதிப்பிடப் படுகிறது! [Source Wikipedia].

ஈழத்தில் சுனாமியால் நேர்ந்த கோர விளைவுகள்

இருபது ஆண்டுகளுக்கு மேலாக உரிமைப் போர் நடந்துவரும் வட ஈழத்தில் ஆயிரக் கணக்கான நபர் உயிரிழந்து போனதுடன் அவரது வாழ்வும், வசதிகளும், வளங்களும் சேதமடைந்து வரும் சமயத்தில், சென்ற ஆண்டு [2004] சுனாமியும் சேர்ந்து கொண்டு, நீண்ட காலப் பெருஞ் சீர்கேட்டை உண்டாக்கி விட்டது! 2005 டிசம்பரில் வெளியான ஸ்ரீலங்கா கூட்டறிக்கையின் கருத்துப்படி, சுனாமியால் உயிரிழந்தவர் எண்ணிக்கை: 35,322 பேர். ஈழக் கடற்கரைப் பகுதிகளில் மூன்றிலிரு பங்கு பரப்பில் வாழும் 1,000,000 நபர்கள் புலம் கடக்கப் பட்டார்! சுனாமியின் கோரப் பற்கள் வீடு வாசல், வீதி, வயல், கிணறு, நாட்டுப் புறங்களைச் சீர்கேடாக்கி, ஊதிய வழிகளை முடக்கி, அன்றாட வசதிச் சாதனங்களைச் சிதைத்து, ஆயிரக் கணக்கான மாந்தரை அனாதைகள் ஆக்கின! முக்கியமாக பாதைகள், பாலங்கள் பல உடைக்கப் பட்டு, யாரும் உடனே உதவிக்கு வர முடியாத நிலயில் இருபுறமும் மனிதர் அடை பட்டனர்! வீடிழந்த லட்சக் கணக்கான மக்களுக்குச் சுமார் 600 பள்ளித் தளங்கள், கோயில்கள் அடைக்கலம் தந்தன. சுமார் 910,000 பேருக்கு உணவு அளிக்கப் பட்டதாக அறியப் படுகிறது! உதவிப் பணிகளில் அப்போது அரசாங்கத்துடன் சேர்ந்து ஈழத்தின் விடுதலைப் புலிகள் உழைத்ததாகத் தெரிகிறது.

மீட்சி கட்டுமானப் பணிகளுக்கு நிதிக் கொடை

பெரும்பான்மையான இந்து மாக்கடல் நாடுகளுக்குத் தற்காலிய உதவி, நீண்ட கால உதவி, தளப்பகுதி உதவி [Regional Aid] போன்ற பணிகள் புரிய உலக நாடுகள் முன்வந்து மொத்தம் 13.6 பில்லியன் டாலர் நிதித் தொகையைத் திரட்டித் தந்தன! மிகவும் தீவிரமாகப் பாதிக்கப் பட்ட இந்தோனேசியாவுக்கு 6.5 பில்லியன் கிடைத்தது! அடுத்துச் சேதப்பட்ட ஸ்ரீலங்காவுக்குத் தேவைப் பட்டது 2.15 பில்லியன் டாலர் என்று அறிந்தாலும், முடிவில் 3.0 பில்லியன் டாலர் தருவதாய் உலக நாடுகள் வாக்களித்துள்ளன. ஸ்ரீலங்கா கடற்கரைப் பகுதிகளைச் சீர்ப்படுத்தி வாழும் வசதிகள், சாதனங்கள் அமைக்கச் செலவாகும் தொகை 2.2 பில்லியன் டாலர் என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. அதற்கு உலக நாடுகள் 2.1 பில்லியன் டாலர் அளிக்க முன்வந்துள்ளன. வாக்களித்த 600 மில்லியன் டாலரை அமெரிக்கா, ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கொடுத்து விட்டது. மீட்சிக் கட்டுமானப் பணிகள் பெரும்பான்மையானவை முடிவு பெற 3 முதல் 5 ஆண்டுகள் ஆகலாம் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கிறது! ஏராளமான நிதி உதவி கிடைத்தாலும், பணிகள் மிகவும் மெதுவாக ஆமை வேகத்தில் நடந்து வருவதாகத் தெரிகிறது! ஓராண்டுக்குப் பிறகு அனைத்து நாடுகளின் முன்னேற்றத்தை அளவு கோலில் சீர்தூக்கிப் பார்த்ததில், சுமார் 20% வீடில்லாத மக்களே, தற்போது நிரந்தரப் புது இல்லங்களில் குடியேறி யிருப்பதாக, நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் கூறுகிறது!

ஈழத்தில் செய்து முடித்த மறுவாழ்வு வசதிகள்

தேவையான நிரந்தர வீடுகள் 98,000 கட்டி முடிய கால தாமதமாவதால், இடைநிலைத் தங்கிடங்கள் முதலில் தயாராக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஈழத்தில் நேர்ந்தது. திட்டமிடப் பட்ட 60,000 இடைநிலைத் தங்கிடங்களில் 54,100 முடிக்கப் பட்டதாக கூட்டறிக்கை [2005 அக்டோபர்] கூறுகிறது. மற்றும் 1948 தங்கிடங்கள் முடியும் தறுவாயில் உள்ளதாகவும் தெரிய வருகிறது. பாதிக்கப்பட்ட 66,525 குடும்பத்தினருக்குப் பண உதவி அரசாங்கம் செய்ததாக அறிக்கை கூறுகிறது. அதாவது நான்கு தவணையில் தரப் போகும் பண உதவியில், முதல் தவணைப் பணம் 83.5% குடும்பங்களுக்கு அளிக்கப் பட்டிருக்கிறது. சில பகுதிகளில் நன்கொடை நிறுவகங்கள் 32,000 குடும்பங்களுக்கு வீடு கட்டித் தர முன்வந்துள்ளன. 2005 டிசம்பர் 13 தேதி வரை திட்டமாகி வேலை நடந்து வரும் 10,707 வீடுகளில், 4299 வீடுகள் முடிக்கப் பட்டன. ஆயினும் புத்த ஆலய நிறுவகங்கள், தனியார் குழுக்கள் மற்றும் பிற அறநிலையங்கள் கட்டித் தரும் தற்காலிய தங்கிடங்கள் கூட்டுக் குழுவினருக்கு அறிவிக்கப் படவில்லை!

ஈழத் தீவின் கடற்கரை சார்ந்த 150,000 பேர்களின் வாழ்வும், தொழிலும், ஊதியமும் இழப்பானதால், அவர்களுக்குப் பண உதவி அரசாங்கம் அளித்தது. அவரில் 50% நபர்கள் மீன்வள ஊதியத்தில் பிழைத்து வந்தவர். மீதிப்பட்டவர் வேளாண்மை, சுற்றுலாப் பணிகள் மற்றும் பொதுநல ஊழியராக ஊதியம் பெற்று வந்தவர். அவர்களில் 70-85% நபர்கள் தொழிற் துறைகள் பெற்று மீள்வாழ்வு பெற்றதாக அந்த கூட்டறிக்கை கூறுகிறது. 250,000 மேற்பட்ட வீட்டினர் நான்கு தவணை நிதி உதவியில் இரண்டு தவணைப் பணம் பெற்றார்கள். கைப்பணம் ரூபாய் 5000 கிடைத்ததுடன், வாரத்திற்கு 375 ரூபாயும் அவர்கள் கொடுக்கப் பட்டார்கள். சுமார் 165,000 பேர்கள் மூன்றாம் தவணைப் பணமும் பெற்றுள்ளார்கள். அவ்விதம் பண உதவி அளித்த மொத்தத் தொகை 700 மில்லியன் ரூபாய் என்று கணக்கிடப் பட்டிருக்கிறது. சுமார் 13,000 தொழிற்துறை நபர்களுக்கு குறைநிரப்புக் கடன் [Subsidized Loan] கொடுத்து 3.8 மில்லியன் ரூபாய் என்று தெரிகிறது. உப்புக் களங்களாய் உரு மாறிய 80% வயல்களைச் சீரமைக்கும் திட்டமும் கையாளப் பட்டது. சுற்றுலாவை நம்பி யிருக்கும் 52 பழதடைந்த ஹோட்டல்களில் 41 மீட்சியாகி புத்துயிர் பெற்றன!

சுனாமிப் பாதிப்பு மீட்சி, மறுவாழ்வுப் பணிகளை நிறைவேற்றுவதில் தீவிர மனிதப் பிரச்சனைகள் உள்ளதால், அவை முடிவு பெறுவதில் தடைகள் நேர்ந்து தாமதமாகித் திட்டங்கள் ஆமை வேகத்தில்தான் முன்னேறுகின்றன! முதலில் வீடு கட்டத் தேவையான பேரளவு ஏக்கர் நிலங்களை வாங்குவதற்கே பெரும் தாமத மாகிறது! மேலும் அரசாங்க அமைச்சர்கள், அரசாங்க ஊழியர்கள், பொறியாளர்கள், கான்டிராக்டர், தொழிலாளர்கள், பொதுநபர்கள் பங்கேற்கும் எந்தத் திட்டத்தையும் தெற்காசிய நாடுகளில் முயல் வேகத்தில் நிறைவேற்ற முடியாது!

தகவல்:

1. Chennai Online News Service [Dec. 8, 2005]

2. Relief Website [www.reliefweb.int/rw…./openDocument] (Dec.14, 2005)

3. The Slow Process of Rebuilding Lives By: Indrani Sen [www.Newstoday.com/news/nationworld] (Dec 26, 2005)

4. Tsunami Adalats get 1.88 lakhs Complaints By: G. Jagannath [www.newstodaynet.com] (Dec 24, 2005)

5. Buzz of Relief in Worst-hit Nagapattinam By Ganesh Nadar [www.rediff.com/cms] (Jan 5, 2005)

6. Nagapattinam Pays Homage to Tsunami Dead, Press Trust of India (Dec 26, 2005)

7. Shri Dasanudas Charies Activities- Tsunami Relief Efforts (Dec 30, 2004)

8. Tsunami Anniversary: Indians Remember Those Lost with Prayers & Vigil, DPA New Delhi [www.taipeitimes.com/News/World (Dec 27, 2005)

9. Tributes Mark Tsunami Anniversary in Tamil Nadu, Managing Tsunami – Lessons of Dec 26, 2004 [http://ww1.mid-day.com/news/nation/2005/december]

10 Tsunami Relief Works – Tsunami Relief & Rehabilitation in Progress, Order of Ramakrishna [www.sriramakrishanamath.org/news/tsunami.shtml]

11 Rebuilding The Lives & Livelihoods, Indian Tsunami Response- SEEDS Press Release, Reuters Alertnet.

12 Tamil Nadu Chief Minister Releases Booklet on Tsunami Relief, ‘Tiding over Tsunami ‘ [Dec 26, 2005]

13 Managing Tsunami Workshop – Lessons of December 26, 2004 Organised By: M.S. Swaminathan Research Foundation, Chennai (Dec 26, 200).

14 Indian Ocean Tsunami Warning System -BBC News [http://news.bbc.co.uk/go/] (Dec 23, 2005)

15 India Unlikely to Share Seismic Data By: Kalyan Ray, Deccan Herald (Dec 25, 2005)

16 Indian Ocean Tsunami Warning Group Meeting, Indian National Centre for Ocean Information Service (INCOIS), Hydrabad, India.

17 Deep Ocean Assessment & Reporting of Tsunami System (DART System)

18 UNICEF Releases Tsunami Relief Update, India Info News (Dec 22, 2005)

19 The Global Earth Observation Systems, NOAA National Weather Service.

20 Governments Struggle to Create Tsunamai Alert System By: Annie Schleicher (Dec 25, 2005)

21 Indian Tsunami Warning System Report from M.S. Swaminathan Research Foundation

22 Tsunami & After By: B. Raman, Director, Institute of Tropical Studies, Chennai & Convenor, Observer Research Foundation, Chennai [www.saag.org/papers13/paper1209.html] (March 1, 2005)

23 Most of Japan ‘s Bilateral Tsunami Aid Remains Untouched [Dec 6, 2005]

24 Sri Lanka Living in Transition After Tsunami BBC News [November 19, 2005]

25 One Year After Tsunami The New York Times (Dec 28, 2005)

26 Sri Lanka 2005, Post-Tsunami Recovery Program, World Bank Draft Repot (Jan 28, 2005)

27 Sri Lanka Post-Tsunami Recovery & Reconstruction – A Joint Report of Govt of Sri Lanka & Development Partners.

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (January 12, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா