பாவப்பட்ட அது

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை.


கடவுள் தந்த பொழுதிலிருந்து
காயங்களெதுவும் கண்டிரா
பரிபூரணத் தூய்மையோடு துடித்திட்ட அது
மழலை வாடையை எங்கும் பரப்பும்
பூக்களை இறுக்கமாகப் பொத்திவைத்திருக்கும்
ஒருநாள் குழந்தையின்
உள்ளங்கையினைப்போலவும்
மொட்டவிழக் காத்திருக்கும்
தாமரையொன்றின் உட்புற இதழைப்போலவும்
மிகவும் மென்மையானது
சில சலனங்களை
பின்விளைவறியாது ஏற்றுப்பின்
கலங்கியது துவண்டது
வாடிச் சோர்ந்தது
ஞாபக அடுக்குகளில்
சேமித்துக் கோர்த்திருந்த
எனதினிய பாடல்களின் மென்பரப்பில்
உன் கால்தடங்களை மிகுந்த
அதிர்வோடு ஆழமாய்ப் பதித்தவேளையில்
ஏமாளியாய் நின்றதைத்தவிர்த்து
வேறென்ன பாவம்தான் செய்தது
வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்