பேச்சுத்துணை…

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

செல்வராஜ் ஜெகதீசன்



கடிமணம் வாழ்வில்
கட்டாயத் தேவையா
யென்றெல்லாம்
கடிவாளமிட்ட மனதோடு
ஒத்தையில் இருந்தவனை
ஒருவாறு பேசிச் சரிகட்ட
நான் உட்பட
நண்பர்கள் பலரும்

எடுத்துச்சொன்ன பலவற்றில்
ஏகோபித்த ஒன்று
பின்பகுதி வாழ்க்கையில்
பேச்சுத்துணைக்கென்றாவது
பெண்ணொருத்தி வேண்டுமென்பது.

மணமாகிச் சில
மாதங்கள் கழித்து
எதேச்சையாய் எதிர்ப்பட்டவனிடம்
எப்படிப் பேச்சுத்துணை என்றேன்.

எரிக்கும் பார்வையொன்றை வீசி
எதுகை மோனையாய் சொல்லிப்போனான்:

எப்போதும் பேசிக்கொண்டே அவள்.
எதிர்ப்பேச்சின்றி துணையாய் நான்.

0

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி