முடிக்கக் கூடாத கவிதை

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

புஹாரி, கனடா


எங்கிருந்து வந்தது
இந்த வேதனை… ?

முதலில்
இது
வேதனைதானா… ?
அல்லது சுகமா… ?

இல்லை…
இது ஒரு
சுகமான வேதனை…!

நீ என்
நெஞ்சத்தில்
நடக்கிறாய் என்பதற்காக
நான்
மூச்சுவிடாமல்
தம்
கட்டிக்கொண்டிருக்கிறேனே
இதுவும் ஒரு
சுகமான வேதனைதானே… ?

உன்
பெயரை உச்சரிக்கும்போதே
என் ரோமங்கள்
சிலிர்த்துக் கொள்கின்றனவே
உன்னையே உச்சரித்தால்… ?

உன்
விழிச்சுடரைத் தொடும்போதே
சுற்றுப் புறங்கள்
இருண்டு விடுகின்றனவே
உன்னையே தொட்டால்… ?

நீ என்
நெஞ்சவீணையில் வாசிக்கும்
ராகத்திற்குப் பெயர்தான்
காதலா… ?

உன்னிடம் அப்படி
எதைக் கண்டுவிட்டு
இப்படி நான்
என்னை மறந்திருக்கிறேன்… ?

உன்னிடம்
வெளிச்சம் போட்டுக் கிடக்கும்
அந்த அழகா… ?

தூசு
தொடமுடியாத
அந்த உள்ளமா… ?

ஏன்
என் நினைவுகளை இப்படி
மொத்தமாய் எடுத்துக்கொண்டாய்… ?

அன்பே…
எனக்குள் நீ எழுதுவது
தேவ கவிதைதானே… ?

எழுது… எழுது…
ஆனால்
எல்லா கவிதைகளையும் போல
இதற்கும் ஒரு
முற்றுப்புள்ளி வேண்டும்
என்றுமட்டும் எண்ணிவிடாதே.

***
buhari2000@hotmail.com

Series Navigation

புஹாரி, கனடா

புஹாரி, கனடா