கருப்புச் செவ்வாய்

This entry is part [part not set] of 22 in the series 20010917_Issue

பசுபதி


கழுகு:

விடிந்தது கருப்புச் செவ்வாய்
. . செந்தழல் மேனிச் செவ்வாய் !
வெடித்தது வஞ்சக் குண்டு !
. . வெறுப்புமிழ் விமானம் தாக்கி
இடிந்தது வணிக மையம் !
. . எரிந்தது இழந்தோர் வையம் !
மடிந்தது மனித நேயம் !
. . மறக்குமோ யூயெஸ் தேயம் ?

புறா:

கூவிடும் மக்கள் சோகம்
. . குறைத்திடும் கொலைஞர் தாகம் !
யாவரும் கேளிர் என்றும்
. . யாதுமே நம்மூர் என்றும்
தீவிர வாதம் பேசும்
. . தீயவர் அறிவார் நாளை !
ஏவுவோம் அமைதிக் குண்டு !
. . தூவுவோம் அன்புச் செண்டு !

கழுகு:

சூளுரைப்போம் துடித்தெழுந்த அமெரிக்க நாட்டிற்கு,
. . . ‘தோழா! உங்கள்
தோளுக்குத் தோள்கொடுத்துத் துஷ்டர்செய் வன்முறையைத்
. . . துண்டம் செய்வோம் !
வாளதனை உறைக்குள்ளே வைத்திருப்போம்; பொறுத்திருப்போம்;
. . . வாய்ப்ப ளிக்கும்
நாளதனில் பாய்ந்திடுவோம் ; நசுக்கிடுவோம் எதிரிகளை ;
. . . நமக்கே வெற்றி ! ‘

புறா:

விண்வெளியின் மேலுண்டோ வேலி ? விசாச்சீட்டு
வன்முறைக்கு வாங்கவும் வேண்டுமோ ? — அன்றிழந்த
கண்ணுக்குக் கண்பறிக்கக் கங்கணம் கட்டினால்
அந்தகர்கள் ஆவர்உல கோர்.

****

Series Navigationபாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு. >>

பசுபதி

பசுபதி