சில ஹைக்கூ கவிதைகள்

This entry is part [part not set] of 5 in the series 20001225_Issue



வண்ணத்துப் பூச்சி

உதிரும் மலர் , என்றெண்ணினேன்
கிளைக்குத் திரும்பும் —
வண்ணத்துப் பூச்சி.

(மோரிதேகே)


நிலா – அறுவடைக்காலத்தில்

இந்த நிலாவிற்கு
ஒரு கைப்பிடி வைத்தால்
விசிறிக் கொள்ளலாம்.

(சோகன்)

சொல்லப் படாத காதல்

‘கோடையினால் இளைத்தேன், கண்ணே ‘
அவனிடம் சொன்னேன் ஆனால்
அடக்க முடியாமல் கண்ணீர்.

(கிகின்)

வசந்தத்தில் ஒரு காலைப் பொழுது

வசந்த கால நாட்கள்!
பெயரில்லாத மலை மேலெல்லாம்
இளங்காலைப் பொழுதின் பனிமூட்டம் – திரையாக.

(பாஷோ)

கவிஞனின் கனவு

மலர்கள் போர்த்தியபடி
உடனே நான் இறக்க வேண்டும்
-இந்த நம் கனவில்.

(எத்சுஜின்)

வசந்த காலை மழை

வசந்த காலை மழையில்,
ஒரு குடையும் ஒரு மழை அங்கியும்
– பேசியபடி கடந்து செல்லும்.

(புசோன்)

சோளக் கொல்லை பொம்மை

அஸ்தமன் சூரியனில்
வயல் பொம்மையின் நிழல்
சாலையில் – தனியே.

(ஷோஹா)

அநாதைக் குருவி.

வா விளையாடலாம்,
வா; குருவி இங்கே
உனக்கும் அம்மா இல்லை.

(ஈஸா)

நகர வாழ்க்கை

நகரத்தில் வாழ்க்கை
எல்லாவற்றுக்கும் பணம் —
பனியைக் கரைக்கக் கூட.

(ஈஸா)

இலைகள்

இலைகளே கேளுங்கள்
உங்களில் முதலில் உதிர்வது யார் என –
வீசும் காற்றிடம்.

(க்யோஷி)

ஆங்கில மூலம் தமிழில் கோபால் ராஜாராம்

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்