வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

வெங்கட் சாமிநாதன்


மலர் மன்னனின் புத்தகம் வந்தேமாதரம் நமக்கு சற்று முன் இஸ்லாமியர்கள் எழுப்பிய பிரசினை யின் சரித்திரம் முழுதையும் ஆதியோடந்தமாக எடுத்துச் சொல்கிறது. இது போல அவ்வப்போது எழும் பிரசினைகளின் முழு வரலாறும் சொல்லப் படாவிட்டால் இவற்றின் பின்னிருந்து செயல்பட்ட சக்திகள் என்னவாக இருந்தன என்பது தெரியாமலே போயிருக்கும். இது மலர்மன்னனிடமிருந்து இந்த வகையில் வரும் மூன்றாவது புத்தகம். முதலில் தயானந்த சரஸ்வதி பற்றியது. பின்னர் தொடர்ந்தது திமுக தோன்றிய வரலாறு. இன்றைய தலைமுறைக்கு இவற்றின் அந்நாளைய உண்மைச் செய்திகள் எதுவும் தெரியாத சூழலில் இன்றைய தலைமைகள் சொல்லும் பொய்களையெல்லாம் வரலாறாக ஏற்றுக்கொள்ளும் அபாயம் முன்னிற்கிறது. திமுக தோற்றத்தின் போது மு.கருணாநிதி கட்சி பொருட்படுத்தும் தலைவரில் ஒருவராகக்கூட இருந்ததில்லை என்று எத்தனை பேருக்குத் தெரியும்?. சரித்திரம் இப்போதைய சௌகரியத்துக்கு மாற்றிச் சொல்லப்படுகிறது.. எனவே இப்புத்தகங்கள் மூலம் மலர் மன்னன் ஒரு பெரிய தொண்டு செய்திருக்கிறார் இத்தலைமுறைக்கு.

ஓராண்டு இருக்குமா?, கொஞ்ச காலம் முன்பு வந்தேமாதரம் என்ற சரித்திரப் பிரசித்தி பெற்ற, தேசீய உணர்வு எழுச்சிப் பாடல் செய்திகளில் அடிபட்டது. காரணம் எப்போதும் போல நமது செக்யூலரிஸம். அல்லது நம்ம ப்ராண்ட் செக்யூலரிஸம். அது நமது இந்த தேசத்து தலைமைகளின் கோழைத் தனம் பூசிக்கொண்டுள்ள கௌரவ வாசனைப் பூச்சு. தமிழில் எம்மதமும் சம்மதம் என்று அதன் லக்ஷிய வடிவைச் சொல்லலாம். ஆனால் கொச்சைப்படுத்துதல் என்பது எப்போதும் எதற்கும் நடப்பது தானே.

சமீபத்திய நிகழ்வு அதற்கு உதாரணம். பள்ளிகளில் பிரார்த்தனைப் பாடலாக வந்தேமாதரம் பாடுவதற்கு சில முஸ்லீம் தலைமைகள் எதிர்ப்புத் தெரிவித்தன. காரணம் அது முஸ்லீம் மதத்திற்கு எதிரானது. தாய் நாட்டை தேவதையாகப் பாவித்துப் பாடும் பாட்டாதலால் அது உருவ வழிபாட்டை மறுக்கும் இஸ்லாத்துக்கு எதிரானது என்று. இது சமீபத்திய நிகழ்வு முஸ்லீம் மதத்தினரின் மன மாற்றம், தன் நம்பிக்கைகளுக்கு மாறான எதையும் சகித்துக்கொள்ளும் மறுப்பது, அந்த மறுப்பு உரத்து வன்முறைக்குத் தயாராவது என்பது சமீபகாலமாக முஸ்லீம் தலைமைகளின் நடைமுறையாக மாறி வருவது நமக்குத் தெரியும். அமைதியை நாடும் முஸ்லீம் பெரும்[பான்மை, மத நம்பிக்கையின் நடைமுறையைத் தம் தலைமையின் கட்டளைக் கேற்ப் பணிய வேண்டிய மதக் கட்டுப்பாட்டில் வாழ்வது

வட்டி வசூலித்து பிழைப்பு நடத்துவது இஸ்லாத்துக்கு எதிரானது தான். தாம் பாங்கில் போட்ட பணத்துக்கு பாங்குகள் கொடுக்கும் வட்டியை இது ஹராம் எங்களுக்கு வேண்டாம் என்று எந்த முஸ்லீம் தலைமையும் ஃபட்வா விடுத்து கட்டளையிட்டிருப்பதாக எனக்குச் செய்தி இல்லை. பூஜைக்குப் பயன் படும் அகர்பத்தி வருவது முஸ்லீம்களிடமிருந்து. வடநாட்டில் எனக்குத் தெரிந்த வரை ரக்‌ஷா பந்தனுக்கு ராக்கி தயாரிப்பது முஸ்லீம்கள். அமர்நாத் புனித யாத்திரைக்குப் போகும் .ஹிந்து பக்த கோடிகளுக்கு உதவுவது கஷ்மீர் முஸ்லீம்கள். அவர்களையோ, அமர்நாத் யாத்ரீகளையோ ஜிகாதிகள் ஒன்றும் செய்வதில்லை. அனேக கோவில் வாசல்களில் பூவும் சந்தனமும் விற்றுப் பிழைக்கும் முஸ்லீம் கடைக்காரர்கள் உருவ வழிபாட்டில் தானே வயிறு பிழைக்ககக் கூடாது அது ஹராம் என்று ஃபட்வா. விடுத்திருக் கின்றனவா என்றும் தெரியாது. இந்தக் கடை நடத்தும் முஸ்லீம்கள் எனக்குத் தெரிந்து அரை நூற்றாண்டுகாலமாக இப்படித் தான் தலைமுறை தலைமுறையாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். கேரளாவில் எத்தனை பகவதி அம்மன் காவுகளுக்கு முஸ்லீம்கள் ட்ரஸ்டுகளாக இருக்கிறார்கள் என்பது ஒரு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். எத்தனை கோவில்களுக்கு முஸ்லீம் கைவினைஞர்கள் கோவில் மண்டபத்துக்குள் குடி அமர்ந்து மது, மாமிசம் எல்லாவற்றையும் ஒதுக்கி விரதம் இருந்து கோவில் மூர்த்திகளுக்கு வேண்டிய அலங்காரப் பொருட்களைச் செய்து தருகிறார்கள் என்பதும் இங்கு நினைவுகொள்ளவேண்டிய விஷயம். இன்னும் சொல்லப் போனால், இந்தியாவிலும் ஏன், பாகிஸ்தானிலும் கூட இருக்கும் தர்காக்கள், முஸ்லீம் ஞானிகள் அடக்கம் செய்யப்பட்ட மஜார்கள் சென்று தொழுவதும் , அதன் மூலம் அந்த ஞானிகளைத் தொழுவதும் ஹராம் தான். இஸ்லாத்துக்கு எதிரானது தான். நாகூர் தர்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மீரான் சாஹிப்பை (அவர் பெயர் முழுவதையும் நினைவுகொள்வது சிரமம்) நாகூர் ஆண்டவர் என்று தான் நம் தமிழ் நாட்டு முஸ்லீம்கள் அழைக்கின்றனர். இத்தகைய ஹராமை, இஸ்லாத்துக்கு எதிரான நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு மஜார் சென்று தொழுகை நடத்தும் முஸ்லீம்கள், ஷரியா படி, ஜன்னத்தில் இவர்களுக்காக மதுக்குடங்களுடன் காத்திருக்கும் அழகிய கன்னிகள் இவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. ஜஹன்னத்துக்குத் (நரகத்துக்கு) தான் இந்த ஹராமிகள் கொண்டு செல்லப் படுவார்கள். அதனால் தான் பாகிஸ்தானிலும், ஆப்கனிஸ்தானிலும் இருக்கும் தாலிபான்கள், தர்காக்களாகப் பார்த்து வெடிவைத்து சிதைக்கிறார்கள். ஷீயா முஸ்லீம்களின் மசூதிகளும் இதில் அடக்கம். அஹ்மதியாக்களும் அடக்கம். இடித்து தரைமட்டமாக்கப்பட்ட மஜார்கள், ஷியா மசூதிகளின் இடத்தில் பரிசுத்தமான, இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் சௌதி அரேபியா தரும் ரியால்கள் கொண்டு புதிய மசூதிகள் கட்டப்படும். லால் மஸ்ஜித் பர்வேஸ் முஷரஃபின் ராணுவ நடவடிக்கையின் காரணமாக சிதிலமடைந்ததால், அந்த இடத்தில் இப்போது ஐந்து புதிய மசூதிகள் கட்டப்பட்டுள்ளதாகச் செய்தி. ஷேக் சின்னமௌலானா சாஹேப் நாதஸ்வரம் வாசிக்கிறார். தியாகராஜ கீர்த்தனைகளை வாசிக்கிறார். தியாக ராஜ சமாதியில் வாசிக்கிறார். அதே தியாகராஜா சமாதியில் ஜாகிர் ஹுஸேன் தபலா வாசிக்கிறார். இரண்டுமே தியாகராஜரின் நினைவுக்கு அஞ்சலி செய்வது தான். அதிலும் ஷேக் சின்ன மௌலானா அமபா நீலாயதாக்ஷி என்று முத்துஸ்வாமி தீக்ஷிதர் கீர்த்தனையை வாசிக்கிறார். தன் கலையின் புனிதத்வத்தைக் காப்பாற்ற சாரதா நாதஸ்வர சங்கீத ஆஸ்ரம் என்ற பெயரில் நிறுவுகிறார். அதில் தன் பேரக் குழந்தைகள் வரை சங்கீதம் கற்றுக்கொடுக்கிறார். அவர் சங்கீதம் கற்றதே தன் தந்தையிடம் தான். ரவிஷங்கரின் குருவான அலாதீன் கானின் மகளுக்கு அன்னபூர்ணா தேவி என்று பெயர். அவர் தன் மகளுக்கு சங்கீதம் கற்றுக்கொடுப்பது சரஸ்வதி தேவியின் படத்தை முன் வைத்து. படே குலாம் அலி கான் மீரா பஜன் பாடுகிறார். கேட்க பாக்கியம் செய்திருக்க வேண்டும். துருபத் பாடும் டாகர் சகோதரர்கள் சரஸ்வதி ஆராதனைக்குப் பிறகே தம் ரியாஸை தொடங்குகிறார்கள் தினமும். இவர்கள் எல்லாம் தான் வாழும் சமூகத்தோடு ஒட்டு வாழ்ந்தவர்கள். அதை வளப்படுத்தியவர்கள். தாமும் வளத்தோடு வாழ்ந்தவர்கள். இவர்கள் இன்று எது எது ஹராம், இஸ்லாத்துக்கு எதிர், எது என்று ஃபட்வா விடுகிறார்களோ, அவர்களை விட இவர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல முஸ்லீம்களாக, பின் அதற்கும் மேல் மனிதர்களாக. தம் இஷடத்துக்கு ஃபட்வாவை வீசும் முல்லாக்கள் தான் மனிதத்வத்தை இழந்த முஸ்லீம்கள் என்று தோன்றுகிறது.

அதெல்லாம் கிடக்கட்டும். நான் சொல்ல வந்தது, முஸ்லீம் மதத்தலைமைகளும், அரசியல் தலைமைகளும் எதை எதையெல்லாம் ஹராம், இஸ்லாத்துக்கு எதிரானது என்று சொல்கிறதோ, அதையெல்லாம் சாதாரண, அன்றாட வாழ்க்கையை அமைதியுடன் கடத்தி வரும் முஸ்லீம் மக்கள். இது நமக்கெல்லாம் நினைவு தரும் காலம் தொட்டு நடந்து வருகிறது.

இந்த இஸ்லாத்துக்கு எதிரானது என்ற ஆயுதம் அவ்வப்போது முஸ்லீம் மதத் தலைமைகள், அரசியல் தலைமைகள் தம் அதிகார பலத்துக்காக, பயன்படுத்துவது தான். இந்தியாவில் சமீப கால சரித்திரத்தில் இது முதலில் எழுந்தது 1923-ல். இதிலிருந்து அவ்வப்போது சில முஸ்லீம் தலைமைகள் வந்தேமாதரம் பாடலைச் சாக்கிட்டும் சில முஸ்லீம் அறிஞர்கள் அதை மறுத்தும் வந்திருக்கின்றனர். ஆனால் கையோங்கியது, குரல் ஓங்கியது வந்தேமாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்ற குரலே. அதற்குக் காரணம் இந்த அரசியல் தலைமைகள் தன்னிச்சையாக பிரகடப்படுத்திய இஸ்லாத்துக்கு எதிர் என்ற குரலுக்கு முஸ்லீம்களின் மறுப்பையும் மீறி ஆதரவு தந்து கௌரவித்தது நம் தேசபிதா காந்தி தான். முதலில் மௌலானா முகம்மது அலி தான் 1923-ல் காக்கிநாடா காங்கிரஸின் போது வந்தேமாதரம் பாடலுக்கு மறுப்பு தெரிவித்தார். அப்போது அவருக்கு ஏதும் ஆதரவு இருக்கவில்லை. வந்தேமாதரம் பாடும்போது உட்கார்ந்திருந்தது அவர் மாத்திரமே. தனிமைப் படுத்தப்பட்ட அவருக்கு ஆதரவு அளித்தது மகாத்மா. மௌலானாவின் கிலாபத் இயக்கத்துடன் தன் ஒத்துழையாமை இயக்கத்தையும் இணைத்து பலம் சேர்க்க விரும்பினார் காந்தி. துருக்கியில் இருந்த மன்னரும் இஸ்லாமியத் தலைவருமான காலிஃப், துருக்கி நாட்டு கெமால் பாஷாவினால் தூக்கி எறியப் பட்டால் இங்குள்ள மௌலானாவுக்கும் காந்திக்கும் என்ன உபாதை? முகம்மது அலி ஜின்னாவுக்கே அதில் சம்மதமில்லை.கிலாபத் இயக்கம் வெகு சீக்கிரம் இயற்கை மரணம் அடைந்தது. காலிஃப் தூக்கி எறியப்பட்டது பற்றி உலகில் எந்த முஸ்லீமும் கவலைப்படவில்லை. முகம்மது அலியையும் காந்தியையும் தவிர. இப்படித்தான் முஸ்லீம்களின் ஒவ்வொரு அடாவடியான கோரிக்கைக்கு அடி பணிவது என்பது அன்று தொடங்கியது இன்று வரை தொடர்கிறது. காங்கிரஸும் சரி, இந்திய தலைமையும் என்றுமே சரித்திரத்திலிருந்து எந்த பாடமும் கற்றதில்லை. இப்பாடல் எழுதப்பட்ட காலத்திலிருந்து இது எல்லா கூட்டங்களிலும், காங்கிரஸ் கூட்டங்களிலும் கூட பாடப்பட்டது. தாகூர் இதற்கு இசையமைத்தார். தாயே உனக்கு வணக்கம் என்ற பொருள் படும் இப்பாடல், நாட்டு விடுதலைக்கான போராட்டத்தில் ஒரு எழுச்சிப் பாடலாக அமைந்தது. 1875-லிருந்து,. நாட்டைத் தாய்க்கு ஒப்பிட்டுப் பாடுவது உலகெங்கும் காணப்படுவது. மாதரம் என்ற சொல் இந்து மத தெய்வத்தைக் குறிப்பதாக பொருள் கொண்டு எதிர்ப்பதற்கு ஒரு வசதியான சாக்காயிற்று. அஹமத் ராஸா என்ற வங்க எழுத்தாளர், வந்தே என்பதை, இபாதத் என்ற இறைவனைக் குறித்துச் சொல்ல்ப்படும் அரபுச் சொல்லை மொழிபெயர்க்கப் பயன்படுத்தியது தான் வினையாயிற்று,. தங்கள் இறைவனைப் பணிய பயன்படுத்தும் சொல்லை அதற்கு இனையாக வேறு எதற்கும் பயன்படுத்துவது இஸ்லாத்துக்கு எதிர் என்று வாதிக்க முற்பட்டனர். வந்தே என்ற சொல் வணக்கம் தெரிவிக்கும் சொல்லேயன்றி தொழுகைக்கான சொல் அல்ல” என்று சொல்கிறார். எதாக இருந்தால் என்ன. கிலாபத் இயக்கம் மரணித்துவிட்டது. இனி தன் முக்கியத்துவத்துக்கு எதையாவது தேடவேண்டும் என்று முகம்மது ஜவஹர் அலியின் நினைத்ததன் வினை. மகாத்மாவும் முரண்டு பிடிக்கும் முஸ்லீம்களையும் அரவணைக்க எவ்வ்ளவு விட்டுக் கொடுத்துக் கொண்டே போகவேண்டுமோ அத்தனையும் செய்தார். மகாத்மா அன்று முஸ்லீம்களுக்கு பணிந்து போவதை எதிர்த்த ஜின்னா, பின்னர் தானே மகாத்மாவின் எந்த சமரசத்தையும் நிராகரிப்பவரானார். குனிகிறவன் கிடைத்தால் குட்டுகிறவனுக்கு கொண்டாட்டம் தானே.

பக்கிம் சந்திரரின் ஆனந்த மடம் நாவலில் இந்த பாடல் இடம் பெற்று, தேசீய எழுச்சி பாடலாக இது பரிணாமம் பெற்றது. பின் காங்கிரஸ் கூட்டத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு கூட்டத்திலும் 1923 வரை வந்தேமாதரம் முதலில் கூட்டம் தொங்கும் முன் பாடப்படும் பாடலாயிற்று. 1923-ல் முதல் எதிர்ப்புக் குரல் முகம்மது அலியிடமிருந்து கிளம்பிய பிறகு, இது ஹிந்து மத துர்க்கை, லட்சுமி போன்ற தேவதைகளைப் பாடும் பாடல் என்று முஸ்லீம் லீக் பிரசாரம் செய்யத் தொடங்கவே காங்கிரஸில் உள்ள முஸ்லீம்களுடன் சமரசம் கொள்ள முதலில் இரண்டு வரிகளை மாத்திரம் பாடுவோம், எல்லா பாடல்களோடும் சேர்த்துப் பாடுவோம் என்றம் தெய்ந்து தேய்ந்து, கடைசியில் சுதந்திர இந்தியாவின் தேசீய பாடல் தேர்வை கடைசி வரை தீர்மானத்தை ஒத்தி வைத்து ஐ நா சபையில் பாடிய ஜன கன மனவையே ராணுவ இசை அமைத்து தேசீய பாடலாக கடைசி நேரத்தில் பாடச் செய்தது, மறுபடியும் முஸ்லீம்களுடன் எந்த அளவுக்கும் சமரசம் என்ற கொள்கையின் இன்னொரு உதாரணம். அது மகாத்மாவின் வேண்டாத கிலாபத் இயக்க ஆதரவிலிருந்து தொடங்கியது. மகாத்மாவின் சமரஸப் போக்கு காங்கிரஸின் சமரச கொள்கையாக பரிணாமம் பெற்று, பின் அது காங்கிரஸ் அரசின் கொள்கையாகவும், இன்று தேசத்தின் கொள்கையாகவும் வளர்ந்து விட்டது. அது இன்று பள்ளிச்சிறுவர்கள் வரை பரவியிருக்கிறது.

இன்றைய சமரசத்தின் ஆரம்பங்களை மலர் மன்னனின் புத்தகம் வந்தே மாதரம் பதிவு செய்கிறது. இப்போது அந்த சமரசம் எல்லா கட்சிகளும் போட்டி போடும் சமரஸமாகியிருக்கிறது.
எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம். இந்த பழைய வரலாற்றின் பெரும்பகுதி எண்பது வயதாகப் போகும் எனக்கே தெரியாது.

வந்தேமாதரம் எதிர்ப்பில் வளர்ந்த எழுச்சி கீதம் : மலர் மன்னன்
திரிசக்தி பப்ளிகேஷன்ஸ் கிரிகுஜா என்க்ளேவ், 58/21, முதல் அவென்யு, சாஸ்திரி நகர், அடையார் சென்னை-20 பக்கம் – 118
விலை ரூ 100

_________________________________________________________________________

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்