உயிரியல் தொழில் நுட்பம்,விவசாயம் – ஒரு கேள்வி-பதில்- 1

This entry is part [part not set] of 33 in the series 20061228_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


1,உயிரியல் தொழில்நுட்பம் மூலம் மரபணு மாற்றப்பட்ட அரிசியை பரிசோதிப்பது
குறித்து சர்ச்சை எழுந்துள்ளதே? அத்தகைய அரிசி தேவைதானா ?

இந்த சர்ச்சைகள் புதிததல்ல.இந்த ஒரு பயிருடன் நின்றுவிடப் போவதில்லை.
இதை ஒரு தொழில் நுட்பம் குறித்த சர்ச்சையாகப் பார்க்கக் கூடாது.பி.டி.(Bt)
பருத்தி குறித்து மாறுபட்ட கருத்துக்களும்,முரணான முடிவுகளை காட்டும்
ஆய்வுகளும் உள்ளன.எவை பொருத்தமான/தேவையான கேள்விகள் என்பதை
கருத்தில் கொள்ளாமல் ஊகங்கள்,அச்சங்கள்,மிகைப்படுத்தப்பட்ட எதிர்ப்பார்ப்புகளை
முன்னிறுத்தி விவாதித்தால் தெளிவு கிடைக்காது.அத்தகைய அரிசி குறித்த ஆய்வுகளில்
சீனாவும், ஈரானும் ஈடுப்பட்டுள்ளன.இங்கு இயற்கை விவசாயம் vs நவீன விஞ்ஞானம்
என்ற ரீதியில் விவாதிப்பாது பொருத்தமாக இராது. பி.டி. பருத்தி உட்பட இப்படி
மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பயிரிடுவதில் சில நன்மைகளும் இருக்கின்றன,
சில பிரச்சினைகளும் இருக்கின்றன. தொழில் நுட்பமே அனைத்தையும் தீர்மானிப்பதில்லை,
தொழில் நுட்பம் எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது/முறைப்படுத்தப்படுகிறது, அதில் உள்ள
அரசியல் என்ன என்பவற்றையும் சேர்த்து ஆராய வேண்டும். எனவே வேண்டும் அல்லது
வேண்டாம் என்ற ரீதியில் பதில்களை எதிர்பார்ப்பது சரியல்ல. இந்தியாவை எடுத்துக்
கொண்டால் குஜராத்தில் பி.டி.பருத்தி பெரிய அளவில் வெற்றி கண்டுள்ளது.வேறு சில
பகுதிகளில் அது எதிர்ப்பார்த்த பலனைத் தரவில்லை. ஆந்திராவில் ஒரு பகுதியில்
அது தோல்வி என்று கூறப்பட்டாலும் வேறு பகுதிகளில் அவ்வாறில்லை என்று
தெரிய வருகிறது. எனவே ஒரு தரப்பு தரவுகளை மட்டும் கொண்டு இதை விவாதிக்க
முடியாது. சிக்கலான பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள சிக்கலான கேள்விகளை
எழுப்ப வேண்டும். உதாரணமாக இத்தொழில் நுட்பத்தினை சிறு விவசாயிகளுக்கு
பெருமளவு பலன் தரும் வகையில், செலவுகளை குறைக்கும் வகையில் தர இயலுமா,
அப்படியாயின் அதன் சாதக/பாதகங்கள் என்ன? இத்தொழில் நுட்பத்தினையும் இயற்கை
வேளாண்மையிலிருந்து சில செய்முறைகளையும் சேர்த்து பயன்படுத்த முடியுமா.

ஆனால் தமிழில் (நானறிந்த வரையில்) விவாதம் இப்படியெல்லாம் இல்லை. வேளாண்மையில்
உயிரியல் தொழில் நுட்பம் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகள், விவாதங்களை கருத்தில் கொள்ளாமல்
விவாதம் நடக்கிறது. தினமணி, ஆனந்த விகடனில் நான் பார்த்தளவில் மிக மேலோட்டமாக இதை
அணுகும் போக்கே இருக்கிறது.

2,பி.டி பருத்தி பயிரிட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள், பி.டி. பருத்தி
விவசாயிகளுக்கு பலன் தரவில்லை என்றெல்லாம் கூறப்படுகிறதே?

ஏற்கனவே கூறியது போல் பி.டி.பருத்தி குறித்த சில ஆய்வுகள் அதால் பெரிய பலன் இல்லை,
என்று கூறினாலும் குஜராத்தில் பி.டி.பருத்தி பயிரப்படும் பரப்பு அதிகரித்துள்ளது.இந்திய
அளவில் பி.டி.பருத்தி பயிரப்படும் பரப்பு அதிகரித்துள்ளது. மேலும் தற்கொலை செய்து
கொண்ட அனைத்து விவசாயிகளும் பி.டி. பருத்தியை பயிரிட்டவர்கள் அல்ல.எனவே இதை
அப்படியே ஏற்க இயலாது. சில இடங்களில் பி.டி. பருத்தி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை
என்பதும், அதன் விதை விலை அதிகம் என்பதும் உண்மை. ஒரே மாநிலத்தில் இரு வேறு
விதமான விளைச்சல்கள் பெறப்பட்டுள்ளன. பி.டி. பருத்தி குறித்து விளைச்சல் அதிகம்/
குறைவு என்ற கோணம் தவிர வேறு கோணங்களிலும் (உ-ம். இது எப்படிப்பட்ட விவசாயிகளுக்கு
அதாவது குறைவாக நிலம் உடையவர்கள், அதிக நிலம் உள்ளவர்கள் உகந்ததாக இருக்கிறது)
ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

3, ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு பெரும் எதிர்ப்பு
இருக்கிறது, பல ஐரோப்பிய நாடுகளில் இவை பயிரிடப்படாத போது இந்தியாவிற்கு இவை
தேவையா?
ஐரோப்பாவில் விவசாயம்,விவசாயிகளின் நிலை வேறு.அங்கு உற்பத்தியைப் பெருக்கித்தான்
உணவுப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற நிலை இல்லை.தேவைக்கு அதிகமான,அபரிதமான
உணவு உற்பத்தி இருக்கும் போது உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை.இந்தியாவில்
அப்படி இல்லை. இங்கு உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. ஆப்பிரிக்காவில்
சில நாடுகள் இதை ஏற்றுள்ளன, சில ஏற்கவில்லை. சீனா, அர்ஜெண்டினா உட்பட வேறு சில வளர்முக
நாடுகளில் இப்பயிர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே நம்முடைய தேவைகளுக்கு இந்த தொழில்நுட்பம்
பொருந்துமா என்பதை ஆராய வேண்டும். இந்தத் தொழில்நுட்பத்தினை சோதிக்காமல் நிராகரிக்கத்
தேவையில்லை.
4, நம்மாழ்வார், வந்தனா சிவா போன்றவர்களும், பல அமைப்புகளும், சுற்றுச்சூழல் இயக்கங்களும்
இதை எதிர்க்கின்றனவே?
நம்மாழ்வாரின் பணிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.வந்தனா சிவாவின் சில செயல்பாடுகளையும்
மதிக்கிறேன்.அதற்காக இவர்களின் அனைத்து கருத்துக்களையும் நான் ஏற்கவில்லை. அதே போல் கிரீன்
பீஸ் போன்ற அமைப்புகளின் பணி, குறிக்கோள் குறித்து எனக்கு மரியாதையும், பலவற்றில் கருத்தொற்றுமை
இருந்தாலும் கிரீன் பீஸோ அல்லது வேறு அமைப்போ எடுக்கும் எல்லா நிலைப்பாடுகளையும் நான் ஆதரிக்க இயலாது, தேவையுமில்லை. ஒரே நோக்கம் உடையவர்கள் எப்போதும் ஒத்த கருத்துடையவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்தத் தொழில்நுட்பத்தினை எதிர்ப்பவர்கள் பல்வேறு காரணங்களுக்காக எதிர்க்கலாம். ஆனால் இதை மதிப்பீடு செய்யாமல் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இயற்கை வேளாண்மை அல்லது அதைப் போன்றவைதான் ஒரே தீர்வு என்ற கோணம் எனக்கு ஏற்புடையதில்லை. மேலும் இயற்கை வேளாண்மை அல்லது உயிரியல் தொழில்நுட்பம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடும் என்றும் நான் கருதவில்லை. இதை ஆதரிப்பவர்கள் இயற்கை வேளாண்மைக்கு எதிரானவர்கள் என்றும் கருதத் தேவையில்லை.

5, பசுமைப் புரட்சியால் ஏற்பட்ட பிரச்சினைகள் இன்னும் இருக்கும் போது, இன்னொரு புதிய தொழில் நுட்பம் எப்படி தீர்வாக இருக்க முடியும்?
பசுமைப் புரட்சியின் சாதக,பாதகங்களை ஆராய்ந்தால் பல பிரச்சினைகள் இருந்தாலும், அது சில தேவைகளை பூர்த்தி செய்யவும், சில பிரச்சினைகளைத் தீர்க்கவும் உதவியது என்பது உண்மை. அதன் குறைபாடுகளைப் புரிந்து கொண்டு அதற்கு அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது அதிலிருந்து கற்ற பாடங்களை கருத்தில் கொள்ள வேண்டும். இன்று பசுமைப்புரட்சியை
வெறுமனே விமர்சிப்பது போதாது. ஒரு தொழில் நுட்பம் என்ற அளவில் பசுமைப்புரட்சியில் பிரச்சினைகள் இருக்கின்றன. அவை உயிரியல் தொழில் நுட்பத்தினை விவசாயத்தில் பயன்படுத்தும் போது எழுமா, எழாதா, என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதையெல்லாம் அறிய தொழில்நுட்பத்தினை மதிப்பீடு செய்ய வேண்டும். தொழில் நுட்பத்தினைப் பரிசோதனைக் கூடச் செய்யாமல் இதை பசுமைப் புரட்சியின் நீட்சியாக மட்டும் கருதுவதோ அல்லது இரண்டையும் ஒட்டு மொத்தமாக நிராகரிப்பது
சரியல்ல.

6, விவசாயிகளின் தற்கொலைகள் உட்பட இன்று இந்திய விவசாயமும்,விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு பசுமைப் புரட்சிதானே காரணம், அப்படியிருக்கும் போது இந்தத் தொழில் நுட்பம் எப்படி இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று நம்ப முடியும்?

இந்திய விவசாயிகள்,விவசாயம் சந்திக்கும் பிரச்சினைகள் சிலவற்றிற்கு பசுமைப் புரட்சி
காரணம். வேறு பல காரணிகளும் உள்ளன. எனவே பசுமைப்புரட்சி காரணமாகவே இந்த
நிலை ஏற்பட்டது என்பது சரியல்ல. விளைபொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காதது,
விவசாயத்தில் குறைந்து வரும் அரசின் முதலீடு, இடு பொருள் விலையேற்றம் போன்ற பல
காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக போதுமான நிதி உதவி கிடைக்காதது. ஏ.வைத்தியநாதன்
இந்திய விவசாயம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எழுதியிருக்கிறார். பசுமைப் புரட்சிதான்
காரணம் என்ற தொழில் நுட்ப நிர்யணவாதத்தினை ஏற்பது இயலாது.
தொழில் நுட்பம் என்பது அதனளவில் சிலவற்றை சாதிக்கும், சிலவற்றை சாதிக்காது. அது எப்படி
செயல்படுத்தப்படுகிறது, ஒழுங்குபடுத்தப்படுகிறது, யாருடைய தேவைகளை கருத்தில் கொண்டு
உருவாக்கப்படுகிறது போன்றவற்றையும் நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும். Social Construction
of Technology போன்ற அணுகுமுறைகள் தொழில் நுட்பவாதத்தினை விட சிறப்பான புரிதலைத்
தரக்கூடியவை. எனவே இந்தத் தொழில் நுட்பத்தினை விவசாயம்,விவசாயிகளுக்கான சர்வ ரோக
நிவாரணியாக கருத வேண்டாம். இது சிலவிதங்களில் உதவும், சில பிரச்சினைகளை திறம்பட
தீர்க்க உதவும். இதைப் புரிந்து கொண்டால் கண் மூடித்தனமான எதிர்ப்பு/ஆதரவு என்ற நிலைப்பாடுகளுக்கு
அப்பால் இதை அணுக வேண்டும் என்ற தெளிவு பிறக்கும்.
7, இதற்கு மாற்றுகளே இல்லையா, இயற்கை வேளாண்மை மட்டும் போதாதா?
இயற்கை வேளாண்மை மட்டும் போதும் வேறு தொழில் நுட்பங்கள் தேவையில்லை என்ற முடிவிற்கு
வர இயலாது. இன்று இந்தியாவில் இயற்கை வேளாண்மையும் இருக்கிறது, நவீன வேளாண்மை
பசுமைப் புரட்சி என்ற வடிவில் இருக்கிறது. ஒரு தொழில் நுட்பம் மட்டும் போதும், அதுவே எல்லாப்
பிரச்சினைகளையும் இந்த துறையில் தீர்த்து விடும் என்று நான் கருதவில்லை. இயற்கை
வேளாண்மைக்கும் உரிய இடம் தர வேண்டும்.அதே சமயம் பிற தொழில்நுட்பங்களை பரிசீலீத்து,
மதிப்பீடு செய்து நமக்கு தேவை என்றால் பயன்படுத்த தயங்கக் கூடாது. இரண்டிற்கும் இடம்
இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
8, ஆனால் இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படும் தொழில் நுட்பங்கள் அல்லவா?அடிப்படைக்
கண்ணோட்டமே இரண்டிலும் வேறல்லவா?
இது சிலர் கருத்து. நவீன மருத்துவமும், பாரம்பரிய மருத்துவமும் எதிரானவை, முரணானவை என்று
கருதலாம். ஆனால் சிலவற்றில் நவீன மருத்துவம் சரியான தெரிவு என்றால், வேறு சிலவற்றில்
பாரம்பரிய மருத்துவம் சரியான தெரிவு.மாவோ சீனத்தில் பாரம்பரிய மருத்துவத்தில் நிராகரிக்க
வில்லை. அதையும் பயன்படுத்துவோம் என்றார், அவ்வாறே செய்தார். இரண்டும் தொழில்நுட்பங்கள்
என்ற அளவில் தமக்கேயுரிய பலங்களையும், பலவீனங்களையும் கொண்டுள்ளன. ஒரு புதிய ரகத்தினை
விரைவாக (ஒப்பீட்டளவில்) உயிரியல் தொழில் நுட்பம் மூலம் உருவாக்க முடியும். குறிப்பிட்ட தன்மை
கொண்ட பயிர்வகைகளை உருவாக்க உயிரியல் தொழில் நுட்பம் பொருத்தமானது. எல்லாமே இயற்கை
வேளாண்மையில் இருக்கிறது, வேறு எதுவும் தேவையில்லை என்று கருத முடியாது. பாரம்பரிய விதைகளை
உயிரியல் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தி புதிய வகைப் பயிர்களை உருவாக்க முடியும். நடைமுறையில்
பாரம்பரிய பயிர்களை பயிர் செய்வதற்கு அருகில் மூலக்கூறு மாற்றப்பட்ட பயிர்களை பயிரிடும் போது
சில பிரச்சினைகள் ஏற்படலாம். இதை எப்படி சமாளிப்பது என்பதை கண்டறிய வேண்டும்.
தேவையானால் பாரம்பரிய பயிர்கள் பயிரிடப்படும் இடங்கள், இயற்கை வேளாண்மை முறை
அமுலில் உள்ள இடங்களிலிருந்து குறிப்பிட்ட தூரம் தள்ளியே மூலக்கூறு மாற்றப்பட்ட பயிர்களை
பயிரிட வேண்டும் என்று விதிகளை வகுக்கலாம். சில பகுதிகளை மூலக்கூறு மாற்றப்பட்ட பயிர்கள்
பயிரிடக்கூடாத பகுதிகள் என்று அறிவிக்கலாம்.

தொடரும்

ravisrinivas@rediffmail.com

http://ravisrinivas.blogspot.com

Series Navigation