மெல்பேனில் குதிரை பந்தயம்

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

என். எஸ். நடேசன்


கார்த்திகை மாதத்து முதலாவது செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலியாவில் காற்றுவீசும். கடல் அலைமோதும். நதிகள் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் மனிதர்களின் ஓட்டம் சில நிமிடங்களில் ஸ்தம்பித்துவிடும்.

ஏன் அவுஸ்திரேலியாவில் இப்படி நடக்கிறது என குடியேற்றவாசியான எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை. எனக்கு நடந்துகொண்டிருந்த பரிட்சை ஒருமுறை நிறுத்தப்பட்டு அனைத்து பேராசிரியர்களும் என்னை தனியேவிட்டு ரி.வி. பார்க்க போய்விட்டார்கள். நான் என்ன நடக்கிறது என புரிந்துகொள்ள சில நிமிடங்கள் எடுத்தது.

விக்டோரிய மாநிலத்தில் மெல்பேன் குதிரை பந்தயத்திற்கு விடுமுறைவிடப்படும். எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அளவு குதிரை பந்தயத்துக்கு அவுஸ்திரேலியாவில் முக்கியத்துவம் உள்ளது. மெல்பேன் குதிரை பந்தயம் அவுஸ்திரேலியர்களின் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது.

எந்த குதிரை இந்த வருடம் வெல்லும் என்பது பல மில்லியன் டொலர் இரகசியம். காத்திருப்போம்.

பார் லாப் (Phar Lap) எனப்படும் குதிரை நியூசிலாந்திலும் அவுஸ்திரேலியாவிலும் மகத்தான சரித்திரமாக்கப்பட்டுள்ளது. கிரிக்கட்டில் டொனால் பிரட்மனின் சாதனை முறியடிக்கப்பட்டாலும் பார் லாப்பின் சாதனை முறியடிக்கமுடியாது என குதிரை பந்தய ஆர்வலர்கள் கூறுவர்.

நியூசிலாந்தில் குட்டியாக பிறந்து அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்த இந்த குதிரை முதலாவது பந்தயத்தில் கடைசியாக வந்தது. பின்பு இதனது நாலு வருட பந்தயகாலத்தில் 51 பந்தயங்களில் பங்குபற்றி 37 பந்தயங்களில் முதலாவதாக வந்தது. 1930 ஆண்டு மெல்பேன் கப்பையும் பெற்றது. 1932ம் ஆண்டில் பார் லாப் இறந்தபோது பொறாமையால் யாரோ நஞ்சு வைத்துவிட்டார்கள் என்றுதான் எல்லாரும் நினைத்தார்கள். இறுதியில் 1980 ஆண்டு பிரேதபரிசோதனையில்தான் ஒரு தொற்றுநோயே குடலில் ஏற்றப்பட்டது என நிரூபிக்கப்பட்டது.

இறந்தபின்பு பார் லாப்பின் இதயம் இன்றும் கான்பராவில் உள்ள அவுஸ்திரேலிய தேசிய மியூசியத்தில் உள்ளது. எலும்பு நியூசிலாந்து தேசிய மியூசியத்திலும்இ தோல் மெல்பேனில் பதனிடப்பட்டு குதிரை வடிவத்தில் உள்ளது.

கடந்த வருடம் மெல்பேன் கப்பை வென்ற ஏழு வயதான மக்கபி ட¢வா (Makybe Diva) பெண்குதிரையும் மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக 2003, 2004, 2005 மெல்பேன் கப்பை வென்று கடந்த வருடம் ஒய்வு பெற்றது.

இந்த பெண் குதிரை இனப்பெருக்கத்தில் இவ்வருடம் ஈடுபடுத்தப்படப்போகிறது. மனிதர்களைப்போல் இல்லாமல் செப்ரெம்பர் – டிசம்பர் இடைப்பட்ட நாலு மாதங்களில் மட்டுமே பெண் குதிரை புணர்ச்சியில் ஈடுபடலாம். அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரோம் கற் (Storm Cat) ஆண் குதிரைதான் மாப்பிளையாக வருவதாக பேசப்பட்டது. இந்த அமெரிக்க மாப்பிள்ளையை புணர்வதற்கு அரைமில்லியன் டொலர்களும் கொடுத்துவிட்டு அவுஸ்திரேலிய மக்கபி ட¢வா அங்கு செல்லவேண்டும். ஆண் குதிரைகளை பிரயாணம் செய்ய அனுமதிப்பதில்லை காரணம் இடப்பெயர்வினால் விந்துக்களின் வீரியம் குறைந்துவிடுமாம்.

நம்ம ஊர் சீதனம், குடுக்கல்-வாங்கல்போல் இருக்கிறது என நினைக்கிறீர்களா? அதைவிட பல ஒழுங்குமுறைகள் உண்டு. ஐயர்தான் புரோகிதம் பார்ப்பதில்லை. அதற்குப் பதிலாக மிருக வைத்தியர் இந்த புணர்வுக்கு வழிசமைப்பார்.

பந்தைய குதிரைகளின் புணர்வுகள் சமய-சடங்குபோன்று பாரம்பரியம், சாதி, ஒழுக்கம் என்பன முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

ஆண்குதிரைகளுக்கு நாலுமாதம் மட்டுமே வேலை என்பதால் கட்டுப்பாடுகள் உண்டு. ஒரு சீசனில் இருநூறு புணர்வுகள். அத்துடன் ஒரு நாளில் மூன்று தடவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

பெண் குதிரைகள் கடைசிவரையும் கன்னி கழியாமல் இருக்கவேண்டும். பிறப்பு துவாரத்து மென்சவ்வு (Hymen Membrane) மிருகவைத்தியரின் கையால் கிழிக்கப்படும். சூலகத்தில் முட்டைகள் தயாராக உள்ளனவா என அல்றா சவுண்டின் மூலம் கண்டறியப்படும். இதைவிட ஒரு சப்பட்டையான ஆண்குதிரை மூலம் கிளுகிளுப்பு மூட்டப்பட்டு பின்தான் தெரிந்தெடுக்கப்பட்ட ஆண்குதிரை புணர்வுக்கு விடப்படும்.

இங்கேயும் ஆண்குதிரைக்கு முதலிடம்.. ஆண்குதிரையால் பெண் குதிரையை நிராகரிக்க முடியும். இதைவிட பெண்குதிரை முக்கில் சுருக்குப்போட்டு அசையாமல் நிறுத்தப்படும். ஆண்குதிரை தமிழ்ப்பட வில்லன்கள்மாதிரி நடந்துகொள்ளும்.

இப்படியான புணர்வின்பின் உருவாகிய குதிரைக்குட்டியின் விலை எவ்வளவு இருக்கும்?

இரண்டு மில்லியன் டாலர்இ தற்போதைய சந்தை நிலைமையில்.

தற்போது மெல்பேன் ரேசில் ஓடும் இந்த தரோபிறட் (Thoroughbred) குதிரைகள் 1700 ஆண்டு அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவைகளின் வம்சாவளிகளாகும்.

ஆரம்பத்தில் குதிரைகளை மத்திய ஆசிய மக்கள் இதன்பின் சீனர்இ மங்கோலியர்கள் பின்னர் மேற்காசியர்களும் பிரயாணத்துக்கு உபயோகித்தார்கள். பின்பு குதிரைகள் படிப்படியாக ஐரோப்பாவுக்கு சென்று உழுவதற்கும் போருக்கும் பாவிக்கப்பட்டது.

இந்த குதிரைகளை உபயோகிக்கும் விடயத்தில் இலங்கை இந்தியா போன்ற தென்ஆசிய நாடுகளும் தென்கிழக்கு நாடுகளும் பின்னடைந்துவிட்டன. நிலஅமைப்பு, விவசாயமுறை, காலநிலை போன்ற காரணங்கள் இருக்கமுடியும்.

இலங்கை சரித்திரத்தில் துட்டகைமுனுவும் எல்லாளனும் யானைமேல் ஏறாமல் குதிரைமேல் ஏறி போர்புரிந்திருந்தால் இலங்கையின் சரித்திரமே மாறி இருக்கமுடியும். இதேபோல் இந்தியாவின் வடமேற்கு பகுதிகளுடாக பாரசீக, துருக்கிய ஆவ்கானியர் குதிரைகளில்வந்து யானைகளை அதிகமாககொண்ட இந்திய அரசர்களை வென்றார்கள். குதிரைகளின் வேகத்துக்கு யானைகளால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இந்தியாவுக்கு வந்த மார்கோ போலாவின் குறிப்புகளின்படி
Marcopolo Travel page 237

‘தென்னாட்டை சேர்ந்த அரசன் இரண்டாயிரம் சிறந்த குதிரைகளை விலைக்கு வாங்கிவிடுவார்கள். அடுத்தவருடம் அவற்றில் நூறுகூட உயிர் வாழ்வதில்லை. குதிரைகள் தவறான பயன்பாட்டால் மரணம் அடைகின்றன. மிருகவைத்தியர்கள் இங்கே கிடையாது. ஏற்றுமதிசெய்யும் வியாபாரியும் இதை கவனிப்பதில்லை.

இந்த கூற்று மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் குதிரைகளின் இனவிருத்தியாலும் பராமரிப்பாலும் இந்தியாவில் கவனம் செலுத்தப்படவில்லை என கூறுகிறார், ரோமிலா தார்பர்
Marcopolo Travel page 237

சரித்திரத்தில் நாங்கள் படித்த வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் மன்னர்களதும் சேனாதிபதிகளும் காரணமென கூறுவது மிகைப்படுத்தப்பட்டவை. உண்மையில் குதிரைகளின் பங்குதான் முக்கியமானவை. தற்காலத்தில் விமானப்படைகளைப்போல் முக்கியத்துவம் அக்காலத்தில் குதிரைகளுக்கு இருந்தது. சரித்திரத்தில் பாரிய வெற்றிகளைப்பெற்ற குதிரைகள் தற்பொழுது குதிரைப்பந்தயத்துக்கு மட்டுமே பாவிக்கப்படுவது என்பது கவலைக்குரிய விடயம்.இதேவேளை பார் லாப், மக்டி வியா போன்ற குதிரைகள் சரித்திரத்தில் இடம்பெறுவது பெருமைக்குரிய விடயம்.


uthayam@optusnet.com.au

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்