காசி யாத்திரை

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

நாக.இளங்கோவன்,சென்னை.


அண்மையிலே ‘தி இந்து ‘ மற்றும் ‘முரசொலி ‘ நாளிதழ் ஆசிரியர்கள், நிர்வாகிகள் பலருக்கும் (6 பேர்) தமிழக சபாநாயகர் காளிமுத்து 15 நாள் சிறைத்தண்டனை விதித்தார். பரிதி இளம்வழுதி என்ற தி.மு.க உறுப்பினரை, சட்டமன்றத்திலேயே கைது செய்து சிறையில் அடைத்தார் காளிமுத்து.

இந்து நாளிதழ் சீறி எழுந்து இந்தியா முழுவதையும் கொதிக்க வைத்து (பாக்கித்தானில் இருந்து கூட ஒரு அமைப்பின் குரல் ஒலித்தது), உச்ச நீதி மன்றத்திலும் சட்ட மன்றத் தீர்ப்புக்கு தடை வாங்கினார். இந்துவின் சத்தத்தில் முரசொலி காதில் விழவில்லை:-)

தமிழகத்தில் நடைபெறுகிற ஆட்சிக்கு எந்தக் கட்டுப்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. எதைவேண்டுமானாலும் அவர்கள் செய்ய வரம் வாங்கியவர்கள். சரி அது இருக்கட்டும்.

எழுத்துச் சுதந்திரம் காக்கப் பட்டதில் நமக்கு மகிழ்ச்சியே. அது என்றும் இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் கிடையாது. இந்து இராம் கூறுவது போல இந்து நாளிதழ் நேர்மையையும் சரியான தகவலை மட்டுமே அளிக்கிறது என்று நாம் நம்பலாம். தமிழர்கள் பிரச்சினைகளைத்தவிர அந்த ஏடு சொல்வதெல்லாம் சரி என்று தமிழர்கள் கூட நம்பக் கூடும். ‘அய்யோ அய்யோ இப்படியெல்லாம் கேட்கலாமா; இது அடுக்குமா ? ‘ என்றவாறு இவர்கள் ஏட்டில் தலையங்கம் தீட்டினாலே போதும் சம்பந்தப் பட்ட நாட்டிலே அவசர நிலை ஏற்பட்டு விடுகிறது. அந்த அளவிற்கு தமிழ்ப் பற்று கொண்ட ஏடு தி இந்து.

சரி இதெல்லாம் இருக்கட்டும். சட்ட மன்றத் தீர்ப்பிற்கு எதிராக வெகுண்டெழுந்து தடை வாங்கிய தி இந்து நாளிதழ் பாராட்டுக்குரியது என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. இது வருங்காலத்திலும் அரசுகளின் ஆட்டத்தை ஓரளவாவது குறைப்பதற்கு வழிகோலுமானால் மகிழ்ச்சியே.

தமிழ்நாட்டுக்குள் சிந்தனைகளில் சில நெருடல்கள் இருப்பதை நம்மால் தற்போது உணரமுடிகிறது. ஈராண்டுக்கு முன்னர் கலைஞரை அடித்து உதைத்து தர தரவென்று இழுத்துப் போனார்கள். தமிழகம் அதிர்வுக்குள்ளாகியது. பல குரல்கள் வேகமாக ஒலித்தன. ‘தமிழ்நாட்டின் வில்லனுக்கு சரியான முடிவு ‘ என்று ஒரு கும்பல் குலுங்கிக் குலுங்கி மகிழ்ந்தது.

ஆனால் மக்களும் மன்றங்களும் அவ்வாறு நினைக்காததால் ஒரு இறுக்கம் ஏற்பட்டது. உடனே தமிழ்நாட்டின் சிந்தனை வளம், ‘கருணாநிதியின் நாடகம் ‘ என்று கதை கட்டி விட்டது. அதே கும்பல் ‘காவல்துறையினர் விசாரிக்க வந்தால் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு கருணாநிதி ஒத்துழைக்க வேண்டுமல்லவா ? அடம் பிடிக்கலாமா ? அதனால்தான் அடி உதை. சட்டம் என்றால் எல்லோருக்கும் ஒன்றுதான் ‘ என்று ஒரு விரிவுரை ஆற்றியது. தள்ளாடும் மனங்கள் பலவும் அதை ஏற்றுக் கொண்டன. ஆமாமாம், கூப்பிட்டவுடன் போயிருக்க வேண்டியதுதானே….போகாமல் வேண்டுமென்றே வம்பை திட்டமிட்டு இழுத்திருக்கிறார் என்றும் பேசத் தொடங்கினர்.

தற்போது ‘தி இந்து ‘ வின் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்து இதழாளர்கள் ஐவரும் தீர்ப்பிற்கு முன்னரே உளவறிந்து தப்பி தலைமறைவாகிவிட்டனர். காவல்துறையால் கைது செய்யப்பட முடியவில்லை. வெற்றி வீரர் இராமிடம் கேட்டபோது அந்த ஐவரில் ‘அரங்கராசன் என்பார் 70 வயதான முதியவர்; அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தால் அவர் தாங்குவாரா ‘ என்றார்.

இராம், பாதிக்கப் பட்ட இதழாசிரியர். அவர் தாக்குதலை சமாளிக்கவேண்டிய அவர் சொல்லலாம்; சொல்லி விட்டுப் போகட்டும்; நமக்குக் கவலையில்லை. அதோடு, அரசாங்கம் என்பதால் அரச-பயங்கரவாதத்திடம் போய்த் தலையைக் கொடுக்க வேண்டும் என்று நாமும் சொல்லவில்லை. அவர் செய்தது சரியே.

ஆனால், கருணாநிதியை அடித்தபோது ‘சட்டத்துக்கு ஒத்துழைக்க வேண்டாமா ? ‘ என்று கேள்வி கேட்ட அந்தக் கும்பல்கள் இப்பொழுது இராமைக் கேட்குமா ? இல்லை. மாறாக ‘இந்துவிடம் வாலாட்டினால் இப்படித்தான் ‘ என்று கொக்கரிக்கின்றன.

இந்து குடும்பத்தாருக்கு ஒரு அநீதி ஏற்பட்டால் அது அநீதியாகவும், கருணாநிதி குடும்பத்துக்கோ, நக்கீரன் கோபால் குடும்பத்திற்கோ, வைகோ குடும்பத்திற்கோ ஒரு அநீதியென்றால் அது ‘அநீதியேயில்லை ‘ என்று ஆவதும் எத்தகைய முரண் கொண்டவை என்ற எண்ண வேண்டும்.

இந்தச் சிந்தனை வளம், ‘குலத்துக்கோர் நீதி ‘ என்ற அடிப்படையாய்த் தெரியவில்லை ?

வைகோ வோ அல்லது நெடுமாறனோ, கோபாலோ கடுஞ்சிறையில் காரணமில்லாமல் கைது ஆகியிருப்பது யாருக்கும் மனித உரிமை மீறலாகத் தெரியவில்லை. ஆனால், சாலையில் போன தங்கள் சீருந்தை வழி மறித்து ‘யாரு இருக்கீக ‘ என்று காவல்துறை கேட்டதே இந்துக் குடும்பத்திற்கு மனித உரிமை மீறலாக ஆகிவிட்டது.

ஆன்மீக மடங்களும், உள்துறை அமைச்சர் அத்வானியும் அரசிடமும் இராமிடமும் பேரம் பேசி எப்படியும் ‘சுமூகத் தீர்வு காணப்படும் ‘ என்று அருள்வாக்கு கூறியிருக்கிறார்கள்.

சிலர் வழக்குகளில், திருமணத்தின்போது ‘காசியாத்திரை ‘ என்று ஒரு சடங்கு உண்டு. மாப்பிள்ளை சினம் கொண்டு ‘நான் காசிக்குப் போறேன் ‘ என்று சொல்லி போய்விடுவார். உடனே பெரியவர்கள் சென்று சமாதானம் செய்து அவர் மனத்தை குளிர்வித்துப் பின்னர் மீண்டும் கூட்டி வருவார்கள். ‘தி இந்து ‘ இதழின் ஆசிரியர் என்.இராமும் அப்படித்தான் ‘காசி யாத்திரை ‘க் கோபம் கொண்டார் போலும். சங்கரர் அத்வானி போன்றோர் அந்த காசியாத்திரை மாப்பிள்ளையின் சினத்தைத் தணித்து சமாதானம் செய்து விடுவார்கள். மொத்தத்தில் யாருக்கு நடந்தால் அநீதி, யாருக்கு நடந்தால் அநீதி அல்ல என்ற சூக்குமப்படி நடக்கும் அவர்களின் குடும்பப் பிரச்சினைதான் இதுவோ ?

அப்படியென்றால், இதற்காக மனிதச் சங்கிலி, தில்லி வரை இரயில் பயணம், அங்கே பிரதமரிடம் மனு போன்றவற்றைச் செய்யும் எதிர்க் கட்சிக்காரர்களைப் பார்த்தால் சிரிப்புதானே வருகிறது ;-))

ஆக, நடந்தது எல்லாம் என்ன என்று பார்த்தால், எல்லோரும் சொல்வது போன்று ‘சனநாயகம் ‘ எல்லாம் ஒன்றும் காக்கப் படவில்லை; வெறும் காசியாத்திரைதான் நடந்திருக்கிறது.

————– elangov@md2.vsnl.net.in

Series Navigation

நாக.இளங்கோவன்

நாக.இளங்கோவன்