சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -7

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



Fig 1
Socrates & Plato

“உனது நல்ல பெயரை நீ பெறத்தக்க விலைமிக்க ஓர் ஆபரணமாக மதிப்பிடு ! அந்த வரவுக் கொடை தீயைப் போன்றது ! ஒருமுறைத் தூண்டி விட்டால் அதைப் பாதுகாப்பது எளிதானது. அதை அணைத்து விட்டாலோ மீண்டும் தூண்டுவது மெய் வருத்தும் வேலை.”

“மனிதச் செயல்கள் எதுவுமே நிலையான தென்று நினைத்துக் கொள்ளாதே. ஆதலால் உன் வாழ்க்கை செழிப்புறும் போது (Prosperity) பெருமகிழ்ச்சியில் துள்ளுவதைத் தவிர்த்திடு ! அதுபோல் வாழ்க்கையில் நீ தாழ்ச்சியுறும் போது (Adversity) பெருமனத் தளர்ச்சியில் தவிப்பதையும் தவிர்த்திடு.”

“உனது தவறுகளைப் பரிவோடு சுட்டிக் காட்டத் தவறி உன் வார்த்தைகள், செயல்கள் எல்லாவற்றையும் புகழ்பவனை மெய்யான ஒரு நண்பனாக நீ நம்பாதே.”

சாக்ரடிஸ்

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -1 பாகம் -7

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஓர் அங்காடி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : மெலிடஸ் (Meletus), லைகான் (Lycon). சைரஸ் (Cyrus). சாக்ரடிஸ், அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe), இரு மாதர்கள்.

அமைப்பு : ஏதென்ஸ் நகரத்தின் அங்காடி வீதியில் உயர்ந்த தூண்கள் எழுப்பிய மாளிகைகள். ஒரு தூணின் பக்கத்தில் நிற்கிறான் வாலிபன் ஒருவன். அவன் பெயர்தான் மெலிடஸ். மெலிந்த சரீரம் கொண்டு, தாடி மீசை உள்ளவன். அங்காடி வீதியை அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் வெறுப்போடு அவன் காணப்படுகிறான். மீனவன் ஒருவன் ஒரு சாக்கு நிறைய ஆக்டபஸ் மீன் இறைச்சிகளைச் சுமந்து வீதியில் விற்றுக் கொண்டிருக்கிறான். முதிய இராணுவப் படையாள் கிரிடோ (Crito), செல்வந்தக் கோமான் ஆனிடஸ் (Anytus) இருவரும் வருகிறார். பிறகு அல்சிபியாடஸ் (Alcibiades), ·பயிடோ (Phaedo) ஆகியோர் கலந்து கொள்கிறார். அடுத்து மூன்று மாஜிஸ்டிரேட்கள் மன்றத்துக்கு வருகிறார்கள் : தலைமை மாஜிஸ்டிரேட் ·பிலிப் (Philip). வயதான சைரஸ் (Cyrus). இடிமுழக்கர் எனப்படும் டிரிப்டோல்மஸ் (Triptolemus)] அடுத்து சாக்ரடிஸ் அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe) மன்றத்துக்கு வருகிறார். கணவன் மனைவி இருவருக்குள் குடும்பச் சண்டை நிகழ்கிறது. இடையில் மெக்கில்லஸ் வருகிறான். மெக்லில்லஸ் தன் திருமணம் பற்றிப் பேசுகிறான். தன் காதலிக்கு எழுதிய கவிதையை வாசிக்கச் சொல்லி சாக்ரடிஸிடம் தருகிறான். பேரவை முடிந்து மன்றத்தில் சாக்ரடிஸ் பற்றித் தீர்ப்பு வெளியாகிறது.

Fig. 2
Socrates Friends

***********************

சாக்ரடிஸ்: முன்னால் என்ன நடக்கிறதென்று எனக்குத் தெரிய வில்லை ! பின்னால் நடப்பது எனக்குத் தெரிவது எப்படி ? எனக்குக் கண்கள் பிடரியில் இல்லை ! நேர்மையில் சிந்தித்து என் கண்கள் நேராக நோக்குபவை ! என்னைப் பின்னால் ஏன் ஒருவர் தாக்க வேண்டும் ? முன்னால் வந்தே என் மீது கல் வீசலாம் ! நானதைத் தடுக்கப் போவதில்லை !

கோவாதெர்டு மனைவி: குழந்தைதான் இப்படிப் பேசும் ? முதியவர் இப்படிப் பேசுவாரா ? சிங்கத்தில் வாயிலே தலையை நீட்டிப் பார்க்கிறார் சாக்ரடிஸ் !

கிரிடோ: ஞானி போல் பேசுகிறார் சாக்ரடிஸ் ! மானிடன் போல் பேச வில்லை !

சாக்ரடிஸ்: உலகிலே உயர்ந்த ஞான மனிதன் இல்லை நான் ! அக்கூற்று வேடிக்கையாகத் தெரிகிறது எனக்கு ! நான் ஞானியா ? தேவர்க:ள் தீர்ப்பளித்து விட்டால் நான் ஞானி ஆகிவிடுவேனா ? நான் பல தவறுகள் புரிந்தவன் ! அப்படித் தவறுகள் செய்யும் போது என் தொண்டை அடைத்து கொள்ளும்.

கிரிடோ: நீவீர் ஞானியாக உமது பகைவர் கண்ணுக்குத் தென்படுகிறீர் ! உமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீவீர் தலைமறைவாக வசிக்க வேண்டும் ! அல்லது உமது தலைக்குக் கத்தி வரும் !

சாக்ரடிஸ்: ஏதென்ஸை விட்டு நான் தலைமறைவாய் வசிக்கப் போவதில்லை ! நரிபோல் நான் ஒளிந்து வாழ மாட்டேன் ! இங்குதான் தங்கப் போகிறேன். யாரும் என் மேல் கை வைக்க மாட்டார்.

கிரிடோ: உமது பிடிவாதத்தைத் தளர்த்துவீரா ? சாக்ரடிஸ் ! நீண்ட காலம் வாழ்ந்து வாலிபருக்கு நீங்கள் அறிவுரை உபதேசிக்க வேண்டும். கொதிக்கும் வெந்நீரில் குதித்து நீவீர் ஆழம் பார்க்குறீர்.

சாக்ரடிஸ்: சுடு நீர் குளிப்பு எனது அழுக்கை நீக்கும். எனக்கு அறிவை ஊட்டுபவர் அனைவரும் வாலிபர்.

கிரிடோ: சாக்ரடிஸ் ! குளிப்பது சுடு நீர் இல்லை ! கொதி நீர் ! கொதி நீர் ! உமது தோலை வெங்காயம் போல் உரித்து விடும் ! நமது பக்கம் ஆட்கள் சேர்ந்து எதிர்ப்பது வரை மறைந்திருப்பதுதான் சாலச் சிறந்தது.

சாக்ரடீஸ்: ஓடிப் போவது ஒழுங்கு நெறி ஆகாது ! பேடிகள்தான் ஓடிப் போவார் ! கூடி நின்று பிரச்சனைக்குத் தீர்வு காண §ண்டும். அல்சிபையாடஸ் ! தேவர் குழு என்னை உலக ஞானி என்று தீர்மானம் கூறியது ஏன் என்று தெரியுமா ? எனக்கு ஒன்றும் தெரியாது.

அல்சிபையாடஸ்: பின் ஏன் உம்மைப் பிடித்துக் கொண்டார் ?

சாக்ரடிஸ்: ஏனெனில் என் அறியாமை அறிந்தவன் நான் ! என் அறிவின் எல்லை எனக்குத் தெரியும் ! தேவர் தீர்ப்பு ஒரு நகைச்சுவை !

அல்சிபையாடஸ்: சாக்ரடிஸ் ! நீவீர் ஒரு போர்த் தளபதியாக இருந்தவர் ! நிமிர்ந்து நின்று மனிதனாய் எதிர்த்து அடிக்க வேண்டும் !

சாக்ரடிஸ்: எதைப் பயன்படுத்தி எதிரிகளை அடிப்பது ?

அல்சிபையாட்ஸ்: நாம் ஒரு புரட்சியை எழுப்புவோம் ! புனிதப் போர் ! எதற்காக ? சத்தியம், நியாயம், மனித மரியாதை ஆகியவற்றை நிலைநாட்ட !

Fig. 3
Socrates Discussing with
Friends

சாக்ரடிஸ்: போர் என்பது என்ன ? வலுத்த அரசு நொடித்த அரசை ஆக்கிரமிக்கப் போலிக் காரணம் அல்லது பொய்க் காரணத்தைக் காட்டுவது ! அநியாய வன்முறைகளைக் கையாளுவது ! மன ஊக்கம் இருந்தால் என் மீது அவர் குற்றம் சுமத்தட்டும் பார்க்கிறேன். எனக்கும் எதிர்ப்பு வழக்கறிஞர் இருக்கிறார். அரசாங்கம் நெறி தவறிய போதெல்லாம் நான் எச்சரிக்கை செய்திருக்கிறேன். அதற்கு அரசு எனக்கு நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளது.

கிரிடோ: சாக்ரடிஸ் ! யாரும் உமக்கு நன்றி கூறப் போவதில்லை ! அதற்கு கிடைக்கும் வெகுமதி ஹெம்லாக் விஷம் !

சாக்ரடிஸ்: மனிதர் தம் தவறுகளை ஒப்புக் கொண்டால் நல்லது. இருட்டில் வாழ்வோர் அன்போடிருந்து ஒளியைக் கண்டு கொள்வாராயின் நல்லது ! நான் ஹெம்லாக் விஷத்தைக் குடிக்கத் தேவயில்லை ! நான் பிறரிடம் கற்றுக் கொள்வதற்கு ஒருவரும் எதிர்ப்புக் காட்ட மாட்டார் !

அரிஸ்டோதானிஸ்: ஐயோ தெய்வமே ! புரிய வில்லையா உமக்கு ? பெருமை ! அவரது பெருமை ! அவரது ஆத்மப் பெருமையை நீவீர் தாறுமாறாய்க் கிழித்தெறிகிறீர் ! உமக்கு என்ன வெகுமதி கிடைக்கும் என்று நினைக்கிறீர் ?

சாக்ரடிஸ்: பெருமைத்தனம் சத்தியத்தை விடப் பெரியதா ?

அரிஸ்டோதானிஸ்: ஆமாம் சுயக் கர்வம் எல்லாவற்றையும் விட உயர்ந்த பீடத்தில் இருப்பது !

கிரிடோ: சாக்ரடிஸ் ! பிடிவாதம் செய்கிறீர் ! நீங்கள் சிறிது காலம் மறைந்திருப்பது நல்லது என்பது எங்கள் ஆலோசனை ! உங்களை நாங்கள் பாதுகாக்கிறோம்.

சாக்ரடிஸ்: கிரிடோ ! உண்மை, நான் பிடிவாதக்காரன், உன்னைப் போல. ஆனால் ஒளிந்து வாழும் மனிதப் பிறவி இல்லை ! என்னை நான்தான் காத்துக் கொள்ள வேண்டும்.

கிரிடோ: சாக்ரடிஸ் ! மறக்காதீர் நாமிருவரும் போரில் இணைந்து ஒன்றாய்ப் போராடியவர் ! அந்தப் போரை விட இந்தப் போர்தான் எல்லாவற்றையும் விடப் பெரியது ! சத்தியத்துக்குப் புரியும் போர் ! நியாயத்துக்குப் புரியும் போர் ! எம்மோடு சேர்ந்து போரிடுவீர் !

சாக்ரடிஸ்: நான் போராடுவேன் நேராக நின்று ! ஒளிந்து கொண்டு போர் புரிவது என் பண்பாடு இல்லை ! மறைந்து கொண்டு கோழையைப் போல் அடிப்பது என் பண்பில்லை ! நான் உலக ஞானியாம் ! தேவர்கள் முத்திரை அடித்துள்ளார் ! நான் ஞானியாய்க் கருதப்பட விரும்ப வில்லை ! ஒரு சாதாரண மானிடனாய் வாழவே விழைகிறேன் !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள் :

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((June 16, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -2

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Fig. 1
Socrates Art Image

“மரணத்தை மனித இனத்தின் எல்லாக் கொடைகளிலும் (Blessings) உயர்ந்ததாகக் கருதலாம் !”

“நான்தான் உயிரோடுள்ள ஓர் உன்னத ஞானி ! ஏனெனில் ஒன்றை மட்டும் நான் அறிவேன் : எனக்கு ஒன்றுமே தெரியா தென்பதை.”

“மிகச் சிறிய தேவைகளே போதும் என்னும் இயல்பான பொன்னுள்ளம் உடையோனே ஒரு மெய்யான செல்வந்தன்.”

“ஆழ்ந்த பேராசைகள் அடிக்கடி ஆபத்தான வெறுப்பிலிருந்துதான் எழுகின்றன.”

“பொய்யான வார்த்தைகளைப் பேசுவது தீய செயல் மட்டுமில்லை ! ஆத்மாவைத் தாக்கும் கொடிய கிருமிகளாகவும் அவை ஆகிவிடும் !”

சாக்ரடிஸ்

முன்னுரை:

உன்னத சித்தாந்த மேதை சாக்ரடிஸை வழக்கு மன்றத்தில் கி. மு 399 இல் விசாரணை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட போது அவருக்கு வயது எழுபது ! அந்த கிரேக்க ஞானி சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பக் கலைஞர். அப்போது நிகழ்ந்த 25 ஆண்டு காலப் போரில் ஸ்பார்டா ஏதென்ஸை கி. மு. 404 இல் தோற்கடித்தது ! அதைத் தொடர்ந்த புரட்சியில் பின்னர் குடியரசு நிலைநாட்டப் பட்டது. சாக்ரடிஸ் மேற்திசை நாடுகளின் முதற் சித்தாந்த ஞானியாக மதிக்கப் படுகிறார். அவர் வேதாந்தச் சிந்தனையாளர். உரையாடல் மூலம் மெய்யான ஞானத்தை அறிந்திட வினாக்களைக் கேட்பவர். மேற்திசை வேதாந்த அடிப்படைக்கு வித்திட்டு விருத்தி செய்தவர் இருவர். சாக்ரடிசும் அவரது சீடர் பிளாடோவும் மெய்ப்பாடுகளைத் தேடும் சிந்தனா முறைகளுக்கு வழிகாட்டியவர். சாக்ரடிஸ் போரில் பங்கெடுத்த ஒரு தீரர். போருக்குப் பின் நேர்ந்த அரசாங்கத் கொந்தளிப்பில் ஏதென்ஸ் நகரத்தில் இடையூறுகள் நிரம்பின. சாக்ரடிஸ் ஓய்வெடுத்துக் கல் கொத்தனாராய் உழைத்துத் தன் குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றி வந்தார். மனைவியின் பெயர் : ஷான்திப்பி (Xanthippe).

Fig 2
Socrates Wife Xanthippe

சாக்ரடிஸ் வாலிப மாணவரிடம் வினாக்களைக் கேட்பதைத் தவிர தன் கைப்பட வேறெந்த நூலையும் எழுதவில்லை. அவரது பிரதானச் சீடர் பிளாடோவின் உரையாடல்கள் மூலம் குருவின் பண்பாடுகளும் கோட்பாடுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளன. சாக்ரடிஸ் தன் பிற்கால வாழ்வை ஏதென்ஸ் நகர இளைஞருடன் வேதாந்த நெறிப்பாடுகளை உரையாடிக் கழித்தார். உலோகாயுதச் செல்வீக வெற்றி (Material Success) பெற்ற அந்த இளைஞர் அனைவரும் சாக்ரடிஸிடம் பெரு மதிப்பு வைத்திருந்தார். இளைஞர் பலரைக் கவர்ந்த சாக்ரடிஸ் மீது இளைஞரின் பெற்றோருக்குப் பெரு வெறுப்பு உண்டானது ! இறுதியில் சாக்ரடிஸ் குற்றம் சாற்றப்பட்டு விசாரணைக்கு இழுத்து வரப்பட்டு ஏதென்ஸ் இளைஞர் மனதைக் கெடுத்தார் என்று கிரேக்க ஜூரர்களால் பழி சுமத்தப்பட்டார். அதன் பயங்கர விளைவு : அவருக்கு மரண தண்டனை ! சாக்ரடிஸ் குற்றத்தை ஏற்றுக் கொண்டு இறுதியாகச் சிறையில் ஹெம்லாக் நஞ்சைக் (Hemlock Poison Plant) குடித்துத் தன்னுயிரைப் போக்கிக் கொண்டார்.

சாக்ரடிஸ் கி. மு. 470 இல் கிரேக்க நாட்டின் கூட்டாட்சி (Greek Confideracy) பெர்ஸியன் படையெடுப்பைத் தடுத்து விரட்டிய பிறகு ஏதென்ஸ் நகரில் பிறந்தார். அவரது தந்தையார் ஒரு சிற்பக்கலை வல்லுநர். தாயார் கர்ப்பவதிகளுக்குப் பேறு காலம் பார்க்கும் மருத்துவச்சி. சாக்ரடிஸ் காலத்தில் கிரேக்க நகரங்களுக்குள் குறிப்பாக ஏதென்சுக்கும் ஸ்பார்டாவுக்கும் பல சமயங்கள் கசப்பான போர்கள் நிகழ்ந்தன. சாக்ரடிஸ் இராணுவத்தில் சேர்ந்து மூன்று போர் அரங்குகளில் தீவிரமாகப் போராடித் தனது அபார உடலின் சகிப்புத் தன்மையை எடுத்துக் காட்டினார்.

சாக்ரடிஸ் தன்னைப் பற்றி நூல் எதுவும் எழுதாததால் நான்கு முறைகளில் அவரைப் பற்றி அறிய முடிகிறது. முதலாவது சாக்ரடிஸ் காலத்தில் வெளியான பிற நூல்களிலிருந்து தெரிந்தவை. இரண்டாவது சாக்ரடிஸ் மரணத்துக்குப் பிறகு அவரைப் பற்றி அறிந்தோர் வெளியிட்ட நூல்கள் மூலம் அறிந்தது. மூன்றாவது பற்பல பதிவுகளில் பரம்பரையாய்க் காணப்படுபவை. நான்காவது சாக்ரடிஸின் தனிப்பட்ட மனிதத் தூண்டல்கள் (Personal Influence). இந்த நான்கு மூலங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதால் அவற்றில் கூறப்படுபவை எல்லாம் ஒருவரைக் குறிப்பிடுவனவா என்னும் பெருத்த ஐயப்பாடு உண்டாகிறது ! ஆயினும் சாக்ரடிஸின் வரலாறுக் கூற்றுக்களை இரண்டு மூலாதார நூல்கள் அழுத்தமாக எடுத்துக் காட்டுகின்றன. அவை இரண்டும் சாக்ரடிஸ் இறந்த பிறகு அவரைப் பற்றி நன்கு அறிந்தோர் எழுதிய நூல்கள். 1. பிளாடோவின் உரையாடல்கள் (The Dialogues of Plato) 2. “ஸெனோ·பன் என்பவரின் நினைவுப் பதிவு” (The Memorabilia of Xenophon). எழுபது வயது சாக்ரடிசுக்கு ஏதென்ஸ் விசாரணையில் தீர்வு கூறப்படும் போது பிளாடோவுக்கு வயது இருபத்தியெட்டு ! குருவுக்கு விசாரணை நடக்கும் போது பிளாடோ அதை நேரடியாகக் கண்டிருக்கிறார். மேலும் சாக்ரடிஸிடம் பிளாடோ எட்டு வருடமாகப் படித்துக் கொண்டு வந்திருக்கிறார்.


Fig 3
Socrates & Alcibiades

பிளாடோவின் உரையாடல்களில் (The Dialogues of Plato) சாக்ரடிஸ்

பிளாடோவின் உரையாடல் நூல்கள் பற்பல பதிவாகியுள்ளன. ஏறக் குறைய அவற்றில் வரும் பிரதான மனிதர் அவரது குருநாதர் சாக்ரடிஸ்தான். இதில் உள்ள ஒரு பிரச்சனை என்ன வென்றால் மெய்யான வரலாற்றுச் சாக்ரடிஸ் யார் என்று அறிந்து கொள்ள முடியாமல் போவது ! பிளாடோ கலைத்துவ முறையில் எடுத்துக் காட்டிய சாக்ரடிஸ் மெய்யான சாக்ரடிஸா என்பதை நிர்ணயம் செய்வது கடினம். நாடக நிபுணர் பிளாடோ தனது குருநாதர் பண்பாட்டை மிகைப் படுத்திக் கூறக் கூடிய திறமை உள்ளவர். சாக்ரடிஸ் ஒரு பெரும் சிந்தனாவாதி என்றால் அவரது சீடர் பிளாடோ உன்னத வேதாந்தியாகக் கருதப் படுகிறார். பிளாடோவின் உரையாடலில் இருவித வேறுபாட்டுப் பண்பாடுகள் உடைய சாக்ரடிஸ் காட்டப் படுகிறார். ஒன்று தனக்கென ஒரு தனித்துவக் கொள்கை இல்லாத ஓர் அப்பாவி வயோதிக மனிதர். இரண்டாவது தனித்துவக் கோட்பாடு கொண்டு வினாக்களைக் கேட்டு மாணவரின் மனக்கருத்தைத் தெரிந்து கொள்ளும் சாக்ரடிஸ். இந்த நாடகத்தில் காட்டப்படும் சாக்ரடிஸ், முழுக்க முழுக்க பிளாடோ எடுத்துக் கூறிய சாக்ரடிஸ். அதாவது சில சமயம் சாக்ரடிஸ் ஓர் அப்பாவியாக இருப்பார் ! சில சமயம் அதிகாரத்தோடு முழக்கும் ஓர் உபதேசியாக இருப்பார் ! பிளாடோ தன் உரையாடல்களில் கையாண்டு சாக்ரடிஸ் பண்பாடுகளைப் பற்றி எழுதிய சொற்றொடர்கள் இந்த நாடகத்திலும் எடுத்தாளப் பட்டுள்ளன.

சாக்ரடிஸ் விசாரணை, மரண நாடகம் :

இந்த மூவங்க நாடகம் சாக்ரடிஸின் முழு வாழ்கை வரலாறைக் கூறுவதில்லை. அவரைப் பற்றிய கால நிகழ்ச்சிக் குறிப்புக்களும் அல்ல. அவரது இறுதிக்காலத்தில் நிகழ்ந்த துன்பியல் சம்பவம். நிகழ்ச்சிகள் பற்பல சுருக்கப்பட்டு நாடகப் படைப்பு சாக்ரடிஸ் மரணக் காரணத்தை ஓரளவு எடுத்துக் காட்டுகிறது. சாக்ரடிஸ் மரணச் சம்பவம் முடிவில் ஒன்றாய் இருந்தாலும் அந்த நாடகத்தை எழுதிய பல்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு வித வசனங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் எழுதப்படும் கனடா நாடக மேதை, லிஸ்டர் ஸின்கிளேர் நாடகம்தான் மெய்யானது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. குறிப்பாக நாம் அறிந்து கொள்ளக் கூடியது இதுதான் : ஏதென்ஸ் நகரவாதிகள் பலர் சாக்ரடிஸின் பகைவர். தனித்துவ முறையில் வினாக்களை எழுப்பி மெய்ப்பாடுகளை வாலிப மாணவருக்கு ஞானமாகக் காட்டினார். அதனால் ஏதென்ஸ் மக்களின் வெறுப்பைப் பெற்றார். அவரைப் பழிக்குற்றம் சாற்றிச் சிறைசெய்து நஞ்சு கொடுத்துக் கொன்றனர் என்னும் வரலாற்றை வலியுறுத்திக் கூறுவதே இந்த நாடகத்தின் குறிக்கோள் ! அவரது வாசகம் இது: “நேர்மை என்பது ஒரு வகை ஞானம்.” (Virtue is a kind of Wisdom). கவிஞர் கதைகளில் அழுத்தமாய்க் கூறிவரும் காட்டுமிராண்டிகளின் தெய்வத்திலிருந்து வேறுபடாதது கடவுள்களின் பிதா ஜீயஸ் (Zeus – The Father of the Gods) என்று சாக்ரடிஸ் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.


Fig. 4
Death Scene of Socrates

பெர்டிராண்டு ரஸ்ஸல் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது “நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர். பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,” என்று அழுத்தமாகக் கூறுகிறார்.

ஏதென்ஸ் நகரில் ஆரஞ்சுப் பழங்கள் ஆப்பிள் பழங்களாய் இருப்பினும் அவற்றைப் பெரும்பாலும் கிரேக்கர் அந்தக் காலத்தில் தின்பதில்லை. ஆனால் ஆக்டபஸ் கடல்மீனை (Octopus) ஏதென்ஸ் மக்கள் அதிகம் தின்றதாகத் தெரிகிறது !

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -1 பாகம் -2

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஓர் அங்காடி வீதி

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : மெலிடஸ் (Meletus), லைகான் (Lycon).

அமைப்பு : ஏதென்ஸ் நகரத்தின் அங்காடி வீதியில் உயர்ந்த தூண்கள் எழுப்பிய மாளிகைகள். ஒரு தூணின் பக்கத்தில் நிற்கிறான் வாலிபன் ஒருவன். அவன் பெயர்தான் மெலிடஸ். மெலிந்த சரீரம் கொண்டு, தாடி மீசை உள்ளவன். அங்காடி வீதியை அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் வெறுப்போடு அவன் காணப்படுகிறான். மீனவன் ஒருவன் ஒரு சாக்கு நிறைய ஆக்டபஸ் மீன் இறைச்சிகளைச் சுமந்து வீதியில் விற்றுக் கொண்டிருக்கிறான். முதிய இராணுவப் படையாள் கிரிடோ (Crito), செல்வந்தக் கோமான் ஆனிடஸ் (Anytus) இருவரும் வருகிறார். பிறகு அல்சிபியாடஸ் (Alcibiades), ·பயிடோ (Phaedo) ஆகியோர் கலந்து கொள்கிறார். அடுத்து மூன்று மாஜிஸ்டிரேட் வருகிறார்கள் : தலைமை மாஜிஸ்டிரேட் ·பிலிப் (Philip). வயதான சைரஸ் (Cyrus). இடிமுழக்கர் எனப்படும் டிரிப்டோல்மஸ் (Triptolemus)]

***********************

மெலிடஸ்: வேடிக்கை பார் ! இன்றோடு சாக்ரடிஸ் பேர் கெட்டு விடும் ! அவர் ஒன்றும் உன்னத அறிவாளி அல்லர் ! அவரை விடப் பெரிய ஞானிகள் உலகிலே இருக்கிறார் ! அதுதான் அறிவிக்கப்படப் போகிறது ! தேவர்கள் தீர்ப்பை (Oracle Verdict) இன்று மாஜிஸ்டிரேட் வாசித்து முடித்தவுடன் உன்னைப் போன்ற என்னைப் போன்ற கலாச்சார மாந்தர் பேசப் போகிறார். தேவர்கள் சாக்ரடீஸை ஒரு ஞானியாகச் சுட்டிக் காட்டவில்லை ! சாக்ரடிஸை விட தேவர்கள் உயர்ந்தவர் அல்லவா ? ஏதென்ஸ் நகர இளைஞர் சாக்ரடிஸ் பின்னால் போவது நிறுத்தப்படும். கவலைப் படாதே ! பார், சாக்ரடிஸ் நாடு கடத்தப் படுவார் !

லைகான்: நாடு கடத்தக் கூடாது சாக்ரடிஸை !

மெலிடஸ்: என்ன சொல்கிறாய் ? ஏன் நாடு கடத்தக் கூடாது ?

லைகான்: நஞ்சு ஊட்டப்பட வேண்டும் ! நானே நஞ்சைக் கொடுப்பேன் சாக்ரடிசுக்கு ! ஒரு காலத்தில் சாக்ரடிஸ் மாஜிஸ்டிரேட்டாக இருந்திருக்கிறார். போர்த் தளபதியாக இருந்திருக்கிறார் ! அவர் ஓர் பயங்கர மனிதர் !

மெலிடஸ்: நாமவரைத் தனிப்பட்ட முறையில் கண்காணிப்போம் !

லைகான்: அதென்ன நாம் ? நாம் என்றால் யார் யார் ?

மெலிடஸ்: வேறு யார் ? நீயும் நானும்தான் லைகான் ! மற்றும் சிலரை மாஜிஸ்டிரேட் தேர்ந் தெடுப்பார் ! அந்தப் பெயர்கள் ரகசியமானவை ! சாக்ரடிஸ் சரித்திரம் எப்போது முடியும் என்பது நாளை தினம் தீர்மானம் செய்யப்படும். ஈதோ பார் ! சாக்ரடிஸின் தோழர் இருவர் இங்கு வந்து கொண்டிருக்கிறார்.

[முதிய இராணுவப் படையாள் கிரிடோ (Crito), செல்வந்தக் கோமான் ஆனிடஸ் (Anytus) இருவரும் வருகிறார்.]

லைகான்: யார் அந்த இருவர் ?

மெலிடஸ்: வயதானவர் கிரிடோ. மற்றவர் ஆனிடஸ். கொழுத்த பணக்காரர் ! வாலிபர் !

லைகான்: ஓ ! இவர்தான் செல்வந்த ஆனிடஸ்ஸா ?

மெலிடஸ்: கிரிடோ ! இன்று மாலை சாக்ரட்ரிஸ் அருகில் நீ இருக்கக் கூடாது.

கிரிடோ: ஏன் அப்படிச் சொல்கிறீர் ? நாம் அமைதியாக தேவர்கள் தீர்ப்பைக் கேட்கப் போகிறோம்.

மெலிடஸ்: சாக்ரடிஸ் வினாக்கள் உமக்குக் களைப்பூட்ட வில்லையா ? வரையறையை மீறி விட்டார் சாக்ரடிஸ் என்பது என் யூகம்.

ஆனிடஸ்: அப்படியா ? எந்த எல்லையைத் தாண்டி விட்டார் ?

மெலிடஸ்: நானதைச் சொல்ல மாட்டேன் ! நீயே அதைத் தெரிந்து கொள்வாய். சாக்ரடிஸ் கழுத்தைச் சுற்றிப் பார். வளைவு கோடுகள் எத்தனை ? எத்தனை ? வயதாகி மனிதர் படிப்படியாய்ச் செத்துக் கொண்டிருக்கிறார் ! கிரிடோ ! உனக்குத் தெரியும் அவரது வயது !

கிரிடோ: (சிரித்துக் கொண்டு, மெலிடஸைப் பார்த்து) வாலிபச் சிகாமணியே ! சாக்ரடிஸ் சாவதற்கு முன்னே நீ சவக் குழிக்குள் போய் விடுவாய் ! அவரது மரணம் உன் கரத்திலில்லை ! சவால் விடுகிறேன் ! நீதான் முதலில் சாவாய் ! சண்டைக்கு வா என்னுடன் நீ அதை ஒப்புக் கொள்ளா விட்டால் !

லைகான்: நீ சண்டைக்கு வந்தால் நான் தயார் ! (கைகள் வாளை உருவத் தயாராகின்றன)

ஆனிடஸ்: (சண்டையைத் தடுத்து) நாம் முதலில் தேவரின் தீர்ப்பைக் கேட்போம் ! நமக்குள் இப்போது சண்டை தேவையில்லை !

லைகான்: வந்த சண்டையை நான் விட மாட்டேன் ! (வாளை உருவுகிறான்)

[அப்போது வாலிபன் அல்சிபியாடஸ் (Alcibiades) வந்து குறுக்கிடுகிறான். அவன் ஓர் நுண்ணறிவாளி. கம்பீரமான தோற்றம் உடையவன். அவனோடு வாலிபன் ·பயிடோ (Phaedo) வருகிறான். இருவரைச் சுற்றிலும் கூட்டம் கூடுகிறது.]

மெலிடஸ்: அல்சிபியாடஸ் ! அப்புறம் ·பயிடோ ! சாக்ரடிஸின் தோழர்களா அடுத்தும் வர வேண்டும் ?

கிரிடோ: என்ன நடக்கிறது அல்சிபியாடஸ் ?

அல்சிபியாடஸ்: தென்றல் காற்றில் குருதியும் மயிலிறகும் ஓடுகின்றன ! சாக்ரடிஸ் பணிந்து விழுகிறார் !

லைகான்: இல்லை சாக்ரடிஸ் தலை குனிகிறார் !

அல்சிபியாடஸ்: இல்லை, சாக்ரடிஸ் தாக்கப் பட்டார் ! அவரைப் பிடித்து விட்டார்கள் !

·பயிடோ: ஆமாம் அசுரக் கழுகுகள் அவரைப் பிடித்து விட்டன ! குருதி கசிகிறது அவரது தலையில் !

மெலிடஸ்: (கேலியாக) ஏன் சாக்ரடிஸ் எதிர்க்க வில்லை ? அவர் பெரிய போர்த் தளபதியாய் இருந்தவர் அல்லவா ? அவரது வலுவான சக்தி எங்கே போயிற்று ? எல்லாரையும் விட அவர் வல்லவராயிற்றே ?

கிரிடோ: வாருங்கள் யாவரும் கேட்போம் தேவர்களின் தீர்ப்பை ! புனிதத் தீர்ப்பை !

மெலிடஸ்: வஞ்சகர் சாக்ரடிசுக்கு இன்று முடிவு நாள் !

ஏதென்ஸ் காவலர் ஒருவர்: (வாளைக் கையில் ஏந்தி) வருகிறார் மேன்மைதாங்கிய மாஜிஸ்டிரேட்டுகள் ! வழி விடுங்கள் அவருக்கு !

[வரிசையாக ஏதென்ஸ் மாஜிஸ்டிரேட்டுகள் வருகிறார். மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்கிறார். தலைமை மாஜிஸ்டிரேட் ·பிலிப் (Philip). அவருக்கு வலப்புறம் இருப்பவர் : வயதான சைரஸ் (Cyrus). இடப்புறம் இருப்பவர் : இடிமுழக்கர் எனப்படும் டிரிப்டோல்மஸ் (Triptolemus)]

சைரஸ்: (கோபத்துடன்) ஏன் அதை நிறுத்துகிறீர் ? ஏற்கனவே தாமதமாகி விட்டது !

டிரிப்டோல்மஸ்: அடுத்தொரு தெருச்சண்டை ! முகக் காயத்தோடு நிற்கும் மூடரைப் பாருங்கள் !

·பிலிப்: தெருச் சண்டைக்கு என்ன தண்டனை கொடுப்பது ?

அல்சிபயாடஸ்: தெருச் சண்டைச் தீர்ப்புக்காக நாமிங்கு கூட வில்லை ! ·பிலிப் ! நாம் தேவர் தீர்ப்பு பற்றி உரையாட வந்திருக்கிறோம். என்ன பேச வேண்டும் என்று தெரியும் உமக்கு ! தெருச் சண்டைக்கு என்ன தண்டனை என்பது உமக்குத் தெரியாதா ? நல்ல வேடிக்கை ! உமக்குத் தடை உத்தரவு வந்துள்ளது தெரியமா தேவரிடமிருந்து ! தேவர்கள் உமக்குச் சகுனத் தடை விடுத்துள்ளார் !

டிரிப்டோல்மஸ்: பொறு ! நாங்கள் சகுனத் தடைகளை மதிப்பவரில்லை ! துவங்கட்டும் நமது கடமை ! நியாய மன்றத்தில் தர்க்கம் நிகழட்டும் !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள் :

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

10. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

11. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 13, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா