சும்மா

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

அப்துல் கையூம்


சும்மா இருந்த நேரத்துலே, சும்மா இருக்கிறதை விட்டுட்டு, சும்மா எதையாவது எழுதலாமேன்னு நெனச்சேன். எதப்பத்தி எழுதறதுன்னு மூளையை பிசைஞ்சிக்கிட்டு இருந்தப்போ, “சும்மா”வைப் பத்தியே எழுதுனா என்னான்னு மனசுலே தோணிச்சு. அதப்பத்தியே சும்மா எழுத ஆரம்பிச்சுட்டேன்.

சும்மா சொல்லக் கூடாது. இந்த உலகத்துலே எல்லாமே “சும்மா”வை சுத்திதான் இயங்கிக்கிட்டு இருக்கு. அத நாம மொதல்லே புரிஞ்சுக்கணும். அம்மாவுக்கு அடுத்தபடியா எல்லாரும் அதிகமா உபயோகப் படுத்தற ஒரு வார்த்தை இந்த உலகத்துலே ஒண்ணு இருக்குதுன்னா சொன்னா அது “சும்மா”தான்.

மாடுகூட “அம்மா”ன்னுதான் கத்துதுன்னு எல்லாரும் சொல்றாங்க. எனக்கென்னமோ அது “சும்மா”ன்னு கத்துற மாதிரிதான் என் மனசுக்கு படுது.

இந்த கட்டுரையை இளையராஜா படிச்சு பாத்தாருன்னா நிச்சயம் “சும்மா என்றழைக்காத உயிரில்லையே”ன்னு உருக்கமா தன்னோட கட்டைக் குரலாலே பாடி இந்நேரம் நம்ம எல்லாரையும் உருக வச்சிருப்பாரு.

கடவுள் இந்த உலகத்தை படைக்காம சும்மா இருந்திருந்தா இன்னிக்கி நீங்களும் இல்லே, நானும் இல்லே. ஒண்ணுமே இல்லாம சும்மா கிடந்த பூமியிலேதான், மனுஷனோட முயற்சியினாலே இன்னிக்கு இத்தனை அடுக்கு மாடி கட்டிடமெல்லாம் மொளச்சிருக்கு.

நாம சும்மாவே இருக்கக் கூடாது. நம்மோட வாழ்க்கை நமக்கு சூசகமா இதத்தான் உணர்த்துது. சும்மா இருக்குற நேரத்துலே நீங்களே கொஞ்சம் ரோசனை பண்ணி பாருங்க. நான் சொல்லுறது எவ்ளோ பெரிய உண்மைங்குறது உங்களுக்கே நல்லா புரியும்.

குணங்குடி மஸ்தானோட பாடலை படிச்சு பாத்தீங்கன்னா “இந்த வாழ்க்கையே ஒரு சும்மாத்தான். அது ஒரு மாயை”ங்குற தத்துவத்தை அழகா நமக்கு போதிக்கிறாரு. அதத்தான் இன்னொரு சித்தரு “காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” ன்னு பாடியிருக்கிறாரு.

“சும்மா”வை அப்படி இப்படின்னு தலைக் கீழா மாத்துறது என்னமோ விதியோட விளையாட்டுதான். சும்மா இருந்த ஒருத்தன் வாழ்க்கையிலே உசரத்துக்கு எங்கேயோ போயிடறான். உசரத்துலே இருக்குற மனுஷன் திடீர்ன்னு ஒண்ணுமே இல்லாம “சும்மா”வா போயிடறான்.

ஒரு மனுஷன் ஒரு வேலையும் செய்யாம வீட்டுலேயே சும்மா இருந்தான்னு வச்சுக்குங்க, அவன் பொறந்ததுக்கே அர்த்தம் இல்லாம போயிடுது. ரிடயர்ட் ஆனதுக்கப்புறம் சும்மா இருக்கலாம். நோ ப்ராப்ளம். (அப்பவும் சில ஜொள்ளு பார்ட்டிங்க அங்கே இங்கேன்னு லொள்ளு பண்ணிக்கிட்டு லோலாய் பண்ணிக்கிட்டு அலையுதுங்க. அது வேற விஷயம்)

ஆபிசுக்கு போய் அங்கே வேலையே செய்யாம ஒருத்தன் சும்மாவே இருந்தான்னா அவனுக்கு கல்தாதான். ஸ்கூலுக்கு போய் அவன் படிக்காம சும்மா இருந்தா அவன் நிச்சயம் பெயிலுதான். இப்படியே சும்மா சொல்லிக்கிட்டே போவலாம்.

இந்த உலகத்துலே எதுவுமே சும்மா கிடைக்கிறதில்லீங்க. “கையிலே காசு, வாயிலே தோசை” இதுதான் இந்த உலகத்தோட சுலோகம்.

சும்மா இருக்கிறவனை இந்த உலகம் மதிக்கிறது கூட கிடையாது. “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை”ன்னு சரியாத்தான் பெருசுங்க சொல்லியிருக்கு.

சிலபேரு சும்மா இருந்தே கோடி கோடியா சம்பாதிக்குறாங்க. அது எப்படின்னு கேக்குறீங்களா? ஒரு பேமஸ் கிரிக்கெட் வீரரு ஒரு பெரிய மேட்ச்சுலே நெசமா விளையாடாம ‘சும்மா’ இருக்க சம்மதிக்கிறாருன்னு வச்சுக்குங்க, அதுக்குகூட சில கோஷ்டிங்க கோடி கோடியா அள்ளிக் கொடுக்க தயாரா இருக்காங்க. அதுக்கு பேரு மேட்ச் பிக்ஸிங்காம். (என்ன எழவு அர்த்தமோ தெரியாது)

சும்மா சும்மா ஒரு விருந்தாளி ஒரு வீட்டுக்கு வந்துக்கிட்டே இருந்தார்னா அவருக்கு மருவாதி கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிக்கிட்டே போறதை நாம கண்ணாலே பாக்குறோம். (அந்த விருந்தாளி சத்தியமா நான் இல்லீங்க)

சும்மாவே இருந்து ஒரு பொண்ணு அவ கல்யாணத்துக்கு தன்னோட சம்மதத்தை தெரிவிச்சிடுவா. எப்படின்னு கேக்குறீங்களா? கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க மாப்பிள்ளே வருவாரு. மாப்ளே புடிச்சிருக்கான்னு யாராச்சும் அவக்கிட்ட போயி ரகசியமா கேப்பாங்க. சும்மாவே இருப்பா. பதிலே சொல்ல மாட்டா. லூசு மாதிரி கெடந்து லேசா சிரிப்பா. இவங்க புரிஞ்சுக்குவாங்க. (தமிழ்ப் பொண்ணுங்க இப்படித்தான் இருக்கனுமாம்)

மவுனம் சம்மதத்துக்கு அறிகுறின்னு பழமொழி வேற எழுதி வச்சிருக்காங்களே. இந்த Gap நம்மாளுங்களுக்கு போதுமே? அப்புறம் என்ன? டும் டும்தான்.

என்னோட நண்பர் வி.என்.எஸ்.மணி எனக்கு போன் பண்ணி “ ஹலோ.. எப்படி இருக்கீங்க? ஒண்ணுமில்லே.. சும்மாத்தான் போன் பண்ணுனேன்னு .. இழுத்தார்னா, ஏதோ வில்லங்கம், ஊர்வம்பு சொல்லப் போறாருன்னு புரிஞ்சுக்குவேன்.

சும்மாங்குற வார்த்தைக்கு தமிழிலே எக்கச்சக்கமான அர்த்தங்கள் இருக்குது. ஆனா அகராதியிலே அதையெல்லாம் பாக்க முடியாது. அனுபவத்துலே நாமேதான் புரிஞ்சிக்கணும்.

ஒருத்தர் இன்னொருத்தரைப் பார்த்து “உங்க மனைவி வேலைக்கு போறாங்களா?” ன்னு கேட்டு அவர் “இல்லை அவ வீட்லே சும்மாத்தான் இருக்குறா” ன்னு பதில் சொன்னார்னா, அவர் மனைவி Housewife-ஆ இருக்குறாங்கன்னு அர்த்தம்.

ஒரு அம்மா இன்னொரு அம்மாவைப் பாத்து “உங்க மருமவ இன்னும் சும்மாத்தான் இருக்கா?” ன்னு கேட்டா, புள்ளத்தாச்சியா இன்னும் ஆவலியான்னு அர்த்தம்.

ஒரு அம்மா தன்னோட புள்ளையைப் பாத்து “சும்மா, சும்மா என்னை தொந்தரவு செய்யாதே”ன்னா, அடிக்கடி என்னை பாடா படுத்தாதேடான்னு அர்த்தம்.

பட்டுக்கோட்டை “சும்மா கிடந்த நெலத்த கொத்தி” ன்னு பாட்டு எழுதுனார்னா, அது வேஸ்டா கெடந்த தரிசு நிலம்னு அர்த்தம்.

சும்மாங்குற வார்த்தைக்கு பின்னாலே இம்மாம் மேட்டரு இருக்குன்னு சொன்னா சும்மாவா?

ஒருத்தரு கேட்டாராம் “ நம்ம நாட்டுலே ஜனத்தொகையை குறைக்கிறதுக்கு நாம என்ன பண்ணனும்?”

அதுக்கு இன்னொருத்தரு “நீ கையையும் காலையும் வச்சிக்கிட்டு ஒண்ணுமே செய்யாம சும்மா இருந்தா அதுவே போதும்”-ன்னு பதிலு சொன்னாராம்.

ஸ்கூல்லே நான் படிக்கிற காலத்துலே “சும்மா”வாலே நிறைய சண்டைங்க வரும். ரெண்டு பசங்க சண்டை போட்டுக்குவாங்க. “ஏண்டா இப்படி பண்ணுனேன்னு?” வாத்தியாரு கண்டிப்பாரு. “இல்லே சார். நான் சும்மாச்சுக்காச்சும்தான் சார் சொன்னேன். அதுக்குப் போயி அவன் கோவிச்சுக்கிட்டான் சார்”ன்னு பதில் வரும்.

ஒரு பெரியவரு ஒரு இளைஞனைப் பாத்து “ஏம்பா, படிச்சு முடிச்சிட்டு இப்ப நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்குறே”ன்னு கேட்டிருக்காரு. அதுக்கு அவன் “எங்க அப்பாவோட ஜோலியிலே கூட மாட ஒத்தாசையா இருக்கேன்”னு சொல்லியிருக்குறான்.

“உங்க அப்பா என்னா செஞ்சிக்கிட்டு இருக்காரு?”ன்னு மறுபடியும் கேட்டதுக்கு “அவரு வீட்லே சும்மாத்தாங்க இருக்காரு”ன்னு பதிலு சொல்லியிருக்கான்.

வேலையே இல்லாம பொழுதை போக்குறதுக்கு எப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டுறாங்க பாருங்க. இதுக்கும் நம்ம கவியரசு (கவிப்பேரரசர் அல்ல) பாடியிருக்கருல்லே?

“வீடெங்கும் திண்ணை கட்டி
வெறும் பேச்சு வெள்ளை வேட்டி
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால்
சுதந்திரம் என்ன செய்யும்?” -ன்னு பாடி வச்சிட்டு போயிருக்காரு.

இந்த கட்டுரையை சும்மா முடிக்காம கடைசியிலே ஒரு மெஸேஜ் சொல்லி முடிச்சா நல்லா இருக்குமல்லவா? அந்த மெஸேஜ் இதுதான் :

தயவு செய்து இனிமேலாவாது வேலைக்கு போகாம வீட்லே இருக்குற பெண்மணிகளை “அவ வீட்லே சும்மாத்தான் இருக்குறா”ன்னு சொல்லாதீங்க.

வேலைக்கு போற பெண்ணுங்களை விட அதிக வேலை பாக்குறது இவுங்கதான். ஒரு நாள் பூரா இவுங்க வீட்டுக்குள்ளேயே ரெண்டு கிலோ மீட்டர் தூரம் நடக்குறாங்கன்னு புள்ளி விவரம் சொல்லுது.

புள்ளைங்க பின்னாடியும், புருஷன் பின்னாடியும் லோலோன்னு அலைஞ்சு, சமையலை செஞ்சிக்கிட்டு, பாத்திரத்தை கழுவிக்கிட்டு, துணியை துவைச்சிக்கிட்டு, வீட்டை சுத்தமா வச்சிக்கிட்டு, ஷாப்பிங் பண்ணிக்கிட்டு, .. அடடடடா.. கொஞ்சமா நஞ்சமா?

கொஞ்ச நேரம் உக்காந்து சும்மா சிந்திச்சுப் பாருங்க. நான் சொல்லுறது நூத்துக்கு நூறு உண்மைங்குறது உங்களுக்கே நல்லா வெளங்கும்.


அப்துல் கையூம்
vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்