கவிதை சுடும் !

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

ஸ்ரீனி



கவிஞர் முடி வெட்டானும் இயக்குனர் வெளக்குமாரும்…

கவிஞரே நான் பீல்டுக்கு புதுசு,நீங்கதான் நம்ப சீனுக்கு தக்க மாதிரி பாட்டு ரெடி பண்ணனும்?

எழுதிட்டாப் போச்சு..கவிதையெல்லாம் நமக்கு ரொம்ப ஈஸியாச்சே..

அப்படிங்களா..

என்ன அப்படிங்களா..சும்மா அப்படின்னு சொல்வதற்குள் ஆறு கவிதை சுட்டுடுவேன்,சப்பாத்தி மாதிரி!

நீங்க க்ரேட்டுங்க…ஆனா பாருங்க இந்த பாரதி, கண்ணதாசன் இவங்கெல்லாம்…

யோவ் நிறுத்து..அதெல்லாம் ஓல்டு..இப்போ எல்லாம் ஸ்பீடப்பா..இன்ஸ்டன்ட் அடி தான்!

இன்ஸ்டன்ட் அடியா?அப்படின்னா என்னாங்க?

இது புதுசுப்பா.மொழியின் லாவகத்தை மொழிக்கு தெரியாமலேயே எடுப்பது!

புரியலிங்களே..

நீ ஒண்ணுப்பா..இன்ஸ்டன்ட் அடி கவிதைக்கு தமிழ் லேசு பாசா தெரிஞ்சா போதும்.

அது எப்படிங்க…தமிழ் சரியா தெரியாம கவிதை எழுதறது?

இதுவும் தமிழ் தான்யா..ஆனா டோட்டலா தமிழ் இல்லை!

ஓஹோ???!!

சரி நீ சிச்சுவேஷன் சொல்லு.

காதலியின் அப்பன் காதலுக்கு தடா போடுபவர்.இந்த பேக் கிரவுண்டில் காதலன்,காதலியை பார்த்து பாடும் சீனுங்க …

அப்படியா இதைக் கேளு..
நான் உனக்குப் போட்டேன் ரன் வே
நீ எனக்குச் சொன்னாய் ஒன் வே
நாம போவோமா ஹை வே
உன் அப்பாவால் தான் எனக்கு சாவே

பட்டுன்னு சொல்லிட்ட£ங்கய்யா..ஆனா புரியலையே?

காதல் கவிதை அய்யா காதல் கவிதை!அலட்டல் இல்லாத அறிவு ஜீவித்தனமான யதார்த்தமான வார்த்தைகளைப் பாரு!சிச்சுவேஷனை ஒரே வரியில் கொண்டு வந்தேன் பாத்தியா!சரி அடுத்தது..சொல்லு.

கனவு டூயட்டுங்க.

அயல்நாடா..அப்ப இப்படி போட்டுவோம்…

உன் கண்ணு ரெண்டும் காமிரா லென்சு
நீ எதிரில் வந்தால் எகிருது நெஞ்சின் பாலன்சு
உன் அழகு முகத்தில் பவுடர்
நீ கீழே போடுவதோ அரை டிரவுசர்!

என்ன எப்படி இருக்கு?இப்ப புரியுதா!

விளங்கின மாதிரி இருக்கு ஆனா முழுசா புரியலிங்க!

நீ விளங்காதவனய்யா..சரி நெக்ஸ்ட்.

காதல் தோல்விங்க.

அதுக்கு இலக்கிய டைப்லயே சுடறேன்..இப்புடு சூடு..

பிறை நிலா போன்ற உன் நெற்றி
அதில் அந்த வட்டப் பொட்டு
கன்னமா அது..கற்கண்டு
கிண்ணமாய் உன் உதடு
தண்டு போல கழுத்து
அதற்கும் கீழே…
வேண்டாம்..உனக்கு மணமாகி விட்டது!

நல்லா இருக்குங்க..ஆனா இது வேற டைப்பாங்க?

காதல் தோல்வி சோகமய்யா.

அப்படிங்களா!?

பின்ன இப்பல்லாம் காதலிலே தோல்வியுற்றான்னு எழுதினா எவன் கேட்பான்..இதுதான் மாடர்ன் இலக்கிய அடி!

அப்ப சரி..ரொம்ப டாப்புங்க!

இப்ப பாரு..ஒரு ஸ்கூல் பையனும் பொண்ணும் காதல் பாட்டு பாடினால் எப்படி பாடுவாங்கன்னு..

தோசைக்குத் தொட்டுக்கத்தான் சட்னி
ஆசைக்குத் தொட்டுக்க நாம போவோம் மாட்னி!

சூப்பருங்க!கிளப்பிட்ட£ங்க!இந்தப் பாட்டையும் படத்துல வச்சுப்புடலாங்க!நம்ப படத்துக்கு ஆரம்பமே நல்ல கெட்டப்பு கிடைச்சாச்சுங்க!ஆனா இதெல்லாம் டியூனில் உட்காருமாங்க!

உட்காருமாவா! உட்கார்ந்த அப்புறம்தான் வார்த்தையை விடுவான் இந்த முடி வெட்டான்!அதை விடு,இது மாதிரி சர சர வென்று ஒரு முப்பது,நாப்பது கவிதையைச் சுட்டுப் போட்டால் கவிதைத் தொகுப்பு கூடப் போட்டுறலாம்!

இதெல்லாம் புக்குலே போடுவாங்களா?

இப்பல்லாம் இந்த மாதிரி கவிதையத்தான் போடராங்க..

அப்ப சரிங்க.நம்ப படத்துக்கும் உங்க கவிதையலேர்ந்தே டைட்டில் கிடைச்சாச்சுங்க..”ஹைவேயில் ரன்வே”!

தமிழ்ல வைப்பா,அரசு மானியமும் கிடக்குமில்லே.

என்னான்னுங்க?

அதையும் நானே சொல்லணும்,சரி இப்படி வை, “மணமானவளின் காதல்!”

என்னங்க இது?கதையோட ஒட்டுமா?

ஒட்டிரும்யா!மானியம் கிடச்சா எல்லாம் ஒட்டிரும்!

ஸ்ரீனி


kmnsri@rediffmail.com

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி