கடித இலக்கியம் – 42

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

வே.சபாநாயகம்



கடிதம் – 42

3, செங்குந்தர் வீதி,
திருப்பத்தூர்.வ.ஆ.
1 – 9 – 90
அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

மூன்று நாட்களுக்கு முன் ஆறுமுகம் வந்திருந்தார். தோட்டத்துப் பக்கம் அவருடன் பேசிக்கொண்டிருந்த போது, “மனசு ஏனோ விருத்தாசலம் போகிறது. சபா கடிதம் எழுதுகிறாரோ என்னவோ?” என்று கருதினேன். நேற்று தங்கள் கடிதம் வந்தது.

ஆஸ்பத்திரியில் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் திடுக்கிட வைத்தன. குடலிறக்கத்துக்கான அறுவை சிகிச்சையின் போது உங்களது நாடித்துடிப்பு இறங்குவதைக் ஒரு நர்ஸ் கவனித்து எச்சரிக்கை செய்து உடனடியாகப் பிராண வாயு அளித்துக்
காப்பாற்றப் பட்டதைக் கேட்க மனசு நடுங்குகிறது. அந்த நர்ஸின் கவனம் எவ்வளவு தெய்வீகமானது என்றும், எவ்வளவு அற்புதமான தருணங்களை நமக்காகத் தேர்ந்தெ டுத்து ஒதுக்கி வைத்திருக்கிறார் என்கிற உணர்வும் தோன்றி, ஒரு நம்பிக்கை நன்கு
நிறைவேறிய ஆறுதல் பெருமூச்சை நானும் அனுபவித்தேன்.

திட நம்பிக்கையுள்ள தீரர்களாயிருப்போம். நமது நம்பிக்கை மேலும்மேலும் திடப்படட்டும். இந்தக் கடிதம் எழுத ஆரம்பிக்கு முன்பு, ‘ஸ்ரீராமகிருஷ்ண அமுதமொழிகளை’ப் பிரித்து ஒரு பக்கத்தின் ஆரம்பத்தில் படித்துப் பார்க்கலாம் என்ன வருகிறதோ, என்று பிரித்துப் படித்தேன்.

“எவ்வளவுக்கு நம்பிக்கை அதிகரிக்குமோ, அவ்வளவுக்கு ஞானம் அதிகரிக்கிறது. பார்த்துப் பார்த்துத் தீனி தின்னும் பசு விட்டுவிட்டுப் பால் கொடுக்கும். ஆனால் இலை, செடி, தோல், பொட்டு என்று எதைக் கொடுத்தாலும் லபக் லபக் என்று எந்தப் பசு
தின்றுவிடுமோ அந்தப் பசு தொடர்ந்து பால் கொடுக்கும்” – என்று ஸ்ரீராமகிருஷ்ணர் பேசுகிற பகுதி வந்தது. உடனே உங்களுக்கு இதை எழுதிவிட வேண்டும் என்றும் தோன்றியது. இந்தச் சிறு குறிப்பை, தங்கள் உடல் நலம் வாழ்த்தி, நான் தரும் ஒரு ஆலயப் பிரசாதம் போல் ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஏதோ ஒன்றிற்கு நாம் எல்லை கடந்த நன்றி செலுத்த வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஒரே விதமான பாஷையில் சொல்லி அதை வெறும் உளறல் ஆக்கி விட்டார்கள். விதவிதமாகச் சொன்னால் அந்த அருள் மேலும் நன்கு விளங்குகிறது. ஆபரேஷன் தொடக்கத்திலேயே அந்தப் பிரச்சினை தோன்றியதும், அப்போது மறு உத்திரவாதம் போல் அந்த நர்ஸின் பார்வையின் உன்னிப்பும், யாரோ தேவதூதர்கள் வானத்தில் நின்று நமது நலத்திற்காகக் கட்டளையிட்டது போல் இருக்கிறது. வெகு சூட்சமமான இயந்திரங்கள் செயல்பட்டன போலும் தெரிகிறது.

– சிவகுமார் பிறந்த சிசேரியன் ஆபரேஷனிலும், அப்புறம் சரசுக்கு நடந்த தைராய்டு ஆபரேஷனிலும், இதையொத்த அனுபவங்கள் ஏற்பட்டு, இப்பொழுதும் கூட எனக்குச் சொல்லச் சொல்ல உடல் சிலிர்க்கும். ஆதலால், நீங்கள் எழுதியதையெல்லாம் நன்கு உணர்ந்தேன்.
6-9-90 இரவு.

தங்கள் கடிதம் வந்தபோது, ஒரு புரொகிராம் இருந்தது, இன்னும் இருக்கிறது. (நான்தான் அதைத் தவர விட்டு விட்டேன்). 7-9-90 வெள்ளி இரவு கொல்லம் மெயிலில் புறப்பட்டு, JK தென்காசி செல்கிறார். அங்கே, குற்றாலத்தில், சாமியார் அருவியின் பக்கத்தில் உள்ள தோட்டக்கலை மற்றும் பழப்பண்ணை வாரியத் தின் விருந்தினர் விடுதியில் தங்குகிறார். 8,9 அங்கே. முன்பொரு முறை அருணாசலமும் நானும் அதே இடத்தில் JKவோடு இருக்கும் பேறு பெற்றோம். 8 mm மூவியும் அருணாசலம் எடுத்து வைத்திருக்கிறார். “சென்று நீராடிய துறைகளெல்லாம் திரும்ப வந்தாட விரும்புகிறேன்” என்கிற JK கவிதைப் பிரகாரம், இது நாங்கள் சென்று கலக்க வேண்டிய புரோகிராமே ஆகும். முதலில் அருணாசலம் – அவர் வருவதற்கில்லை என்றாயிற்று. சற்றுமுன்பு எட்டு மணிக்கு நான் JKவோடு போனில் பேசும் போது, நான் மட்டுமாவது போவேன் என்று தோன்றிற்று. வீடு வந்ததும், இந்த உலகம், இத்தகைய இன்பங்களின்பாலும் குற்றம் சாட்டும் என்பதறிந்த விரக்தியில், “நாங்கள் சந்திப்பதற்குக் குற்றாலம் மட்டும்தானா உகந்த இடம்? ராமன் இருக்கும் இடம் அயோத்தி என்பது போல், நாங்கள் சந்திக்கும் ஸ்தலம் திருத்தலம்” என்று தீர்மானித்து, நானும் போவ
தில்லை என்றாயிற்று. இன்ஷா அல்லாஹ்!

– தங்களுக்காவது முன்கூட்டி எழுதி உஷார்ப்படுத்திக் கிளம்பியிருக்கலாம். செப்டம்பர் சாரலையும் அருவிக் குளியலையும் தங்கள் உடல்நிலை – சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்துள்ள நிலையில் ஏற்குமோ என்பதுபோல் கருதித் தயங்கி
விட்டேன்.

மொத்தத்தில் என்ன தோன்றுகிறது என்றால், எல்லாவற்றையும் விதியின் வழியே விட்டுவிடத் தோன்றுகிறது. இதையெல்லாம் எதிர்த்துத்தான் இத்தனை காலமும் சளைக்காமல் போராடினோம். சுற்றியுள்ள உலகம் பூராவும் சேர்ந்து நம்மைச்
சபிக்கும் போலும். ஒரு குருவும் சீடர்களும் குழுமுவது பற்றித்தான் உலகத்தில் எத்தனை பேச்சு? உற்றாருக்குத்தான் எத்தனை பொறாமை?

இந்த மூடமக்களை நாம் ஏமாற்றுவோம். நாங்கள் சந்திப்பதற்குக் குற்றாலமும் எந்த மலையின் கொடுமுடியும் தேவையில்லை. குப்பைத் தொட்டி ஓரமும் குக்கிராமங்களிலும் நாங்கள் சந்தித்துக் குதூகலித்திருப்போம்.

குற்றாலம் போவதில்லை என்று தீர்மானித்தவுடன், அடுத்து உங்களுக்கு எழுதுகிற கடிதத்தைத் தொடர்கிற வேலையை எடுத்துக் கொண்டேன்.

எனக்கு மிக விருப்பமான ஒன்றை நான் இன்று துறந்தேன். துறவுப் பாதையில் எனது வளர்ச்சிக்கு இந்த அனுபவத்தைத் துணையாகக் கொள்வேன்.

தங்கள் – பி.ச.குப்புசாமி.


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்