ஓர்ஹான் பாமுக் – 2

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

பாம்பாட்டி சித்தன்


அரசியலைக் குறித்து பாமுக் வெளிப்படுத்தும் கருத்துக்களைவிட, அவரது படைப்புகளில் மிளிரும் கருத்துகள் மிகவும் புத்திசாலித்தனமானவை.
—ஒரு விமர்சனத்திலிருந்து.

படைப்புகள்:

1. Darkness and Light (1979)
பின்னாளில் Mr. Cavdet and his Sons (1982) என்ற பெயரில் வெளியானது பெரியதொரு ஆலமரத்தின் விழுதுகளென பிள்ளைகள் நிரம்பிய குடும்பத்தையும், செல்வ வளமிக்க அதன் மூன்று தலைமுறைகளையும் பற்றிப் பேசுகிறது இந்த நாவல். தாமஸ் மன்னின் (Thomas Mann) பாணியில் எழுதப்பட்டது.

2. The Silent House (1983)
துருக்கி நாடு உள்நாட்டுப் போரின் விளிம்பிலிருந்த 1980-களில், கடற்கரை வாசஸ்தலமொன்றில் வசிக்கும் மூதாட்டியை குடும்பத்தினர் காணச் செல்லும் நிகழ்வு 5- வெவ்வேறு கோணங்களில் விவரிக்கப்படுகிறது. இவ்வுறவினர்களிடையே நிகழும் அரசியல் விவாதங்கள் மற்றும் நட்பு ஒரு குறியீடாக மாறி, நாட்டிலிருக்கும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் அதிகாரப் போட்டியினால் உருவாகிற சமூக குழப்பத்தை எதிரொலிக்கிறது.

3.The White Castle (1985)
ஒரு இத்தாலியப் பொறியாளரின் விவரிப்பில் விரிகிறது புதினம். நவீன மயமாதலையும் அதன் முரண்நகையையும் விளக்குகிறது. 17-ம் நூற்றாண்டில், வெனிஸிலிருந்து நேப்பிள்ஸ் நகருக்குப் பயணமாகின்ற இத்தாலியப் பொறியாளர் ஒருவர் துருக்கியர்களால் சிறைபிடிக்கப் பட்டு ஹோஜோ என்பவனிடம் அடிமையாக்கப் படுகிறார். ஹோஜோ, அய்ரோப்பியர்களிடமிருந்து அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், வானசாஸ்திரம் ஆகிய துறைகளின் வளர்ச்சி நவீனங்களை அறிந்து கொள்வதன் மூலமாக ஒட்டமான் சாம்ராஜ்ஜியத்தின் மகத்துவத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று நம்புகிறான். ஆனால், ஒரு நிலையில் தகவல்களின் பரிமாற்றம் என்ற பெயரில் தங்களின் அந்தரங்கமான ரகசியங்களை பரிமாறிக்கொள்வதில், இருவரின் சுய அடையாளங்களும் இடம் மாறுவதை உணர்ந்து ஹோஜோ ஆச்சரியப்படத் துவங்குகிறான்.

4. The Black book (1990)
இஸ்தான்புல் நகரத்தின் வழக்கறிஞர் ஒருவரின் மனைவி தலைமறைவாவதில் தொடங்குகிறது நெடுங்கதை. காணாமல் போன தனது மனைவியை அவளின் சகோதரன் (மாற்றாந்தாய் மகன்) எங்கோ மறைத்து வைத்திருக்கிறான் என்று சந்தேகப்படுகிறார் வழக்கறிஞர். பத்திரிக்கையில் பத்திகள் எழுதும் அவனை தேடும்போது அவனும் காணாமல் போயிருப்பது தெரிய வர, அவர்களிருவரையும் தேட தலைப் படுகிறார். ஒட்டமான் சாம்ராஜ்ஜியத்தின் காலத்திலிருந்த இஸ்தான்புல் மற்றும் நிகழ்காலத்தில் இருக்கின்ற இஸ்தான்புல் என இரண்டையும் இணைத்துப் பார்க்க முயல்கிறார் பாமுக்.

5. The New Life (1995)
இளம் மாணவன் ஒருவன் தான் வாசிக்கின்ற ஒரு புத்தகத்தினால் தனது பழைய வாழ்க்கை மற்றும் அடையாளங்களிலிருந்து வேரோடு களைந்தெறியப்படுகிறான். தனக்கு அமைந்த புதிய வாழ்க்கையில் ஓர் அழகிய பெண்ணுடன் காதல் வயப்படுகிறான். அதன் பின் காதலில் முளைக்கும் போட்டி, கொலை முயற்சி என சுவாரசியமான சம்பவங்களோடு நகர்கிறது நாவல்.

6. My name is Red (1998)
புத்தகங்களின் ஓரங்களை அலங்காரம் செய்யும் நுண் ஓவியர்களின் வாழ்வைப் பற்றியது. 16-ம் நூற்றாண்டில் துருக்கியை ஆண்ட சுல்தான் தனது ராஜ்ஜியத்தின் பெருமைகளை விளக்கும் புத்தகம் ஒன்றிற்கு அலங்கார ஓவியங்கள் வரைவதற்காக நுண் ஓவியக்கலையில் தேர்ச்சி பெற்ற ஓவியர்களை நியமிக்கிறான். இந்த ஓவியங்கள் மேற்கத்திய சாயல் கொண்டதாக அமைய வேண்டும் என்று விரும்புகிறான். இஸ்லாமிய ஓவியன், உலகை கடவுள் ஏற்படுத்தி இருக்கும் ஒழுங்கமைவின்படி சித்திரங்களை உருவாக்குகிறான். மேற்கத்திய ஓவியன், உலகைத் தன் பார்வையின் வழியாக அவதானித்தும் உணர்ந்தும் பதிவு செய்கிறான். ஆகவே இரண்டும் எதிரெதிர் நிலைகள் கொண்டவை. சுல்தான் விரும்புகிற இந்த மரபை மீறிய சித்திரங்கள் தீட்டும் பணி ரகசியமாக நடைபெறுகிறது. அப்போது பணியில் ஈடுபட்ட ஓவியன் காணாமல் போகிறான். அதனை அடுத்து நாவலில் ஏற்படும் திருப்பங்கள் அற்புதமானவை. மேலும், பல குரல்களில் விரிகிறது நாவல். (கிணற்றில் மிதக்கும் பிரேதம், கொலையை நேரில் கண்ட நாய் என பட்டியல் நீள்கிறது).

7. Snow (2000)
சொந்த மண்ணில் நிலவிய அரசியல் சூழல்களால், ஜெர்மனியில் ஃபிராங்க்பர்ட் நகரில் பத்து வருடங்களாக அகதியாய் வசித்து வந்த ‘கா’ என்ற கவிஞர் துருக்கிக்கு திரும்புகிறார். கணவனைப் பிரிந்த தனது பழைய நண்பியை சந்திக்கவும், ஒரு பத்திரிக்கையாளனாக வாழ்வைத் தொடரும் பொருட்டும், துருக்கியின் வட கிழக்கில் இருக்கும் “கார்ஸ்’ என்ற நகரை அடையும் அவரின் பார்வையில் சுழலத் துவங்குகிறது புதினம். இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கும் மதச்சார்பற்றவர்களுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் “கார்ஸ்” நகரம் (மேற்கின் தாக்கம் பெற்ற துருக்கியரும் துருக்கியின் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இயங்கும் இஸ்தான்புல் நகரை குறியீடாகக் காட்டுகிறது). கார்ஸ் நகரம் உறைப்பனி பொழிவில் சிக்கி உலகின் மற்றப் பகுதிகளிலிருந்து துண்டிக்கப் படுவது (துருக்கி உலகின் மற்ற நாடுகளிடமிருந்து அறிவியல் தொழில்நுட்பம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றால் தனியாவது என்ற குறியீடாக வெளியாகிறது). கார்ஸ் நகரில் தொடராக நிகழும் பெண்களின் தற்கொலைகள், ‘கா’ சந்திக்கும் தீவிரவாதி, காவிற்கும் அவது பழைய நண்பிக்கும் இடையே நிகழும் இழையறாத நட்பு என் பல அடுக்குகளைக் கொண்ட இந்த புதினம் அரசியல் ரீதியாக மட்டுமின்றி இலக்கிய மட்டத்திலும் ஒரு முக்கியமான புத்தகம்.

8. Istanbul : Memories of a City (2005)
தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் நகரத்தை குறித்து பாமுக் எழுதியுள்ள இந்த தொகுப்பு ஒரு பாதி நினைவுக்குறிப்பாகவும் மறு பாதி பெரும் மரியாதைக்குரிய அர்ப்பணமாகவும் விரிகிறது.
இஸ்தான்புல் நகரமானது,

ஆசியா- ஐரோப்பா
கிழக்கு – மேற்கு
கிறிஸ்தவம்- இஸ்லாம்

ஆகியவைகளின் குறுக்குச் சாலைகளில் அமைந்துவிட்டது. ஒரு காலத்தில் பைசன்டைன் மற்றும் ஒட்டமான் சாம்ராஜ்ஜியங்கள் கோலோச்சிய நகரம். மேற்சொன்னவைகளின் மூலமாக கலாச்சாரம் மற்றும் வளமான சரித்திரக் கலவை உருவானது மாத்திரமல்ல தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் ஏற்பட்ட குழப்பமும் சேரும். இத்தகு பின் புலங்களால் இந்நகரின் மக்களுக்கு தங்களது உறவுகளின் வேர்களைக் குறித்த சந்தேகமும் பாதங்கள் பாவியிருக்கும் பல்கூறு கலாச்சாரங்களிலிருந்து தங்களின் அடையாளத்தை மீட்டெடுப்பது குறித்த ஐயப்பாடும் அடங்கும்.

இதனிடையே பாமுக் தனது குழந்தைப் பருவம் கூச்சலும் குழப்பமும் மிகுந்த பெரியதொரு குடும்பத்தில் கழிந்த விதத்தையும் அதனின்று துருக்கிய ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களை அவர் கண்டறிந்ததையும் அவர்கள் எவ்வாறு பாமுக்கின் வாழ்வை பாதித்தார்கள் என்பதையும் தெளிவாக கூறுகிறார்.

இஸ்தான்புல் நகரத்தின் பண்டைய செழுமையைக் குறித்து நேர்மையுடனும் வியப்புடனும் அவரது எண்ணங்கள் அசைபோடுகின்றன.

9. Other Colors

1999ல் வெளியான இந்த கட்டுரைத் தொகுப்பு அடக்குமுறையின் கீழ் வாழும் குர்த் இன மக்களின் மீது நிகழும் வன்முறையைப் பற்றி பேசுகிறது. 2008ம் ஆண்டு வசந்தத்தில் இது ஆங்கிலத்தில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

10. Museum of Innocence

அடுத்த நாவலுக்கான முயற்சிக்களில் இப்போது மிகுந்த முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறார் பாமுக்.

இவை தவிர அவர் The Secred Face என்ற திரைப்படத்திற்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

இலக்கிய கடத்தல் அல்லது இலக்கிய திருட்டு:

இலக்கிய கடத்தலுக்கான விமர்சனமும் பாமுக் மீது வீசப்பட்டது. அவரது “The White Castle”, நாவலின் சில பகுதிகள் இன்னொரு நாவலிலிருந்து திருப்பட்டது என்பதே அது. அதை மறுக்காமல் ஒப்புக்கொண்டு இன்னொரு நாவலின் பெயரை மிகத்தாமதமாகவே தனது ஒப்பீடுகளின் வரிசையில் சேர்த்தார்.

அவரை ஆதரித்துப் பேசும் விமர்சகர்கள் இத்தகு தன்மை பின்நவீனத்துவத்தில் காணப்பெறும் “intertexuality”யே (ஒரு எழுத்தாளரின் படைப்பில் பல்வேறு இதர படைப்புகளின் சாரம், பகுதிகள் இடம் பெறுவது) என்பது அவர்களின் வாதம். இதை இலக்கிய திருட்டு என்று கொள்வது கூடாது. உதாரணமாக, Umberto Ecoவின் The name of the Rose என்ற படைப்பில் பல்வேறு இதர நாவல்களின் சாரம் இடம் பெறுவது நாம் கவனிக்கலாம். ஆனால் படைப்பின் இறுதியில் நூல் ஒப்பீடுகளின் பட்டியலில் அவையாவும் இடம் பெற்றுள்ளன. ஆனால் பாமுக்கின் படைப்புகளில் அவ்வாறு இடம் பெறாததை ஒரு குற்றச்சாட்டாகவே பாமுக்கை குறைகூறும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவையனத்திற்கும் ஓர்ஹான் பாமுக்கின் வாய் பதில் பேசாமலிருந்தாலும் அவரின் மனசாட்சி அதே மவுன மொழியைப் பேசாது என்று நாம் நம்பும் அதே சமயத்தில், ஒரு தனி மனிதனுக்குள் ஊடாடித் திரிந்து அவ்வப்போது அவனது மன எழுச்சிகளில் மற்றும் வீழ்ச்சிகளில் பங்குபெற்று ஓயாது புத்துயிர் பெற்றலையும் அந்த இரண்டாவது குரலை மிக நேர்த்தியாக அவரது படைப்புகளில் பதிவு செய்திருப்பது அவரை ஒரு தன்னிகரற்ற படைப்பாளியாக காலத்தை தாண்டி முன்னிருத்துகிறது.

ஒப்பீடுகள்:

1. http://en.wikipedia.org/wiki/Orhan_Pamuk
2. http://www.orhanpamuk.net/
3.http://www.theparisreview.org/viewmedia.php/prmMID/5587
4. http://en.wikipedia.org/wiki/Kurdistan
5. http://en.wikipedia.org/wiki/Armenia


pampattisithan@gmail.com

Series Navigation

பாம்பாட்டி சித்தன்

பாம்பாட்டி சித்தன்