கடித இலக்கியம் – 22

This entry is part [part not set] of 29 in the series 20060915_Issue

வே.சபாநாயகம்


மட்றம்பள்ளி,
27-8-80
அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம். உங்களுக்குத் திடுமென ஒரு சந்தோஷத்தை அளிக்கிறேன். அடுத்த மாதம் 27-9-80 சனிக்கிழமை எங்கள் ஆசிரியர் சங்கத்தில் ஆசிரியர் தினக் கொண்டாட்டம். அதற்குத் தங்களைச் சிறப்புச் சொற்பொழிவாளராக அழைத்துத் தருவதாக ஒப்புக் கொண்டு விட்டேன். தாங்கள் 26-8-80 வெள்ளி ஒருநாள் மட்டும் லீவு போட்டால் போதுமானது.

இவ்வாறு நாம் சந்தித்தால்தான் உண்டு போலும். எனவே தாங்கள் தயவு செய்து தவறாமல் இவ்வழைப்பை ஏற்றருள வேண்டுகிறேன். ஆசிரியர்தின விழா என்பதைக் கருத்தில் கொண்டு தாங்கள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் பேசலாம். வேறு பிரமுகர்கள் யாரும் இல்லை. ஒரு தனியறையில் நண்பர்கள் கூட்டம் போல் அமைதியாக நடக்கும். செயலாளர் ஆகியோர், என்னிடம் பேராம்பட்டில் பணியாற்றிய நெருங்கிய நண்பர்கள்.

வாருங்கள். நிறையப் பேசலாம். இயலுமானால் 29-9-80 திங்களும் லீவு போட்டு விட்டு வாருங்கள். வெள்ளக்குட்டையில் ஆறுமுகத்தைச் சந்திக்கலாம். அல்லது, ஜவ்வாது மலையில் உள்ள ஜம்னாமரத்தூருக்குப் போகலாம். தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய வானோக்கும் நிலையம் அங்கு உள்ளது. Telescopeல் எல்லாம் பார்க்கலாம் . Saturn ring தெரிகிறதாம். மலைவளம் மாளாது உள்ளது.

தென்னார்க்காடு ஜில்லா, பெரிய சமவெளியானது ஆதலால், ஜம்னாமரத்தூர் என்னும் மலைப்பகுதிக்குச் செல்வது, தங்களின் நெடுந்தூரப் பயணத்துக்கு- இன்னும் ஒரு, நியாயம் செய்வதாகும்.

தாங்கள் வருவதற்கு முன்பு நான் சென்னைக்கு ஒரு பயணம் போய் வர நேரும் போல இருக்கிறது. 18 அதிகாலையில் JK ரஷ்யா புறப்படுகிறார்.16 பிற்பகல் 17,18 – ஆக ஓர் இரண்டரை நாட்கள் லீவு போட்டுவிட்டுச் சென்னை போக
நேரும். போவதைத் தவிர்க்கலாம் என்றுதான் பார்க்கிறேன். தண்டபாணி வற்புறுத்துகிறது. எத்தனையோ அருமையிலும் அருமையான சந்தர்ப்பங்களில், இடையூறு செய்யும் எத்தனையோ விதிகளை வென்று நாம் அவருடன் இருந்திருக்கிறோம். ரஷ்யாவிற்கு வழியனுப்புவதில் இல்லாமல் போவதா என்னும் இந்நினைவே பெருஞ்சக்தி கொண்டு எல்லாவற்றையும் வென்று என்னைச் சென்னைக்குப் போக வைக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்!

தங்கள் குறுநாவல், தீபம் கதை இரண்டுமே நான் பார்க்கவில்லை. நான் படித்தது தினமணிச் சுடரில் வெளிவந்த, ஒரு ரிட்டையரான ஆசிரியரின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய அந்த ஒரு கதைதான். அதில், அரிய கதைப் பொருள் இருந்தது.

நான் எழுதுவது எப்போதும் போல் தான் இருக்கிறது. 1973ல் எழுதிய “கிருஷ்ண ரெட்டியாரின் குதிரைச் சவாரி” என்னும் கதை இந்த வருஷ ஜூலைக் கடைசியில் அலிபாபா பத்திரிகையில் வந்தது. மத்தியில் என்னென்னவோ எழுதினேன். நான் இப்பொழுது, கதை என்பது எப்படி எழுதுவது என்று தெரியாத, வேறு ஏதோ கலை சம்பந்தமான கச்சப் பொருள்கள் நிரம்பிய மனமுள்ள மனிதன். ஆரம்ப எழுத்தாளன். அனுப்புகிற கதைகளும் எழுதுகிற கதைகளும் பிரசுரத்துக்கு ஆகாத அந்த “ஓர் எழுத்தாளனின் ஏமாற்ற உணர்ச்சியை” அனுபவிப்பதற்கு எனக்குப் பூரண வாய்ப்பிருக்கிறது. ஆனால் என் பிரச்சினையாக அது இல்லை.

நான், வெள்ளைத் தாளில் ஓர் அறுபது பக்கங்களுக்கு இருந்தாலும் கூடப் போதும், இன்னும் ஒரு நாவல் எழுதலாம். கல்பனாவில் வரும். என்ன எழுதுவது என்கிற யோசனையை ஒரு முடிவுபெறாத வேலையாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் உங்கள் சமீபத்திய புத்தகத்தைக் கொண்டு வாருங்கள்.வாழ்க்கையை உணர்கிற உங்களது நாடிப் படபடப்பில்தான் உங்கள் மற்ற எல்லாக் கதைகளையும் நாங்கள் படிக்கிறோமே! பத்திரிகை வாசிப்பு என்பது என்ன பெரிய விஷயம்? எல்லாவற்றையும் பேசுவோம். ஒருவர் மாற்றி ஒருவர் நெடு நேரம் பேசுவோம். ஒருவர் மாற்றி ஒருவர் நெடு நேரம் கேட்டுக் கொண்டிருப்போம். இருவரும் கலந்து கலந்து பேசுவோம். எல்லாக் கதைகளையும் அது பேசி விட்ட மாதிரி.

நாம் எழுதுகிற விஷயங்களும் கதைகளும் சம்பந்தப்பட்ட நிர்ணயிப்பு அல்ல, நமது உறவின் தலையெழுத்தை நீட்டித்துக் கொண்டிருப்பது! ஆத்மாவின் தேவைகளாக நமது உறவுகள் எப்பொழுதும் ஏதோ ஒரு ரூபத்தில் நிகழ்ந்து கொண்டிருக்
கின்றன. நாம் அவற்றைப் பேணுபவர்கள் என்பதும், கதை எழுதுவது என்பதும் சரிசமமான பொறுணர்ச்சியோடு கூடியதாகும். இரண்டிலுமே தோல்வியுறல் ஆகாது.

இந்த மாதிரி இன்னும் ந்¢றைய விஷயங்கள் இருக்கின்றன. நாம் பார்ரத்துக் கொள்ளாதிருப்பது போய், கடிதமெழுதாதிருக்கிற காலத்துக்கும் வந்து விட்டோம். இதை உடனடியாக முறிப்பது அவசியம். எனவேதான் இந்த ஆசிரியர் சங்க ஆயுதம்.

எங்கு நோக்கினும் வாழ்க்கை அற்புதமாக இருக்கிறது. சொந்தப் பிரச்சினை களால் பாதிக்கப்படாத பரம நிலையில் நின்று மிகத் துணிச்சலாகச் சொல்ல வேண்டிய விஷயம் இது. ஆறுமுகத்தின் குடும்பம், வையவனின் குடும்பம் என்று நண்பர்களின் குடும்ப வாழ்வை நெருங்கிச் சென்று அறியும் போது, எவ்வளவோ ஆசீர் வாதங்களுடனும் அழகுகளுடனும் அவை அமைந்திருப்பது தெரிகிறது. அடிக்கடி தங்களையும் நினைத்துக் கொள்வதுண்டு.

இந்த ஆண்டு எனக்கு மறக்க முடியாத விருந்தினர்களின் வருகை நிரம்பிய ஆண்டாகும். அந்தப் பட்டியலில் தாங்களும் எப்படியும் இடம் பெற்று விட வேண்டும். தவறாது வருக.

தங்கள் கடிதத்தில், குழந்தைகளின் படிப்பு முதலிய விவரங்களை எழுதுங்கள். உங்கள் ஒப்புதல் கடிதம் வந்ததும், வழிவிவரம் இறங்க வேண்டிய இடம் முதலியன குறித்து எழுதுகிறேன்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்