உண்மையின் ஊர்வலங்கள் (3)

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

புதியமாதவி


அவள் கண்களில் எப்போதும் புன்னகையின் மின்னல்.

அவள் செயல்களில் எப்போதும் மழைத்தூறலின் ஈரம்.

வலிகள் அவள் உடலை வாட்டி எடுத்து

உடலின் சதைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டிருந்தப்போது

மும்பையின் பேய்மழை பெய்து கல்யாண் லோக்கிராம் குடியிருப்பில் முதல் மாடி

வரை வெள்ளக்காடாய் மூழ்கிக்கிடந்தபோது.. அனைவருக்கும் பசித்தீர்க்கும் அன்னையாய் இரவு பகல் பாராது

சப்பாத்தி, சாயா என்று அவள் ஓடி ஓடி

உழைத்தததைக் கண்டு வியப்படைந்தவர்கள் பலர்.

1996 ஜூன் மாதம் மும்பையின் புகழ்ப்பெற்ற மருத்துவமனைகளில் ஒன்றான

ஹிந்துஜா (Hinduja Hospital) அவள் இன்னும் 6 மாதங்கள் கூட உயிருடன்

இருக்கமாட்டாள் என்று சொல்லிவிட்டார்கள்.அ வளுடைய இதயத்தின் வால்வுகள்

அனைத்தும் செயலழிந்த நிலையில் இரத்தக் குழாய்களின் அடைப்புகளால் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல்

இருப்பதை மிகவும் துல்லியமாக அவர்களின்

அறிவியல் சாதனங்கள் சொல்லியது.

அவளுக்கு அப்படி என்ன வியாதி ? சிறுகுழந்தையிலேயே இதயத்தின் வால்வுகளில்

துவாரம் இருந்தது. அறுவைச்சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி இருக்க இன்று

வாய்ப்புகள் ஏராளம். ஆனால் அன்றைய சூழலில் உயிர்ப்பிழைப்பதும்

உடல்நலத்துடன் வாழ்வதும் உறுதி செய்யப்படவில்லை. ஓராண்டுக்கு மேலாக

பெற்றோர்கள் சீர்வரிசை சண்முகராசன் – தவமணி இருவரும் மற்ற மூன்று

குழந்தைகளைப் பற்றியும் கவலைப்படாமல் மருத்துவமனையிலேயே தங்கள்

வாழ்க்கையைக் கழித்தார்கள். டாக்டர். R. வரதாச்சாரி – இதயம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கான

மிகச்சிறந்த மும்பையின் புகழ்ப்பெற்ற மருத்துவரின்

தனிக்கவனிப்பில் அவள் நாட்கள் கடந்தன. அவளோ அறுவைச்சிகிச்சைக்கு

மறுத்துவிட்ட நிலையில் இல்லம் திரும்பினாள்.

நாட்கள் வருடங்களாக ஓடியது. அவளுடைய தங்கையின் திருமணம், தம்பிகள் இருவருக்கும் திருமணம், அவர்களின்

குழந்தைகள் என்று அவளின் உறவு

வட்டம் விரிந்தது.

கல்யாண் லோக்கிராம் பகுதியில் அவள் முதன் முதலாக ‘டைனிடாட் ‘ என்ற

மழலையர் பள்ளியை ஆரம்பித்து நடத்தினாள். மனநலம் பாதிக்கப்பட்ட

குழந்தையும் அவள் அன்பில், திறமையில் வளர்ச்சி அடைந்தது, வாழ்வை

நோக்கி வெற்றி நடையுடன் நடக்க ஆரம்பித்ததும் அவளின் சாதனைகள்.

மருந்து, மாத்திரைகளில் அவள் நாட்கள் ஓடியது. உடல் சுருங்கியது. சருமங்கள்

வெளிறிப்போனது. நடப்பதும், ஏறுவதும் அவளுக்குச் சிரமமாகப்போன நிலையிலும்

அவள் சிரித்துக் கொண்டே குழந்தைகளுடன் குழந்தையாய் வலம் வந்தாள்.

தன் முடிவை அவள் அறிந்திருக்கக் கூடும்..

தன் தம்பி மகன் 5 வயது சிறுவனைஅழைத்துக்கொண்டு கோவிலுக்குப் போய்வந்து தன் பெயரில் தனியாக இருக்கும்

வங்கி கணக்கை முடித்து விட்டு அமைதியாக இல்லத்திற்குவந்து வாங்கிவந்தப் பூக்களைத் தொடுத்துக்

கொண்டிருந்தாள்.. யாருக்கும் தெரியவில்லை

அந்தப் பூக்களை அவள் தனக்காகவே தொடுக்கிறாள் என்பது!

ஞாயிற்றுக்கிழமை..(18.09.05) அசதியில் தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்று வீட்டில் இருந்தவர்கள் நினைக்க

.. நேரம் கடந்தது..ஒன்பது மணி வரை அவள் தூங்கியதில்லையே என்று அவள் அம்மா எழுப்பினாள்.. சில்லிட்டு

இருந்தது

அவள் உடல்.. புன்னகையுடன் படுக்கையில் படுத்திருந்தாள் அவள்.

தன்வலிகளையே வலிகளாக எண்ணி விதியின் பெயர்ச்சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் நடுவில் தன்

வியாதியை அந்த வியாதி அவள்

உடலுடன் நடத்திய போராட்டத்தை கடைசிவரை கண்ணீர்விடாமல்

புன்னகையுடம் அவள் போராடியதை இன்று அவளைப் பற்றி அறிந்த

பலருக்கு அவள் வாழ்க்கை ஒரு பாடமாகிவிட்டது.

அவளைப் பற்றி குறிப்பிடும்போது அவளுடைய மருத்துவர் வரதாச்சாரி சொல்கிறார்

. ‘ அவள் இத்தனை வருடங்கள் உயிருடன் வாழ்ந்ததே மருத்துவ உலகின் அதிசயம் என்று ‘

நாஞ்சில் நாடனின் புதினங்களை மிகவும் விரும்பி வாசிப்பவள்.

‘என்னுடைய புத்தகங்கள் சிலவற்றை வாசிக்கவில்லை, அனுப்புங்கள் என்று சொன்னாள்.. நான் அனுப்புவதற்குள்..

இனி எப்போது அவள் வாசிக்க கூடும் ? ‘

என்று இச்செய்தியைப் பற்றிப் பேசும் போது நாஞ்சில்நாடன் அவர்கள் என்னிடம்

சொன்னார்.

கவிஞர் அறிவுமதி என்னிடம். ‘அவள் மும்பையில் உங்களிடமில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது

என் உள்ளம் ‘ என்கிறார்.

ஓய்வில்லாத உழைப்பு, எப்போதும் மகிழ்ச்சி ததம்பும் முகம், எல்லோருக்கும்

உதவும் மனம், எந்த விமர்சனங்களைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்குச் சரியெனப் பட்டதைத் துணிந்து செய்யும்

இயல்பு..

சாதி, மதம், மொழி எல்லைகளைக் கடந்து அவள் மனிதர்களிடம் காட்டிய

மனிதநேயம்..இன்றும் மும்பையில் அவளைப் பற்றி அறிந்த அனைத்து குடும்பங்களுக்கும் அவள் ஓரு வழிகாட்டியாக

வாழ்ந்துவிட்டு போயிருக்கிறாள்.

எழுத்தாளர் முனைவர் மு.வ. அவர்களால் ‘பாவை ‘ என்று பெயரிடப்பட்ட அவள்

பாவை விளக்காய்ப் பலர் உள்ளங்களில் இன்னும் ஓளிவீசிக் கொண்டுதான்

இருக்கிறாள்.

====

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை