சுந்தர ராமசாமியின் வாழ்க்கை -படிமங்கள் நிறைந்த அழகிய கவிதை!

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

செழியன்


சுந்தர ராமாசாமியின் வாழ்க்கை படிமங்கள் நிறைந்த அழகிய கவிதை. மறுபடி, மறுபடி படிக்கப் படிக்க புதிய புதிய அனுபவங்களையும், உச்சங்களையும் அவருடைய வாழ்க்கையும், படைப்புகளும் ஏற்படுத்துகின்றன. நல்ல கவிதையை அழிக்க முடியாதது என்பது போல என்றென்றுக்கும் அழிய முடியாதது அவருடைய வாழ்க்கை. வாழ்க்கை மட்டுமல்ல அவருடைய படைப்புகளும் தான்.

நமது வாழ்க்கை காலத்தில் மறைந்துவிட்ட தலை சிறந்த ஒரு எழுத்தாளரான சுந்தர ராமசாமியினை நினைவு கூற கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கனடாவில் உள்ள பல எழுத்தாளர்களும், வாசகர்களும் கலந்து கொண்டு சுந்தர ராமசாமி பற்றிய தமது நினைவுகளையும், கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்

சிறந்த தமிழ் சிறுகதை எழுத்தாளரும், சுந்தர ராமசாமியின் நண்பருமான அ. முத்துலிங்கம் பேசுகையில் “ சுந்தர ராமசாமி இறப்பதற்கு முன் தனது கொப்பியில் கவிதை ஒன்றை கிறுக்கிவைத்துள்ளதாகத் தெரிகின்றது. அவர் இறந்ததின் பின்னர் தான் அதைப் பார்த்துள்ளனர். அது சொல்லும் கவிதை மரணத்தைப்பற்றியது.”

“அது மட்டுமல்ல, மரணம் ஒரு கவிதை போன்றதா ?”ஸ.. என்று தனது நண்பர் ஒருவருக்கு சுந்தர ராமசாமி கூறியுள்ளார். இவற்றில் இருந்து அவர் அண்மைக்காலமாக மரணம் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கின்றார் என்று எண்ணத் தோன்றுகின்றது”.

சுராவின் நினைவுக் கூட்டத்திற்கு தலைமை வகித்த பூரணி மகாலிங்கம் தனது உரையில் “ இலக்கியத்தை தனது மூச்சாக கொண்டவர் சுரா. அவர் எழுத்தாளர் மட்டுமல்ல. அவர் ஒரு துரோணர். இலக்கியத்தை தனது அடுத்த தலை முறைக்கு கற்றுக் கொடுத்த ஒரு வித்தகர். இன்று தமிழ் நாட்டில் இருக்கும் நவீன எழுத்தாளர்கள் இவரிடமே கற்றுக் கொண்டனர். இலக்கியம் தொடர்பான நமது அடிப்படை மதிப்பீடுகளையெல்லாம் விமர்சித்த மனிதர். அத்தகை சிறப்பு மிக்க தலை சிறந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியை அவர் வாழ்ந்த தமிழ் நாடு கெளரவிக்கவில்லை என்பது எமக்கு ஒரு பெரிய மனவருத்தம். அதே சமயம், இத்தகைய தலைசிறந்த இலக்கிய கர்த்தாவுக்கு, கனடாவில் ‘இயல் விருது’ வழங்கப்பட்டதை எண்ணும் போது எமக்குப் பெருமையாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.

“தனது உடல் எந்தவிதமான சமயச்சடங்குகளும் இல்லாமல் எரிக்கப்படவேண்டும் என்று சுந்தர ராமசாமி எழுதி வைத்துள்ளார். அவருடைய வார்த்தைகளின் படியே எந்த வித சமய சடங்குகளும் அற்று அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. இதனை பார்க்கும் போது அவர் ஒரு பிராமணர் என்று அவரது பிறப்பின் மீது சொல்லப்பட்ட அபான்டமான பழிக்கு பதில் அவர் தனது மரணத்தின் மூலமாக சொல்லிவிட்டார். அவருக்கு நான் தலை வணங்குகின்றேன்” என்று மறுமொழி ஊடகவியலாளர் சிவதாசன் குறிப்பிட்டார்.

“பொதுவாக பார்க்கும் போது இலக்கிய வாதிக்கும் இலக்கிய படைப்புக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இருக்கும். அதை நாம் படிப்பிக்கும் போதே குறிப்பிடுவதுண்டு. அதை புரிந்து கொள்ளாவிடின் எழுத்தாளர்களை சந்திக்கும் போது நமக்கு பெரும் ஏமாற்றமே ஏற்படும். ஆனால் இதை எல்லாம் மீறி சுராவின் படைப்புகளை வாசித்து விட்டு அவரை சந்திக்கும் போது எந்த வித ஏமாற்றமுமே கிடைக்கவில்லை. படைப்புக்கும், படைப்பாளிக்கும் இடையில் எந்த வித வித்தியாசத்தையும் சுந்தர ராமசாமியிடம் காணமுடியபவில்லை. அப்படியான படைப்பாளிகளை காண்பது அரிது” என்று ரொறன்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்வா கனகநாயகம் குறிப்பிட்டார்.

“உயர்ந்த மனிதாபிமான மனிதர். இந்திராகாந்தியின் காந்தியின் அவசரகால சட்டநிலைமைக்குள்ளும் அதற்கு எதிராக கவிதை எழுதியவர்”

இவ்வாறு சுந்தர ராமசாமியைக் குறிப்பிட்டு பேசிய காலம் சஞ்சிகையின் ஆசிரியர் செல்வம் சுராவின் கவிதைகளையும், சுரா எழுதிய ஜே.ஜே சிla குறிப்புகளில் இருந்து பல பக்கங்களை தனது மனப்பதிவில் இருந்து சொல்லிக்காட்டினார்.

இவர் இந்தப்பக்கங்களை பாடமாக்கிப் பேசுகின்றாரோ என்ற ஐயம் சிலருக்கு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் சுந்தர ராமசாமியின் படைப்புளை எப்போதும் தனது மனத்தில் இருந்து சொல்லிக்காட்டும் அளவுக்கு அவருடைய படைப்புகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர் இவர் என்பதுதான் உண்மை.

சேரன், தேவகாந்தன், பா.ஐ.ஜெயகரன், சுமதி ரூபன், திருமாவளவன், செழியன் மற்றும் பலபேர் சுந்தர ராமசாமி- மற்றும் அவருடைய, படைப்புகள் பற்றிய சிறப்புகளை சிலாகித்துப் பேசினார்கள்.

பெருமதிப்புக்குரிய எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் நினைவுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் உள்ளவர்கள்

இடது: சிவதாசன் (மறுமொழி ஊடகவியலாளர்)

நடு: பூரணி மகாலிங்கம் (நினைவுக் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர்)

வலது: சுமதி ரூபன் ( எழுத்தாளர்)


chelian@rogers.com

Series Navigation

செழியன்

செழியன்