விடுபட்டவைகள்-3 -தீர்க்கம்

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

மதியழகன் சுப்பையா


வண்ணங்கள் பற்றி எப்பொழுதாவது சிந்தித்திருகிறோமா ? நமக்கு எத்தனை வண்ணங்களின் பெயர்கள் தெரியும் ? ஒவ்வொருவராய் எண்ணிக் கொள்வோம். இவ்வளவு குறைவான வண்ணங்களையா நாம் காண்கிறோம் ? வண்ணங்களுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கக் கூடும். இல்லையேல் நம் பயன் பொருட்கள் அனைத்திற்கும் வண்ணம் தேர்வதை வழக்கமாக ஏன் கொள்ள வேண்டும். ஒரு சில பொருட்களுக்கு நிரந்தர வண்ணங்களை கொடுத்து அடையாளப் படுத்தி விட்டோம்.

கருப்பு நிறம் கண்டனத்தையும் துக்கத்தையும் குறிக்கிறது. மஞ்சள் மங்கலத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கிறது. பச்சை பசுமையையும் வளத்தையும் குறிக்கிறது. வெள்ளை தூய்மையையும் சமாதானத்தையும் குறிக்கிறது. இப்படி ஒவ்வொரு வண்ணமும் வெவ்வேறு குணங்களின் குறியீடாக அமைகிறது. கருப்பு பற்றி கட்டாயம் சொல்ல வேண்டும். திடம் மட்டுமன்றி திமிர் பிடித்ததும் கூட. இல்லையேல் கோடி மக்கள் செல்லும் பாதையை முட்டாள்த்தனம் என விலகி நின்று புதுப் பாதை காட்டியிருக்காது.

சிகப்பு வண்ணமும் அப்படித்தான். சிகப்பு வண்ணத்தை மதத்தின் அடையாளமாக ஆக்கி வைத்திருப்பது ஏன் ? மதம் ஆபத்தானது என்பதை உணர்த்தவோ ? இல்லை குருதியின் வண்ணம் என கூச்சலிடவா ? ‘மதம் ‘ பிடித்தவர்கள் அடிக்கடி பார்க்கத் துடிக்கும் சிறப்பு வண்ணம் இதுதான். கோபத்தையும் புரட்சியையும் வெளிப்படுத்தவல்லது சிகப்பு. காதலர்கள் கொண்டாடுவதும் சிகப்பைத்தான். காதலும் புரட்சி தானே.

வண்ணம் என்பதற்கு அழகு என்றும் பொருள் உள்ளது. வண்ணங்கள் இல்லையெனில் அழகு என்பது ஏது ? அழகான அனைத்துப் பொருட்களும் வண்ணமிக்கதாகவே உள்ளது. வண்ணம் இல்லாத பொருட்கள் அழகானதா என்பதை தெரிய வண்ணமில்லா சூழலில் வாழ்ந்திருக்க வேண்டும். அப்படி ஒரு காலம் இருந்ததாக வரலாற்றுப் பதிவு இல்லை.

குணத்தை குறிப்பதும் வண்ணம் தான். வெண்தாமரையாள், செந்தாமரையாள், பொற்றாமரையாள் என தங்கள் பெற்றிருக்கும் தாமரை வண்ணங்களுக்கு ஏற்ப மூதேவியரின் குணங்கள் உள்ளதாக மத இலக்கியம் காட்டுகிறது.

வண்ணங்கள் வடிவத்தைக் குறிக்கும் என்பது உண்மை. வண்ணங்கள் வகைகளையும் குறிக்கும். வண்ணங்கள் பொல்லாத சாதியையும் குறிக்கும். இப்படி பலவாறு பரவி இருக்கிறது வண்ணங்கள்.

வண்ணங்கள் மகிழ்ச்சியைத் தருமா என்றால், தரும். எண்ணங்களுக்கும் வண்ணங்களுக்கும் தொடர்பு உண்டாவெனில் , உண்டு. வண்ணங்கள் ஆற்றல் மிக்கது. வண்ணங்கள் கொடியது. வண்ணங்களை விட்டு விலகிச் செல்வது ஆகாத காரியம். ஓவியப் பரப்பில் வண்ணங்களின் முக்கியத்துவம் நாம் அறிவோம். வெறும் வண்ணங்கள் சில நிகழ்வுகளை, பறவைகளை, மிருகங்களை மற்றும் மனிதர்களையும் கூட நினைவு படுத்துகின்றன.

வீட்டின் உத்திரத்தில் வெள்ளை வண்ணம் பூசப் படுவதன் காரணம் வெள்ளை சோர்வை உண்டாக்கி தூக்கத்தை தருவதால்தான். மருத்துவமனைகளின் வெள்ளைக்கும் இதையெ காரணமாக கொள்ளலாம். வண்ணங்கள் மகிழ்ச்சியை, சோர்வை , கோபத்தை என உணர்ச்சிகளை தூண்டக் கூடியதாகவும் உள்ளது.

வண்ணங்கள் கலந்து புதிய வண்ணம் பிறக்கிறது. புதியவை மீண்டும் கலந்து இன்னும் புதியவை பிறக்கிறது. இது தொடர்ந்துகொண்டே இருக்கும். புதிய வண்ணங்கள் பிறக்கிற போது வண்ணங்களோடு தொடர்புடைய அனைத்தும் புதுப்பிக்கப் படுகிறது.

வண்ணங்கள் குறித்து இன்னும் ஆழமாக சிந்திக்க முடியும். ஆனால் மூழ்கி இறந்து விடுவோமோ என்ற பயம் தொற்றிக் கொள்ளும். வண்ணங்களைக் கொண்டாட ஒரு விழா இருக்கிறது. ஆனால் இது விரசம் கலந்து வியாபாரமாகி விட்டது.

வண்ணமிழத்தல் வருத்தமானது. வண்ணம் இழத்தல் வனப்பை இழத்தலுக்கு ஒப்பாகும். வண்ணமிழத்தல் முதிர்ச்சியையும் அனுபவ ஆற்றலையும் சுட்டுவதாகும். வண்ணம் இழப்பதை விடவும் வண்ணம் பெறுதலில் வேட்கையும் ஈடுபாடும் அதிகம்.

ஆதார வண்ணங்கள் கலந்து, கோடி வண்ணங்கள் பிறந்து விட்டன. இன்னும் பிறக்க இருக்கின்றன. மனித சமுதாய வளர்சிக்கும் அழிவுக்கும் இதுவே ஆதார சூத்திரம் எனலாம்.

‘இயற்கையாகவோ செயற்கையாகவோ செலுத்தப் படும் ஒளியில் காணக்கிடைப்பது வண்ணமாகும் ‘ என்பது வண்ணத்தின் வரையறை.

( தேடுவோம்….)

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா