பொறியில் சிக்காத பிதாமகன்.

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

அம்மாளு மாமி.


மிகவும் திகிலோடு பார்த்து இனிமையாக ‘ஏமாந்த படம் ‘ என்றுதான் கூறுவேன். கலாரீதியாக தமிழ் சினிமா முன்னேற வேண்டிய தூரம் ஏராளம் என்றாலும் பிதாமகன் இன்றைய தமிழ் திரையுலகில் ஓரளவு முக்கியமான மைல் கல் என்று கூறுவது மிகையாகாது. ஜெயகாந்தனுக்கு கிரெடிட் கொடுத்திருக்க வேண்டும். நந்த வனத்தில் ஓர் ஆண்டி கதை ஓரளவு கணிசமான வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும். பதினொண்ணாம் வகுப்பில் ஒரு காலத்தில் தமிழ் துணைப் பாடத்தில் இருந்த பல சிறுகதைகளில் ஒன்று.

ஏன் பிதாமகன் பார்த்து இனிமையாக ஏமாந்தேன் ? சமீபத்தில் சன்ஸ் ரூம் என்ற இத்தாலிய சினிமா காண நேர்ந்தது. பிதாமகனுக்கும் சன்ஸ் ரூம் கதை விஷயத்திலோ காட்சி அமைப்பிலோ எந்த விதமான தொடர்பும் கிடையாது. மரணம் தொடர்பான, பிறர் துயரம் குறித்து எந்தவிதமான உணர்ச்சியும் அற்று சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற மனநிலை கொண்ட ஒருவன் தன்னைச் சேர்ந்த ஒருவனின் துயரமான மரணத்துக்கு ஆற்றும் எதிர்வினைதான் பிதாமகன் கதை. ஒரு இனிமையான குடும்பத்தில் நிகழும் டான் ஏஜ் மகனின் துயரமான மரணம், மற்றும் மரணத்துக்குப் பின்னர் நிகழும் சம்பவம் குறித்த படம் சன்ஸ் ரூம். ஏன் ஒருபடம் மற்றதை நினைவு படுத்த வேண்டும் ?

பொதுவாக தமிழ் சினிமா ஹிந்தி சினிமா மற்றும் சில ஹாலிவுட் மசாலாக்களை பார்க்கையில் எனக்கு ஒரு உதாசீனம் தோன்றுவது வழக்கம். தமிழ் மொழி மீது எந்த துவேஷமும் கிடையாது. தமிழ் இலக்கியம் அளவு தமிழ் திரைப்படங்கள் தரம் வாய்ந்தவை அல்ல என்பதுதான் உண்மை.

சீனுக்கு சீன் சின்னப்பையன் முதல் பெரியவர் வரை ஊகிக்க முடிந்த கதை, டூயட், க்ரூப் நடனம், சண்டைக்காட்சி. இந்த சினிமாக்களைப் பார்க்க நேரும் தமிழ் சமூகம் குறித்து பரிதாபமே தோன்றும். மசாலா டைரக்டர்கள் தவிர மணிரத்தினம், ராஜீவ்மேனன், விக்கிரமன் போன்ற ‘வித்தியாசமான ‘ டைரக்டர்களும் ஸ்டாரியோடைப்பாகவே கதை அமைக்கிறார்கள். மின்சாரக் கனவு, அலைபாயுதே, பிரியமான தோழி அனைத்தும் வித்தியாசமான ஸ்டாரியோ டைப் படங்களே. பிதாமகன் பார்க்கையில் ஒரே பதட்டம். எந்தக் கணத்தில் ஸ்டாரியோ டைப்பாகக் கதை மாறப் போகிறதோ என்பதுதான் பதட்டம். க்ரூப் டான்ஸ் இல்லை. சிம்ரன் நடனம் ஒரு சமயோசிதமான சமரசம் என்று கருதுகிறேன். சித்தன் கதாபாத்திரத்துக்கேற்ற சண்டைக்காட்சி. எந்த சீனில் சித்தனும், சூர்யாவும் வில்லனால் கற்பழிக்கப் பட்ட பெண்களின் பிள்ளைகள், ஆகவே, அண்ணன் தம்பி என்று கதை மாறிவிடுமோ என்று திகில். கஞ்சா விற்கும் பெண்ணுக்கும் சித்தனுக்கும் காதல் அரும்பி, வில்லன் இறுதி சீனில் சித்தனின் காதலியை கடத்தி, சித்தனின் மண்டையில் அடித்து, சித்தன் சித்தம் தெளிந்து, போலீஸ் இன்ஸ்பெக்டராகி விடுவாரோ என்றெல்லாம் திகிலோடு பார்த்தேன். நல்லவேளை சித்தன் சித்தனாகவே இறுதிவரை இருக்கிறார். பிதாமகன் டைரக்டர் சன்ஸ்ரூம் டைரக்டர் போலவே சாத்தியப்பட்ட பொறி எதிலும் சிக்காமல் தனித்து நிற்கும் வண்ணம் கதை படைத்திருக்கின்றனர். இதைத்தான் இனிமையான ஏமாற்றம் என்றேன்.

ஆம் சன்ஸ்ரூமில், மனநிலை கெளன்சிலிங் போன்ற ஒரு தொழில் புரியும் அப்பா, அவருக்கு மனைவி, டான் வயதில் ஆசைக்கு ஒரு மகள், ஆஸ்திக்கு ஒரு மகன் என்ற இனிமையான குடும்பம். முதல் சில காட்சிகளில் எந்தவிதமான செயற்கைத் தனமும் இல்லாமல் குடும்பத்து இனிமை காட்டப் படுகிறது. ஸ்க்யூபா டைவிங் செய்யப் போன மகன் இறந்துவிடுகிறான். மகனின் இறப்புக்குப் பின்பு குடும்பம் மிகவும் துயரப்பட்டு போகிறது. தந்தையால் தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. தாயார் மிகவும் துயரமடைந்தவராக இருக்கிறார். மகனின் இறப்புக்குப் பின்னர், கதையை நம்ம ஊர் கமலாக இருந்தால் துப்பறியும் கதையாக மாற்றி, பழிக்குப் பழி வாங்கி இருப்பார். ரஜனியாக இருந்தால், மகனின் மரணத்துக்குப் பின்னர் விடலைத் தனத்தை அறவே விட்டொழித்து ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா ஆன்மீக வாதியாகி வில்லனைப் பழி வாங்கி இருப்பார். மணிரத்னம், சுஜாதா வசனத்தோடு மெலோட்ராமா லைனில் கதையைக் கொண்டு சென்றிருப்பார். சங்கர், துப்பறியும் கதை, மெலோட்ராமா, சுஜாதா வசனத்தோடு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், ந்யூசிலாந்து ஆஸ்திரேலியா சிங்கப்பூர், ஜப்பான், ராஜஸ்தான் என்று ஊர் ஊராகச் சென்று டூயட்டும், க்ரூப் நடனமும் சேர்த்து தெறமை காட்டி இருப்பார். நாமெல்லாம் படத்தில் உள்ள வர்க்க புத்தி, பெண்ணடிமைத்தனம், ஆபாசம் குறித்து மாய்ந்து மாய்ந்து எழிதித் தள்ளி இருப்போம். சன்ஸ்ரூம் டைரக்டர் சாத்தியப்பட்ட எந்த விதமான பொறியிலும் சிக்கவில்லை.

மகனின் இறப்புக்குப் பின்னர் சன்ஸ்ரூம் தந்தையால் தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. மரணம் குறித்து துயரம் கொள்ளுவது வெட்டியானின் தொழில் தர்மம் அல்ல. நோயாளியின் துயரம் குறித்து கண்ணீர் சிந்துவது கெளன்சிலிங் தொழில் புரிபவருக்கு சாத்தியம் இல்லை. மகனின் மரணத்துக்குப் பின்னர், ஒரு நோயாளியின் துயர் குறித்து சன்ஸ் ரூம் தந்தையார் கதா பாத்திரத்துக்குக் கண்ணீர் விட நேர்கிறது. தொழிலில் கவனம் செலுத்த இயலாமல், மகனின் மரணம் அவரை மிகவும் அலைக்கழிக்கிறது. மகனை சந்தித்த ஒரு பெண்ணின் கடிதம் தபாலில் வருகிறது. அந்தப் பெண்ணுக்கு மகனின் மரணம் குறித்து தெரிவித்து வீட்டுக்கு வரும்படி அழைக்கிறார்கள். அந்தப் பெண், ஊர்சுற்றிப் பார்க்கும் மற்றொரு ஆண் நண்பரோடு வீட்டுக்கு வருகிறாள். மொத்தக் குடும்பமும் அவர்களை சுவிட்சர்லாந்து எல்லை வரை காரில் கொண்டு சென்று விடுகிறது. ஒவ்வொரு தருணத்திலும் துப்பறியும் கதையாகவும், மெலோட்ராமாவாகவும் ஆகும் சாத்தியக் கூற்றின் விளிம்பு வரை கதை செல்கிறது.

பிதாமகனைப் போலவே சன்ஸ்ரூம் எந்தவிதமானப் பொறியிலும் சிக்காத கதை. இருப்பினும் பாலாவுக்கு சில கேள்விகள். சூர்யாவின் காதலி கதா பாத்திரத்துக்கு என்ன அவசியம் ? சூர்யாவைப் போலீசில் பிடித்துக் கொடுக்கவும், சூர்யா அடி படுவதை சித்தனிடம் வந்து கூறவும் ஊர்க் காரர்களில் ஒருவர் என்று யாரையாவதுக் காட்டியிருந்தால் போதுமே ? சிம்ரன் நடனமும், சூர்யாவின் காதலியும் வணிக சமரசம்தானே ? கஞ்சா விற்கும் பெண்மணிகள் எல்லோரும் தள தளவென்றா இருக்கிறார்கள் ? சித்தனை சித்தனாகவும் பிராடை பிராடாகவும், சிம்ரனை சிம்ரனாகவும், வில்லனை வில்லனாகவும், வில்லனின் மனைவியை நல்லவேளை தமிழ் சினிமா பாணியில் கருணையான பெண்ணரசியாகக் காட்டாமல், அசல் வில்லியாகவும், காட்டிய தாங்கள் முக்கிய கதாபாத்திர பெண்கள் விஷயத்தில் கோட்டைவிட்டதாகத்தான் தோன்றுகிறது. கருப்பு நல்ல நிறமே. துறுதுறுப்பான கரிய நிறப் பெண்கள் தள தள சிகப்பு நிறப் பெண்களை விட கவர்ச்சியானவர்களே. இனி வரும் சினிமாக்களிலாவது கதாநாயகிகளை கருப்பாகக் காட்ட டைரக்டர்கள் முன் வர வேண்டும்.

aparna177@hotmail.com

Series Navigation

அம்மாளு மாமி.

அம்மாளு மாமி.