பிறவழிப் பாதைகள் – அன்னம் மீரா

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

கோபால் ராஜாராம்


அன்னம் பதிப்பகத்தின் மீரா மரணச் செய்தி தமிழ் இலக்கியப் பதிப்புலகத்திற்கு ஒர் பெரும் இழப்பு. வருத்தமும் சோகமும் அளிக்கும் ஒரு செய்தி அது. சிவகங்கை நகரை தரமான புத்தகங்களின் பதிப்பிற்கான மிக முக்கியமான நகராய் ஆக்க முடியும் என்று எவரும் நினைத்திருக்க முடியாது. சார்பற்ற முறையில் எல்லோருடைய புத்தகங்களையும் வெளியிட்டவர் மீரா. மீராவின் கவிதைத் தொகுப்பை மிகச் சிறப்பாகக் கருதாத வெ சாவின் புத்தகத்தைக் கூட வெளியிட அவர் தயக்கம் காட்டியதில்லை. ‘அன்னம் விடு தூது ‘ பத்திரிகை சுபமங்களாவிற்கு ஒரு விதத்தில் முன்னோடி. அதன் பக்கங்களில் இழையோடிய நகைச்சுவையும் சரி , தரமான எழுத்தும் சரி மிகச் சிறப்பானவை. தொடர்ந்து வரமுடியாமல் போனாலும், சென்னையிலிருந்து தான் சிறப்பான வெளியீடுகளோ, பத்திரிகைகளோ வரவேண்டும் என்ற அவசியம் இ இல்லை என்று நிரூபித்தது மீராவின் சாதனை. திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் அவர் திறந்த புத்தக விற்பனை நிலையங்களும் பல இலக்கியவாதிகள் மையம் கொள்ளக் காரணமாயின.

நான் கல்கத்தாவிலிருந்த போது பாதல் சர்க்காரின் ‘ஏவம் இந்திரஜித் ‘தை மொழியாக்கம் செய்து அனுப்பிவைத்தேன். அப்போது அவருடன் எனக்கு நேரடி அறிமுகம் எதுவும் இல்லை. ஆனால், உடனடியாக அவர் வெளியிடச் சம்மதம் தெரிவித்து எழுதினார். பிறகு என் கவிதைத் தொகுதி வந்தபோதும் சரி, பாதல் சர்க்கார நாடகங்கள் தொகுப்பு வெளிவந்தபோதும் சரி அவர் காட்டிய ஆதரவு மறக்க முடியாதது.

கி ராஜ நாராயணனின் கதைத் தொகுதியாகட்டும், கோணங்கியின் தொகுதியாகட்டும், நாஞ்சில் நாடனின் தொகுதியாகட்டும் எல்லா தரப்பு இலக்கியவாதிகளையும் கெளரவித்தவர் அவர். சிறு பத்திரிகை இயக்கத்தை ஒட்டி வளர்ந்த தரமான புத்தக வெளியீட்டில் அவர் முயற்சி முதன்மையானது. Snobbery இல்லாத அணுகல் அவருடையது. ஏராளமான வாசகர்களைத் தமிழுக்குக் கொண்டு சேர்த்ததில் அவர் பணி முக்கியமானது.

சமீபத்தில் அவருக்குக் கவிக்கோ விருது வழங்கப் பட்டது.

சரியான எழுத்தைத் தேடிச் சென்று அரவணைத்துக் கொண்ட அவர் தன் பதிப்பகத்திற்கு அன்னம் என்று பெயரிட்டதும் பொருத்தமே. அவர் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

***

gorajaram@yahoo.com

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்