இந்தியாவின் சாதனை மறைக்கப்பட்ட மர்மம் !!

This entry is part [part not set] of 36 in the series 20080717_Issue

கோமாளி



இந்தியாவை நினைத்துப் பெருமைப் படக்கூடிய விஷயம் ஒன்று உண்டு. ஆனால் அந்த விஷயத்தை அரசு மூடி மறைக்க வேண்டியதன் காரணம் என்ன என்று இது நாள் வரை எனக்குப் புரியாத மர்மமாகவே இருக்கிறது. எத்தனை பெரிய சாதனையை சர்வ சாதாரணமாக செய்துள்ளோம். யாருக்கும் இதைப் பற்றிய விழிப்புணர்ச்சியே இல்லை. அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. விழிப்புணர்ச்சி இயக்கம் நடத்தி பொது மக்களுக்கு இந்த அரிய பெரும் சாதனையினை கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அரசு இதையெல்லாம் செய்யாமல் ரோடு போடுகிறேன், பாலம் கட்டுகிறேன் என்று தேவையற்ற வேலைகளை செய்து வருகிறார்கள்.

ஆமாம்.. 2001 இல் மூவாயிரம் பெட்டிமுதல் நான்காயிரம் பெட்டி வரை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதியானவை இன்று இருபதாயிரம் பெட்டிகளாக இறக்குமதியாகின்றன. ஆம். ஷாம்பெயின் என்ற அற்புதம் தான் அது. பச்சைக்கலர் பாட்டிலில் ஜிகுஜிகுவென இருக்கும். பார்த்தாலே பரவசம் தான். அப்படி ஒரு அற்புதத்தை தயாரித்தவனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யனும். ஆனால் பாருங்க நமீதாவுக்கு கோயில் கட்டப்போறதா சொல்றாங்க. என்ன ஒரு அக்கிரமம். அரசு இதையெல்லாம் கவனிக்க கூடாதா….

தமிழ் நாட்டில் நடந்த அற்புதம் ஒன்று இருக்கிறது. 2002 இல் 239 லட்சம் பெட்டிகளாக இருந்த மதுவென்னும் அற்புதத்தின் விற்பனை 2007 இல் 450 லட்சம் பெட்டிகளாக உயர்ந்து இருக்கிறது. இந்தச் சாதனையைக் பொது மக்கள் அறிய வெளியிடாமல் அரசு மெளனம் காப்பது தான் அதிசயமாக இருக்கிறது. இந்தியாவின் மொத்த மது விற்பனை 15 கோடி பெட்டிகளாக உயர்ந்து இருப்பது கேட்பவர்களை உணர்ச்சி வசப்படச் செய்யக்கூடிய செய்தி ஆகும். இன்னுமொரு செய்தி இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் விற்பனையாகும் மதுவின் அளவு மற்ற மாநிலங்களில் விற்பனையாகும் மதுப் பெட்டிகளில் பாதி அளவு என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இந்தியாவில் வருடம் தோறும் 15 சதவீத வளர்ச்சி காண்கிறது மது விற்பனை.

இந்தியாவின் மக்கள் தொகையில் 21 சதவீதம் தான் மது குடிக்கும் மக்கள் இருக்கிறார்கள். 100 சதவீதமாக்க விழிப்புணர்வு பிரச்சாரம் உதவி செய்யும். உடனடியாக அரசாங்கம் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் 177 லட்சம் பெட்டிகள் பீரும், 144 லட்சம் பெட்டிகள் பிராந்தியும், 87 லட்சம் பெட்டிகள் ரம்மும், 33 லட்சம் பெட்டிகள் விஸ்கியும், 8 லட்சம் பெட்டிகள் ஜின்,வோட்கா மற்றும் ஒயினும் விற்பனை ஆகிறது என்பது மிகவும் வருத்தத்துக்குரிய செய்தி ஆகும். 1983ல் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட டாஸ்மாக்கின் செயல்பாடுகள் முற்றிலும் சீர் குலைந்து கிடப்பது மிகவும் வேதனைக்குரியதாகும். உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து விற்பனையினை அதிகப்படுத்த செயல்பட வேண்டும். இதற்காக தனி வாரியம் அமைத்து விற்பனை அதிகரிக்க செய்தி தாள்களில் விளம்பரமாகவும், ஊரெங்கும் பிரச்சாரமும், விழிப்புணர்வு பொதுக்கூட்டங்களும் நடத்தி விற்பனை அதிகரிக்கச் செய்ய வேண்டும். மற்ற கட்சிகள் தனது கட்சிக்காரர்களை இந்த விற்பனைக்கு ஊக்கம் கொடுக்குமாறு செய்தல் வேண்டும். ஆளும் அரசுக்கு உதவிக்கரம் நீட்டினால் பொது மக்களால் கொண்டாடப் படுவார்கள்.

இன்னும் சில விஷயங்களைச் செய்தால் மது விற்பனை அதிகரிக்கும். மதுவை உணவாக அங்கீகாரம் செய்தல் வேண்டும். பள்ளிகளில் மதிய உணவின் போது தண்ணீருக்குப் பதிலாக பீரைக் கொடுக்க வேண்டும். கல்லூரிகளில் பீர், பிராந்தி, விஸ்கி விற்க கடைகளைத் திறக்க வேண்டும். புனித இடங்களான கோவில், மசூதி மற்றும் சர்ச்சுகளில் நிரந்தரமாக கடைகளை இயங்கச் செய்தல் வேண்டும். அதுவுமின்றி ரேஷன் கடைகளிலும், பெட்ரோல் பங்குகளிலும் மது விற்பனைக் கடைகளைத் திறந்தால் விற்பனை பல மடங்கு எகிறும் என்பது என்னைப் போன்ற புள்ளியியலாளர்களின் கருத்தாகும்.

மருத்துவர்களிடம் பீர் குடித்தால் தான் உடல் நலத்திற்கு நல்லது என்று சிகிச்சை பெற வருபவர்களிடம் சொல்லி மருந்துக்குப் பதிலாக பீரையோ அல்லது பிராந்தியையோ அல்லது விஸ்கியினையோ அருந்தினால்தான் நல்லது என்று சொல்லி மருந்துச் சீட்டில் எழுதிக் கொடுக்குமாறு அறிவுருத்தப்பட வேண்டும்.

உலக ஆரோக்கிய நிறுவனத்திடம் பீர் குடிப்பதால் வரும் நன்மைகள் என்னென்ன வென்று அறிக்கை தயார் செய்யச் சொல்லி மீடியாக்களில் விளம்பரம் செய்யப்பட வேண்டும். அதற்கு இலவசமாக பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் நடிகர் நடிகைகளை விளம்பரப் படத்திற்கு நடிக்க வைக்க அரசு நடவடிககை எடுக்க வேண்டும். அப்படி நடிக்கும் நடிக நடிகைகளுக்கு இந்திய அரசு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.

இதையெல்லாம் விட்டு விட்டு இந்திய அரசாங்கம் இன்று அணுக் கொள்கை அது இதுவென்று காலத்திற்கு ஒவ்வாதவற்றை செய்து வருவது இந்திய குடிமகன்களை வேதனை கொள்ளச் செய்வதாக இருக்கிறது.

எங்கும் குடிமகன்கள் நிறைந்து இருக்கும் பாரதமே நாளை வல்லரசாக உருவெடுக்கும் என்பதனை எவரும் மறந்து விடலாகாது. அப்படி மறந்தால் அது ஒரு வரலாற்றுத் துரோகமாகவே இருக்க இயலும் என்பது எவராலும் மறுக்க இயலாத உண்மை.

குறிப்பு : ஒரு பீர் கேட்ட போது இரண்டு பீர் வாங்கினால் ஒரு சிப்ஸ் பாக்கெட் இலவசம் என்று சொல்லிய டாஸ்மாக்கின் விற்பனைப் பிரதிநிதியின் கடமை உணர்ச்சியின் நினைவாக எழுதப்பட்ட கட்டுரை. யாராவது நடவடிக்கை எடுக்கணும் என்று கிளம்பினால் நான் சரண்டர். ஏதோ பொழைக்க எழுதிய கட்டுரை இது. என்னையும் செத்த பொழைக்க விட்டு விடுங்க..ப்ளீஸ்…


komaalee@gmail.com

Series Navigation

கோமாளி

கோமாளி