தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? இப்பேரணையைக் கண்ணீரால் கரைத்தோம்! கனிவு, கவனம், கண்காணிப்பு, கட்டுப்பாடுடன் பேரணைகள் கட்டப்பட வேண்டு

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்

கண்ணீரால் காத்தோம்! .. (சுதந்திரப் பயிர்)

பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ ?

பாரினிலில் மேன்மைகள் வேறினி யார்க்கோ ?

(சுதந்திர தாகம்)

விண்ணில் இரவிதனை விட்டுவிட்டு எவரும்போய்

மின்மினி கொள்வாரோ ? ….

மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்

மாண்பினை இழப்பாரோ ?

(சுதந்திரப் பெருமை)

மகாகவி பாரதியார்

கருமுகில் தாங்கிய

பெருமழை நீரோட்ட வெள்ளத்தை

தடுத்து நிறுத்தும்

எதிர்ப்புக் கற்சுவர் ஒன்றை

எடுத்துக் கட்டி

நெருக்கமான கார்ஜிஸ் ஊரில்

ஏரி ஒன்று மெல்ல மெல்ல

எழுந்து

தலைதூக்கும்!

சைன அதிபதி, மா சே-துங் [Mao Tse-tung]

‘பேரணைகள் அதிகார வர்க்கத்தின் கைப்பலத்தைக் காட்டும், அரசியல் இலஞ்ச ஊழல் மண்டிய, சமூக நேர்மையற்ற நினைவுச் சின்னங்கள்! பொறிநுணுக்கத் துறையில் அவை நிதிச் சிக்கனம் அற்றவை! உயிர்ப்பயிர் இனங்களுக்கு கேடு விளைவிப்பவை! உலக வழக்கற்றுப் போனவை! பேரழிவு செய்து சூறையாடும், ஊமைப் போர் போன்றவை. கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பேரணைகள் நம்மில் சிலரைக் கடுமையாகப் பாதித்து, இந்த தேசத்தைப் (இந்தியாவை) படுகுழியில் தள்ளி இருப்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். ‘

அருந்ததி ராய் (ஏப்ரல் 1999)

‘பேரணை நதியிணைப்புத் திட்டங்களை அமைக்கும் போது, சூழ்வெளி மண்டலங்களை மாற்றாமல் நிறைவேற்ற முடியும் என்று நினைப்பது ஓர் புனைத்துவ எண்ணம் [Myth]. இந்திய ஜனத்தொகைப் பெருக்கத்தால் உண்டாகும் சமூக நெருக்கடி அழுத்தம், இப்போது மாந்தரின் பல கொள்கைகளை மாற்றி விட்டது. மழைக்கால மாதங்களில் ஐந்து அல்லது ஆறு தடவைகள் பெருமூட்டக் கருமேகங்கள் உடைந்து, நூறு நாட்களுக்குள் 80% மழைப் பொழிவுகள் ஏற்பட்டு, இந்திய மாநிலங்களில் நீர்வளப் பரிமாற்றத்தைச் சீர்கேடாக்கி யுள்ளன. எல்லா விதமான ஏற்பாடுகள், முயற்சிகள் நீர்த்தேக்க வழிகளுக்கும், நீர்ப்பாசான வசதிகளுக்கும் முக்கியமானதால், அவை முழு மூச்சுடன் தேடப்பட்டு அமைக்கப்பட வேண்டும். வேறு தொழில் மூலத் துறைகள் மருத்துவ மனைகள், பல்கலைக் கழகங்கள், இரசாயனச் சாலைகள் போன்று, மக்களுக்குப் பல நல்ல பேரணைகள் பலன் அளிப்பதையும், சில தொல்லைப் பேரணைகள் இன்னல் தருவதையும் ஒருவர் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். பிரச்சனை யுள்ள பேரணைகள், நதியிணைப்புத் திட்டங்களில் இதுவரை ஏற்பட்ட தடைகள், தாமதங்கள், பாதிப்புகள் யாவும் அரசாங்கத்துக்கும், அமைப்பாளர்களுக்கும், மக்களுக்கும், போராட்டவாதிகளுக்கும் நிறையப் பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளன!

உணவு தானிய உற்பத்தி குடிநீருக்கு அடுத்தபடி உலக நாடுகளுக்கு முக்கிய தேவையாகக் கருதப்படுகிறது. தற்போதைய ஜனப்பெருக்கப் போக்குமுறை மிகச் சிறந்த ஆளுமை திறமைகளைப் போதாமை யாக்கி, மேற்கொண்டும் அதிகமான நீர்தேக்கங்களை நிறுவனம் செய்ய வற்புறுத்துகிறது! நதியிணைப்புக் கால்வாய் வெட்டுவதிலும், அணைகள் கட்டுவதிலும் பாதிக்கப்படும் மக்களுக்குப் புதுக் குடியேற்ற வசதிகள், நிதி ஈடுபாடு அளிப்புகள் போன்றவற்றை ஏற்பாடு செய்யும் போது, கனிவு, கண்ணியம், கவனம், கருத்துப் பங்கீடு ஆகியவை மேற்கொண்டு, அவை நிறைவேறும் சமயத்தில் ஆழ்ந்த கண்காணிப்பும் அவசியம். வேறு பல வீட்டமைப்பு முற்பாடுகள் ஒப்பிட இருப்பதால், ‘நிலத்துக்கு ஈடு நிலம் ‘ என்பதை வெளிப்பட்ட மெய்ப்பாடாக எடுத்துப் போராடக் கூடாது! ஆண்-பெண் சமப்பாடு முக்கியத்துவம் அடைவதால், நீண்ட தூரம் நடந்து, பெண்டிர் நீர்க்குடம் சுமக்கும் நிர்ப்பந்தம், அருகிலே கிடைக்கும் நீர்த்தேக்கம் இரண்டும் சீர்தூக்கி சிந்திக்கப்பட வேண்டும். முடிவில் நான் சொல்வது: அணைகள் கட்டுவதில் கொள்கைப் பிடிவாத மின்றி திட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, முன்னோக்கமுடன் மிக்க கவனமாகக் கட்ட முற்பட வேண்டும். ‘

டாக்டர் பி.ஜி. வெர்க்கீஸ் (Dr. B.G.Verghese)

பேரணைத் திட்டங்களில் மட்டுமா இலஞ்ச ஊழல்கள் நிதி அளிப்பை அரித்து வருகின்றன ? பாரதத்தின் வாக்கெடுப்பு முறை முதல், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், கட்டுமானங்கள், வர்த்தகங்கள், வேளாண்மை, போக்குவரத்துகள், பாதுகாவல் துறை, மருத்துவ மனைகள் போன்று இலஞ்சம் தீண்டப்படாத துறைகளோ, மத்திய அரசு, மாநில அரசுகள், நகராட்சிகள் போன்று இலஞ்சம் தாண்டவம் ஆடாத நிறுவகங்களோ இந்தியாவில் எங்கும் இல்லை! அதுபோல் இலஞ்சம் திருவிளையாடல்கள் புரியாத உலக நாடுகளே கிடையா! இந்தியா போன்ற குடியரசு, அமெரிக்கா போன்ற தடியரசு, வட கொரியா, சைனா, பழைய சோவியத் போன்ற பொதுடமை அரசுகள், ஈரான் போன்ற மத ஆட்சி அரசுகள், பாகிஸ்தான் போன்ற இராணுவ அரசுகள், மற்றும் முடியரசுகள் எங்குதான் இலஞ்சக் கரையான்கள் அரிக்காமல் உள்ளன ? அரசாங்கமோ, குடிமக்களோ தனியாக அல்லது ஒருங்கிணைந்து இலஞ்சத்தை ஒழிக்க முற்படுமா ? அள்ளிக் கொடுக்கும் கைகளும், அதைக் கள்ளத்தனமாய் வாங்கும் கரங்களும் உள்ளவரை இந்தியாவில் வாழையடி வாழையாய் வளர்ந்து வரும் இலஞ்ச வழக்கத்தை நிறுத்த முடியாது!

அருந்ததி ராய், மேதா பட்கர் போன்ற போராட்டவாதிகள், பேரணைகள் அரசியல் இலஞ்ச ஊழல் மண்டிய நினைவுச் சின்னங்கள் என்றும், நிதி விரையம் என்றும், அவற்றால் பலாபலன் இல்லை என்றும், அவை மக்களைப் பாதித்து ஏழ்மை ஆக்குபவை என்றும் போரிட்டு நிறுத்த முற்பட்டு வருகிறார்கள். எல்லா அணைகளும் இன்னல் தந்து மக்களுக்குப் பாதிப்பை அளிக்கின்றனவா ? எத்தனையோ அணைகள் நீர்வளத்தைச் செழிக்க வைத்து நாட்டு வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன. சொத்தையான ஆப்பிள் சிலவற்றுக்காக அனைத்து ஆப்பிள் பழங்களையும் குப்பையில் போடு என்று பறைசாற்றுகிறார் அருந்ததி ராய்! இந்தியாவில் நிறுத்தப்பட வேண்டியவை பேரணைகள் அல்ல! நசுக்கப்பட வேண்டியவை, பேரணைகளின் அடித்தளத்தை அரித்து வரும், அதிகார வர்க்க வடிவில் நடமாடி வரும் இலஞ்சக் கரையான்கள்! தண்டிக்கப்பட வேண்டியவர் கனிவற்ற, கவனமற்ற, கட்டுப்பாடு இல்லாத, கடமை தவறும், கண்காணிப்பு அற்ற அதிகாரிகள், அரசாங்க ஊழல் அமைச்சர்கள்!

இந்திய நீர்வளத்துறை நிபுணர்கள் அரசாங்கக் குழுவில் இருந்தால் நதியிணைப்புத் திட்டங்களை ஆதரிப்பதும், அதை விட்டு வெளியே வந்தபின் அவற்றுக்கு எதிர்ப்பாக வாதிடுவதும், ஒருவர் பார்க்கும் போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. ஒருதலைக் காதல் அல்லது ஒருபுற மோதல் பாணியில் ஒற்றைக்கண் நோக்கமின்றி, திட்டங்களின் இருபுறக் கருத்துக்களையும் எடுத்துக் கூறி, அவற்றைச் சீர்தூக்கி உளவு செய்யும் நீர்வள வல்லுநர்கள் இந்தியாவில் மிக மிகக் குறைவே! அரசாங்க வர்க்கம் நிதி சுருட்டுவதிலும், அணைகட்டும் துறையினர் நிதி திரட்டுவதிலும் குறிப்பாய் இருந்து, பாதிக்கப்படும் குடிமக்கள் நிதி இழப்பிலும் போராடி வருவதால், நதி யிணைப்புத் திட்டங்கள் கால தாமதமாவதோடு, நாளடைவில் நிதி முழுவதும் கரைந்து போய் முடங்கி விடுகின்றன! சமூகப் போராட்டவாதிகள் இடப்பெயர்ச்சி நபர்களின் கண்ணீரைத் துடைப்பதாகக் கறுப்புக் கொடி காட்டிக் கொண்டு, பேரணைகள் எழவிடாமல் நிறுத்தி, நீர்ப் பற்றாக்குறையில் துன்புறும் மக்களைத் தண்ணீர் இல்லாத ஓர் பாழும் கிணற்றிலே தள்ளி விடுகிறார்கள்!

கட்டுரை ஆசிரியர்

சைனாவின் யாங்சூ நதியில் கட்டும் பேரணைகள்

இந்தியா, சைனா, திபெத், பாகிஸ்தான், பங்களா தேசம், நேபாளம், பூதான், மயான்மா (பர்மா), தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் ஆகிய பெருன்பான்மையான ஆசியா தேசங்களுக்கு நதிகளின் மூலம் ஆண்டு தோறும் ஏராளமான நீரோட்டத்தைப் பரிமாறிக் கோடான கோடி மாந்தருக்கு உயிரளித்து வருவது, உலகிலே உயர்ந்த சிகரத்தைத் தலையில் சுமக்கும் இமயமலை என்பது பலருக்குத் தெரியாது. இயற்கை அன்னை ஒருநாள் சினங்கொண்டு, என்றாவது ஒருநாள் பூதப் பூகம்பம் ஒன்று இமயமலைத் தொடரில் ஏற்பட்டு விட்டால், பாதிக்கப்பட்ட ஆசியாவின் அந்தப் பகுதியில் பிரளயம் உண்டாகி, ஏராளமான மக்கள் உயிரிழப்பதுடன் பேரின்னல்களையும் அடைவர் என்பதை உறுதியாக நம்பலாம்!

இமயத்தில் உற்பத்தியாகும் சைனாவின் யாங்சூ நதி [Yantze River] நைல், அமேஸான் நதிகளுக்கு அடுத்த படியாக மூன்றாவது உலகப் பெரும் நதியாகக் கருதப்படுகிறது! 1919 ஆண்டு முதல், கனவாக இருந்து, புரட்சி வீரர் சன் யாட் சென் [Sun Yat-sen] அந்த நதியில் கட்டத் தீர்மானித்த பேரணை! உலக ஜனத்தொகையில் இந்தியாக்கும் முந்தி முதலாவது இடத்தில் நிற்கும் சைனாவின் எஞ்சினியர்கள், அந்தப் பூத நதியில் 600 அடி உயரத்தில் நீரைத் தேக்கும், உலகிலே மிகப் பெரிய அசுரப் பேரணை, ‘கார்ஜிஸ் மூவணையைக் ‘ [Three Gorges Dam] கட்டத் திட்டமிட்டனர்! பேரணை கட்டி முடிந்த பின்பு, அதன் அடிவாரத்தில் அமைக்கப் பட்டு இயங்கப் போகும் நீர்மின்சக்தி நிலையம் 26 மின்சார ஜனனிகளை ஓட்டி, ஒவ்வொன்றும் தனியே 700 மெகாவாட் பெருக்கி, 18,200 மெகாவாட் ஆற்றலைப் பரிமாறும் தகுதி பெற்றது! 29 பில்லியன் டாலர் செலவில் உருவாகப் போகும் அந்த பூதத் திட்டம், 1998 ஆம் ஆண்டில் சுமார் ஒரு மில்லியன் பேரைப் பாதித்துப் புலப்பெயர்ச்சி செய்யும் என்று நம்பப்படுகிறது! 1.2 மைல் நீளத்தில் எழுப்பப்படப் போகும் அந்தப் பேரணை 2009 ஆம் ஆண்டில் முடிவு பெற்று, உலகிலே பொலிவு மிக்க நிலச்சரிவுக் காட்சியாய்க் கண்களைக் கவருமென்று எதிர்பார்க்கப் படுகிறது!

கார்ஜிஸ் மூவணை நிமிர்ந்து நிற்கும் போது, அது செயற்கையாய் உண்டாக்கிய ஏரி 370 மைல் நீளத்தில் நீர் வெள்ளத்தைத் தாங்கி யிருக்கும்! அந்த அசுர நீர்தேக்கம் மூழ்க்கி விழுங்கப் போகும் பரப்புகள், மாந்தர் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவை: 19 மாவட்டங்கள், 153 நகரங்கள், 4500 கிராமங்கள்! சூழ்மண்டலக் காப்பாளிகள் அந்த அசுரத் திட்டம் மீன்வள நகர்ச்சியை பாதிக்கும் என்றும், அரிய செடி கொடிகளை அழிக்கும் என்றும், நீர்வளத்தில் துர்மாசுக்களைப் பெருக்கும் என்றும் எச்சரிக்கை செய்து வருகிறார்கள்! கார்ஜிஸ் மூவணைத் திட்டம் செலவு மிக்க தென்றும், சூழ்வெளிப் பாதிப்புகளை எதிர்பார்க்கலாம் என்றும், வற்புறுத்தப்பட்ட இடப்பெயர்ச்சி வேதனைகள் என்றும், பரவிக் கொண்டுள்ள லஞ்சப் படுகுழி என்றும் பலரால் குறை கூறப்பட்டது! ஆனால் சைனா அரசாங்கம் யாங்சூ நதியின் வெள்ள சக்தியைக் கறந்து நாட்டுக்குத் தேவையான பேரளவு மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்றும், வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு உதவலாம் என்றும் பறைசாற்றி வருகிறது.

ஆனால் பொதுடமைச் சைனாவில் நடப்பதென்ன ? பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்தது, எல்லாம் வல்ல பரம்பொருள் மட்டுமன்று! பெரும்பொருள் நடமிடும் லஞ்ச ஊழல்கள் குடியரசு, முடியரசு, தடியரசு, மத அரசு, இராணுவப் படையரசு நாடுகள் போன்று, சைனாவிலும் பேரணைத் திட்டத்தில் திருவிளையாடல்கள் புரிந்தன! 2000 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் நாள், சைன அரசாங்கம், கார்ஜிஸ் மூவணைத் திட்டத்தில் பணிசெய்த 97 லஞ்ச அதிகாரிகளைக் கைதி செய்தது! ஆறு வருடங்களுக்குள் பேரணைத் திட்டத்தில், பில்லியன் கணக்கான யென் நாணயங்கள் [Chinese Currency Yuan (100 US Dollar =830 Yuan)] கரைந்துபோய், 140 லஞ்சக் குற்றச் சாட்டுகள் எழுந்தன! அரசாங்க உளவுத்துறை விசாரணைகள் தொடர்ந்து சைன அரசாங்க அரங்கில் விவாதங்கள் எழுந்தன! எதிர்ப்புக் கும்பல்கள் நிறுத்தப் போராடிய போது, செல்வந்த நாடுகளைப் பின்பற்றிய அதிகார வர்க்கம் கார்ஜிஸ் திட்டங்களை முழுமூச்சுடன் ஆதரித்தது! விசாரணைக்கு உத்தரவிட்ட சைனாவின் ஜனாதிபதி ஜியாங் ஸெமின் [Jiang Zemin], ‘எத்தகைய உயர்பதவியில் இருந்தாலும், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப் பட்டால் தண்டிக்கப்படுவார் ‘ என்று அறிவித்தார்.

அன்னிய நாடுகளின் உதவிகள் ஒவ்வொன்றாய் நிறுத்தமாயின. பேரணையின் வெள்ளக் கட்டுப்பாடுத் திறனில் ஐயுற்றதாலும், திட்டத்தின் சூழ்மண்டலப் பாதிப்பில் கவலை யுற்றதாலும், 1993 ஆம் ஆண்டில் அமெரிக்கா தனது பொறிநுணுக்க உதவியை அற்று விட்டது! மற்ற நாடுகள் பல முரண்பாடுகளால் புறக்கணித்து ஒதுங்கிக் கொண்டாலும், கனடாவின் ஏற்றுமதி விருத்தி நிறுவகம் [Canada ‘s Export Development Corporation] சைனா பேரணைத் திட்டத்தில் பங்கேற்றி யிருந்தது. ஆயினும் மனிதத்துவ உரிமைக்குப் பங்கம், சூழ்வெளிக் காப்பில் மீறல், உயிர்ப்பயிரினச் சிதைவு, மக்கள் சுகாதாரக் காப்பு ஆகியவற்றைக் கண்டும், காணாமல் உலக வர்த்தகப் பேரவை [World Trade Organization (WTO)] வழியாக, ‘பணத்துக்குப் பின்பு மனிதத்துவம் ‘ [Profit Before People] என்னும் பண்பற்ற நெறியில் அமெரிக்கா, கனடா நாடுகள் சைனாவுடன் வணிகப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தன.

அமெரிக்காவின் கொலம்பியா நதியில் அமைத்த பேரணைகள்

காவிரி நதி கர்நாடகாவில் பிறந்து தமிழ்நாட்டின் வழியாக ஓடி வங்கக் கடலில் கலக்கிறது! இரண்டு மாநிலங்களின் வழியாகக் கடந்துவரும் ஒரு காவிரி நதி ஓட்டத்தில் நீர்ப்பங்கீட்டுத் தகராறுகளில் எத்தனை சண்டைகள் ? எத்தனை சச்சரவுகள் ? எத்தனை வேதனைகள் ? கூட்டாட்சி மத்திய அரசு கூடப் நதிப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க முடியவில்ல! அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் 1200 மைல் ஓடிவரும் கொலம்பியா நதி கனடா தேசத்தின் ராக்கி மலைத் தொடரில் பிறந்து, அமெரிக்காவில் ஏழு மாநிலங்களின் வழியாக [ஆரகன், வாஷிங்டன், இதாகோ, மான்டேனா, நெவேடா, வயாமிங், யூடா] ஓடிக் கிளை நதிகளுடன் 400 அணை நீர்த்தேக்கங்களை நிரப்பி, குடிநீரும், நீர்பாசான வசதியும், தொழில்வள நீர்ப் பரிமாற்றமும் செய்து, பசிபிக் கடலில் சங்கமம் ஆவது உலகப் பெரும் விந்தைகளில் ஒன்று! 10,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு அப்பிரதேசங்களில், மனித நடமாட்டம் இருந்த போதிலும், 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் கொலம்பியா நதியின் போக்கும், தோற்றமும் பேரளவில் மனித இனத்தால் மிக்க அளவில் மாற்றம் அடைந்துள்ளன. கொலம்பியா நதி, அதன் கிளை நதிகள், அத்துடன் இடையே இணையும் நீண்ட பாம்பு நதி ஆகியவற்றின் மேல் 400 அணைகளை அமைத்து, அமெரிக்காவின் பசிபிக் வடமேற்குப் பகுதியின் சூழ்வெளி மண்டலத்தை மனிதர் கோரமாக்கும் மாபெரும் இயற்கை வளமாய் அவற்றைக் குறை கூறப்படலாம்! சில ஞானிகள் நதிப் பரப்பின் சூழ்மண்டலக் கோலம் பயமுறுத்தப் படுகிறது என்றும், மனிதர் கடந்த 150 ஆண்டுகளாய்க் கோரமாக்கிய சிதைவுகளைத் திரும்பவும் மாற்றித் திருத்த, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்காவில் கூக்குரலிட்டு வருகிறார்கள்!

கொலம்பியா நதி தீரத்தில் 400 மேற்பட்ட அணைகளும், கிளை நதிகளில் நூற்றுக் கணக்கான நீர்த் தேக்கங்களும் அமைக்கப்பட்டு, அவற்றின் நீரோட்ட சக்தியை எடுத்து நீர் மின்சார நிலையங்கள் சுமார் 21,000 மெகாவாட் ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. 1860 முதல் 1960 வரை நூறாண்டுகளாய் நதி தீரங்களில் ஐந்து விதமான ஸாமன் மீன்வளம் பெருகி, ஆண்டு தோறும் மில்லியன் பவுண்டு கணக்கில் மீன்களைப் பிடித்துள்ளதாக அறியப்படுகிறது. 1970 ஆண்டுகளில் நதிப் போக்கில் இன்னும் மாற்றங்கள் அடைந்ததால், மீன்வளம் சில பகுதிகளில் பாதிக்கப்பட்டும் வந்துள்ளது! 1870 ஆண்டு முதல் கொலம்பியா நதிப் பகுதிகளில் நீர்ப்பாசானம் செழிக்க ஆரம்பித்தது. 1920 ஆண்டுகளில் கூட்டரசு உதவியில் கொலம்பியா, மற்றும் அதன் கிளை நதிப் பிரதேசங்களிலும், பெரும் நீர்ப்பாசான வேளாண்மைத் திட்டங்கள் விருத்தி அடைந்தன. 1948 இல் கொலம்பியா சங்கமத் திட்டம் [Columbia Basin Project] உருவாகிக் கால்வாய்கள் கட்டப்பட்டு, வாஷிங்டன் மாநிலத்தின் மையப் பகுதியில் 600,000 ஏக்கர் பரப்புக்கு நீர்வளம் தொடர்ந்து பரிமாறப்பட்டது.

சங்கமத் திட்டத்தில் கால்வாய்களின் நெடுவே ஏராளமான நீரனுப்பு நிலையங்கள் [Pumping Stations], நீர்த்தெளிப்பு ஏற்பாடுகள் [Sprinkler Systems] அமைக்கப்பட்டு, உருளைக் கிழங்கு, பீன்ஸ், திராட்சைப் பழம், பழத்தோட்டக் கனிகள் [Orchard Fruits], அக்காரக் கிழங்கு [Beets], ஆல்ஃபாஃபா [Alfalfa] போன்றவை பெரும்பான்மையாக விளைவிக்கப் பட்டன. கொலம்பியா நதி தீர நீர்மின்சக்தி நிலையங்களின் மின்சாரம் அலுமினியத் தொழிற்சாலைகள், கப்பல் கட்டுதல், கடற்கரைத் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டு தொழில்துறைகள் அபிவிருத்தி அடைந்தன. இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் அணு ஆயுதம் தயாரிக்க, வாஷிங்டன் மாநிலத்தில் ரிச்லாண்டு நகர்க்கருகில் ஹான்போர்டு எஞ்சினியரிங் தொழிற்சாலையில் புளுடோனியம் பிரித்தெடுக்கும் இரகசிய கூடம் [Hanford Plutonium Plant, Richland, Washington] அமைக்கப் பட்டது.

நர்மதா நதிப் பேரணையில் மீண்டும் தர்ம யுத்தம்

2002 ஜூன் 16 ஆம் தேதி நர்மதா காப்புச் சங்கத் [Narmada Bachao Ansolan] தலைவி மேதா பட்கர் கூறியது, ‘குடியேற்ற இடத்துக்கு வெளியேற்றப் பட்ட நர்மதா நதிதீரத் திட்டப் பாதிப்பு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ‘இடப்பெயர்ச்சி, ஏழ்மை ‘ இரண்டிலும் தள்ளப் பட்டிருப்பதை எதிர்த்துப் போராடுவார்கள் ‘ என்று பறைசாற்றினார். அன்றுதான் போராட்டவாதிகளின் ’33 நாட்கள் உண்ணா விரதத் தர்மப்போரின் ‘ 27 ஆவது ஆரம்ப நாள்! உண்ணா விரதத் தீரர்கள் சிலரின் உடல்நிலை மிகவும் சீர்கேடாகி விட்டது! குஜராத் அரசாங்கம் இவற்றைப் பற்றி எதுவும் கவலை கொள்ளாமல், மான் அணைப் [Maan Dam] பணிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தது!

இவ்வாறு பேரணைக் கட்டுமானங்கள், நதியிணைப்புத் திட்டங்கள் சில போராட்ட வரலாறுகளை இந்தியாவில் படைத்துக் கொண்டிருக்கின்றன. கனிவு, கவனம், கடமை, கட்டுப்பாடு, கண்காணிப்பு, ஒருமைப்பாடு இல்லாத மத்திய, மாநில அரசாங்க வர்க்கத்தின் அதிகாரமும், தண்ணீருக்காகத் தவிக்கும் மாந்தர் ஒருபுறமும், தண்ணீர் வேண்டாம் என்று கண்ணீர் விடும் மக்கள் பரிதவிப்பு, போராட்டம் மறுபுறமும் குடியரசுப் பாரதத்தின் தினக்காட்சியாக மாறி மாறி நடந்து கொண்டுதான் இருக்கும்!

[முற்றும். புதிய தகவல் கிடைத்தல் கட்டுரை தொடரும்]

தகவல்கள்:

1. Address of A.K. Goswami Secretary of Water Resources, Govt of India [www.ficci.com/media-room/speeches-presentations/2003/Mar]

2. Interlinking Problems By: Suresh Prabhu Task Force Leader The Hindu Editorial [Aug 6, 2003]

3. In a Place where Nature Provides, Mankind Deprives By Christian Monitor [Oct 30, 2002] [www.csmonitor.com/2002/1030/p08s02-wosc.htm]

4. Linking of Major Rivers of India -Bane or Boon ? By: B.P Radhakrishna, Current Science Vol:84 No:11 [June 10, 2003]

5. Planning for Inter-Basin Transfers, Indian National Perspective Plan, Govt of India, Ministry of Water Resources [2003]

6. Linking Rivers Courting Disaster By: Darryl D ‘Monte [www.boloji.com/wfs195.htm] [July 13, 2004]

7. The River Linkages Payoff [June 2003] [www.indiatogether.org/2003/jun/opi-rivers.htm], River Links & Judicial Chinks By Videh Upadhyay [Sep 2003] [www.indiatogether.org/2003/sep/vup-sclinks.htm], Cart Before the Horse By Videh Upadhyay [May 2004] [www.indiatogether.org/2004/may/env-ilrreview.htm]

8. Interlinking Mirages By madurai collective [Dec 8, 2002] By Medha Patkar & L.S. Saravinda (The Hindu Dec 3, 2002)

9. River Linking: Boon or Folly -Water Voices HidustanTimes.com [www.hindustantimes.com/…]

10 The Doubtful Science of Interlinking By: Jayanta Bandyopadhyay & Shama Perveen [Feb 2004]

11 The Hindu Report By: Dr. Kalyanaraman Special Correspondent [April 16, 2003]

12 Govt of India, Ministry of Water Resources Task Force Resolution [December 13, 2002]

13 The Hindu Report By: A. Vaidyanathan [www.hindunet.com] [March 27, 2003]

14 Linking Rivers: Vision or Mirage ? By R. Ramaswamy Iyer, Former Secretary Govt of India Water Resources, Member, Integrated Water Resource Planning, Vision 2020 Committee of Planning Commission (Dec 2002) [www.flonnet.com/].

15 No Rethink on River Links Project: Centre By: J. Venkataraman ‘The Hindu ‘ [Aug 31, 2004]

[www.thehindu.com/2004/08/31/stories]

16 Calamity, Chennai ‘s Thirst By: T.S. Subramanian [March 26, 2004]

17 Case Study of Telugu Ganga Project, India (Water Rights, Conflicts and Collective Action) By: Balaraju Nikku (Doctoral Fellow, Irrigation & Water Engineering Group, Wageningen University Research Centre, Netherlands) [May 2004]

18 California Canal [www.bsi.vt.edu/welbuam/pictures/irrigation.html]

19 All American Canal Boulder Canyon Project [www.usbr.gov/dataweb/html/allamcanal.html]

20 Colorado River Aqueduct, Parker Dam, Central Valley Project By: Cactus Jim [June 2002]

21 Indian Priest uses Engineering Training to clean up Ganges By Denise Brehm, MIT News, Mass (U.S.A) http://web.mit.edu/newsoffice/tt/1998/dec09/ganges.html [Dec 9, 1998]

22 India ‘s Ganges A Holy River of Pollution -Clean the Ganges Campaign (Project 130) [Jan 13, 2001]

23 Sacred Ganges Carries Toxic Pollution By E-Law U.S. Staff Scientist Mark Chernaik [www.elaw.org/news/ebulletin/] (2001)

24 The Ganges River By: Ashok Dutt M.A. Ph.D. Pofessor of Geography University of Akron, OHIO, U.S.A.

25 The Tehri Dam Project By: Sudha Mahalingam The Hindu (June 1998)

26 Tehri Dam, IRN Fact Sheet By: (Oct 2002)

27 Statement of Supreme Court Ruling on Tehri Dam (Sep 1, 2003)

28 Questions Surrounded Fatal Tunnel Collapse in Tehri Dam Project By: Saibal Dasgupta (Aug 10, 2004).

29 Large Dam Construction is a Controversial Issue in India, BBC By: Ram Dutt Tripathi, Lucknow [Dec 8, 2001]

30 The Greater Comman Good -Article on Gujarat ‘s Sardar Sarovar Dam in Narnada River By: Arundhathi Roy [April 1999].

31 Untapped Water Resources in Yamuna River Basin By: R.N. Malik (June 26, 2003) [www.tribuneindia.com/2003/20030626/science.htm]

32 Interlinking of Rivers – Opening the Floodgate of Contradictions By: Sudhirendar Sharma.

33 River-Linking Plan: India to Go Ahead By: Golap Monir (Sep 26, 2004).

34 India ‘s Gigantic River Linking Project: Think about the Oceans too! By: Sudhirender Sharma.

35 River Linking Projects The Need, Earlier Proposals, About the Plan, Financing, Benefits & Implementation.

36 River Linking Scheme, Central Chronicle By: Pradip Saha [www.centralchronicle.com] (Sep 25, 2004).

37 R. Rangachari, Nirmal Sengupta, R. Ramaswamy Iyer, Pranab Banerji, and Shekar Singh, – Large Dams: India ‘s Experience, a WCD case study prepared as an input to the World Commission on Dams, Cape Town, [www.dams.org] [November 2000]

38 Narmada River Dams, India -Evaluation Against World Commission on Dams Guidelines.

39 Proponents & Critics of Dams Agree to Work Together -World Conservation Union [Apr 11, 1997]

40 Sardar Sarovar Dam Overflows as Main Canal Ruptures. Earthquake also Registered near Reservoir By: Yogini Khanolkar & Ashish Mandloi [Aug 16, 2004]

41. Worlds Rivers Imperiled By Chemicals & Development -Leah Krakinowski [April 17, 2004] [www.greennature.com]

42. Egypt ‘s Nile River Aswan Dam, Environmental Issues From: Wikipedia, the Free Enclclopedia.

43. Technical Aspects Against Interlinking of Indian Rivers By: P.V.R. Raja The Hindu News [www.thehindu.com] (September 23, 2003)

44. Gujarat Success Provides Cue for National River Linking [www.decanherald.com] (Feb 8, 2004)

45. Interlinking Mirages By: Medha Patkar & L.S. Aravinda.

46. Scheme to Link Major Rivers Divides India By: Keya Acharya, Hyderabad (July 17, 2003)

47. World Commission on Dams South Asian Consultations, Colombu, SriLanka (Dec 11, 1998)

a) Large Dams in India: Experience & Lessons Learned -By Dr. B.G. Verghese.

b) Environmental & Social Aspects of Large Dams: Problems of Planning, Implementation & Monitoring -By A. Kothari.

c) Controversies About Large Dams -By M.G Pande.

d) Large Dams -Destruction Not Development: The Experience of the Dams in the Narmada Valley in India (With the Exception og Sardar Sarovar Dam) -By S. Dharmadhikary.

e) Water Resources Development in India: The Need for Storages -By M.S. Reddy.

f) Performance of Large Dams in India: The Case of Irrigation & Flood Control -By H. Thakkar.

g) Strategy for further Growth & Environmental Sustainability of Hydro Power Projects -By Dr. B.S.K. Naidu.

h) Reassessing the Role of Large Dams in Metting Power Demand -By G. Sant, S. Dixit & S. Wagle.

48) China Begins Building World ‘s Largest Dam [Nov 8, 1997].

49) Three Gorges Dam Project Exposes Corruption, Power Struggle in China [July 25, 2000] (www.unfoundation.org/unwire/unwire.cfm#8).

50) Three Gorges Dam Begins to Crack, Big Dam Campaogn in India [June 18, 2002].

51) Columbia River, Snake River Dams in the U.S.A.

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [December 15, 2004] (Part 11)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா