கணினிக்கட்டுரைகள் 10. வினைத்தள மென்பொருள்கள்(Operating System Software)

This entry is part [part not set] of 11 in the series 20001008_Issue

மா.பரமேஸ்வரன்


வினைக்கலன் அல்லது வினைத்தளம் என்று தமிழில் அழகுற அழைக்கப்படும் கணினி மென்பொருள்கள் பற்றி நம்மில் பலர் அறிந்திலர். நான் முன்னமே கூறியது போல இணையத்தின் உலவி மென்பொருள்களை இயக்கத்தெரிந்திருந்தால் மட்டும் போதும் நாம் உலகின் பல அறிவுக்களஞ்சியங்களைத்திறந்து பார்க்கும் வாய்ப்பை பெற்றுவிடுகிறோம், இத்தகைய கணினியின் பயன்பாடு ஒரு எல்லைக்குள் சுருங்கிவிடாமல் பல்வேறு துறைகளில் பல்வேறு பணிகளுக்காக பரந்துவிரிந்துபட்டதாலும் நாம் அதுபற்றி அவ்வெவ்வேலைகளுக்காக அறிந்தவைகளைமட்டும் பயன்படுத்திக்கொண்டு அத்தோடு நிறுத்திக்கொண்டுவிடுவதாலும் கணினியைப் பயன்படுத்துபவர்கள் கூட அதுபற்றி அதிகம் அறிந்திராதவர்களாக இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாது இந்திய நாட்டின் கல்வித்தரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும் போது இது மிகவும் கவலைக்குரிய விசயம். நிறைய கணிணி பொறியியலர்கள் கூட கணினி பற்றிய அறிவு குறைந்தவர்களாக இருக்கிறார்கள். நாம் என்.ஐ.ஐ.டி மற்றும் ஆப்டெக், மற்றும் பல தனியார் கணினிப்பள்ளிகளை ஒப்பிட்டுப்பார்க்கும் போது இதில் குறைந்த காலம் பயிலும் மாணவர்கள் அரசுகல்லூரிகளின் பாடத்திட்டத்தைப்பயிலும் மாணவர்களைவிட கணினிபற்றிய நூனுக்க அறிவில் விஞ்சிநிற்பதைப்பார்க்க இயலும். எடுத்துக்காட்டாக ஒவ்வொரு புதிய மென்பொருள் பயன்பாட்டுக்கு வரும்பொழுது பழைய மென்பொருள் கழித்துவிடப்படுகிறது காரணம் அந்த பழைய மென்பொருளின் உதவியால் பல மணிநேரங்களில் செய்யக்கூடிய வேலையை புதிய மென்பொருளால் சில மணித்துளிகளில் செய்துமுடித்துவிட முடிகிறது. ஆகையால் அந்த பழைய மென்பொருள் தேவை அற்றதாகிவிடுகிறது. ஆனால் அரசு பாடத்திட்டம் பல ஆண்டுகளுக்கு இந்த பழைய மென்பொருளையே பயிற்றுவித்துவருகின்றன. அதிலும் இந்த கணினி மென்பொருள் துறையானது அடிக்கட தனது அறிவை விருத்தி செய்துகொண்டே இருக்கவேண்டிய ஒன்று, அப்படி இருக்கும் பொழுது இதனை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு அதிகமாக பயிற்சிவகுப்புகளை நடத்தி புதிய வரவுகளையும் அதுபற்றிய அறிவையும் ஊட்டுவது மிக அவசியம் அவை அரசு பாடத்திட்டத்தில் நடப்பது இல்லை. அதனால் அவர்களால் பயிற்றுவிக்கப்படும் மாணவர்களும் அவ்வாறே வெளிவருகின்றானர். அதிலும் சிலர் கணினிப்பொறியியல் படிக்கும் போது, இணையாக தனியார் பயிற்சி பள்ளிகளிலும் படித்து தனது தரத்தையும் புதிய மென்பொருள்களி பற்றிய அறிவையும் வளர்த்துக் கொள்கின்றனர். அவர்களாலேயே இத்துறையில் சிறப்பாக பங்கேற்க முடிகிறது என்றால் அது மிகையாகாது.

நான் மேலே கூறியது கணினித்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்துக்கொண்டவர்களுக்கு மட்டும் தான். ஆனால் சிலர் அதனை பயன்படுத்த மட்டும் செய்வர், அது பற்றிய நுனுக்க அறிவு அவருக்குத் தேவையுமில்லை. அப்படி இருக்கும்பொழுதும் அவர் பயன்படுத்தும் துறையில் புதிய மென்பொருள் வரவுகள் இருக்கும்பொழுது அதனைப்பற்றி அவர் அறிந்துகொண்டு அதைப்பயன்படுத்த முனைவது, சாலச்சிறந்ததும் கணினியை முழுமையாகப்பயன்படுத்தியதும் ஆகும். அதைவிடுத்து ‘எனக்கு கடிதம் எழுதவேண்டும் அதற்கு வேர்டுஸ்டார் என்னும் மென்பொருள் தெரியும் அதை மட்டும் தான் பயன்படுத்துவேன், நமக்கு எதுக்கு புதுப்புது விசயங்கள் நான் என்ன கணினிசம்பந்தப்பட்ட துறையிலா வேலைசெய்கிறேன் அதைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ள ? ‘ என்று சிலர் சொல்வது ‘உண்டு உறங்கினால் போதும் மற்றவையெல்லாம் எதற்கு ‘ என்பதுபோல இருக்கிறது.

ஆகவே கணினி அறிவு பெற்றவர்களும், அதனைப்பயன்படுத்துபவர்களும் கணினியின் மிக முக்கிய மென்பொருளான விணைக்கலன்கள் பற்றித் தெளிவாகஅறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.

முதலில் கணினியில் பயன்படுத்தும் மென்பொருள்களை நாம் இரண்டுவகையாகப் பிரிக்கலாம் அவைகள்

1. கணினியை இயக்கவும், பிற செயல்களைக் கட்டுப்படுத்தவும் பயன்படும் மென்பொருள்கள் (System Software)

2. பலதரப்பட்ட பணிகளைச்செய்யப் பயன்படும் மென்பொருள்கள் (Application software)

சில மென்பொருள்கள் கணினியை இயக்கப்பயன்படுகின்றன அத்தகைய மென்பொருள்கள்

இல்லாமல் நமது கணினி வேலைசெய்யாது. அவைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக வினைகலன்களையும், அதுமட்டுமல்லாது கணினியில் இணைக்கப்பட்டுள்ள, அச்சு எந்திரம்,விசைப் பலகை,ஒலிபெருக்கி, மின்நகலி போன்றவை இயங்குவதற்கு தேவையான இயக்கி மென்பொருள்களையும் கூறலாம்.

ஆனால் சில மென்பொருள்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வேலைகளைச் செய்யப் பயன்படுபவைகளாகும் எடுத்துக்காட்டாக நாம் கணினிகளை அச்சகங்களில் பயனபடுத்தும் போது அங்கு எழுத்துவடிவங்களை கோர்க்கும் மென்பொருள்களையும், அதே கணினி அலுவலகங்களில் பயன்படும்பொழுது கடிதம் எழுத, கணக்கியல் பணிகளுக்கும், அறிக்கைகள் தயாரிப்பதற்கான மென்பொருள்களையும், கட்டிடம்கட்டும் நிறுவணத்தில் கட்டிட வடிவங்களை வரையப்ப்யன்படும் மென்பொருள்களையும் பயன்படுத்துவது உண்டு. இத்தகைய மென்பொருள்கள் அவை அவை தேவைப்படும் இடங்களில் மட்டும் பயன்படுபவை மற்ற இடங்களில் அவைகளை நாம் நமது கணினியில் ஏற்றவேண்டும் என்ற தேவையில்லை.

ஆக இங்கு கணினிகள் விணைக்கலன்களின் உதவியில்லாமல் இயங்க முடியாது என்பது வெளிப்படையான உண்மை, இவையே கணினியின் அனைத்துவேலைகளையும் கண்கானித்து செய்துமுடிக்கின்றன. ஏதாவது ஒரு விணைக்கலனைப் பயன்படுத்தியே கணினி இயக்கலாம் அதத்கைய விணைக்கலன்கள் சிலவற்றை எடுத்துக்காட்டுகளுடன் காண்போம்.

ஒரு ஆங்கிலமொழி மட்டும் அறிந்தவரும், ஒரு தமிழ் மொழி மட்டும் அறிந்தவரும் சந்தித்துக் கொள்கின்றனர், அவர்களுக்குள் எப்படிப் பேசிக்கொள்வார்கள் ?, அவர்களுக்கு எவ்வாறு தகவல்களைப் பரிமாறிக்கொள்வார்கள், அல்லது ஆங்கில மொழிமட்டுமே தெரிந்த வேலைக்காரன் தமிழ்மொழி மட்டும் அறிந்த முதலாளியின் கட்டளையை எப்படிப் புரிந்துகொள்ள முடியும் ? இது சாத்தியமா ? நிச்சயமாக சாத்தியமில்லை ஏனெனில் ஒருவர் கூறுவதை மற்றவரால் புரிந்துகொள்ள முடியாது. இந்த நிலையைப்போக்கவேண்டும் எனில் நீங்கள் நினைப்பதுபோல வேறொருவர் இடையில் தேவைப்படுகிறார் அவர் இந்த இருமொழிகளையும் அறிந்தவராக இருக்கவேண்டும், அவரால்தான் ஆங்கிலத்தில் பேசுவதைத் தமிழிலும், தமிழில் பேசுவதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துச்சொல்லமுடியும்.

அதுபோலவே நாம் பயன்படுத்தும் கணினிக்குத்தெரிந்த ஒரே மெழி எந்திரமொழி(Machine Language) அல்லது எந்திரங்களை இயக்குவதற்கான மின்னணுக்கட்டளைகள்(Machine Instructions). அவைகளில் தெரிவித்தால் மட்டுமே கணினி புரிந்துகொள்ளும் அது தவிர்த்து பிற எந்த விதத்திலும் கணினியைக் கட்டுப்படுத்தமுடியாது. ஆங்கிலமோ அல்லது பிறமொழிகளோ அது அறியாத ஒன்று. அதுமட்டுமல்லாது கணினியும் தனது வேலைகளின் வெளியீடுகளாகத் தரும் பதில்களும் இத்தகைய எந்திர மொழியாகவே இருக்கும் அதை மனிதர்கள் நாம் எவ்வாறு புரிந்துகொள்வது ? அதுவும் முடியாதது. அதனால் நாம் ஒரு மொழிபெயர்ப்பாளரை நாடவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றோம் அவர் இவ்விரண்டு மொழிகளையும் அறிந்தவராக இருக்கவேண்டும். கணினிக்கு மனிதன் தன்னுடைய மொழியில் தரும் கட்டளைகளை கணினி புரிந்துகொள்ளும் எந்திரமொழிக்கும் மாற்றித் தருவதையும் அதே சமயத்தில் கணினி தரும் பதில்களை அல்லது அது தரும் முடிவுகளை மனிதன் புரிந்துகொள்ளும் மொழியில் தரும் வேலையும் அவருடையது அவர் தான் நம்முடைய ‘வினைக்கலன்கள் ‘

வினைக்கலன்களுக்கு எடுத்துக்காட்டுகளாக நாம் மைரோசாப்ட் டாஸ்(DOS என்னும் Disk Operating System), விண்டோஸ்95/98/ 2000, யுனிக்ஸ்(Unix), மற்றும் லினக்ஸ்(Linux) எனப் பல விணைக்கலன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவைகளில் 10 ஆண்டுகளுக்கு முன்னாள் வந்த DOS, UNIX போன்ற விணைக்கலனில் நாம் கட்டளைகளை எழுதினால் அவ்விணைக்கலன் அதனைப் புரிந்துகொண்டு கணினியை அதன் படி நடக்கச்செய்யும், இத்தகைய விணைக்கலணைப்பயன்படுத்துவதற்கு நாம் அவற்றின் பல கட்டளைகளை அறிந்திருக்க வேண்டியதாகிறது. அதனால் கணினியை இயக்குவதற்கு படித்தவர்களாலும், ஆங்கில் மொழியிலே மட்டும் தான் கட்டளைகளை அமைத்திருந்ததால் ஆங்கில அறிபெற்றவர்களாலும் மட்டுமே முடிந்தது.

ஆனால் பிற்காலத்தில் GUI எனப்படும் வடிவக்குறிகளின் மூலம் கட்டளையிடும் (Graphical User Interface) முறையிலான விணைக்கலன்கள் வெளியிடப்பட்டன இவற்றில் நாம் கட்டளைகளை திரையில் காட்டும் வடிவங்களில் மவுசை அழுத்துவதன் மூலம் கணினிக்கு கொடுக்கமுடியும் இதனால் ஒருவர் கட்டளைகளை மனனம் செய்துவைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லாது போய்விட்டது அவர் தேவையான கட்டளைகளை அதிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம் எந்த மொழியினரும் எளிதில் இதனை பயன்படுத்தியும் கொள்ளலாம் என்ற நிலை வந்தது. இதனை ‘பயன்படுத்துபவருக்கு எளிய ‘ மென்பொருள்கள் என்று குறிப்பது வழக்கம்.(User Friendly)

இத்தகைய GUI வினைக்கலன்களுக்கு எடுத்துக்காட்டாக நாம் இப்பொழுதுள்ள விண்டோஸ் வினைக்கலன்கள்(95/98/2000 அனைத்தும்) மற்றும் லினக்ஸ் போன்றவைகளைக் கூறலாம்.

சிலருக்கு வேறு சில சந்தேகங்கள் வரலாம் ‘நாம் வேறு சிலமென்பொருள்களைப் பயன்படுத்துகிறோமே அவைகளின் பயன் என்ன ? அவைகளும் நாம் கொடுக்கும் கட்டளைகளை ஏற்று கணினியை இயக்குகின்றனவே என்று ‘ அது உண்மையே. ஆனாலும் கூட நாம் பயன்படுத்தும் பிற மென்பொருள்கள் எடுத்துக்காட்டாக வேர்டு, எக்சல், மற்றும் மொழிகளான பேசிக், ‘சி++ ‘, மற்றும் பல கணினியை இயக்குகின்றன ஆனால் அவைகளும் விணைக்கலனின் உதவியோடு மட்டும் தான் கணினியை இயக்கமுடியும்.

நீங்கள் கணினித்திரையில் ஒரு வட்டம் வரை என்று பேசிக் என்னும் மொழியில் கணினிக்கு கட்டளையிட்டால் அது முதலில் அந்த கட்டளை அது அந்த கட்டளையை விணைக்கலனின் பார்வைக்கு எடுத்துச்செல்கிறது அதன்பின அதன் அனுமதியோடு மொழிபெயர்க்கப்பட்டு கணினியின் எந்திரபாகங்களுக்கு எந்திரமொழியில் சொல்லப்பட்டு பின்னர் அது அந்த வட்டவடிவத்தை வரைகிறது.

இங்கு கூட நாம் சிந்தித்துப்பார்த்தோமானால், பல மொழிகள் கணினியில் பயன்படுத்தப்படு கின்றன. ஏன் ? இதுவும் நாம் கூறுவதுபோல ஆங்கிலத்தில் பல நூல்கள் இருக்கின்றன அதனைப் பயன்படுத்தினால் கணினி பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளலாம் தமிழில் படிப்பதால் இத்தகை அறிவை வளர்த்துக்கொள்ள முடியாது, தமிழிலே கணினி சம்பந்தப்பட்ட பல ஆங்கில வார்த்தைகளுக்கு சமமான தமிழ் கிடையாது என்று சிலர் கூறுவது போல சில மொழிகளில் வார்த்தைகள் மிகக்குறைவு அதனைப்பயன்படுத்தி கணினிக்கு சிலவேலைகளுக்கு கட்டளையிட முடிவதில்லை அதனால் புதிய பல வார்த்தைகள் கொண்ட மொழிகூளை உருவாக்கி அவற்றைப் பயன்படுத்தி நாம் கட்டளைகளைக் கொடுத்துவருகிறோம். இந்த மொழிகளில் நாம் ஆங்கிலத்தில் அல்லது மற்ற மனித மொழிகளில் எழுதுவதை எந்திரமொழியாக மாற்றி கணினிக்கு விணைக் கலனின் உதவியோடு அளித்து கேட்டுக் கொண்ட வேலையை செய்து முடிக்கின்றன.

Series Navigation

மா.பரமேஸ்வரன்

மா.பரமேஸ்வரன்