உன் கவிதையை நீ எழுது

This entry is part 1 of 2 in the series 19991106_Issue

பசுவைய்யா


உன் கவிதையை நீ எழுது

எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி

எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி

நீ அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது

உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது

சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது

நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது

எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது

எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்

தத்தளிப்பைப் பற்றி எழுது

எழுது உன் கவிதையை நீ எழுது

அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்

ஒன்று செய்

உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று

என்னைக் கேட்காமலேனும் இரு.

***

(கொல்லிப்பாவை 1985)

-திண்ணை – நவம்பர் 6, 1999

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigationசிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் >>

பசுவைய்யா

பசுவைய்யா