உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

எம்.ரிஷான் ஷெரீப்,



நான் மழை
ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன்
உன் பழங்கால ஞாபகங்களை
ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன்

எனை மறந்து
சிறுவயதுக் காகிதக் கப்பலும், வெள்ள வாசனையும்
குடை மறந்த கணங்களும், இழந்த காதலுமென
தொன்ம நினைவுகளில் மூழ்கிறாய்
ஆனாலும்
உன் முன்னால் உனைச் சூழச்
சடசடத்துப் பெய்தபடியே இருக்கிறேன்

உனைக் காண்பவர்க்கெலாம்
நீயெனைத்தான் சுவாரஸ்யமாய்க்
கவனித்தபடியிருக்கிறாயெனத் தோன்றும்
எனக்குள்ளிருக்கும் உன்
மழைக்கால நினைவுகளைத்தான்
நீ மீட்கிறாயென
எனை உணரவைக்கிறது
எனது தூய்மை மட்டும்

இன்னும் சில கணங்களில்
ஒலிச் சலனங்களை நிறுத்திக்
குட்டைகளாய்த் தேங்கி நிற்க
நான் நகர்வேன்

சேறடித்து நகரும் வாகனச்சக்கரத்தை நோக்கி
‘அடச்சீ..நீயெல்லாம் ஒரு மனிதனா?’
எனக் கோபத்தில் நீ அதிர்வாய்

எனைத் தனியே ரசிக்கத் தெரியாத
நீ மட்டும் மனிதனா என்ன?

– எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்