ஓரு உரைநடைச் சித்திரம்.

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

சந்துஷ்.


‘இருண்ட காலங்களில் பாடல் இருக்குமா ?
இருக்கும்
இருண்ட காலங்களைப்பற்றியதாயிருக்கும் ‘
பிரெக்ட்

கடல் தூங்கும் பூமிக்கு
எவர் மீது கோபம்
அலை கொண்ட கடலுக்கு
கரை மீது கோபம்

கரை மீது நாம் வாழ்தல்
யார் தந்த சாபம்
கடல் தூங்கும் புவியே
எம் மீதென்ன கோபம். (கடல் தூங்கும் ….)

ஆழ் கடலே மண்மடியில்
சிசுவாய் தவழ்ந்தாய்
எம் சிசுக்கள் துயில் கொண்ட
தரை ஏன் கவர்ந்தாய் (கடல் தூங்கும் ….)

போர் வெடித்து எழுந்தாலும்
நிலம் பிளந்து வெடித்தாலும்
அலை பொங்கி குதித்தாலும்
ஏழைதலை மீது விழு என்று
எழுதியது யாரம்மா ?
எழுதியது யாரம்மா ? (கடல் தூங்கும் ….)

பூமியைத் தாண்டி சொர்க்கமென ஒன்றும்
வாழ்விற்குப் பிறகு நரகமென ஒன்றும்
உள்ளதென மறுக்கும் மானிடர் உணர்வில்
சொர்க்கமும் நரகமும் இவ்வுலகில் மட்டுமே
சாத்தியம் என்றிடும் லட்ச லட்;ச மனிதர்
நினைவுகளின் பதிவில்
இடியாய் இத்துயர் இறங்குதல் என்பதும்
இயற்கையேயன்றி வேறென்னம்மா.

02.01.05

ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ

முன்னொரு நாள்,

அலைகளுக்கும் கடலின் அடிக்கும் நடுவில்
ஆழ் சுழியின் இழுப்பை
வாழும் ஆசையால் தன்னையறியாமல்
உயிர் மூச்சின் வலிவில்
உதறி மீண்டான் ஒருவன்

கரை மீண்டு நாட்பல சென்றும்
சமுத்திரத்தின் ரகசியம் எதையோ
அவன் கண்கள் சொல்ல நினைத்ததை

ஊறிகள் தைக்க நடக்கும்
கொதிக்கும் மணல் வெளியில்
நீங்கள் யாரும் கவனித்திருக்கலாம்

கடல் கொண்டிருப்பது ஓர் மெளனத்தை அல்ல என்றோ
அல்லது
ஆயிரம் வருடமாய்; அவன் கனவில் வந்த
ஒரு சிறுமியை
கடலுக்கு அடியில் பணயம் வைத்துத்;தான்
உயிரை மீட்டதாகவும் ஓர் கதையை
அவன் சொல்ல நினைப்பதாகவும்
நீங்கள் நினைத்திருக்கலாம்.

இவை எதையும் சொல்லாமல்
அவன் நகருங் கணங்களில்
தொற்றி வந்த மெளனம் ஓர்
உண்மையெனவும் நினைத்திருந்த
காலங்கள் போயின,

இது நடந்தது முன்பு

இன்று,

வெட்டிய குழிகளில்
குழந்தைகளின் பிஞ்சு முகங்களை
மூடிக் கொண்டு உதிரும்
மண்துகள்களுடன்
சேர்ந்து அந்த உண்மை
உதிர்கிறது
அவர்களின்; கடைசிச் சிரிப்பைக்
காற்றில் கலந்து விட்டு….

ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ

பறி கொடுத்தவர்களின் கரைகள்
வெறித்துக் கிடக்கின்றன தப்பியவர்களின்;
கண்களைப் போல.
இழப்பின் கொடுமையை
பசியினாலும்
பசியின் கொடுமையை
இழப்பினாலும்
ஏமாற்றியபடி
ஒரு நரகத்தை அவர்கள்
அந்தத் தரைகளில் எழுதினர்.

ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ

அனேகமாக எலலாப் பிணங்களையும் அகற்றியாயிற்று.

இருந்தும்

அதோ

கரையிலிருந்து சற்றுத்தள்ளி

உடலை இழந்த உயிருமல்லாமல்
உயிரை இழந்த உடலும் அல்லாமல்;

அசையும் அந்த உருவத்தைக் கண்டாயா ?

அந்தக் குடிசையின் ஓலைக் கூரையின் கீழ்
தன்னுடன் சீவியத்தைப் பகிர்ந்த
ஒருவனும்
இவள் வயிற்றுள் சுமந்த நாலு பிள்ளைகளுமாய்
ஐந்து பேரை
விழுங்கிய கடலை
வெறித்தவளின் கண்களில் கடல் அம்மணமாய்; நெளிகிறது.

கடலின் மொழியைப் பேசிய உடல்

உயிர்ப்பின் பிரவாகங்களை இழந்து கொண்டிருக்கிறது.

நினைவு தெரிய
சில உயிர்களை அலை இவள் கைகளில் கொண்டு வந்து தர
இவள் தன் கைகளிலேந்திக்
கரை சேர்த்திருக்கிறாள்
மூன்று குழந்தைகள் உட்பட.

அது அவளின் உடலின் மொழியை கடல் பேசிய காலத்தில்
நிகழ்ந்தது.

தன்னுடம்பை வெட்டினால் உப்பு நீர் வந்துதான்
இரத்தம்
வருமென அவள் சொல்லித் திரிந்ததை
அவள் உணர்ந்தே சொன்னாள்.
அது அவளது பாட்டியின் பாட்டியும் நம்பியவொன்று.

கண்களில் கடல் ஒரு இடுகாடாக விரிகிறது.

வாயிலிருந்து வெளிப்படும் சிரிப்பு அருகிருப்பவர்களைக்
கிலி கொளச் செய்கிறது.

வாய் எதையோ முணுமுணுக்க
விரல்கள் மணலை பாதாளத்தைத் தோண்டும்
முனைப்பில் பிறண்டுகின்றன

விரல்கள்
அலைகளுடன் பேசியவளின்; கைவிரல்கள்.

____

குழந்தைகள் தூங்கிவிட்டன.

சில முதிய கண்கள் அச்சத்துடன் விழித்திருக்கின்றன.
பாதி தூங்கிய பெண்களின் கனவில் பிள்ளைகளை யாரோ
சாக்கொன்றில் களவாடிச் செல்கின்றனர்.

பிள்ளைகளை திருடிச் சென்ற கயவர்களின் ஆண்குறியை
கடித்தெடுப்பது போல ஒருபெண்ணுக்கு கனவு வருகிறது.

சமுத்திரத்தின் இரகசியத்தினைக் கண்களிற் கொண்டவனைக்
கண் தொடும் பரப்பில் காணவில்லை,

வயிறு வீங்கிக் கிடக்கும் பிணங்களின் நடுவில்
வயிறு பிளந்து கிடக்கும் படகொன்றிற்கருகில் அவன் கிடப்பது தெரிகிறது.

இப்போது பேசுமாய்ப் போலிருந்த அவன் கண்கள்
பேசத் தொடங்குகின்றன,

உயிர் தப்பிய குழந்தையொன்றின் அழுகையை மொழியாகக் கொண்டு….

****

அவள் கரைகளைச் சேர்ந்தவள்.
கடல் அவள் கலங்களில் எழுதிய கவிதைகளை
அவள் கண்களில் அவன் பார்த்திருக்கிறான்.

தடைகளைத் தாண்டும் சாத்தியங்களை
அலைகள் அவளிற்குக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.

அவள் உடலெங்கும் தாவும் குட்டியலைகளில்
துடிப்புடன் மீன் குஞ்சுகள் துள்ளிக் குதிப்பதால்தான்
தன்னைச் சுற்றியிருப்பவர்களை மகிழவிக்கும் ஆற்றலைப் பெற்றாள்
என நம்ப இடமிருக்கிறது.

காலத்தின் மாற்றத்தில்
அவள் கரைகளைப் பிரிந்து
கடல் கடந்து சில காலங்களாயிற்று.

பூட்ஸ் கால்கள் அந்த மணல் வெளியில் புதைந்த
ஒரு பின்னிரவின் பின்
இரவோடிரவாக கடலைக் கடந்த அவனின்
குடிசைகள் எரிந்தன.

அங்குமிங்குமாய் அலைந்த பின்
ஓரிடம் ஒதுங்கியவன்
கடலின் வாசம் மறந்திருந்தான,;
மீண்டும் அவளுக்குள் அலைகளைக் கேட்கும் வரை.

இடையில் சந்திக்காமல் இரு வருடம் போயிற்று.
கடலுக்கு வெறிவந்து அவனது கரைகளும் உறவுகளும்
பறிபோனதாகச் சேதி வந்தபோது
அவன் அவளைத் தேடி ஓடினான்.

தனது இழப்பின் சுவடுகளும் அழிந்து
அதன் வாசம் மட்டும் கரைந்து கொண்டிருப்பதையும்
அது அவளது உடலில் இருப்பதையும் சொல்லி
ஒரு முறையேனும் அதைத் தனதுடலுக்குத் தருமாறும்
கண்ணீருடன் அவன் அவளிடம் கெஞ்சினான்

தன் கரைகளை இழந்த மறுகணமே
தனக்குள் இருந்த மீன் குஞ்சுகள் இறந்து விட்டதாகவும்
தனக்குள் பாயும் அலைகளில் பிணங்கள் மிதப்பதையும்
அவற்றில் தன் தாயையும் தங்கையையும அடிக்கடி காண்பதையும்
அவனைப் போலவே வாசங்களைத் தேடி தானும் அலைவதையும்
சொல்லிவிட்டு

தன் முலைகள் மட்டும்
தாயை இழந்த பிள்ளைகளிற்காக இன்னும்
சுரப்பதாகவும் அவள் கூறிய போது
கடல் நீரின் இரு துளிகள்
அவள் மார்பை நனைத்தன.

எனினும் அவனுக்கு அவள்
கடலை விடவும் ஈரமானவளாக இருந்தாள்.

கரைகளை உடைத்தல் அவள் குருதியின்
இயல்பாதலால்
அவனுடன் சேர்ந்து இழந்த வாசத்தை முகரச்சம்மதம்
சொன்னாள்.
மரணக் கரைகளில்
உடல்கள் தேடப்பட்டுக் கொண்டிருந்த
அந்தக் கணத்தில்
தமது உடல்களில் இழந்த கரைகளைத்
தேடிக்கொண்டிருந்த அவர்களை
அந்த அமளியிலும்
தேடிக் கொண்டிருந்தன,
‘கலாச்சாரக் ‘; காவல் நாய்களின்
கண்கள்.

;14.01.05

ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ

….ஆயிரத்து மூன்;று ….ஆயிரத்து நாலு….

எண்ணுவதை மூன்று நாட்களுக்கு முன்பே விட்டுவிட்டான்.
இப்போது எண்ணுவது அவனுக்குள் விறைத்துக்
கொண்டிருக்கும்
ஏதோ ஒன்றை மறக்கடிக்க
அவனையறியாமல் செய்து வரும்
ஒரு உத்தி.

மண் வெட்டியைத் தரையில் சாய்த்து
முதுகை மண்பிட்டியின் மேற் சாய்த்த போது
விறைத்த அந்த ஏதோ ஒன்று
தன் கையோ என நினைத்தான்.

தடித்துக் கொண்டு வந்தது.

இவனோடு சேர்ந்து புதைத்தவன்
நேற்று வாந்தி வருகுதென்று போனான்
பின்னர் அவனை குழிக்குள் போட்ட போது
எண்ணிக்கை 4112 ஆக ஆனது.

நேற்று இந்த நேரம் இவனுக்கு அவன்
தன் விறைத்த கையைக் காட்டிக் கொண்டிருந்தான்.
நினைக்கையில் இவனுக்கு இன்னொரு உடலைப்
புதைக்க வேண்டும் போல இருந்தது.
புதைத்து விட்டு வந்தமர்கிறான்.

அருகில் மண் வெட்டிகளின் சத்தங்கள்.

குழந்தையின் தலை கொண்ட கிழவியையும்
கிழவனின் முகம் கொண்ட குழந்தையையும்
தூங்காமலே அவன் கண்ணுக்குத் தெரிவது
ஏனென்று தெரியவில்லை.

உடம்பு கடிக்கிறது.

விறைப்பு மெல்ல உடலில் பரவுவது போல்….
தடித்த தோலில் துவாரங்கள் விரிந்து
ஆயிரம் குழிகள் கொண்ட உடலாகிறது.
ஒரு ஐயாயிரம் எறும்புகள் சவப் பெட்டியைத்
தூக்கிக் கொண்டு
அந்தக் குழிகளை நோக்கி ஊர்கின்றன.

யாரோ கசிப்புத் தர மறுக்கிறான்.

இன்னுமொரு உடலைப் புதைக்க வேண்டும்
போலிருக்கிறது.

வாந்தி வருகிறது.

ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ

அந்தக் கிராமங்களுக்குள்
ஆமிக்காரர்களும் துப்பாக்கி தூக்கியவர்களும்
காமுக உல்லாச பயணிகளும்
ஒவ்வொரு முறை நுழையும் போதும்
வேட்டையாடப் பிரியங்கொள்வது
இரண்டின் மீது,

பெண்கள்
சிறுவர்கள்

அடிக்கடலின்; நிலம் பிளந்து
சாவின் நாக்கை வாசல் வரை
நீட்டியதில் தெரிந்தது
எல்லாமே ஒன்றென….

இப்பொழுது கடல்,
காலையில் கொல்ல ஆளனுப்பி
மாலையில் மலர் வளையம் அனுப்பி வைக்கும் ஒரு வஞ்சகன்

அலைநுரையால் இழைத்த சவத்துணியை
பிணங்களுக்கு அனுப்புகிறது.
18.01.05

____

கிறிஸ்துவுக்குப்பின 2022 ஆம் ஆண்டிற்கும்
சுனாமி வந்துபோய் பத்து ஆண்டுகளுக்குமிடையில் ஓர் நாள்….

இராட்சத அலைகள் வந்து போனதை நினைவு கொள்ள

அந்த நிலத்தில்

வானை வன்புணர்வு கொள்ள முனையும்
குறிகளாய்
கட்டங்களை எழுப்பியுள்ளன
உலகின்
இராட்சதக் கம்பனிகள்.

அதிலொன்றின் 17வது மாடியின் ஒரு அறையில்
நடு யன்னலின் பாதிக்கு
நீலத் திரைச் சேலையாய்
அசைந்து விரியும் கடற் பரப்பு.

பொன்னிழைத்த மினுமினுப்போடு
அறைக்குள் விழுகின்றன காலையின்
ஒளிக்கற்றைகள்.

மனேஜிங் டிரைக்ட்டர் மிஸ்டர். வெல்டன் இன் கண்கள்
ஜன்னலைப் பருகிக் கொண்டிருக்கின்றன.
கிளாஸ் நெடு நேரமாக நிரம்பியே இருக்கிறது.

அவர் மெல்ல மெல்லக் குடிக்கும் பழக்கமுடையவர்.

அது 2005 ஜனவரியில் அவர் எடுத்த
சரியான தீர்மானத்தைப ;பாராட்டி
தொழில்துறை நண்பர்கள் கொடுக்கும்
ஒரு சிறிய பார்ட்டி.

அவரைப் பொறுத்த வரையில் அவர் செய்ய வேண்டியதைத்தான்
செய்தார்.

நாற்பது வீதம் குழந்தைகள் இறந்து
இளஞ்சந்ததி அற்று நீளப் போகும்
ஒரு இடைவெளியில்
உடைந்த முதுகினில் எதிர்காலத்தை விட
மனோநிலைச் சுமைகளே
பாறாங்கல்லாய் அழுத்த
இள முதுமையின் வாசலில் நிற்கும்
மனிதர்களின் நிலம,;
தம் கால்கள் பதியப் பாதுகாப்பானதென
அவரது தரப்பில் பலர் உணர்ந்தாலும்
செயலில் இறங்கிய முதற் பேர்களில்
மிஸ்டர். வெல்டன் ஒருவர்.

கரைகளில் வாழ்ந்த மனிதரைக் கிளப்பி
கரைகளைப் பாதுகாக்க கட்டிடம் எழுப்பும்
அனுமதியைத்தாமே கொடுத்து தாமே பெற்று

இனி அவர்கள் எங்கே வாழ்வது
எங்கெ தொழில் செய்வது
எப்படி வாழ்வது
எப்படி உண்பது
எதை உண்பது
என்று அவர்களுக்க சொல்லாமலே முடிவெடுத்த நேரத்திலேயே
நிவாரணப் பொருட்களுடன் அவரும் போய் இறங்கிவிட்டார்

சுனாமியை வருமுன் காக்கும்
திட்டங்கள் பற்றிய செய்திகளும் யோசனைகளும்
பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கையில்

அதைவிடப் பெரிய ஆபததுக்;கள்
பற்றியும்
அவற்றை அப்புறப்படுத்து;தல்
பற்றியும்

சிந்தனையில் அவர் இருந்தார்.

உதவி நாம் அருளுவது.
ஒத்துழைப்பு கூட்டாளிகள் தருவது.
செய்ய வேண்டியதைச் சரியான நேரத்தில் நிகழ்த்;தியாயிற்று

அவர் பாராட்டுக்களையும் விமர்சனங்களையும்
கவனிப்பவரல்லர்.

விஸ்கியின் மிடறு அமைதியாக தொண்டையில்
இறங்குகின்றது.

அவர் மெல்ல மெல்லக் குடிப்பவர்.

ஆனால்

அவருக்குத் தெரியாத வேறு விடயங்களும்
உலகத்தில் இருந்தன.

துப்பரவு செய்யப்பட்டுக்
கட்டடங்கள் எழுந்து
நிற்கும் கரைநிலத்தின்
ஓரிடத்தில்
மணலிற்புதைந்து
ஒரு குழந்தையின் சூப்பியும்
ஒரு பால் போத்தலும்
அதிசயமாய் இன்னும் இருந்ததையும்
அதை இன்னும் யாரோ
தேடிக் கொண்டிருந்ததையும்
அவரும் அவரது கூட்டாளிகளும்
அறியவில்லை.

19.02.05;

____

தோப்பில் நின்ற பனைகளில்
பாதிக்கு மேல்
ஏறி இறங்கியாச்சு.

முன் நிரையின்
;கடைசி மரவுச்சியில்
முட்டியைக் கட்டி
பழக்;;கத்தின இயல்பாய்;
கடல் பார்த்தான்.

கண் வெட்டித் திறப்பதற்குள்
பனந் தோப்பு இவனையுங் சுமந்து கொண்டு
கடல் நோக்கி நகர்கிறது.
இல்லை மாறி நடக்கிறது.

பாய்ந்து பனையேற ஓடி வருவது போல
சீறியெழும் கடலின் அலை எழுகிறது.

பனைகளின் உயரத்தின் பாதியைத் தொட்டு
வெறியுடன் கடக்கிறது.

இவன் நின்ற பனையைத் தாண்டி
குடிசைகளை விழுங்கி
அப்பாற் செல்ல
குழந்தைகள் ஓடுகின்றன
அடுத்த கணம் மிதக்கின்றன.

இவனுக்கு கண்களைத் தவிர
எல்லாம் விறைத்து விட்டிருக்க வேண்டும.
நீர் வடிந்த பின் துடிக்கும் மீன்களான
அவனது கண்கள் உயிர்த்திருக்கின்றன.

அலைகளை அவனும் அறிவான்.

அவனின் சந்ததியின் வாழ்வை
இப்படி இரு என
காலகாலத்திற்குப்
புரட்டிப் போட்ட அலைகள்.

அதனை எதிர்த்து எதிர்த்து
பலவாய் இவனாய்
இவனுள் பலவாய்
பலவுள் இவனாய்
இவனுள்ளும் வெளியிலும்
ஓயாமல் மோதும்
வேர்களை அசைக்கத் தெரிந்த அலைகள்.

இந்த விசயமெல்லாம்
பனைகளைக் கேட்டால்
வடிவாய்ச் சொல்லும்.

தன் கோபம் எதிர்ப்பு
கண்ணீர எல்லாம் உருட்டி
கந்தல் துணியொன்றிற் சுற்றி அவன்;
எங்கோ ஒளித்து வைத்திருப்பது
பனைகளுக்குத் தெரிந்திருந்தாலும்
எங்கே என்று அவைகளிடமே அவன் சொன்னதில்லை.

எந்த அலையும்
அணைக்க முடியாத
நெருப்புக் கனலும் நெஞ்சு
பனையிற் பட்டுச் சுட
‘உஸ்; ‘ எனச் சிணுங்கும்
அதிலிருந்து
இப்போதிறங்கும்
அவன் கண்களில்
துடித்த மீன்களை
நீர்;; முடுகிறது.
அதில்
மிதக்கின்றன
அவனது
மனைவி
பிள்ளைகளின் முகங்கள்.

21.01.05

****

Series Navigation

சந்துஷ்

சந்துஷ்