இயற்கையே என் ஆசான்

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

கோமதி நடராஜன்


—-
ஏழு வண்ணங்களும்,
ஏழு பிறவிகளானால்,
நொடியில் தோன்றி
நொடியில் மறையும்,
வானவில்லே!
நீதான் எனக்கு,
வாழ்க்கையின் தத்துவத்தை,
உணர்ந்து சொன்ன
வேதாந்தி.
பின்னப் பின்ன
வெட்டுண்டாலும்,
பின்னால் திரும்பிப்
பாராமல்,
பின்னலே தன்
வேலையென்று
பின்னடையாத,
சிலந்தியே!
நீதான் எனக்கு,
‘விடா முயற்சியே
வெற்றிக்கு வழி ‘யென்று
உற்சாகமூட்டும்
உதயமூர்த்தி.
வாழையடி வாழையாய்
வம்சம் தழைத்து,
உச்சியிலிருந்து
உள்ளோடும் வேர்வரை,
தன்னையே உலகுக்குத்
தரும் வாழையே!
நீதான் எனக்கு,
‘தன்னலமற்ற வாழ்க்கையே,
தரணியில் பேசப் படும் ‘என்பதைச்
செயலில் காட்டிய
தத்துவஞானி.
—-
ngomathi@rediffmail.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்