படைப்பின் உதயம் !

This entry is part [part not set] of 21 in the series 20020224_Issue

சி. ஜெயபாரதன், கனடா


மனித ஜீவன்
சிறையினுள் சிக்கி
தனித்துவம் நசுங்கி
தாகம் மிகுந்து
நெஞ்சம் வெகுண்டு
கனலாய்ச் சிவந்து
அனலாய் வேகும்போது
ஆத்மா நோகும்போது
ஆக்கச் சுனை ஊற்றில்
உதயம் ஆகுது,
ஒரு பெரும் படைப்பு !

புதுக் கவிதை!

எதிர் நிற்கும்
வலையை எற்றி
எல்லையாம்
கோடு நீக்கி
புதிர் போல
பந்தை ஆடும்
புதுமுக
டென்னிஸ் கன்னி !

எதுகையாம்
அணிகள் இல்லை !
இனிமையாய்
மோனை இல்லை !
செதுக்கிட
யாப்பும் இல்லை !
சிற்றாடை
நீச்சல் கன்னி !


சிறுகதை !

ஒற்றை நிலையத்தி னின்றும்
ஊர்ந்து புறப்பட்டு
வளர்வேகத்தில்
விரைந்தோடி
மற்றை நிலையத்தை நோக்கி
தளர்வேகத்தில்
வந்தடையும்
ஒரு பெட்டி
ரயில் வண்டி !


நாவல் காவியம் !

கரும்பு நுனிபோல்
துவங்கி,
கால விழுதுகள்
நிரம்பி,
இருப்புப் பாதைமேல்
ஊர்ந்தோடும்
பல பெட்டித்
தொடர் ரயில்
வண்டிகள் பல
வந்திணையும் ஓர்
சந்திப்பு நிலையம் !


நாடகம் !

இடி, மழை, மின்னல், புயல், தென்றல்,
காதல், மோதல், சாதல்,
இன்ப, துன்பம், ஏமாற்றம்,
உறவு, பிரிவு, முறிவு,
சதி, சூழ்ச்சி, சச்சரவு,
விருப்பு, வெறுப்பு, வேறுபாடு,
மனிதப் போக்கை,
மாறுபாட்டை,
இதயப் போரை,
படிப் படியாக வளர்த்து
வசன மொழியில்
நடை, உடை, பாவனையில்,
வடித்துக் காட்டி
முடிவில் திருப்பத்துடன்
விடியும் ஓர்
பல் கலை
மேடை ஓவியம் !


இசை !

ஆத்மாவின் கருவில் தோன்றி,
கலைவாணியின் இனிய
நாவில் மலர்ந்து,
செவிக்கு அமுதாய் நிலவி,
பல்லாயிர ஆத்மாவைத்
தாவிப் போய்த்
தழுவும் கன்னி !
தேன் அருவியில்
ஆட வைத்து,
மதுபோல் மயக்கித்
துயில வைக்கும்
குயில் அணங்கு !

**********

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா